Monday, December 24, 2007

இதயம் ரோஜா காதல் முள் - II


ஹலோ! யாருடா இவன்? இவன் பாட்டுக்கு நம்மளப் பாத்து ஹலோ சொல்றானேனு பாக்கறீங்களா? என் பேரு ஷ்யாம். செஞ்சிட்டு இருக்கற வேலை பொட்டித் தட்டற வேலை. ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்னு நிறைய தடவை ஃபீல் பண்ணி இருக்கேன். அம்மா சமையல சாப்பிட்டு அப்பா கூட செஸ் விளையாடிட்டு தங்கச்சிகிட்ட லட்டுக்கு சண்டை போடற லைஃப் இருக்கே. சுகமே சுகம். ஹ்ம்ம்ம். எல்லாத்தையும் விட்டுட்டு வரணும்னு தலைல எழுதி இருக்கு. என்ன பண்றது. நான் எங்க வீட்டோட ரொம்ப attachedங்க. வந்த புதுசுல வாரம் ஆனா வீட்டுக்கு ஓடிப் போயிடுவேன். அதுக்கப்புறம் அப்படியே ஃப்ரெண்ட்ஸ் அப்படி இப்படினு நம்ம லைஃப் இங்க செட்டாயிடுச்சு. அச்சச்சோ! உங்ககிட்ட பேசிட்டு இருந்ததுல டைம் பாக்காம விட்டுட்டேன். அஞ்சரை ஆனா டாண்னு CCDல இருக்கணும். இல்லைனா ஒரு சுனாமியே வந்துடும். ஒரு நிமிஷம் இருங்க. சிஸ்டம் லாக் பண்ணிட்டு என் ஷூ-வப் போட்டுட்டு வரேன்.

ஏன் கிளம்பறீங்க? ஒண்ணும் பிரச்சினை இல்லைங்க. நான் போயிக்கிட்டேதான் பேசறேன். நான் யாரைப் பாக்கப் போறேனு நீங்க தெரிஞ்சிக்க வேணாமா? அவதான் என்னோட அழகான ராட்சசி தெய்வா. ஒரு எட்டு மாசத்துக்கு முன்னாடி காலைல கனவுகள்ல சஞ்சரிச்சிட்டு இருந்த என்னை என் தங்கச்சிக்கிட்ட இருந்து வந்த ஃபோன் தட்டி எழுப்புச்சு. அடிச்சு புடிச்சு எடுத்துப் பேசினேன். டேய்! என் ஃப்ரெண்ட்க்கு உன் கம்பனில வேலை கிடைச்சிருக்கு. அவளுக்கு அந்த ஊருல யாரும் தெரியாது. பாஷை தெரியாத ஊருல மாட்டிக்கிட்டேனேனு புலம்பிட்டு இருந்தா. நான்தான் நீ இருக்கறனு தைரியம் சொல்லி அனுப்பி இருக்கேன். உன் நம்பர் அவட்ட குடுத்திருக்கேன். இன்னைக்கு வந்து ஜாயின் பண்றா. உனக்கு கால் பண்ணுவா. அவள ஒழுங்கா பாத்துக்கோ. உன் வாலுத்தனத்தையெல்லாம் காட்டி என் மானத்த வாங்கிடாத-னு சொல்லிட்டு என் பதில கூட கேக்காம கட் பண்ணிட்டா. சரி தங்கை சொல் மிக்க மந்திரமில்லைனு நல்ல பிள்ளையா இருக்கணும்னு உள்ளுக்குள்ள சபதம் எடுத்துக்கிட்டு(ஹி... ஹி... ச்சும்மா பில்ட் அப்பு;)) ஆபிஸ் போனேன். வேலை பிஸில அப்படியே மறந்துப் போயிட்டேன்.

ஒரு பதினோரு மணி போல மீட்டிங்ல இருந்தப்போ அனானிமஸ் கால் வந்துச்சு. யாரா இருக்கும்னு எடுத்து பேசினேன். "நா...ன்... தெய்வா". எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. இருந்தாலும் கெத்தா "மீட்டிங்ல இருக்கேன். வில் கால் யு பேக்"-னு சொல்லி வச்சிட்டேன். ஆனாலும் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்திங்க. அன்னைக்கு அப்படியே மறந்துப் போயிட்டேன். அன்னைக்கு நைட் ஃபோன் பண்ணி என் உடன்பிறப்பு சாமியாடினாப் பாருங்க. வாழ்க்கைல மறக்கவே முடியாது. அந்த பொண்ணு இப்படியா போட்டுக் குடுக்கறதுனு ஒரு சின்ன கடுப்பு. இருந்தாலும் நான் மறந்திருக்கக் கூடாதுதானு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். அதுக்கப்புறம் அவளுக்கு நல்ல ஹாஸ்டல்லா பாத்து சேர்த்து விட்டு, சிம் கார்டு வாங்கி கொடுத்து, ஊருக்கு பஸ் ஏறது எல்லாம் எங்கனு சொல்லிக் குடுத்து, சனிக்கிழமை ஷாப்பிங் கூட்டிட்டுப் போயி, ஞாயித்துக் கிழமை சும்மா வெளிய எங்கயாவது கூட்டிட்டு போன என்கிட்ட அவ நல்லா பழக ஒரு மாசம் ஆச்சு. ஒரு மாசத்துக்கப்புறம் ஆபிஸ்லயும் எங்க ப்ரேக் பாஸ்ட் டைம், லஞ்ச் டைம் ஒண்ணாச்சு. அப்புறம் சாயந்திரம் டிஃபன் டைம். அப்புறம் மொபைல்ல ஆட்-ஒன் கார்ட் போட்டு நைட்டெல்லாம் பேசி, ஆபிஸ்ல எக்ஸ்டென்ஷன், இன்டெர்னல் கம்யூனிக்கேட்டர்னு ஆகி என் வாழ்க்கை ஃபுல்லா இவ என்னோடவே இருக்கணும்னு நான் நினைக்கற அளவுக்கு ஆயிடுச்சு.

அவகிட்ட எப்படி சொல்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். அதுமில்லாம அவளுக்கும் அந்த மாதிரி இருக்கோ இல்லையோனு ஒரு சின்ன... இல்ல... ரொம்பவே பெரிய சந்தேகம். அதுனால என்ன பண்றதுனு புரியாம டெய்லி நைட்டு விட்டத்தப் பாத்து யோசிச்சிட்டே இருந்த எனக்கு எந்த ஐடியாவும் தோணவே இல்ல :((( போன வாரம் ரெண்டு பேரும் ஒரு பேய்ப்படத்துக்கு போயிருந்தோம். அடிக்கடி பயந்துப் போயி என் கைய இறுக்கிப் பிடிச்சுக்கிட்டே இருந்தா. இதுக்கு முன்னாடி போனப்போ ரொம்ப தைரியமாதான் பாத்தா. இன்னைக்கு ஏன் இப்படி பயந்துக்கறானு எனக்கு ஒரே டவுட். படம் முடிஞ்சு வெளில நடந்தப்போ என் சந்தேகத்தக் கேட்டேன். அது என்னவோ தெரியலை. இப்போல்லாம் எதைப் பாத்தாலும் ரொம்ப பயமா இருக்குனு சொன்னா. எனக்கு ஒண்ணுமே புரியல. பயமா இருந்தாதானே உங்க கையப் பிடிச்சிக்க முடியும்னு சொல்லிட்டு ஒரு புன்னகைய சிதற விட்டா பாருங்க. எனக்குள்ள லட்சம் பட்டாம் பூச்சி பறந்துச்சு. இருந்தாலும் ஒண்ணும் தெரியாதவன் போல என் கையப் பிடிக்கறதுக்கு என்ன இருக்குனு கேட்டேன். சென்னைல நான் பாக்காம மிஸ் பண்ணின சுனாமிய அவ முகத்துலதான் பாத்தேன். இன்னும் என்ன விளக்கமா சொல்லணுமா? என் லைஃப் லாங்க் உங்க கையப் பிடிச்சிட்டே இருக்கணும் போதுமானு சொல்லிட்டு என்னை மொறைச்சுப் பாத்தா. அது வரைக்கும் எனக்குள்ள மொட்டு விட்டுக்கிட்டு இருந்த காதல் பூவா மலர்ந்துச்சு. பாருங்க பாருங்க. முன்னாடியெல்லாம் இப்படி பூவு, மொட்டு, பட்டாம்பூச்சினு எல்லாம் நான் பேசவே மாட்டேன். என்ன பண்றது? இந்த காதல் வந்து என்னைய இப்படி பாடாப்படுத்துது.

ரெண்டு பேர் வீட்டுலயும் ஒண்ணும் பிரச்சினை இல்ல. ஆனா என் தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி நான் இப்படி போயி நின்னா நல்லா இருக்காது இல்ல. அதான் அவளுக்கு கல்யாணம் ஆனதும் வீட்டுல இதுப் பத்தி பேசலாம்னு முடிவு பண்ணி வச்சிருக்கோம். என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கூட இதைப் பத்தி சொல்லலை. அதுலயும் ரெண்டு ராட்சசிங்க இருக்காளுங்க. சொன்னா என்ன பாடுபடுத்துவாளுங்கனு தெரியலை. சரிங்க. வந்து சேர்ந்துட்டேன். இவ்ளோ தூரத்திலேயும் அவ முகத்துல இருக்கற கோபம் இங்க என்னை அடிக்குது. நான் போய் சமாதானப்படுத்தறேன். டேக் கேர். இன்னொரு நாள் பார்ப்போம். பை :)))

தொடரும்...

Thursday, December 20, 2007

கேர்ள் ஃப்ரெண்ட் எக்ஸ்-கேர்ள் ஃப்ரெண்ட் ஆனால்...


கேர்ள் ஃப்ரெண்ட்னா என்னங்க? நான் ஸ்கூல் படிக்கறப்பவும் சரி... காலேஜ் படிக்கறப்பவும் சரி. பெண் நண்பர்களை அப்படிதான் சொல்லுவோம். வேலைக்கு வந்ததுக்கப்புறம் ட்ரெயினிங்கப்போ என் க்யூபிக்கிள் மேட்கிட்ட பேசிட்டு இருந்தப்போ ரொம்ப யதேச்சையா "how many gal friends do u hav?" னு சிரிச்சிட்டே கேட்டேன். அவன் அப்படியே ஆடிப் போயிட்டான். என்னைய பாத்து ஒரு மொறை மொறைச்சுட்டு "i hav only one gal friend"னு சொன்னான். சரி பையன் பொண்ணுங்ககிட்ட அவ்வளவா பேச மாட்டான் போலனு நினைச்சுக்கிட்டு அதுக்கு மேல எதும் கேக்காம விட்டுட்டேன்.

அன்னைக்கு நைட் ரூம்ல பேசிட்டு இருந்தப்போ இந்த கதைய எடுத்து விட்டுட்டு ஏன் அவன் என்னை அப்படி மொறைச்சானு தெரியலைனு பாவமா சொன்னேன். அப்போதான் என் ஃப்ரெண்ட் சொன்னா. டேய்! இங்க எல்லாம் கேர்ள் ஃப்ரெண்டுனா லவ்வர்னு அர்த்தம்-னு சொன்னா. அப்போ பசங்க எப்படி அவங்க பெண் நண்பர்களை சொல்லுவாங்கனு நானும் அப்பாவியா கேட்டேன். அடி லூஸு! ஃப்ரெண்ட்னா ஃப்ரெண்ட். அவ்ளோதான். அது பொண்ணா பையனானு எல்லாம் விளக்கி சொல்லிட்டு இருக்க மாட்டாங்க. ஒருவேளை கேர்ள் ஃப்ரெண்ட் இல்ல பாய் ஃப்ரெண்ட்னு சொன்னாங்கன்னா அது அவங்க ஆளுனு அர்த்தம். யார்ட்டயவாது போயி எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்னு கேட்டு வாங்கி கட்டிக்காத-னு சொன்னா. என்ன உலகமடா இதுனு என்னை நானே சமாதானப்படுத்திக்க்கிட்டு அதுக்கப்புறம் அப்படி கேக்கறதையோ சொல்றதையோ விட்டுட்டேன்.

எதுக்கு இவ்ளோ கதை சொல்றேனு பாக்கறீங்களா? ஏன் லவ்வரை இப்படி சொல்றாங்கனு இப்போதான் கண்டுபிடிச்சேன்(ஹி... ஹி... கொலம்பஸ் ஆயிட்டோமாக்கும்). அந்த ரகசியத்த சேர் பண்ணிக்கதான் இந்த பதிவு. அதாவது ஒரு ஃப்ரெண்ட் பிடிக்கலைனா ஐ மீன் ஒத்து வரலைனா ஃப்ரெண்ட மாத்திடுவோம். அது போல மக்கள் எல்லாம் ஈஸியா மாத்திக்கறாங்க. சோ மீனிங் ஒண்ணுதானனு அப்படியே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எப்படி நம்ம கண்டுபிடிப்பு.

இந்த பதிவ எழுத தூண்டியது எங்க BB-ல போன வாரம் வந்த ஒரு மெயில். அந்த மெயில் உங்களுக்காக இதோ...

Hi Folks ,

I have a bag which I need to sell. It's the backpack kinds(college bag) which we can get to office daily . The quality is really good .Its an original Beheim product (trust me with its quality cos I buy only good stuff).

I bought the bag for Rs 650/- few days back . It is still unused , and the tag is also not yet removed . Interested people please call me back or mail me.

Cost Price :- Rs 650

Selling Price :- Around 250 rs

Reason for sale :- I bought it as a gift for Girlfriend's brothers Birthday , The GF has become an X-GF now. why the hell should I waste money on her brother now ???

இதுக்கு வேற நம்ம மக்கள் பதில் அனுப்பறாங்க. அதை நீயே வச்சுக்கோ. புது கேர்ள் ஃப்ரெண்டோட brother birthdayக்கு குடுக்க உதவும்னு.

இதை எங்க போயி சொல்ல?? உலகம் எங்கயோ போயிட்டு இருக்கு சாமி :))))

Saturday, December 15, 2007

இதயம் ரோஜா காதல் முள் - I


ஹாய்! எப்படி இருக்கீங்க? நானா? நான்தாங்க வினி அலைஸ் வினிதா. என் வீட்டுக்கு வினிக்குட்டி. எங்க வீடு பத்தி சொல்லணும்னா அம்மா, அப்பா, அண்ணா, நானு ஒரு அழகான கூடு. எங்கம்மாவும் அப்பாவும் எங்களை பாசத்த மட்டுமே கொட்டி கொட்டி வளத்திருக்காங்க. அவங்க மூணு பேரோட குட்டி ஏஞ்சல் நான்தான். ஹ்ம்ம்ம்ம்.... என் ஃப்ரெண்ட்ஸ்க்கு நான் வினி. என்னைப் பொறுத்த வரைக்கும் ஃப்ரெண்ட்ஸ் விஷயத்துல அடிச்சுக்க முடியாத அளவுக்கு அதிர்ஷ்டசாலிங்க நான். வீட்ட விட்டு வந்து தனி்யா தங்கி இருந்தாலும் ஃப்ரெண்ட்ஸ் தயவுல வாழ்க்கை ஜாலியாவே போயிட்டு இருக்கு. என்ன பண்றது? பொட்டி தட்டறவங்க நிறைய பேர் பொழப்பு இப்படிதானே போகுது.

அதுக்கப்புறம்... இன்னொருத்தருக்கு நான் வினு டியர் :))) யெஸ். உங்க கெஸ் ரொம்ப சரி. நான் உள்ளுக்குள்ள கோட்டை மேல கோட்டை கட்டி அதுல ஒரே ஒரு சிம்மாசனம் வச்சு காலியாவே இத்தனை நாளா வச்சுட்டு இருந்தேன். அதுல எனக்கே தெரியாம அதுவும் என்னோட அனுமதி இல்லாமலே நுழைஞ்சு கம்பீரமா பெவிகால் போட்டு ஒட்டி வச்ச கணக்கா உக்காந்துக்கிட்டு இருக்கற ஷ்யாம். அவன நினைச்சாலே மனசு படபடனு அடிச்சுக்கிது :))) இது வரைக்கும் கல்யாணமா... ச்சீ... என்னால ஒரு வட்டத்துக்குள்ள எல்லாம் வாழ முடியாது... காதலா... ச்சீச்சீ... எல்லாம் சுத்த பேத்தல்... வேலை வெட்டி இல்லாதவங்க சும்மா பண்ணிட்டு திரியறது... காதலாவது கத்திரிக்காயாவதுனு பக்கம் பக்கமா டயலாக் பேசிட்டு இருந்தவதாங்க நான். இப்போ மேடம் டோட்டல் டேமேஜ். இப்போ என்னை பாத்தா என் முகத்த வச்சே நான் எதை பத்தி பேசறேன்னு கண்டுபிடிச்சிடுவிங்க... அந்த அளவுக்கு ஆயிட்டேன்.

சரி அதை விடுங்க. அவனை எப்போ நான் பாத்தேன் தெரியுமா?? இதோ இப்ப நான் நின்னுட்டு இருக்கற இதே இடத்துல சரியா ஒரு வருஷம் நாலு மாசம் ஏழு நாள் மூணு மணி நேரத்துக்கு முன்னாடிதான் மீட் பண்ணினேன். எப்படி தெரியும்னு முழிக்காதீங்க. என்னோட காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து இந்த செகண்ட் வரைக்கும் என்னோட ஆருயிர், ஏழுயிர், எட்டுயிரா இருக்கற சுஜியோட ஸ்கூல் ஃப்ரெண்ட் அவன். இங்கதான் அவன எனக்கு சுஜி இன்ட்ரோ பண்ணி வச்சா. அந்த நாள்ல இருந்து நாங்க மூணு பேரும் மூவேந்தரா... சண்டை போட்டுக்கலைங்க... போன வாரம் வரைக்கும் ஒண்ணா சுத்திட்டு இருந்தோம். ஹ்ம்ம்ம்... ஒரே சோகம் :((( சுஜிக்கு லாஸ்ட் வீக் தான் கல்யாணம் ஆகி UK போயிட்டா. போகும்போது எனக்கு ஒரே அட்வைஸ். அந்த மோப்ப நாய் எனக்குள்ள அவன் வந்தத கெஸ் பண்ணிடுச்சு. ஆனா நம்ம ஊர் போலிஸ் டாக் மாதிரி அவளும் ஒரு அரைகொறை. அவனுக்கு வந்துடுச்சானு அவளால கெஸ் பண்ண முடியலை. ஆனா எனக்கு நல்லாவே தெரியும் அவனுக்குள்ள நான் வந்துட்டேன்னு. ஆனா சொல்லியே தொலைய மாட்டேன்றான்.

நீங்களே சொல்லுங்க. அவன்தான மொதல்ல சொல்லணும். நானா சொன்னா நல்லா இருக்காது இல்ல. அவன் வந்து சொல்லும்போது எப்படி நான் பதில் சொல்லணும்னு நிறைய யோசிச்சிட்டு இருக்கேன். மி டூன்னு சொல்லவா இல்ல நானும்னு சொல்லவா இப்படிதான். ஆனா ஒரு ஐடியாவும் தோண மாட்டென்றது :((( பேசாம கொஞ்சம் பிகு பண்ணிட்டு அப்புறம் சரி சொல்லலாமான்னு இப்பொ நினைச்சுட்டு இருக்கேன். அடடா... அவன் வந்துட்டான். சரிங்க. நாங்க இப்போ "Jab We Met" படத்துக்கு போறோம். அந்த படத்துலயாவது எனக்கு எதாவது ஐடியா கிடைக்குதானு பாக்கறேன் ;))) யார்கிட்டயும் இதை சொல்லிடாதீங்க. அய்யோ என்ன இது?? ஒரு பொண்ணோட வரான். அந்த பொண்ணு வேற இவன் கைய பிடிச்சுட்டே நடந்து வருது. எனக்கு வேற பயமா இருக்கே... நான் போய் யாருன்னு பாக்கறேன். நாம இன்னொரு நாள் பாப்போங்க. சீ யு. பை...

(தொடரும்)

பி.கு: ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.

பி.குக்கு பி.கு: ஆனால் அவர்கள் வழியை பின்பற்றாமல் அதாவது பிரதி திங்களன்று இல்லாமல் பிரதி செவ்வாயன்று வெளியிடுவேன் ;)

பி.குக்கு பி.குக்கு பி.கு: இது ஒரு மாத கதை. அதாவது நான்கு வாரங்கள் மட்டுமே. அதாவது நான்கு பகுதிகள் மட்டுமே. அய்யோ மொறைக்காதீங்க. பாவம் சின்ன பொண்ணு. பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுங்க.

தாயா? தாரமா?? - நஒக

"ஹே! பேசாம நாம தனிக் குடித்தனம் போயிட்டா என்ன?" பெட்டில் கிடந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த கவிதா நிமிர்ந்து கார்த்திக்கை முறைத்தாள்.

"கல்யாணமாயி ஒரு மாசம் கூட ஆகலை. மருமக வந்து ஒரே பையன பிரிச்சு கூட்டிட்டுப் போயிட்டானு எனக்கு பேரு வாங்கித் தரணுமா?"

"அது இல்ல டியர். அம்மா அப்பா இருக்கறதால என்னால ஃப்ரீயா என் ஆசை மனைவிய நினைச்சப்போ எல்லாம் கொஞ்ச முடியறது இல்ல" என்று அவள் இடுப்பை வளைத்துப் பிடித்து காதில் சொன்னான். அவனது கைகளை அவள் தட்டி விட

"இல்ல எல்லா எடத்துலயும் அம்மா உரிமை எடுத்துக்கும்போது உன் முகம் சுருங்குதே. நீ ஃபீல் பண்ணினா என்னால தாங்க முடியுமா சொல்லு. அதான் கேட்டேன்"

"இங்க பாருங்க. அவங்க பாசமா வளத்த பையனுக்கு திடீர்னு எதும் செய்யக் கூடாதுனு சொன்னா அவங்களுக்கு எப்படி இருக்கும். இன்னும் கொஞ்ச நாள்ல சரி ஆயிடுவாங்க. சரியா"

"நீ ஃபீல் பண்ணலைனா ஓகே" என்று தோளை குலுக்கி விட்டு எழுந்து டைனிங் ஹாலுக்கு சென்றான்.

"கவிம்மா வந்து கார்த்திக்குக்கு டிஃபன் வை" என்ற மாமியாரின் குரலில் ஆச்சர்யமாகிப் போனவள் 'எப்போமே அவங்கதானே வைப்பாங்க' என்று எண்ணியபடியே வந்து அவனுக்கு சாப்பாடு வைத்தாள்.

கோவிலுக்கு கிளம்ப காரை கார்த்திக் வெளியில் எடுத்து வந்ததும் முன்னால் உட்காரப் போன மாமனாரைத் தடுத்து கவிதாவை முன்னால் உட்கார சொன்ன மாமியாரை இன்னும் ஒரு மடங்கு ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

கோவில் பிரகாரத்தை சுற்றி வருகையில் கவிதா அன்றைய ஆச்சரியங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு விஷமப் புன்னகையுடன் அமைதியாய் கேட்டு கொண்டிருந்தவன் மனம் அமைதியாய் சொன்னது

'ஹ்ம்ம்ம்... நீ இப்பதான் வந்திருக்கறதால அம்மா மேல பாசமாதான் பேசுவ... பின்னாடி உங்க ரெண்டு பேர் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்காம இருக்கறதுக்கு இதை விட வேற வழி தெரியல. அதான் இப்படி ட்ராமா பண்ணினேன். நம்ம ரூமுக்கு எதுக்கோ வந்த அம்மாவ கண்ணாடில பாத்துட்டுதான் தனிக் குடித்தனம் பத்தின பேச்சை ஆரம்பிச்சேனு உனக்கு எங்க தெரியப் போகுது'

***************************************

இது சர்வேசன் சாரோட நச்சுனு ஒரு கதை போட்டிக்காக முயற்சி செஞ்ச கதை. நச்சுனு இருக்கானு சொல்லுங்க... :)))

Wednesday, December 12, 2007

சிலிர்க்கின்றன விரல்கள்!

மார்கழிப் பனியில் நனைந்த
பறவையின் சிறகாய்
சிலிர்க்கின்றன விரல்கள்!
கீபோர்டில் உன் பெயரின்
எழுத்துக்களில் படும்போது!!

Thursday, December 6, 2007

விஜய் டிவியின் காதலிக்க நேரமில்லை பாடல்


போன வாரத்துல இருந்து "காதலிக்க நேரமில்லை"-னு ஒரு காதல் தொடர் 9 மணிக்கு விஜய் டிவில போட்டுட்டு இருக்காங்க. சீரியல் எப்படி இருக்குனு பாத்து தெரிஞ்சுக்கோங்க;) ஆனா அந்த தொடரோட டைட்டில் சாங் அட்டகாசமா இருக்கு. இசை, குரல், வரிகள்னு எல்லாமே அட்டகாசம். பாடினது யாருனு நானும் என் ஃப்ரெண்ட்ஸும் ரெண்டு நாளா உக்காந்து பாத்தோம். பேர் போடவே இல்லை :( என் தம்பி அவனுக்கு யாரோ சொன்னாங்கனு சொன்னான் இதை பாடினது super singerல செலக்ட்டான யாரோனு. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. வரிகள் இதோ...

என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன் செய்தி அனுப்பு

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வரத் தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்துக் கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவைக் கொல்கிறேன்

(என்னைத் தேடி)

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
இலையை போல் என் இதயம் தவறி விழுதே

(என்னைத் தேடி)


நல்லா இருக்கு இல்ல??? :)))

Tuesday, December 4, 2007

ஏனம்மா வளர்ந்தேன்???


கந்தலாய் கசக்கிப் போடும்
அன்றாட வாழ்வின் துயரங்களிலும்
துயரங்களை நெஞ்சில் சுமந்து
தலை தடவிய காதலிலும்
காதல் அள்ளித் தந்த
உயிர் பிரியும் வலியிலும்
வலியில் மயிலிறகாய் வருடி
ஆறுதலாய் தோள் தந்த நட்பிலும்
நட்பு நிலையில்லாத உறவாய்
பிரிந்து சென்ற வேதனைகளிலும்
குழம்பித் தவிக்கிற மனதில்
மழலையாய் உன் மடியில்
மகிழ்ந்திருந்த என் நினைவுகள்
மத்தாப்பூவாய் விரிகிறது
மழலையாகவே இருந்திருக்கலாமோ?
ஏங்கித் தவிக்கிறேன்
ஏனம்மா வளர்ந்தேன்???

Thursday, November 29, 2007

இன்னைக்கு எனக்கு பிறந்த நாளுங்க!!! :)

என்ன ஆச்சர்யம்! ஒரே வருஷத்துல ரெண்டு தடவையானு பாக்கறீங்களா? எனக்குனா எனக்கு இல்லைங்க. இம்சை அரசிக்கு :)

சென்ற வருடம்... சென்ற வருடம்... சென்ற வருடம்... (எக்கோப்பா... ;))

இந்த நாள்... இந்த நாள்... இந்த நாள்... (மறுபடியும் எக்கோதானுங்க)

நான் இம்சை அரசியாக அவதரித்த நன்னாள் ;) (நன்னாளான்னு ஆச்சரியத்துல நீங்க வாயப் பொளக்கறது எனக்கு தெரியுது :))

ஆபிஸ்ல என்டரி லெவல் ட்ரெயினிங் முடிச்சு ப்ராஜக்ட்குள்ள வலது கால எடுத்து வச்சதும் அடங்கொக்கமக்கா! மறுபடியும் ட்ரெயினிங். அது முடிஞ்சு ப்ராஜக்டுக்குள்ள ஜாயின் பண்றதுக்கு முன்னாடி கொஞ்ச நாள் வெட்டியா இருந்தப்போ ஆபிஸ் personal pages மூலமா நம்ம வெட்டிப்பயல் ப்ளாக் அறிமுகம். அங்கிருந்து அப்பிடியே வ.வா.சங்கம் :) சென்னி மாநகரத்துல என் ஆருயிருங்கள விட்டு பிரிஞ்சு வந்த துக்கத்துல 7 தோசை மட்டுமே சாப்பிட்டுட்டு இருந்த நான் சங்கத்து பதிவுகள படிச்சு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சேன் (சங்கத்து மக்கள்ஸ்... நோட் திஸ் பாயிண்ட்... அதுக்கான வைத்திய செலவு பில்ல உடனடியா அனுப்பி வைக்கறேன்;))))

நாம எப்படி நம்ம கவலை எல்லாம் மறந்து சிரிக்க ஆரம்பிச்சோமோ அதே மாதிரி அட்லீஸ்ட் ஒரு ரெண்டு பேரையாவது... சிரிக்க வைக்க முடியாட்டியும் பரவாயில்ல... ஒரு சின்ன புன்னகையாவது கொண்டு வர வைக்கணும்கிற ஒரு நல்ல எண்ணத்துல தமிழச்சி-ன்னு பேரு வச்சி ப்ளாக்குக்கு ஓபனிங் செரிமனி நானே நடத்திக்கிட்டேன். ஆரம்பத்துல எதும் தெரியாம முழிச்சிட்டு இருந்த எனக்கு எல்லா உதவிகளையும் செஞ்ச வெட்டிக்கு ஸ்பெஷல் நன்றிகள். அப்புறம் வெட்டி வந்து மேடம் தமிழச்சி-ன்ற பேருல ஏற்கனவே ஒரு பெரிய பதிவர் இருக்காங்க. அதனால நீங்க கொஞ்சம் பேரை மாத்திக்கிட்டிங்கனா பரவால்லைனு சொன்னார். ஆஹா! என்ன பேரு வைக்கலாம்னு ஒரு ரெண்டு நாளா இல்லாத மூளைய.... ச்சே..... மூளைய கசக்கி கசக்கி யோசிச்சேன். ஹ்ம்ம்ம்ம்..... நாளைக்கு என் பிள்ளைக்கு பேர் வைக்க கூட இப்படி யோசிக்க மாட்டேன் போல. ரூம்ல ஃப்ரெண்ட்ஸ் என் டார்ச்சர் தாங்க முடியாம சரி நாங்க எதாவது ஐடியா தரோம்னு மத்த ப்ளாக் பேரெல்லாம் கேட்டாங்க. நான் சொன்னத வச்சு என் ஆருயிர் எதிரி... ச்சே.... தோழி பேசாம உன் கேரக்டருக்கு பொருத்தமா 'இம்சை அரசன்'-ன்னு வச்சிடேன்னு சொன்னா. உடனே இன்னொருத்தி ஹே! அது பசங்க வச்சா நல்லா இருக்கும்னு சொன்னா. அப்போதான் என் மூளைல அப்படியே ஒரு ஸ்பார்க் :))) பேரு கிடைச்சிடுச்சு... பேரு கிடைச்சிடுச்சு... ன்னு குதிச்சேன். சந்தோஷமா 'இம்சை அரசி' எப்படி இருக்குனு நான் கேட்டதும் அடுத்த நொடியே பதில் வந்துச்சு "உனக்கு ஏத்த பேரு"-ன்னு. இதுதாங்க இம்சை அரசியின் வரலாறு. நாளைக்கு உங்க பிள்ளைங்க ஹிஸ்டரில படிக்கும்போது உங்ககிட்ட சந்தேகம் கேட்டா நீங்க தெரியாம முழிக்க கூடாது இல்ல. அதுக்குதான் இவ்ளோ கதையும் ;))))

ஓகே... ஓகே.... நோ வயலென்ஸ்.... அப்படியெல்லாம் கோவமா முறைக்க கூடாது. ஏனா இன்னைக்கு நான் பர்த்டே பேபி ;)))

சரி மேடம் சீரியஸ் ஆயிட்டாங்க.......

இதுவரைக்கும் நான் எழுதியதை படிச்சு நிறை குறைகள் சொல்லி, என்னை மென்மேலும் வளர்த்துக் கொள்ள உதவிய சக பதிவர்களுக்கும், பதிவர் அல்லாத மற்ற நண்பர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் :)))

இந்த இம்சை அரசியால எனக்கு நிறைய விலை மதிக்க முடியாத பரிசுகள் கிடைச்சிருக்கு. அதாங்க அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், தங்கைகள், நட்புகள். அதுல ஒரு விலை மதிக்க முடியாத பரிசு என் பிறந்த நாளுக்காக ஒரு பரிசு கொடுத்திருக்கு. அது என்னன்னு தெரியணும்னா இங்க க்ளிக் பண்ணுங்க :)))

Monday, November 19, 2007

உன் கண்ணோரம் வாழ... IV

'அய்யோ அவளை மாட்டி விட்டுட்டேனே! என்ன பண்ணப் போறாளோ'

'ச்சே... அவங்கப்பா வேற எதாவது ஃபோன்ல பிரச்சினைனு நினைச்சிருப்பாரு'

'ஒருவேளை அவர் அப்படி நினைக்காம வேற எதும் திங்க் பண்ணினார்னா...'

மனது இரண்டாய் பிரிந்து உட்கார்ந்து பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க அந்த ஏ.சி வால்வோ பஸ் பயணம் அவனுக்கு நெருப்பின் மேல் உட்கார்ந்திருப்பது போல் இருந்தது.

அடுத்த நாள் காலையில் ஆபிஸிற்கு கிளம்பி கொண்டிருந்தவன் மொபைல் பாட்டு பாட ஆவலாய் ஓடி சென்று எடுத்தான். ஊரிலிருந்து ஆனால் புதிய நம்பர்... யாராய் இருக்கும்? என்ற கேள்வியுடன் எடுத்து "ஹலோ" என்றான்.

"அண்ணா! நான் உமா பேசறேன்" என்றதும் ஒரு மெல்லிய பதட்டம் உடலில் பரவ

"என்னாச்சு உமா என்னாச்சு? எதாச்சும் பிரச்சினையா?" என்று கேட்டான்.

"அனு நைட் என்கிட்ட பேசினா. நேத்து அப்பாகிட்ட எதோ பேசிட்டிங்களாமே. அவருக்கு எதோ ரொம்ப சந்தேகம் வந்துடுச்சாம். அவ என்ன பண்றான்னு நோட் பண்ணிட்டே இருக்காராம். அவர் தூங்கினதுக்கப்புறம் தெரியாம எனக்கு ஃபோன் பண்ணினா. உங்ககிட்ட இதை சொல்ல சொன்னா" என்றாள்.

"சரி அவள எதும் கவலைப்படாம இருக்க சொல்லு"

"இல்ல அண்ணா. அவ ரொம்ப பயந்துட்டே இருக்கா. நெத்து நைட் ஒரே அழுகை. அந்த பையன் வீட்டுல வேற ரொம்ப ப்ரெஸ் பண்ணி கேக்கறாங்களாம். என்ன ஆகுமோன்னு தெரியலைனு சொல்லி அழுதுட்டே இருக்கா"

இதைக் கேட்டதும் அவன் கண்கள் அவனையும் அறியாமல் தளும்பியது.

"அவகிட்ட நான் இருக்கேன். தைரியமா இருன்னு சொல்ல சொன்னேனு சொல்லு. ரொம்ப தேங்ஸ் மா"

"ஓகே அண்ணா. எதாவது சொல்ல சொன்னா நான் மறுபடியும் ஃபோன் பண்றேன்" என்று ஃபோனை வைத்து விட்டாள்.

நான்கு நாட்கள் என்ன ஆயிற்று ஏது ஆயிற்று என்று தெரியாமலே நகர்ந்தன. அவனுக்கு வாழ்க்கையே இருண்டு போய் விட்டது போல தோன்றியது. சாப்பிடாமல், தூங்காமல், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் சகலத்தையும் தொலைத்தவன் போல திரிந்து கொண்டிருந்தான். வியாழக்கிழமை இரவு வீட்டிற்கு ஃபோன் செய்த போது அம்மாவிடம் பேச்சு வாக்கில் அனு வீட்டை இழுத்து வந்தான்.

"அந்த பொண்ண யாரோ கேட்டுகிட்டே இருக்காங்கன்னு சொன்னீங்களே என்னாச்சும்மா?"

"ஓ! அதுவா.... பாரு மறந்தே போயிட்டேன். அனு அப்பா இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருந்தார்டா. அப்பாகிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார். அந்த பையனுக்கு இப்போதைக்கு நிச்சயம் பண்ணிடலாம்னு யோசிச்சிட்டு இருக்காராம். அப்பாவுக்கு தெரிஞ்சவங்கன்றதால கொஞ்சம் இடம் எப்படினு விசாரிக்க சொல்லிட்டு போயிருக்காரு"

இதைக் கேட்டதும் அவனால் ஒன்றுமே பேச முடியவில்லை.

"சரிம்மா. நமக்கெதுக்கு அவங்க பிரச்சினை. நான் சாப்பிட போறேன். அப்புறம் பேசறேன்" என்று வைத்து விட்டு சென்று படுக்கையில் விழுந்தான். அவனது மொபைல் அடிப்பது கூட உணராமல் படுத்தேக் கிடந்தவன் திடீரென்று உணர்வு வந்தவனாய் வேகமாய் எடுத்து பேசினான்.

"தம்பி அப்பா பேசறேன்"

"சொல்லுங்கப்பா"

"சனிக்கிழமை எதாவது வேலை இருக்கா?"

"இல்ல"

"சரி நாளைக்கு கிளம்பி வீட்டுக்கு வா. உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்"

"என்ன வி... ஷ... ய...ம்???"

"கிளம்பி வான்னா வா. சரி வைக்கறேன்"

'எதுக்கு அப்பா வர சொல்றார். ஒருவேளை மாமா பேசினது நாந்தான்னு கண்டுபிடிச்சிருப்பாரோ?? அப்பாகிட்ட போட்டு குடுத்திருப்பாரோ???' பயத்தில் நாக்கு உலர்ந்தது.

'அப்பா கேட்டா என்னன்னு சொல்றது. அவர்ட்ட நேர்ல நின்னே பேச மாட்டேனே'

அடுத்த நாள் முழுவதும் இப்படியே யோசனையில் கழிந்தது. அடுத்த நாள் இரவு ஊருக்கு பயணமானான். அடுத்த நாள் காலையில் அப்பா எழுவதற்கு முன் எழுந்து குளித்து கிளம்பி அவரது அழைப்பிற்காக காத்திருக்கலானான். கிளம்பி வந்தவர் அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.

"நம்ம நடேசன் மாமாவோட சின்ன பொண்ணு அனுவ தேரியுமா?"

"ஒரு ரெண்டு மூணு தடவை பாத்திருக்கேன்பா" பயத்தில் நா உலர்ந்தது.

"ஹ்ம்ம்ம். அந்த பொண்ணை நம்ம தங்கவேலு பையனுக்கு கேக்கறாங்களாம். அவங்க அப்பா வந்து அவங்களப் பத்தி விசாரிக்க சொன்னார்"

"சரிங்கப்பா" பயத்திலும் துக்கத்திலும் வார்த்தைகள் தடுமாறின. மனம் அனிச்சையாய் 'ஒருவேளை நம்மளைப் போயி விசாரிக்க சொல்லுறாரோ' என்று எண்ணியது.

"ரொம்ப நல்ல பொண்ணுப்பா. தங்கம். அப்படி பொண்ணு கிடைக்கறதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்" என்றவர் அமைதியாகி அவன் முகத்தை ஆராய்ந்தார். எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் அடுத்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்தான்.

"முன்னாடி இருந்தே எனக்கு ரொம்ப ஆசை. அனுவ உனக்கு கட்டி வச்சு நம்ம வீட்டு மருமகளாக்கிக்கணும்னு. நான் கேட்டா பதிலேதும் பேசாம சரின்னு சொல்லிடுவார். இருந்தாலும் உன் வாழ்க்கை. உன்னை கேக்காம நான் முடிவு பண்ணக் கூடாதுனு தான் நேத்து அவர்கிட்ட எதுவும் பேசலை. இனி உன் பதில்லதான் இருக்கு"

'ஆஹா! கரும்பு தின்ன கூலியா??!!! நம்ம பிரச்சினை இப்படி அல்வா சாப்பிடற மாதிரி முடியும்னு நினைக்கவே இல்லையே! கடவுளே!! ரொம்ப ரொம்ப நன்றி' மனம் குதியாட்டம் போட முகம் அதை வெளிக்காட்டாமல்

"உங்க இஷ்டம் எப்படியோ அப்படியே பண்ணுங்கப்பா. உங்க முடிவு எதுவாயிருந்தாலும் எனக்கு சம்மதம்" என்று நல்ல பிள்ளையாய் அவன் நடிக்கவும் அவர் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

வேறென்னங்க? நிச்சயம் ஆகி இந்த ஜோடி கல்யாணத்துக்கு காத்துட்டு இருக்கு. அநேகமா அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருவாங்க. என்னடா இதுனு பாக்கறீங்களா?? இதுல வர நிகழ்ச்சிகள் என் கூட வேலை பார்க்கும் நண்பர் ஒருவரோடது. அவரை பாக்கும்போதெல்லாம் எனக்கு காதல் மேல ஒரு மரியாதையே வரும். அதனால இந்த தொடர் நாலும் அவரோட காதலுக்கு சமர்ப்பணம் :)))

--சுபம்...

Tuesday, November 13, 2007

அன்பு அண்ணாவிற்கு...............

அடுத்து எத்தனை பிறவிகள் இருந்தாலும் அத்தனை பிறவிகளிலும் எனக்கு அண்ணனாக பிறக்க வேண்டுமென்று நான் வேண்டும் என் பாசமலர் தொல்ஸ் அண்ணாவிற்கு அன்பு தங்கையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)))))))))))))))))))))))))))))))))


உங்களுக்காக நான் ஸ்பெசலா செஞ்ச Flower Cake..... :)))


இங்கே இருந்திருந்தா கண்டிப்பா நானே என் கையால கேக் செஞ்சு தந்திருப்பேன் ;)))))))

உன் கண்ணோரம் வாழ... III

"டேய்! ஏண்டா என் உயிர எடுக்கற?" அழாத குறையாய் சொன்ன ராமிடம் கெஞ்சினான் அரவிந்த்.

"ப்ளீஸ்டா. நான் அப்புறம் எப்படி அவகிட்ட பேசுவேன். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா"

"டேய் உனக்கே இது அநியாயமா தெரியலை. எனக்கு கால் பண்ணி நான் அட்டெண்ட் பண்ணின உடனே ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கற வாய்ஸ போட்டு விடற. அது உடனே போடறியா இல்ல லேட் ஆகுதானு சொல்ல சொல்லி உயிர வாங்குற. நெனைச்சு பாருடா. மூணு நாளா ஃபோனும் கையுமா உக்காந்திருக்கேன். என்னைப் பாத்தா உனக்கு பாவமா தெரியலையா?" பரிதாபமாய் அவன் சொல்லவும் என்ன செய்வதென்று திரும்பியவன் கண்களில் விழுந்த சந்துரு வேக வேகமாய்

"மச்சான் நான் வெளில கிளம்பறேண்டா. பை" என்று சொல்லி விட்டு எஸ் ஆகிவிட்டான்.

"சரிடா. இதுவரைக்கும் ப்ராக்டிஸ் பண்ணினத வச்சு இன்னைக்கு டெஸ்ட் பண்றேன்" என்றபடி ஹெட்ஃபோனை எடுத்து காதில் மாட்ட ஆர்வமான ராம் அவன் அருகில் வண்து அமர்ந்தான்.

ரிங் போக ஆரம்பித்ததும் ஒரு இனம் புரியாத பயம் எழுந்து வயிற்றை பிசைய அவஸ்தையாய் நெளிந்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் எதிர்பார்த்தது போல அனுவின் அம்மா ஃபோன் எடுக்கவும் வேக வேகமாய் வேலை செய்து ரெக்கார்ட் செய்து வைத்திருந்ததை போட்டு விட்டான். அவளது அம்மாவும்

"ஒரு நிமிஷம் இரும்மா. கூப்பிடறேன்" என்று கூறி அவளை அழைத்து ஃபோனைக் கொடுத்தார்.

"ஹே உமா... வீட்டுக்கு போயிட்டியாடி?" என்று வழக்கமான தோரணையில் ஆரம்பித்தவளிடம்

"ஏ அனு... உமா இல்ல. நான்தான் அரவிந்த்" என்று சொன்னதும் வாயைப் பிளந்தவள் அருகிலிருந்த தாயைக் கண்டதும் அமைதியாய்

"ஹ்ம்ம்ம்... சொல்லுடி... ஓ அன்னைக்கு இன்ட்ரோ பண்ணினியே அந்த அக்காவா... சரி..." என்றாள்.

"எப்படி இருக்க?"

"நான் இங்க நல்லா இருக்கேங்கக்கா. நீங்க எப்படி இருக்கீங்க? உங்களுக்கு வேலை எல்லாம் எப்படி போகுது?"

"வேலை எங்க போகுது? எப்போ பார்த்தாலும் உன் நினைப்பாவே இருக்கு" என்று வேதனையாய் சொன்னவன் சட்டெனத் திரும்பி பார்த்தான். அவனை ஆர்வமாய் கவனித்தபடி அருகிலிருந்த ராமை முறைத்தபடி எழுந்து அறைக்குள் சென்று அமர்ந்தான்.

"அதெல்லாம் ஒண்ணும் நினைக்காதிங்கக்கா. நல்லா பண்ணுங்க. உடம்ப பாத்துக்கங்க. போன தடவைப் பாத்தப்பவே கொஞ்சம் இளைச்சுப் போயிருந்தீங்க"

"சரி அதை விடு... அங்க எதும் பிரச்சினை இல்லையெ. வீட்டுல திரும்ப எதாவது அந்த பையன் மேட்டர் பத்தி பேசினாங்களா?"

"காலெஜ்ல எந்த பிரச்சினையும் இல்லாம போயிட்டு இருக்கு. எங்க லெக்சரர் திரும்ப அந்த செமினார் பத்தி எதுமே பேசலை. நீங்க எதும் வொரி பண்ணிக்காதீங்க" என்றவள் பார்வையில் அவள் அம்மா அந்த இடத்தை விட்டு செல்வது விழுந்ததும் சத்தத்தை குறைத்து ஹஸ்கி வாய்ஸில்

"மாமா இங்க எதும் பிரச்சினை இல்ல. ஒண்ணும் ஃபீல் பண்ணாதீங்க. சரி அம்மா உமா பேசறானு சொன்னாங்க" என்று ஆச்சரியமாய் கேட்டாள்.

"அன்னைக்கு உமாவ பேச சொல்லி ரெக்கார்ட் பண்ணி வச்சேன் இல்ல. அதை யூஸ் பண்ணி பண்ணினேன். இனிமேல் சாயந்திரம் இதே நேரத்துக்கு ஃபோன் பண்றேன். நீயே வந்து எடு"

"ஹ்ம்ம்ம்.... பெரிய ஆள் தான் நீங்க... சரி எப்பொ ஊருக்கு வரீங்க?"

"இந்த வாரம் சனி ஞாயிறு வரேன். உன்னை பாக்க முடியுமா?"

"ரொம்ப கஷ்டம். வர சனிக்கிழமை உங்க வீட்டுக்கு வரணும்னு எங்கப்பாவும் பெரியப்பாவும் சொல்லிட்டு இருந்தாங்களே"

"என்ன விஷயமாம்?"

"தெரியலை.... சரி சரி.... அம்மா வராங்கனு நினைக்கறேன். நாளைக்கு பேசுங்க. இல்லைனா இவ்ளோ நேரம் பேசறேனு சந்தேகம் வந்துடும்"

"சரி. பை டா"

"பை மாமா" என்று ஃபோனை வைத்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள். உலகத்தையே புரட்டி காலடியில் போட்ட களிப்பு முகத்தில் தெரிந்தது.

--------------------------------------

சனிக்கிழமை...

வழக்கமான நேரத்தில் ஃபோன் அடிக்கவும் ஓடி சென்று ஃபோனை எடுத்தாள் அனு.

"உங்கப்பாவும் பெரியப்பாவும் கிளம்பிட்டாங்க. காருக்கு பின்னாடி அந்த நம்பர் ப்ளேட்டுக்கு மேல ஒரு தகடு இருக்கு இல்ல. அதுக்குள்ள ஒரு கீசெயின் செல்லோ டேப் போட்டு ஒட்டி வச்சிருக்கேன். எடுத்துக்கோ. பாத்து பத்திரமா எடு"

"சரி. வந்துட்டாங்க. ஒரு கால் மணி நேரம் கழிச்சு ஃபோன் பண்ணுங்க" என்று வைத்தவள் ஆவலாய் வாசலுக்கு ஓடினாள். படியேறி வந்த தந்தை அவள் தலையில் கைவைத்து முன் முடியை சிலுப்பி விட்டு புன்னகைத்தபடி உள்ளே சென்றதும் காரிடம் ஓடினாள். அவன் சொன்ன இடத்தில் இருந்து கீசெயினை எடுத்தவள் அதை இமைக்காமல் அப்படியே பார்த்தாள். ஒரு சதுர வடிவ கண்ணாடி போன்ற பொருளில் அவனது படம் செதுக்கியது போல இருந்தது. மனம் உற்சாகத்தில் துள்ள வேகமாக உள்ளே ஓடினாள். அங்கே அவளது தந்தை ரிசீவரை கையில் வைத்துக் கொண்டு

"உமாவா? எப்படிம்மா இருக்க?" என்று கேட்டுக் கொண்டிருக்க அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

"அவளை கூப்பிடறேன். ஏன் அப்பாகிட்ட பேச மாட்டியா" என்றவருக்கு வந்த பதிலில் ஏதோ பிடிபட திரும்பி பார்த்தவர் மகள் பேயடித்தது போல நிற்பதை கண்டதும் மீண்டும் வேகமாக

"எங்கம்மா இருக்க இப்போ?" என்று கேட்கவும் மறுமுனை உடனடியாய் துண்டிக்கப்பட்டது. அதை வைத்து விட்டு திரும்பியவர் பார்வையில் பயத்தில் அவசர அவசரமாய் உள்ளே ஓடிய அனு பட்டதும், ஏதோ புரிந்தவராய் முகம் சுருக்கினார்.

தொடரும்...

Wednesday, October 31, 2007

என்ன கொடுமை சார் இது???


எனது சமையல் அனுபவத்தில் என்னால் இதுவரை செய்ய முடியாமல் போன விஷயம் என்றால் இதுதான். ஒவ்வொரு முறையும் முயன்று முயன்று தோற்றுப் போகிறேன். எப்படித்தான் செய்கிறார்களோ???!!! கடலைப் பருப்பை கருகாமல் பொன்னிறமாக தாளிப்பதைத் தான் சொல்கிறேன். ஒவ்வொரு முறையும் கருகிப் போகும்போதோ நிறம் மாறாமலோ வரும்போது எரிச்சலாகி விடுகிறது. என்ன கொடுமை சார் இது???

***

ஆனந்த விகடனில் இந்த வாரம் எனது வலைப்பூவைப் பற்றி வந்திருப்பது தெரிந்ததும் என் நட்பு வட்டத்தில் அனைவருக்கும், எனது டீமுக்கும் தெரிவித்தேன். அனைவரும் சந்தோஷப்பட்டனர். புத்தகம் வாங்கி என் தோழிகளுக்கு காட்டினேன். எனது டீமில் மூன்றே பேர்தான் தமிழ் மக்கள். எனது லீடிடம் கொண்டு சென்று காட்டினேன். அவர் அதைப் பார்த்து விட்டு அவஸ்தையாய் சிரித்தார். இந்த படத்தைப் பார்த்தால் உன் ப்ளாக்குனு எனக்கு தெரியுதுடா. பட் எனக்கு தமிழ் கொஞ்சம் பேசதான் தெரியுமே தவிர படிக்கத் தெரியாதுனு சொன்னார். பரவால்ல அண்ணானு சொல்லிட்டு இன்னொரு டீம்மேட்டிடம் காட்டினேன். அவன் சந்தோஷமாய் அதை வாங்கி கொண்டு இன்னொரு பையனிடம் ஓடினான். டேய் இதுல என்ன போட்டிருக்குனு படிச்சு சொல்லுடா என்றான். அவனோ க.... தை.... க.... வி... தை..... என்று எழுத்துக் கூட்டிக் கொண்டிருந்தான். உனக்கு தெரியுமா தெரியாதா? இப்படி படிச்சனா நான் பஸ்ஸ விட்டுடுவேன் என்று இவன் சொல்லவும் அவன் சாரிடா எனக்கு ரொம்ப தெரியாது. எழுத்துக் கூட்டிதான் படிக்க தெரியும் என்று அவன் சொன்னான். கலிகாலமடா சாமி என்று தலையிலடித்துக் கொண்டேன். ஹ்ம்ம்ம்.... பரவாயில்லை. படிக்க தெரியவில்லை என்றாலும் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறதே என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு நானே அவர்களுக்குப் படித்துக் காட்டினேன். என்ன கொடுமை சார் இது???

***

இப்பொழுதெல்லாம் சமையல் செய்ய எதையும் அரைத்துக் கொண்டு இருக்க தேவை இல்லை. எனது அம்மா சிக்கன் குழம்பு வைத்தால் வேலையை சீக்கிரமே ஆரம்பித்து விடுவார். நிறைய பூண்டு உரித்து, இஞ்சி உரித்து அதை அரைத்து இஞ்சி பூண்டு விழுது எடுப்பதற்கே நேரம் பிடிக்கும். இங்கு வந்து எங்கள் கைவண்ணத்தை ஆரம்பித்தபோதுதான் கடையில் ஒருநாள் பார்த்தோம். Ginger garlic Paste என்று இருந்தது. அட இது இப்படி கூட கிடைக்கிறதா என்று வியந்து அதன் பிறகு அதை வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தோம். பின்பு ஒரு நாள் ஒரு Food Worldல் பார்த்தோம். readymade Aloo Muttor Gravy, Aloo Paneer Gravy என்று. செய்முறை விளக்கம் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த பாக்கெட்டை ஒரு பத்து நிமிடம் வைத்திருந்து பின் எடுத்து பரிமாறுங்கள் என்று. எனக்கு மயக்கம் வராத குறைதான். என்ன இது நாமளா செய்யணும்னு நினைச்சாக் கூட செய்ய விட மாட்டாங்க போலனு வாயடைத்துப் போய் வந்தோம் (சத்தியமாய் அந்த க்ரேவியை வாங்காமல்தான்). இரண்டு நாட்களுக்கு முன் TV பார்த்துக் கொண்டு இருந்தபோது 'புளிக் குழம்பு வைக்கணும்னா எதுக்கு புளிய வாங்கி ஊற வச்சு கரைச்சு கஷ்டப்படணும். இருக்கவே இருக்கு ஆச்சிப் புளி கரைசல்' என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் அதே மயக்கம் வந்தது. அடப் பாவிகளா புளியக் கரைக்கறது ஒரு கஷ்டமான வேலையா?? என்ன கொடுமை சார் இது???

***

எனது பக்கத்து வீட்டு அக்கா நான் சென்ற முறை வீட்டிற்கு போயிருந்த போது "பரவாயில்ல.... நீங்க கொஞ்ச நாள்லயே ரொம்ப நல்லா கன்னடம் பேசக் கத்துக்கிட்டிங்களே" என்று ஆச்சரியப்பட்டார். எனக்கு எக்கச்சக்க குஷி. நான் பேசிய கன்னடம் இதுதான்.

"சொல்ப வெயிட் மாடி"

"சொல்ப மூவ் மாடி"

"சொல்ப ஸ்டாப் மாடி"

என்ன கொடுமை சார் இது???

***
எனக்கு funny picture எதாவது அனுப்புங்கன்னு என் டீம்மேட்ஸ் எல்லாருக்கும் ஒரு மெயில தட்டி விட்டேன். அனுப்பின ரெண்டு நிமிஷத்திலேயே சண்டிகர்க்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போன டீம்மேட் ஒரு பையன் ரிப்ளை அனுப்பி இருந்தான். ஆஹா! இவன் எதாவது நல்ல படமா அனுப்பி இருப்பானு வேக வேகமா திறந்து பார்த்தா...... OMG!!!... பல்பு வாங்கிட்டேனே..... என் டீம்ல ஒரு பொண்ணுகிட்ட சொல்லி என்னையே ஃபோட்டோ எடுத்து தர சொல்லி ஐடியா கொடுத்திருந்தான். என்ன கொடுமை சார் இது???

***

நாமெல்லாம் பர்த்டேனா என்ன பண்ணுவோம்? நானெல்லாம் மொதல்ல எங்கம்மா, அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்ததுக்கு பிறகுதான் மத்த வேலைய ஆரம்பிப்பேன். ஆனா இப்போ சன் மியூசிக்குக்கோ இல்ல எதாவது FM ரேடியோவுக்கோ ஃபோனப் போட்டு அங்க இருக்கற பெரியவங்ககிட்ட வாழ்த்து வாங்கிகிட்டாதான் நமக்கு ரொம்ப புண்ணியம். அதும் ஒருத்தர் பர்த்டே பேபிக்கு டெடிகேட் பண்ணின பாட்டு "ஹிப் ஹிப் ஹூர்ரே... சின்னவங்க எங்ககிட்ட பெரியவங்க கத்துக்கோங்க(வல்லவன் படப் பாட்டு. வரிகள் சரியா தெரியலை. ஆனால் இதுதான் அர்த்தம் வந்தது)". என்ன கொடுமை சார் இது???

Tuesday, October 30, 2007

VODAFONE மக்களே உஷார்!!!

என்ன கொடுமை சார் இது??? prepaid connection வச்சுக்கிட்டு சும்மா ஏன் recharge rechargeனு அலையணும்னு ஓடிப் போயி Hutch postpaidஅ வாங்கிப் போட்டேன். Bill-ஐத் தவிர மத்தது எல்லாமே திருப்தியாதான் இருந்துச்சு. ஒரு பத்து மாசம் நல்லா வேலை செஞ்சுட்டு இருந்த SIM திடீர்னு பிரச்சினைப் பண்ண ஆரம்பிச்சது. அதுவா signal search பண்ணி பண்ணி சோர்ந்து போயி ஒரு கட்டத்துல Switch off ஆயிடுச்சு. நான் கூட என் மொபைல்தான் காலி ஆயிடுச்சுனு ஒரேடியா உடைஞ்சு போயி வேற என்ன மொபைல் வாங்கலாம்னு எல்லார்கிட்டயும் ஐடியா கேக்க ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் தான் என் கூட வேலை செய்யறவ பாத்துட்டு அட அறிவு கெட்டவளே! மொபைல் காலியானா எப்படி signal search பண்ணும்? SIMதான் எதோ ஆயிடுச்சுனு திட்டவும்தான் என் மண்டைல அப்படியே பல்பு எரிஞ்சது. ஆஹா! என் அறிவு கண்ணை திறந்து வச்சியேனு அவளுக்கு ஒரு நன்றி கவித வாசிச்சிட்டு நேரா HUTCH shopக்கு போனேன்.

இப்படி இப்படி ஆகுதுனு அவனுக்கு விம் பார் போட்டு விளக்கினேன். அவனும் யோசிச்சிட்டு நீங்க நைட் ஃபுல்லா சார்ஜ் பண்ணுவிங்களா மேடம்னு கேட்டான். அச்சச்சோ இல்லைனு அவசர அவசரமா சொன்னேன். திருப்பி அவன் சார்ஜ் பண்ணும்போது ஃபோன் பேசுவிங்களானு கேட்டான். அடடா! இவன் சொல்ற அத்தனை வெளங்காத வேலையும் செஞ்சு வச்சிருக்கோமேனு பயந்து போயி ஆமாம்னு ஒத்துக்கிட்டேன். அதனாலதான் SIM க்ராஷ் ஆயிடுச்சு. இனிமேல் சார்ஜ் பண்ணும்போது ஃபோன் பேசாதீங்க. நைட் ஃபுல்லா சார்ஜ் பண்ணாதீங்கனு ஒரு பெரிய அறிவுரை வழங்கிட்டு SIM replacementக்கு 250 ரூபா ஆகும். அடுத்த பில்லோட சேத்து போட்டுடுவோம்னு என் சின்ன இதயத்துல இடியை இறக்கிட்டான். நானும் உடைஞ்சு போன இதயத்தை அள்ளியெடுத்துக்கிட்டு புது SIMஅ வாங்கி போட்டுக்கிட்டு கண்ணைத் தொடைச்சிக்கிட்டே வந்துட்டேன். அடுத்த மாச பில் வந்ததும் 250 ரூபாய சேத்துக் கட்டினேன் :'((((((

அடுத்த மாசமே என் இன்னொரு ஃப்ரெண்டுக்கு இதே மாதிரி ஆச்சு. நானும் அக்கறையா ஃபோன போட்டு என்னொட அனுபவத்த விளக்கி சொன்னேன். அவ எல்லாத்தையும் கேட்டுட்டு கடைசில பொறுமையா போடா... இது எனக்கு போர் அடிச்சிடுச்சு. அதனால நான் Airtelக்கு மாறலாம்ன்ற ஐடியால இருக்கேனு சொல்லிட்டா. பாவி இதை முன்னாடியே சொல்லித் தொலைச்சிருக்க வேண்டியதுதானேடினு ஒரு மூச்சு கத்திட்டு விட்டுட்டேன். நம்மளைப் பாத்தா எல்லாருக்கும் இ.வா மாதிரி இருக்கோனு எனக்குள்ள மைல்டா ஒரு டவுட். ச்சேச்சே... அப்படியெல்லாம் இருக்காதுனு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன்.

அதுக்கப்புறமா ஒரு வாரம் கழிச்சு என் ரூமி ஒருத்திக்கு இப்படி ஆச்சு. அவளா கேக்கட்டும்னு அமைதியா இருந்த என்கிட்ட வந்து என்ன பண்ணினேனு கேட்டா. ஒரு பெரிய அனுபவசாலியா எல்லாத்தையும் எடுத்து சொன்னேன். அன்னைக்கே அவ Hutch shop போனா. சாயந்திரம் வந்ததும் என்னடி ஆச்சுனு கேட்டேன். சார்ஜ் பண்ணும்போதே பேசுவீங்களா... நைட்டு ஃபுல்லா சார்ஜ் பண்ணுவீங்களானு கேட்டான். நான் அதெல்லாம் இல்லைவே இல்லைனு அடிச்சு சொன்னேன். அப்புறம் எதும் சொல்லாம replacementக்கு 250 ரூபா ஆகும்னு சொன்னான். இதுல என்னோட தப்பு எதும் இல்ல. உங்க SIMதான் பிரச்சினைனு சண்டை போட்டேன். அவன் எதுமே பேசாம மாத்திக் கொடுத்துட்டானு சொன்னா. ஆனா பில்லோட சேத்துடுவான் பாரு. எனக்கும் பில்லோடதான் சேத்து அனுப்பினானு சொன்னேன். அப்படி அனுப்பினா திருப்பி போயி சண்டை போடுவேன். அப்புறம் வேற எதுக்காவது மாறிடுவேனு சொன்னா. எல்லாரும் அந்த மாச பில்லுக்காக ரொம்ப ஆவலா வெயிட் பண்ணினோம். பில்லு வந்ததும் பாத்தா.... படுபாவி பசங்க....... என்னைய மட்டும் அநியாயமா ஏமாத்திட்டானுங்க :'( எல்லாருக்கும் என்னைப் பாத்தா இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் :(((

ஹ்ம்ம்ம்..... இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.


டிஸ்கி:- நான் வாங்கினப்போ Hutch'ன்னு இருந்துச்சு, இப்போ அதை VODAFONE'ன்னு மாத்திட்டாங்கன்னு சொல்லுறாங்க, அப்போ தலைப்பு சரிதானே.......?

Thursday, October 25, 2007

உன் கண்ணோரம் வாழ... II



அரவிந்த் வேக வேகமாய் அந்த பேப்பரை பிரித்துப் பார்த்தான். ஒரு பெரிய மளிகை லிஸ்ட்டுக்கான பில் இருந்தது. அதைப் பார்த்ததும் ஒரு நொடி ஏமாற்றமடைந்தவன் அடுத்த வினாடியே குழப்பமாய் 'இதை எதுக்கு குடுத்து விட்டிருக்கா' என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு சென்று அதையெ ஒரு பத்து தடவை திருப்பி திருப்பி பார்த்தான். பின் ஒவ்வொரு வரியாக உற்று பார்த்தபோது 'முருகன் ஸ்டோர்ஸ்' என்ற கடைப்பெயரில் முருகன் என்ற வார்த்தையின் அடியில் மெலிதாய் ஒரு கோடு இருந்தது. பிறகு வேக வேகமாய் ஒவ்வொரு வார்த்தையாய் பார்த்த போது அன்றைய தேதியின் அடியிலும், 7'O clock என்பதன் அடியிலும் கோடுகள் இருந்தன. ஏதோ புரிந்தது போல் இருக்கவும் ஒருவித நிம்மதியுடன் 7 மணிக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

மாலை ஆறு மணி ஆனதும் கிளம்ப ஆரம்பித்தவன் ஒருவித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் ஆறரை மணிக்கு முருகன் கோவிலுக்குள் இருந்தான். அவனுக்கிருந்த பதட்டத்தில் நேரம் நகராமல் அடம் பிடிப்பதாய் தோன்ற, கடிகாரத்தை எதிரியாய் பாவித்து சபித்துக் கொண்டிருந்தான். புதன் கிழமையாதலால் அவ்வளவாய் கூட்டம் இல்லை. அவ்வபோது ஓரிருவர் வந்து கொண்டிருந்தனர். அப்படியே கோவிலில் பின்னாலிருந்த மரங்களினடியில் உலாவிக் கொண்டிருந்தவன் ஏழு மணியாகியும் அவள் வராததால் ஒருவித ஏமாற்றமடைந்து ஒரு மரத்தினடியில் உட்கார்ந்தான். எதுக்கு வரச் சொன்னா. என்ன சொல்லப் போறா. இன்னும் ஏன் வரலை இப்படியாய் கேள்விகள் எழும்பிக் கொண்டிருக்க பொறுமை இழந்தவனாய் எழுந்து வேகமாய் திரும்பியவன் அங்கே நின்று கொண்டிருந்த அனுவைக் கண்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் சுதாரித்தான்.

"என்ன மாமா? ரொம்ப நேரமா யாருக்கோ வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க போல? யாருக்குனு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்டு களுக்கென்று சிரித்தாள்.

என்ன இவ வர சொல்லிட்டு இப்படி கேக்கறா... அப்போ இவ வர சொல்லலையோ என்று உள்ளே பலவாறு எண்ணங்கள் ஓட, ஏதும் பதில் பேசாமல் அவளைப் பார்த்து சிரித்து வைத்தான்.

"நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே" என்று அவள் அவனை உற்றுப் பார்க்கவும் "விளையாடாத அனு" என்று கோபமாய் சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

"அப்போ நீ வர சொல்லிதான் வந்தேன். உனக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு தொரையால சொல்ல முடியாதோ?" என்று அவள் கேலியாய் கேட்கவும் உள்ளுக்குள் பொங்கிய சந்தோஷத்தை வெளியில் காட்டாமல் நடையை நிறுத்தி அவளைப் பார்த்தான்.

"சும்மா எதுக்கு மாமா வெக்கப்படறீங்க?" என்று கேட்டபடியே கீழே குனிந்து அவன் காலடியில் ஏதோ தேடினாள். ஒரு அடி பின்னால் நகர்ந்தவன் "என்ன தேடற?" என்றான்.

"இல்ல தரைல கால் கட்டை விரலால நீங்க போட்ட கோலம் எப்டி இருக்குனு பாக்கலாம்னு பாத்தா.... ச்சே.... இங்க அவ்வளவா வெளிச்சம் பத்தலை" என்று அவள் கேலியாய் சலித்துக் கொள்ள அவனுக்கு சுருசுருவென ஏறியது. "ஏய்" என்றபடி அவன் அனுவின் கையைப் பற்ற வேகமாய் அவனது கையை தட்டி விட்டாள்.

"இந்த வேகத்தை என்னை கல்யாணம் பண்ணிக்கறதுல காட்டுங்க மாமா" என்று சீரியஸாய் சொல்லி விட்டு அமைதியாய் திரும்பி போய் மரத்தடியில் அமர்ந்தாள். 'ஆஹா... வேறெதற்கு? உன் கரம் பற்றத்தானே பெண்ணே இப்பிறவியெடுத்து வந்தேன்' என்று கவிதைத்தனமாய் அவனுக்குள் சந்தோஷம் துள்ள மெல்ல சென்று அவளருகில் அமர்ந்தான். தலை குனிந்து புற்களில் கைகளை அளைந்து கொண்டிருந்தவளை அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டு யாருமில்லாத தீவுக்கு ஓடி விட வேண்டும் போல தோன்றியது.

"அனு" என்ற அவனது அழைப்பிற்கு லேசாய் தலை நிமிர்ந்து பார்த்தவளது விழிகள் பனித்திருந்தன.

"இப்போ என்ன ஆயிடுச்சுனு இப்படி ஃபீல் பண்ணிட்டு உக்காந்திருக்க?" என்று புதிதாய் வந்து விட்ட தைரியத்தோடு கேட்டான்.

"நான் வந்து பேசினப்ப நீங்க இமைக்காம பாத்தப்பவோ, நீங்க என் தம்பிகிட்ட சாக்லேட் வாங்கி கொடுத்து என்னை பத்தி விசாரிச்சத அவன் என்கிட்ட சொன்னப்பவோ அந்த வயசுல எனக்கு எதுவும் தோணலை மாமா. ஆனா எனக்கு அடிக்கடி அது ஞாபகம் வரும். ஏன்னே தெரியாம ரொம்ப சந்தோஷமா இருக்கும். பின்னாடிதான் அந்த சந்தோஷத்துக்கெல்லாம் அர்த்தம் புரிஞ்சது. எனக்குள்ள நீங்க எப்பவோ வந்துட்டிங்க. அதே மாதிரி நானும் உங்களுக்குள்ள இருக்கேனு எனக்கு நல்லாவே தெரியும். இப்போ எனக்கு மாப்பிள்ளை வந்திருக்கிற விஷயம் உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அதான் இனியும் உங்ககிட்ட பேசாம இருக்க கூடாதுனு முடிவு பண்ணி இப்போ வர சொன்னேன்" என்று நிறுத்தாமல் அவள் பேசி முடித்தாள்.

"அது எப்படி நானும் உன்னை விரும்பறேனு உனக்கு தெரியும்? நான் எப்போவாவது சொன்னேனா?" என்று அவன் கேட்கவும் ஒரு நொடி திகைத்து விழித்தவள் பின் புன்னகையுடன்

"மாமா ஒண்ணு மொதல்ல தெரிஞ்சுக்கோங்க. என்னைக்கும் பசங்களுக்குதான் இந்த மாதிரி விஷயங்களை புரிஞ்சிக்க முடியாது. ஆனா பொண்ணுங்க பார்வைய வச்சே கண்டுபிடிச்சிடுவாங்க. அன்னைக்கு கல்யாண மண்டபத்துல நீங்க என்னையே பாத்துட்டு இருந்ததுதான் எனக்கு தெரியுமே. நீங்க வந்து பேசினப்போ ஏதாச்சும் சொல்லுவிங்கனு எவ்வளவு ஆசையாப் பாத்தேன் தெரியுமா? நீங்க என்னடான்னா ஷாக் அடிச்ச மாதிரி பேந்த பேந்த முழிச்சிட்டு பயங்கரமா உளறுனீங்க. அந்த உளறல் பத்தாதா உங்க மனசு புரிய. அப்போ என்னை கவனிச்சு இருந்திருந்தா உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்" என்றாள்.

'அடடா... இவ்வளவு நாளா இது தெரியம போச்சே' என்று நொந்து கொண்டவன் "சரி அதெல்லாம் இருக்கட்டும். இனிமேல் என்ன பண்றது?" என்று கேட்டான்.

"எப்படியும் அக்காவுக்கு முடியாம எனக்கு பண்ண மாட்டாங்க. அதனால பிரச்சினை இல்லன்னு நினைக்கறேன்"

"ஆனா இப்போதைக்கு நிச்சயம் மட்டும் பண்றதா அம்மா சொன்னாங்களே"

"இப்போதைக்கு பண்ண மாட்டாங்க மாமா. ஏனா இன்னும் ஒரு வாரத்துல ஆடி மாசம் வரப் போகுது. ஆடில எதுமே செய்ய மாட்டாங்க. அதனால ஒரு மாசத்துக்கு கவலை இல்ல. அதுக்குள்ள எப்படியாவது அப்பாவ கன்வின்ஸ் பண்ணி அக்கா கல்யாணத்துக்கு அப்புறமா பாத்துக்கலாம்னு சொல்லணும். அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க பயப்படாதீங்க"

"ஹ்ம்ம்ம்ம். சரி உன்கிட்ட நான் எப்படி பேச முடியும்?"

"எனக்கு காலேஜ் முடிய இன்னும் ஒரு செம் இருக்கு. ஆனா காலேஜ்ல இருந்து பண்ண முடியாது. அப்பாதான் என்னை கூட்டிட்டு போய் விட்டுட்டு ஈவ்னிங் திரும்ப கூட்டிட்டு வருவார். சோ அப்போ கால் பண்ண முடியாது. வீட்டுல யாரும் இல்லைனா உங்களுக்கு கால் பண்றேன்.வேற ஒண்ணும் பண்ண முடியாது" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே

"அனு... லேட் ஆச்சுடி... கிளம்பலாமா?" என்று கேட்டபடி ஒரு பெண் வர

"மாமா. இவதான் என் க்ளோஸ் ஃப்ரெண்ட் உமா. நம்ம ஆளு யாராவது வந்துடுவாங்களோனு நான் தான் பாத்துக்க சொல்லிட்டு வந்திருந்தேன். நேரமாச்சு. நான் கிளம்பவா?" என்று அவள் எழுந்திருக்க அவனுக்கு பளீரென ஒரு ஐடியா தோன்றியது.

"ஹாய் உமா" என்று அவளைப் பார்த்து புன்னகைக்க

"ஹாய் அண்ணா" என்று புன்னகைத்தாள் பதிலுக்கு.

"இவளுக்கு ஃபோன் பண்ணி இவ அம்மா எடுத்தா எப்படி பேசுவ?" என்றான். அவர்கள் இருவரும் புரியாமல் குழப்பமாய் பார்க்கவும்

"சொல்லு நான் சொல்றேன்" என்றான்.

"அம்மா உமா பேசறேன். அனுவ கூப்பிடுங்கனு சொல்லுவேன்"

"இப்போ ஃபோன் பண்ணி அவங்க அம்மாகிட்ட பேசற மாதிரியே பேசணும் சரியா" என்று கூறியபடி அவன் மொபைலில் எதையோ செய்து விட்டு அவளருகில் நீட்ட அவள்

"அம்மா உமா பேசறேன். அனுவ கூப்பிடுங்கம்மா" என்றதும் மறுபடியும் மொபைலில் எதோ செய்தான்.

"அவ அம்மா அவ இல்லைனு சொன்னதும் எப்டி சொல்லுவியோ அதையும் சொல்லு" என்று மறுபடியும் அவளருகில் நீட்டினான்.

"சரிங்கம்மா. நான் ஃபோன் பண்ணினேனு அவகிட்ட சொல்லிடுங்க. வச்சிடறேன்" என்று அவள் முடித்ததும் மொபைலில் எதோ செய்தான்.

"ரொம்ப தேங்க்ஸ் உமா. சரி நேரமாச்சு நீங்க கிளம்புங்க" என்றதும் அவர்கள் கிளம்ப அவர்கள் போவதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் கிளம்பி வீட்டிற்கு சென்றான். ஏதோ சாதித்து விட்டதாய் தோன்ற உலகத்தையே புரட்டி காலடியில் போட்ட சந்தோஷத்துடன் நிம்மதியாய் சாப்பிட்டு உறங்க சென்றான். உறக்கம் வராமல் புரண்டவன் 'ஒருவேளை அவளால சமாதானப் படுத்த முடியாம போய் அவ அப்பா நிச்சயம் பண்ணிட்டார்னா???' என்ற கேள்வி கண்முன் நிற்க மறுபடியும் நிம்மதியை தொலைத்தவனான்.

தொடரும்...

Wednesday, October 17, 2007

உன் கண்ணோரம் வாழ... I



"நம்ம லட்சுமி பொண்ணு அனுவ பொண்ணு கேட்டு வந்திருக்காங்களாம்" என்று அம்மா அக்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தது கேட்டு திடுக்கிட்டு விழித்தான் அரவிந்த். 'அனு... என் உயிரின் ஒவ்வொரு அணுவிலும் காதலை பிழிந்து பிழிந்து ஊற்றியவளே!' மனதில் மலைபோல் பாரம் அழுத்த, கண்களை விடாப்பிடியாய் தழுவியிருந்த தூக்கம் பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடியதில் அமைதியாய் எழுந்து அமர்ந்தான். ரெட்டை சடை பின்னலுடனும், பட்டாம்பூச்சியாய் துறுதுறுவென இமையடித்த விழிகளுடனும், குழந்தைதனம் மாறாத முகத்துடனும் பாவாடை சட்டையில் முதல் முதலாய் பார்த்த அவள் உருவத்தை கண்களுக்குள்ளேயே ஒளித்து வைத்திருந்தான். ஒளிந்திருந்தவள் வெளியே வந்து பழிப்பு காட்டி சிரிக்கவும் என்னை விட்டு வெளியே ஓடி விடாதே என்று வாய் விட்டு சொன்னவன் அங்கே வந்த அவளது அக்கா ஒரு மாதிரியாய் பார்க்கவும் திரும்ப படுத்து போர்வையை போட்டு முகத்தை மூடிக் கொண்டான்.

"ஹே என்னடா இது நாம எப்படி விளையாடினாலும் தோத்து போறோம்" என்று தனது தம்பியிடம் புலம்பிய அரவிந்த் வெறுப்பாய் எதிரணியை பார்த்தான். விடுமுறையில் தனது மாமா வீட்டிற்கு வந்திருந்த அரவிந்தின் சொந்தத்திற்கும் அத்தை வழி உறவினர் சிலருக்கும் நடந்த விளையாட்டில் தோற்று போனது அவனுக்கு பெரிய மானப் பிரச்சினையாய் இருந்தது. அவனது குழுவில் ஒன்பதாவது படிக்கின்ற அவன் பெரிய பிள்ளையல்லவா... சலித்து போய் மரத்தடியில் தனியாய் அமர்ந்திருந்த அவன் அருகில் நிழலாட நிமிர்ந்துப் பார்த்தான். ஒரு சிறு பெண் நின்றிருப்பதை கண்டதும் யாராயிருக்கும் என்ற யோசனையில் இறங்க, அவனை பார்த்து புன்னகைத்தவள் "அவங்க உங்களை ஏமாத்தறாங்க..." என்று ஆரம்பித்து அவர்கள் செய்த திருட்டு வேலைகளை எல்லாம் மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் பார்வையோ படபடவென அடித்த அந்த கள்ளமில்லா விழிகளிலேயெ நிலைத்திருக்க, "எங்க சொந்தமாயிருந்தாலும் தப்பு தப்புதானே. அதான் உங்ககிட்ட சொன்னேன். பாத்து விளையாடுங்க" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு பறந்தாள். அவள் பெயர் அனு. ஆறாவது வகுப்பு முடித்து ஏழாவது போகிறாள். அவனது அத்தையின் அக்கா மகள் என்ற அவளைப் பற்றிய விவரங்களை அவளது சித்தி பையனுக்கு சாக்லேட் வாங்கி தந்து தெரிந்து கொண்டான். அன்று மனதில் போட்டு பூட்டி வைத்தவளை அதற்கு பிறகு பார்க்கவே முடியவில்லை.

காலேஜ் நான்காவது வருடத்திலிருந்த போது ஒரு திருமணத்தில் அவளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பாவாடை தாவணியில் அவனது கண்களுக்கு தேவதையாய் தெரிந்தாள். வளர்ந்த பிறகும் முகத்தில் மாறதிருந்த குழந்தைதனமும் கவிதை பேசும் கண்களும் அவனது இதயம் துடிப்பது அவளுக்காக மட்டும் தான் என்றே அவனை எண்ன வைத்தது. அவள் கண்களுக்குள் புதைந்து விட துடித்தான். அவளை தனது இதயத்துக்குள் புதைத்துக் கொள்ள தவித்தான். டைனிங் ஹாலுக்கு வெளியே தனியாய் அவள் நின்று கொண்டிருந்ததை கண்டதும் அவளிடம் சென்று காதலை சொல்லி விட துடித்த இதயத்தை கட்டுபடுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
"ஹாய்.... என்னை..." என்று அவன் ஆரம்பிக்கவும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவளது புன்னகையில் உள்ளுக்குள் உற்சாகம் பீறிட

"என்னை.... என்னை...." என்று ஆரம்பிக்கவும் என்ன சொல்ல வருகிறான் என்ற யோசனையில் அவள் புருவம் சுருக்கி யோசனையாய் லேசாய் தலை சாய்த்து அவனை பார்த்தாள். அந்த பார்வையில் அவனது உலகம் சுற்ற உள்ளுக்குள் மயங்கியவனின் வாய் குழற

"நீங்க... நீங்க... தெரி... யு... தா.... யாரு.... னு...." என்று உளறவும் கலகலவென சிரித்தவள்

"என்ன இப்படி கேட்டுட்டிங்க? அரவிந்த் மாமாதானே.... நல்லா தெரியுது" என்று கூறி விட்டு ஒரு வெட்கப் புன்னகையுடன் அங்கிருந்து ஓடி விட்டாள்.

'அடச்சே! நல்ல சான்ஸ கெடுத்திட்டியேடா' என்று தன்னைதானே கடிந்து கொண்டாலும் மனம் என்னவோ அவளது பதிலில் ஆனந்த கூத்தாடியது. அதன் பிறகு அவளைப் பார்க்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவே இல்லை. எப்போதாவது அவளது படிப்பு பற்றியும் வீட்டை பற்றியும் அவனது வீட்டில் பேசிக் கொள்வதை வைத்து அவளைப் பற்றி தெரிந்து கொண்டான். படித்து முடித்து நல்ல வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் அவளது கல்யாணப் பேச்சு அடிபட, வலிக்காமல் இதயம் திருடிப் போனவளை எண்ணி மனம் வலியால் துடித்தது.

"உங்களுக்கு எப்படிம்மா தெரியும்? பையன் யாராம்?" என்ற அக்காவின் வார்த்தைகள் காதில் விழ அவர்களது பேச்சில் கவனமானான்.

"நேத்து உங்க அத்தை ஃபோன் பண்ணியிருந்தப்ப சொன்னா. ஒரு ஜாதகம் வந்திருந்திருக்கு. அந்த பையனோட அம்மா கடைவீதில அனுவ பாத்திருப்பாங்க போல. ரொம்ப பிடிச்சுப் போச்சாம்."

"ஹிம், அவ அக்காவுக்கே இன்னும் கல்யாணம் முடியலை? அதுக்குள்ளே இவளையும் கேட்க ஆரபிச்சிட்டாங்களா?"

"பெரியவளுக்கு பாக்கறதாதான் இருந்தாங்களாம். ஆனா அவளை விட அவங்களுக்கு அனுவே தான் பார்த்ததும் பிடிச்சிக்கிருச்சாம், கொடுத்தா சின்ன பொண்ணதான் கொடுங்கன்னு கேக்கறாங்களாம்" என்று அம்மா சொன்னதும் அந்த பையனின் அம்மா மீது அவனுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. கடைவீதிக்கு போனோமா வந்தோமானு இல்லாம அந்த அம்மாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம் என்று சொல்லத் துடித்த வாயை அடக்கிக் கொண்டிருந்தான். சரி நம்ம அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்தானே. எப்படியாவது அம்மாவை கன்வின்ஸ் பண்ணி வேலைய முடிக்கணும் என்று எண்ணி கொண்டிருக்கையில்,

"அட அப்பிடியா! ரொம்ப அதிர்ஷடகாரி தான் அனு...."ன்னு அக்கா சொல்லி சிரித்தாள்.

"ஆமாண்டி, அவ நல்ல அதிர்ஷடகாரிதான். ரொம்ப நல்ல இடமாம். வீட்டுல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சாம். பேசாம இப்ப நிச்சயம் மட்டும் பண்ணிக்கிட்டு பெரியவ கல்யாணம் முடிஞ்சதும் இவளுக்கு பண்ணிடலாம்னு நானும் சொன்னேன்."

"அப்போ அவ அக்காவுக்கு எப்போ முடிக்கிறமாதிரியாம்?"

"கூடிய சீக்கிரத்திலே அவளுக்கு முடிச்சிட்டுதான் அனுவுக்கு முடிக்கனுமின்னு இருக்காங்களாம். அது இவங்களும் அந்த வீட்டிலே நிச்சயதார்த்தம் பண்ணப் போறதா இருக்காங்கன்னு அவளும் சொன்னா. நல்ல இடத்தை விட்டுட்டா அப்புறம் நல்லபடியா அமையுமோ அமையாதோ. எதுக்கு பிரச்சினை" என்ற தாயின் வார்த்தைகள் அவனுக்குள் ஈட்டி இறக்க என்ன செய்வதென்று அறியாமல் தொய்ந்து விழுந்தான்.

ஒரு மணி நேரமாய் யோசித்தும் என்ன செய்வதென்று எதும் பிடிபடாத நிலையில் கிளம்பி டீக்கடைக்கு சென்றான். டீ சொல்லி விட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தவனது கண்ணில் தூரத்தில் நின்று இவனையே பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் விழ, யாராய் இருக்கும் என்று வேக வேகமாய் யோசித்தான். அவனைப் பார்த்து வருமாறு அவன் சைகை காட்டிய நொடியில் ஞாபகம் வந்தது அவன் அனுவின் சித்தி பையனென்று. வேகமாய் எழுந்து அவனிடம் சென்றான். அவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

"அனு அக்கா இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க" என்றபடியே அவன் கைகளில் ஒரு கடிதத்தை திணித்து விட்டு வேகமாய் ஓடி விட்டான்.

(தொடரும்...)

Thursday, October 4, 2007

எங்க வீடு கல்யாண வீடு ஆயிடுச்சு!!!

ஆஹா! யாரு பொண்ணுனு கேக்கப்படாது. ஏனா எங்க வீட்டுல(பெங்களூரு
வீட்டுல) மூணு பேரு இருக்கோம். ஒருத்திக்கு அண்ணா இருந்ததால அவ வீட்டுல அவங்க அண்ணனுக்கு முடிச்சிட்டு அவளுக்கு கல்யாணத்துக்கு பாக்கலாம்னு சொல்லிட்டாங்க. அதனால ஓவரா பந்தா விட்டுட்டு எங்களை மிரட்டிட்டே இருப்பா. சீக்கிரம் கல்யாணம் ஆகி போக போற பொண்ணு.... இது கூட செய்ய தெரியலைன்னு ஓட்டிட்டே இருப்பா. அவதான் எங்க வீட்டு Chief Chef. ரெண்டு மூணு சமையல் குறிப்பு புக்ஸ் வாங்கி வச்சிட்டு அதை அப்பப்போ பாத்து பாத்து எதாவது எங்களுக்கு செஞ்சு தருவா.

போன ஞாயித்துக் கிழமை விடிய காலைல ஒரு 10 மணிக்கா அவங்க அப்பா ஃபோன போட்டு ஒரு ரெண்டு மூணு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுத்து உடனடியா அனுப்புமான்னு சொல்லிட்டார். உடனே அடிச்சு பிடிச்சு நாங்க ரெண்டு பேரும் எழுந்துட்டோம். ஆஹா! மாட்டிக்கிட்டாடா வசமான்னு அப்போ ஆரம்பிச்சதுதான். ஒரே ஜாலியா பொழப்பு ஓடிட்டு இருக்கு ;) அவ வீட்டுல அவகிட்ட நேரா பேசாம அவ அக்காவ பேச சொல்லி மாப்பிள்ள பாக்கிற விஷயத்த சொல்லிட்டாங்க. அதுல இருந்து பிள்ளைக்கு இருப்பு கொள்ளல. அச்சச்சோ.... என்கிட்ட காட்டன் சாரிதான இருக்கு. அதை கட்டினா குண்டா தெரிவெனேன்னு ஃபீல் பண்ணி அன்னைக்கு சாயந்திரமே போய் ஒரு புடவை எடுக்கணும்னு ப்ளான் போட்டுட்டு இருந்தா(ஹி... ஹி... நாங்க பண்ணின சதி வேலையால இன்னும் எடுக்கவே இல்ல).

அன்னைக்கு மதியம் நாங்க ரெண்டு பேரும் சர்ட்டிஃபிகேஷன்க்கு படிக்கறோம்னு சொல்லி கைல புக்க வச்சிக்கிட்டு ஆ-னு வாய பொளந்துக்கிட்டு டிவிய பாத்துட்டு இருந்தோம். அவ மட்டும் ஏதோ சின்சியரா படிச்சிட்டு இருந்தா. கொஞ்ச நேரம் கழிச்சு அப்டி என்னடா படிக்கறானு பாத்தா "வீட்டுக் குறிப்புகள்" புத்தகத்த வச்சு மூணாவது தடவையா ரிவிஷன் விட்டுட்டு இருக்கா.... ஆஹா! மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டா இப்படியெல்லாம் பண்ணனும்போலன்னு மனசுக்குள்ள பயந்துட்டே
மறுபடியும் மாட்டின அவள சும்மா விட்டிருப்போமா ;)))

செவ்வாகிழமை நைட் அவ வீட்டுல இருந்து ஃபோன். அவ அப்பா லிஸ்ட்
போட்டார். மலேசியால ஒரு பையன் வேலைல இருக்கானாம். ஒரு பையன்
scientistஆ இருக்கானாம். ஒரு பையன் M.Phil படிச்சிட்டு வீட்டுலதான்
இருக்கானாம். உனக்கு யாரை பிடிச்சிருக்குனு சொல்லுனு கேட்டார். அவ, அப்பா வேலைய மட்டும் சொல்லிட்டு இப்டி கேட்டா நான் என்ன சொல்லட்டும்னு சொன்னா. உடனே அவங்க அம்மா வாங்கி அதே டயலாக்க சொல்லி யார பிடிச்சிருக்குனு கேட்டாங்க. அவளும் அதே டயலாக்க சொன்னா. கொஞ்ச நேரம் கழிச்சு அவ அக்கா ஃபோன் பண்ணி அதே டயலாக்க சொன்னாங்க. அவங்க அக்கா பொண்ணும் சித்தி உனக்கு யாரை பிடிச்சிருக்குனு கேட்டாளே பாக்கலாம். பிள்ள டென்ஷன் ஆயி கோபமா அவளோட டயலாக்க அள்ளி விட்டா. கம்முனு ஃபோன வச்சிட்டாங்க.

ஹ்ம்ம்ம்ம்.......... இப்படியே மூணு நாளா ஜாலியா பொழப்பு ஓட, பிள்ள ஒரே
சந்தோஷத்துல செஞ்சு போட்டதெல்லாம் சப்பு கொட்டிகிட்டு சாப்பிட்டுட்டு
அவளையே ஓட்டு ஓட்டுனு ஓட்டிக்கிட்டு இருந்துட்டு Certificationக்கு படிக்காம விட்டுட்டேன் :(((( இன்னைக்கு mid night ஒரு ஆறு மணிக்கே எழுந்து படிச்சு எப்டியோ பாஸ் பண்ணிட்டேன் :))))

ஹ்ம்ம்ம்ம்..... பொண்ணு சமையல் குறிப்பு புக்க வச்சு படிக்கறத இப்படி நாமளே இவ்ளோ ஓட்டு ஓட்டறோமே. பசங்கனா இன்னும் எப்டி ஓட்டுவாங்கன்னு நினைச்சு பாத்தேன். நிச்சயம் ஆனதும் மொத வேலையா நமக்கு வர போற ஆளுக்கு சமையல் குறிப்பு புக்ஸ் வாங்கி கொடுத்து நல்லா கத்துக்க சொல்லனும்னு பண்ணி வச்சிருந்த முடிவ மாத்திக்கிட்டேன். அவர் கஷ்டபடகூடாதுனு நினைக்கற எனக்கு உண்மையா பெரிய மனசுதானே??? ;)))

Monday, October 1, 2007

யாருங்க இந்த ஹீரோ???

இன்னைக்கு காலைல ஆபிஸ்க்கு வேக வேகமா ஓடும்போது பாத்தா வழியெல்லாம் ஒரே வாழ்த்து போஸ்டர். யாருடா இதுன்னு நானும் இன்னைக்கு காலைல இருந்து யோசி யோசின்னு மண்டைய பிச்சிக்கிட்டு யோசிச்சேன்... கண்டே பிடிக்க முடியல :((( உங்க யாருக்காவது இந்த ஹீரோ யாருன்னு தெரிஞ்சா வந்து சொல்லிட்டு போங்க. அறிவு ஒளியேற்றி என் அறியாமை இருட்டை போக்கிய புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் :))) அட! அந்த ஹீரோ போட்டோதானே கேக்கறீங்க??? கீழ போங்கப்பு...

"

"

"

"
"
"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"

"

"

"

"

"

"

Happy Birthday to you!

Happy Birthday to you!!

Happy Birthday to Dear Ji!!!

Happy Birthday to you!!!!

இது ஒரு பாட்டு. என்ன இது ஒண்ணும் புரியலலயேனு பாக்க கூடாது. இதை செலக்ட் பண்ணி ctrl + C பண்ணி ஓடி போய் Notepad open பண்ணி ctrl + V பண்ணி பாருங்க புரியும் :)))

Wednesday, September 26, 2007

நண்பா...


மாலை நேர தேநீர்
இறங்குவதே இல்லை...
செல்ல சண்டைளின்றி
அவை என்றும்
இனிக்காதாம்

இதுவரை ஒன்றாய்
நடந்து கடந்த சாலைகள்
கண்களை பொத்தி கொள்கின்றன
தனிமையில் எனை காண
பிரியமில்லையாம்

கை ஈரம் துடைக்க
நீ தரும் கைகுட்டையை
தேடி அழுது
அடம் பிடிக்கின்றன
விரல்கள்

பேருந்து பயணங்களில்
சாய்ந்து தூங்க
உன் தோள்கள்
இல்லாமல் இமைகள்
மூடுவதேயில்லை

சண்டை போட்டு
உன்னிடம் பிடுங்கி
சாப்பிடும் சாக்லேட்டின் சுவை
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்
உணவிலும் கிடைப்பதில்லை

கைகோர்த்து திரிந்த
நாட்களை எண்ணும்போது
துளிர்க்கும் கண்ணீரினூடே
தூக்கம் கலையாதிருக்க
அசையாதிருந்த உன் நட்பு
புன்னகையாய் விரிகிறது

Wednesday, August 29, 2007

கோடி நன்றிகள்!!!

போன 21ஆம் தேதி என் பிறந்த நாள் அன்னைக்கு வாழ்த்திய எல்லாருக்கும், என் பிறந்த நாளை அவங்க பிறந்த நாளா எண்ணி கொண்டாடிய என் ந்ட்புகளுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

உடம்பு சரியில்லாத காரணத்தால முன்னாடியே போன் பண்ணி வாழ்த்துக்கள் சொன்ன மைஃப்ரெண்ட், கப்பி, நைட் 12 மணிக்கே வாழ்த்தணும்னு தூங்காம முழிச்சு இருந்து போன் பண்ணி வாழ்த்திய ஜி, G3, புலி, சிபி அண்ணா(எனக்காக ரொம்ப அழகான சாங் டெடிகேட் பண்ணினதுக்கு ரொம்ப தேங்ஸ் அண்ணா), மெசேஜ் அனுப்பின துர்கா, காயத்ரி, 12 மணிக்கு மறந்து போயி 12.30க்கு போன் பண்ணின ராம் அண்ணா, காலைல கால் பண்ணின தொல்ஸ் அண்ணா, மோகன்தாஸ், ஓசை செல்லா அண்ணா, தேவ் அண்ணா, நவீன், சாயந்திரம் போன் பண்ணின அய்யப்பன் அண்ணா, மெயில் அனுப்பின பொன்ஸ் அக்கா, CVR, தம்பி, போஸ்ட் போட்டு சொன்ன கண்மனி அக்கா, மெசெஞ்சரில் பிங் பண்ணிய கார்த்திக் பிரபு, ரொம்ப லேட்டா இன்னைக்கு சொன்ன அருட்பெருங்கோ மற்றும் பின்னூட்டம் மூலமா வாழ்த்திய எல்லாருக்கும் கோடானு கோடி நன்றிகள் :)))))))))))))

ரெண்டாவது முறையா என் பர்த்டேவ ரொம்ப ரொம்ப சந்தோஷமா கொண்டாடினேன். thank u all :)))

இது என் அம்மாவும் அப்பாவும் அவங்களோட குட்டி ஏஞ்சல்க்கு கொடுத்தது...



இது ப.பா.ச தங்கங்கள் கொடுத்த பட்டு புடவை...

இது எனக்கு நானே கொடுத்துக்கிட்ட பட்டு புடவை ;)

இது என் ஃப்ரெண்ட் வாங்கி கொடுத்தது. இதுல வெள்ளில கோட்டிங் கொடுத்திருக்காங்க. லைட் வெளிச்சத்துல சும்மா தக தகனு மின்னுது...

இது ரெண்டும் என் பாசக்கார அண்ணனுங்க ராமும், ஜி-யும் வாங்கி கொடுத்தது...



இது நம்ம கவிதாயினி காயத்ரி கொடுத்தது...



என் கஸின் ரம்யா அக்கா கொடுத்தது....

பாருங்க இந்த ஒண்ணுந்தெரியாத பாப்பாவ... ;)))

Wednesday, August 8, 2007

காலம் கரைந்தாலும்...!!!

"அன்புள்ள அப்பா" என்று ராகமாய் இழுத்தபடி உள்ளிருந்து மெதுவாய் ஓடி வந்து அருகில் அமர்ந்த அன்பு மகள் சுசியை பார்த்து புன்னகைத்தார் சந்திரசேகர்.

"என்னடா? இன்னைக்கு ஆட்டமும் பாட்டமுமா ரொம்ப குஷியா இருக்க போல?" என்றபடி கையிலிருந்த பேப்பரை மூடி டீப்பாய் மீது வைத்து விட்டு பதிலுக்காக அவள் முகம் பார்த்தார்.

"உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா?" என்று அவள் மறுபடியும் பாடினாள்.

ஹ்ம்ம்ம் என்ற ஒரு பெருமூச்சோடு புன்னகையை மட்டுமே அவர் பதிலாய் தந்து விட்டு எழ முயல அவள் கையைப் பற்றி

"ப்ளீஸ் டாடி! இன்னைக்கு சொல்லியே ஆகணும். எத்தனை நாளா கேட்டுட்டே இருக்கேன்? நீங்க மம்மிய லவ் பண்ணிதான கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?"

"இல்லைடா"

"இப்போ சொல்ல போறீங்களா இல்லையா? அப்போ நானும் நீங்களும் அப்பா பொண்ணு இல்ல ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்னு சொன்னதெல்லாம் பொய்தான?" என்று அவள் சிணுங்கவும் அவர் செய்வதறியாது திகைத்தார்.

"சரி உனக்கு சொல்றேன். ஆனா சாப்பிட்டதுக்கு அப்புறம்தான்" என்று அவர்
போட்ட கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டு ஆர்வத்தில் வேக வேகமாய் சாப்பிட்டு முடித்தாள்.

"சொல்லுங்க அம்மாவ எப்படி லவ் பண்ணினிங்க?" என்று அவள் ஆர்வத்துடன் கேட்க

"ஹ்ம்ம்ம்.... உங்க அம்மாவ நான் பாக்கறதுக்கு முன்னாடியே எங்கம்மா பாத்து நிச்சயம் பண்ணிட்டாங்க போதுமா?"

"பொய் சொல்றீங்க டாடி. நான் உங்க பழைய டைரில நீங்க எழுதி வச்ச சில
கவிதைகள பாத்தேன். அதனாலதான் அப்போ இருந்து கேட்டுட்டே இருக்கேன். நீங்க சொல்லவே மாட்டென்றீங்க"

"நான் காதலிச்சது உண்மைதான். ஆனா அது உன் அம்மாவ இல்ல" என்று அவர் விட்டத்தை வெறித்தபடி கூற அதிர்ச்சியில் வாய் பிளந்தாள்.

"என் அக்கா பொண்ண எனக்குதான் சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி வளர்த்தாங்க. நான் படிப்பு முடிச்சிட்டு வேலை தேடிட்டு இருந்த சமயம். கவர்மெண்ட் வேலைல இருக்கற மாப்பிள்ளை வந்துச்சுன்னு எங்க மாமா அவருக்கு பேசி முடிச்சிட்டார்" என்று அவர் எவ்வித உணர்ச்சியுமின்றி கூற ஆச்சர்யத்தில் விழிகள் இரித்து இமைக்காமல் தந்தையையே பார்த்தாள். சில நொடிகள் கழித்து

"நீங்க போய் எதும் கேக்கலையா?" என்றாள்.

"அப்போ எனக்கு வேலை இல்ல. எந்த முகத்த வச்சுக்கிட்டு மாமாகிட்ட போய் கேப்பேன்? அப்போ எனக்கு உலகமே வெறுத்து போச்சு. பேசாம அவள
கூட்டிட்டு போய்டலாமானு கூட நினைச்சேன். ஆனா அவ என்ன நினைக்கறான்னு எனக்கு தெரியவே இல்ல. கேட்டு அவ முடியாதுனு சொல்லிட்டா அது இன்னும் எனக்கு நரகம். அதான் கேக்காமலே விட்டுட்டேன். கல்யாணத்துக்கு போய் தாய் மாமா செய்ய வேண்டிய சடங்கு செஞ்சுட்டு வந்துட்டேன். அவளுக்கு சடங்கு செய்யும்போது நெத்தில சந்தனம் வச்சப்ப அவ கண்ணு கலங்குச்சு. இன்னைக்கு வரைக்கும் ஏன்னு தெரியல" என்றவரது கண்கள் கலங்க அதற்கு மேல்பேச முடியாமல் முகத்தை வேறுபுறம் திருப்பினார்.

அவர் கண்கள் கலங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாமல்

"பணத்துக்காக உங்களை விட்டு போனவங்களுக்காக நீங்க ஏன் டாடி
கவலைப்படணும்? கம் ஆன். சியர் அப்" என்றவள் அவளது அன்றைய காலேஜ் கதைகள் பேசி அவரது கவனத்தை திருப்ப முயன்றாள். அவர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியதும் தூங்கச் சென்றாள்.

ஆனால் சந்திரசேகரின் மனம் பழைய நினைவுகளையே அசை போட்டு
கொண்டிருந்தது. அக்கா பெண்ணின் திருமணத்திற்கு பிறகு வேலை கிடைத்ததும், அவரது தாயார் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்ததும், மனைவியுடன் டெல்லி வந்து செட்டில் ஆனதும், தாயாரின் மரணத்திற்கு மட்டுமே சொந்த ஊருக்கு சென்று வந்ததையும், பின்பு சுசி பிறந்து அவள் இரண்டு வயது குழந்தையாய் இருக்கும்போது மனைவியையும் விபத்தில் பறி கொடுத்ததும், மகளையே தனது உலகமாக்கி கொண்டதையும் எண்ணியபடியே தூங்கி போனார்.

சுசியோ இரவு முழுதும் அப்பா சொன்னதையே திரும்ப திரும்ப நினைத்து
கொண்டிருந்தாள். அப்பாவுக்குள்ள இப்படி ஒரு சோகமா? என்றெண்ணி
வருந்தியவளது மனது தானாய் அந்த பெண்ணின் மீது வெறுப்பை உமிழ
ஆரம்பித்தது. ச்சே! கேவலம் வேலை இல்லாததை காரணம் காட்டி அப்பாவின் காதலை குழி தோண்டி புதைத்த பெண்ணை என்னவென்று சொல்வது?
எப்படியாவது அவங்களை பாக்கணும். பாத்து இன்னைக்கு பாருங்க எங்க அப்பா எவ்ளோ ஒரு நல்ல நிலைமைல இருக்காருன்னு சொல்லணும் என்று எண்ணிக் கொண்டாள்.

அவளது வேண்டுகோள் கடவுளின் காதுகளை எட்டியதோ என்னவோ அடுத்த நாள் அவளது அத்தைப் பெண் திருமண அழைப்பிதழ் வந்தது. அண்ணாவும் மருமகளும் இம்முறையாவது கண்டிப்பாக வர வேண்டும் என்ற ஒரு பெரிய வேண்டுகோளுடன் வந்திருந்த அழைப்பிதழை எடுத்துக் கொண்டு சந்திரசேகரிடம் ஓடினாள்.

"டாடி நான் ஒண்ணு கேப்பேன். கண்டிப்ப செய்யணும். மாட்டேனு சொல்ல கூடாது" என்று கைகளை பின்னால் கட்டியபடி கெஞ்சலாய் கேட்கும் மகளை பார்த்து புன்னகைத்த சந்திரசேகர் என்ன என்பது போல தலையசைத்தார்.

"ப்ராமிஸ் சொல்லுங்க. ப்ளீஸ் டாடி" அவள் கெஞ்சவும் சிரித்தபடி ப்ராமிஸ் என்றார். அவரிடம் அழைப்பிதழை நீட்டியவள்

"இந்த கல்யாணத்துக்கு நாம போறோம்" என்றாள். வேண்டாம் என்று அவர் மறுக்கவும் பிடிவாதம் பிடித்து, மிகவும் கெஞ்சி எப்படியோ சம்மதிக்க வைத்தாள்.

கல்யாணத்திற்கு போக எல்லா ஏற்பாடுகளையும் செய்தவள் அந்த நாளுக்காய் ஆவலாய் காத்திருந்தாள். அந்த பெண்ணை பார்த்து அவர் முன் பாருங்க நாங்கள் எப்படி நல்ல நிலமையில் இருக்கிறோமென்று காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அதற்காகதானே இத்தனை அடம் பிடித்து சம்மதம் வாங்கினாள்.

அங்கு சென்றதும் அவளது சின்ன அத்தை பெண் இவளுடன் நன்றாக ஒட்டிக் கொள்ள திருமணத்தன்று அவளுடனே சுற்றிக் கொண்டிருந்தாள். அவளிடம் கேட்டு அப்பாவின் அந்த அக்கா பெண் யாரென்று தெரிந்து கொண்டாள். அவர் யாருடனோ அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அவர்கள் முன்பு வேண்டுமென்றே அதற்கும் இதற்குமாய் நடந்தாள். அப்போது அந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த இவளது அத்தை இவளை கூப்பிட்டு அறிமுகப்படுத்த சுசியின் இதயம் வேகமாய் துடித்தது. இந்த தருணத்திற்காகதானே இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்ததே. மனப்பாடம் செய்து வைத்த டயலாக்குகளை எல்லாம் வேக வேகமாய் மனதுக்குள் ஓட்டி பார்த்துக் கொண்டாள்.

அவரோ சுசியை அருகில் அமர வைத்துக் கொண்டு கைகளை விடாமல் அவள் முகத்தையே இரு நொடிகள் பார்த்தார். அப்போது அவர் முகத்தில் சொல்ல முடியாத ஆர்வம் தென்பட சுசி புரியாமல் குழம்பினாள்.

"எப்படிம்மா இருக்க? என்ன படிக்கிற?" என்று அவர் கேட்கும்போது குரல் பிசிறியது அவளுக்கு தெளிவாக தெரிந்தது.

"நல்லா இருக்கேன் ஆன்டி. பி.இ ஃபைனல் இயர் படிச்சிட்டு இருக்கேன்" என்று அவள் சொன்னதும்

"ஆன்டியெல்லாம் சொல்லாத. அம்மானு சொல்லு" என்று அவர் சொல்லும்போது கீழுதடு துடித்தது. பற்களால் கடித்து அடக்கியவர் எங்கோ பார்த்தபடி

"அப்பா எப்படி இருக்கார்?" என்றார்.

"அவருக்கென்ன? ராஜா மாதிரி இருக்கார்" என்று அவள் முடிப்பதற்குள் அவளது அத்தை பெண் அப்பா கூப்பிடுவதாய் சொல்லி அவளை கூப்பிட "இருங்க வரேன்" என்று எழுந்தாள். சரியென்று அவர் அவளை நிமிர்ந்து பார்த்தபோது அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள்.

அவர் விழிகளில் நிரம்பியிருந்த கண்ணீர்..... அன்று தந்தையின் கண்களில் கண்ட அதே கண்ணீர்......

Wednesday, July 25, 2007

அத்தை மகனே! அத்தானே!! - III


"சுதா ப்ராதாப்ப போயி சாப்பிட வர சொல்லு" என்று அத்தை சொல்லவும்
"பசிச்சா அவனே வரட்டும். நானெல்லாம் போயி கூப்பிட முடியாது" என்று பதில் சொல்லி விட்டு கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கினாள்.

"போய் சொல்லு சுதா. என்னால மாடி ஏற முடியாது. அவன் வேற அப்பவே பசிக்குதுனு சொன்னான்" என்று அவர் கெஞ்சலாய் கேட்கவும் வேறு வழியின்றி எழுந்து சென்றாள்.
அவனிடம் பேசாமலே ஒரு நாளை கழித்தவள் இன்று தனிமையில் சந்திக்க நேரும்படி ஆயிற்றே என்று எண்ணியபடி படியேறினாள். அவனது அறைக்குள் நுழைந்தவள் அங்கே அவனை காணாது பின் கதவு வழியாக பால்கனியில் இருக்கிறானா என்று எட்டிப் பார்த்தாள். அங்கும் இல்லாது போகவே எங்கே சென்றிருப்பான் என்ற யோசனையில் அங்கேயே நின்றவள் கழுத்தில் ஏதோ குறுகுறுக்க வேகமாய் திரும்பவும் அப்படியே ப்ரதாப்பின் கைகளுக்குள் வந்தாள். அவனை வெகு அருகில் பார்த்ததும் இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள இமைக்காமல் பார்த்தாள். அவன் அப்படியே ஆள்காட்டி விரலை நெற்றியில் வைத்து மெதுவாக கீழ்நோக்கி விரலை நகர்த்தினான். மூக்கை தொட்டதும் தாள முடியாமல் லேசாய் தலையை பின்னால் சாய்த்து மெல்ல கண்களை மூடினாள். அவளது அந்த நிலையை கண்டு ரசித்தபடியே முன்னேறியவன் அவளது இதழ்களைத் தொட்டதும் அப்படியே அவளை நிமிர்ந்து நிற்க வைத்து கைகளை விலக்கினான். திடுக்கிட்டு விழித்தவள் அவன் புன்னகைத்தபடி நிற்பதை கண்டதும் சுய நினைவு வர 'ச்சே! இவன்கிட்ட இப்படி நடந்துக்கிட்டோமே' என்று எண்ணி வெட்கியபடி வேகமாக வெளியேறினாள்.

படிகளில் இறங்கும்போது மனம் கொதித்தது. 'ப்ச்! அன்னைக்கு எவ்வளவு ரோஷமா பேசினேன். இப்போ அந்த ரோஷம் எங்க போச்சு'-ன்னு என்று தன்னைத் தானே நொந்து கொண்டவள் கண்கள் துளிர்க்க நேராக சென்று படுக்கையில் விழுந்தாள். சிறிது நேரம் அப்படியே தலையணையை நனைத்தவள் சாப்பிட அழைப்பு குரல் கேட்கவும் முகம் கழுவிக் கொண்டு டைனிங் ஹாலுக்கு சென்றாள். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ப்ரதாப்பைக் கண்டதும் திரும்ப எத்தனித்தவளை அத்தையின் குரல் தடுத்தது.

"நீயும் சாப்பிட்டுட்டினா நான் போய் படுப்பேன்" என்று அவர் சொல்லவும் வேறு வழியின்றி டைனிங் டேபிளில் அமர்ந்தாள். அவன் ஏளனமாய் புன்னகைப்பதைக் கண்டதும் கோபம் சுறுசுறுவென்று தலைக்கேற

"அத்தை நாளைக்கு நான் ஊருக்கு கிளம்பறேன்" என்று சத்தமாய் உள்ளே தோசை சுட்டுக் கொண்டிருந்த அத்தைக்கு கூறினாள்.

"ஏன் இன்னும் உனக்கு லீவ் இருக்கு இல்ல? அதுக்குள்ள என்ன??" என்று அவர் கேட்கவும்

"இல்ல நான் வந்து ஒரு நாலு நாள் ஆச்சு" என்று மென்று விழுங்கினாள். அதை கண்டதும் இன்னும் ஏளனமாய் புன்னகைத்தவன்
"ஏன் நான் இருக்கறதால பயமா? உன் கொள்கைல இவ்ளோதான் ஸ்ட்ராங்கா?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படியாய் கேட்டான். அவனது ஏளனப் புன்னகை அவளை உசுப்பி விட
"உன்னைப் பார்த்து எனக்கென்ன பயமாம்?" என்று அவன் கண்களை நேராய் பார்த்து கூறியவள்

"இல்ல அத்தை. இன்னும் ஒரு மூணு நாள் கழிச்சே போறேன்" என்றாள் சத்தமாக. அதை கேட்டு அவன் புன்னகைத்தபடி எழுந்து சென்றான். இரண்டு தோசையை அரைமணி நேரத்தில் எப்படியோ கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வந்த போது ஜம்மென்று சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே சென்றால் அவனுக்கு பயந்து கொண்டுதான் போகிறாள் என்று நினைத்துக் கொள்வான் என்றெண்ணி அங்கேயே உட்கார்ந்தாள்.

"உன் கண்ணிலே துளி நீரையும் நீ சிந்தவும் விட மாட்டேன்.... உன் நிழலையும் தரை மீதிலே நடமாடவும் விட மாட்டேன்.... ஒரே உடல் ஒரே மனம் ஒரே உயிர் நினைக்கையில் இனிக்கிறதே....." என்று டிவியில் ஓடிய பாடலுடன் சேர்ந்து அவன் பாட அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது. திரும்பி அவனை பார்க்கவும் அவளைப் பார்த்து "நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி" என்று பாடினான். அவள் வேகமாக ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றினாள்.

--------------------------------------ooOoo--------------------------------------

"ஏய்! இன்னைக்கு நாங்க ஃபிலிம் போறோம் வரயா?" என்று அவன் கேட்டதும்

"நாங்கன்னா?" என்றாள் கேள்வியாய் பார்த்தாள்.

"நானும் கவிதாவும் போறோம்" என்றதும் அவள் முகம் கோபத்தில் சிவந்தது.

"நான் எதுக்கு வரணும்? நீங்களே போயிட்டு வாங்க"

"அது சரி" என்றவன் "வயிறெரியாம இருந்தா சரி" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு திரும்ப கோபம் பொங்க அவனது சட்டையை பிடித்து திருப்பி

"எனக்கு எதுக்குடா வயிறெரியணும்?" என்றவள் முகம் கோபத்தில் சிவந்து இதழ்கள் துடிக்க கண்கள் நிரம்பியது.

அவன் மெதுவாய் புன்னகைக்கவும் அவனை விட்டு விட்டு கைகளால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதாள். இரு நிமிடம் கழித்து அவள் கைகளை அவன் விலக்கி

"இப்போ சொல்லு...... நானா வந்து கேட்டா கூட நீ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?" என்று அவன் மெதுவாய் கேட்கவும் தாங்க முடியாமல் அவனது கைகளுக்குள் புதைந்தாள். சில நிமிடங்கள் அவன் தோளில் புதைந்து அழுதவள்
"நான் ட்வெல்த் படிக்கறப்ப இருந்து உன்னை லவ் பண்றேன் தெரியுமா? நீதான் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படி சொல்லிட்ட"
"அட என் மாமன் மகளே! மக்கு ப்ளாஸ்திரி!! நீ ஃபிப்த் படிக்கும்போது நம்ம வீட்டு நாய் செத்து போச்சுன்னு என் நெஞ்சுல விழுந்து அழுதியே..... அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்..... வாழ்நாள் முழுக்க உன்னோட கண்ணீர், சந்தோஷம் எல்லாத்தையும் என் நெஞ்சுலதான் தாங்கணும்னு"

இந்த வார்த்தைகளை கேட்டதும் அவள் காதுகளையே நம்ப முடியாமல் ஆச்சர்யத்தில் மூழ்கியவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அவன் பரிவாய் புன்னகைக்கவும்

"அப்புறம் ஏன் அன்னைக்கு எனக்கு எதுவும் தோணவே இல்லைன்னு சொன்ன?" என்று செல்ல கோபத்தில் அவன் நெஞ்சில் குத்தினாள். அவள் கைகளை பிடித்து தடுத்தவன்

"நீ என்ன பொண்ணு மாதிரி வெக்கப்பட்டுக்கிட்டா சொன்ன? பெரிய இவளாட்டம் சட்டை காலரை பிடிச்சு ஐ லவ் யூன்னு சொன்னா நாங்க உடனே ஒத்துக்கனுமா?" என்று அவன் கிண்டலாய் சிரித்தான். அவனது மனோநிலை அவளையும் தொற்றிக் கொள்ள பொய் கோபத்தில் மூக்கு விடைத்துக் கொண்டு அவனை தள்ளி விட்டு

"ஆமாண்டா...... அப்படிதான் சொல்லுவேன்" என்று திமிராய் அவள் சொல்ல

"எவ்ளோ கொழுப்புடி உனக்கு" என்று அவளை எட்டிப் பிடித்தான்.

"ஆமா...... ம்ம்ம்ம்ம்" என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அதற்கு மேல் பேச முடியாமல் இதழ்களைப் பற்றினான்.



(முடிந்தது)

Tuesday, July 24, 2007

அத்தை மகனே! அத்தானே!! - II


ப்ரதாப் அவனது கம்ப்யூட்டரில் ஏதோ வேலையாயிருக்க அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்த சுதா "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கிறது" என்று அவனைப் பார்த்து பாடியபடியே வந்தாள். சத்தம் கேட்டு அவன் திரும்பி பார்த்த போது அவசர அவசரமாய் வேறுபுறம் பார்வையை திருப்பினாள். அவன் கையில் காபியை கொடுத்தவள் அவனுக்கு எதாவது புரிந்திருக்குமோ என்ற ஆசையாய் அவனைப் பார்த்தால் அவனோ எதையும் சட்டை செய்யாமல் அவனது வாழ்க்கையின் சந்தோஷமே அந்த காபியை குடிப்பதில்தான் இருக்கிறது என்பது போல காபியை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தான். சற்றே எரிச்சலுற்றவள் இன்று எப்படியாவது சொல்லி விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். எவ்வளவுதான் தைரியமான பெண்ணாயிருந்தாலும் காதல் கோழையாக்கி விடுவது இயல்புதானே. அதற்கு சுதா மட்டும் விதிவிலக்கா என்ன? எப்படி ஆரம்பிப்பதென்று யோசித்தவள் மீண்டும் பாடலின் துணையையே நாடினாள்.

"காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவி நான்" என்று அவனுக்கு நேராய் ஜன்னலில் சாய்ந்து நின்றபடி பாடினாள். இம்முறை அவளது பாடலுக்கு செவி சாய்த்தவன் நிமிர்ந்து பார்த்தான். இப்பொழுதாவது புரிந்து விட்டதா? இதயம் படபடவென்று வேகமாய் அடிக்க கண்களில் காதல் ததும்ப அவனை ஆவலாய் பார்த்தாள்.

"ஏன்டி..... ஏழாங்கிளாஸ்லயே ஏழு தடவ உக்காந்து உக்காந்து வந்த..... நீயெல்லாம் எங்க ஒரே அட்டம்ப்ட்ல பாஸ் பண்ண போற?" என்று சத்தம் போட்டு சிரித்த சிரிப்பு அவளுள் இருந்த சுயமரியாதையை தட்டி எழுப்ப

"ட்வெல்த்லயும் ஸ்கூல் ஃபர்ஸ்ட்.... இதுவரைக்கும் எல்லா செமஸ்டர்லயும் ஃபர்ஸ்ட் மார்க்... என்ன பாத்தாடா ஏழாங்கிளாஸ்லயே ஏழு தடவ ஃபெயிலுனு சொல்ற" என்றபடியே அவன் தலையில் அடித்தாள். அவன் சிரித்தபடியே தடுக்க கோபம் பொங்கியவளாய் அறையை விட்டு வெளியேறினாள்.

நேராக வீட்டிற்கு வெளியே சென்றவள் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தாள். கோபத்தில் இதழ்கள் துடிக்க ஒரு ஐந்து நிமிடம் அமைதியாய் இருந்தாள். ச்சே. எப்பவும் போல விளையாட்டுக்குதான பேசினான். ஏன் இப்படி கோபப்பட்டு வந்தேன் என்று தன்னைதானே கடிந்து கொண்டவளுக்கு இது அவனது கிண்டலினால் வந்த கோபம் அல்ல. அவளது காதலை அவன் புரிந்து கொள்ளாததால் வந்த கோபம் என்று தெளிவாக புரிந்தது. ப்ச்.... பாவம் அவனை வேறு அடித்து விட்டோமே என்று வருந்தியவள் எழுந்து அவனது அறைக்கு சென்றாள். அவன் யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததால் அமைதியாய் பின்னால் நின்றாள்.

"டேய்! ப்ளீஸ்டா செல்லம். நாளைக்கு உன்னை கண்டிப்பா ஷாப்பிங் கூட்டிட்டு போறேன். இதுக்காக எல்லாம் பேச மாட்டேனு சொல்லாத.... நீ பேசாம என்னோட யார் பேசுவாங்கன்னு சொல்லு.... செல்லம் இல்ல.... தங்கம் இல்ல.... என் புஜ்ஜி இல்ல....." என்று அவன் பாட்டுக்கு கொஞ்சி கொண்டிருக்க அவளுக்கு ஏதோ சுறுசுறுவென்று ஏறியது. சிறிது நேரத்தில் அவன் வைத்து விட அவன் முன் போய் நின்றவள்

"யாருகிட்ட மாமா இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்த?" என்றாள்.

"இப்போதான் பெரிய இவளாட்டம் கோவிச்சிக்கிட்டு போன? இப்ப மட்டும் எதுக்குடி பேசற?"

"நீ மொதல்ல சொல்லு.... யார்ட்ட பேசிட்டு இருந்த?"

"என் ஃப்ரெண்டுடி.... கூட வொர்க் பண்றா...."

"அதுக்குனு இப்படி கொஞ்சிட்டு இருக்கற"

"ஏய்! அவ எனக்கு ரொம்ப க்ளோஸ். இன்னைக்கு ஷாப்பிங் போகணும்னு சொல்லியிருந்தா. என் டேமேஜர் அதுக்குள்ள வேலைய குடுத்து உக்கார வச்சுட்டாரு. அதான் கோவிச்சிக்கிட்டு பேச மாட்டென்றா" என்றவாறு அவன் எழுந்து வெளியே செல்ல அவன் சட்டையை பிடித்து உள்ளிழுத்தாள். அவனை சுவறோடு சாய்த்து அவன் சட்டை காலரைப் பிடித்து

"இங்க பாரு. இனிமேல் ஃப்ரெண்டு அவ இவனு யார்கூடயாவது சுத்திட்டு இருந்த...... என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது...... சரியா?" என்றாள். அவன் திகைத்து விழிக்க

"இங்க பாரு மாமா உன்னைதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு என்னைக்கோ முடிவு பண்ணிட்டேன். ஐ லவ் யூ"

அவன் விழிகள் அதிர்ச்சியில் அப்படியே உறைய
"இங்க பாரு உனக்கு ரெண்டே ரெண்டு சாய்ஸ்தான். ஒண்ணு மி டூன்னு சொல்லு. இல்லைனா எப்போ கல்யாணத்த வச்சுக்கலாம்னு கேளு".
அவன் மௌனமாய் இருக்கவே

"நீ எனக்கு தாலி கட்டறியா இல்ல உன்னை தூக்கிட்டு போய் நான் கட்டவா?" என்று அவள் பொறுமையிழந்து கேட்கவும் நினைவு வந்தவனாய் அவள் கையை எடுத்து விட்டவன்

"என்னடி விட்டா ரொம்ப பேசிட்டே போற?" என்று மீண்டும் சேரில் அமர்ந்தான்.

"உன் பதில் என்னன்னு சொல்லு"

எவ்வித உணர்ச்சியுமின்றி ஒரு நிமிடம் அவளையே இமைக்காமல் பார்த்தான்.
"ஏன்டி உனக்கு இப்படியெல்லாம் தோணுது? இதுவரைக்கும் எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்ல. இனிமேலும் வருமோனு தெரியாது" என்று அவன் சொன்னதை கேட்டதும் அவளால் அங்கே நிற்க முடியவில்லை. எதோ இருட்டிக் கொண்டு வருவது போல இருந்தது. அப்படியே தலையை பிடித்துக் கொண்டு பெட்டில் அமர்ந்தாள். ஒரு ஐந்து நிமிடம் பொறுத்து அவன் எழுந்து அவளருகில் வந்தான்.
"என்னடி ஆச்சு?" என்றபடி அவள் தலையில் கைவைக்க அவனது கைகளை பட்டென்று தட்டி விட்டாள். வேகமாய் எழுந்தவள்

"இங்க பாரு. இனிமேல் நீயா வந்து கேட்டா ஏன் காலைப் பிடிச்சு கெஞ்சினா கூட நான் உன்னை நிச்சயமா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று அவனை நேராக பார்த்து சொல்லி விட்டு விடுவிடுவென்று அறையை விட்டு வெளியேறினாள்.
தொடரும்......

Monday, July 23, 2007

அத்தை மகனே! அத்தானே!! - I


வேக வேகமாய் ஓடி வந்த சுதா பிரதாப்பின் மேல் மோதி நின்றாள். ஒரு நிமிடம் தடுமாறி சுதாரித்தவன்

"எரும மாடே! கண்ணு தெரியல? உங்கப்பா உன்ன இப்படிதான் வளத்தாரா? அடக்க ஒடுக்கம்னா என்னன்னே தெரியாது" என்று திட்ட சுய நினைவுக்கு வந்தவள்

"எவ்ளோ கொழுப்பு இருந்தா நீ எங்கப்பாவ பத்தியெல்லாம் பேசுவ? உங்கம்மாட்ட அப்பவே சொன்னேன். இவனுக்கு நெய் ஊத்தி போடாதீங்க. கொழுப்பு ஏறிட்டே போகுதுனு. உங்கம்மா கேட்டாதான?" என்று இடுப்பில் கைவைத்து அவள் திமிராய் சொல்ல

"ஆமா.... உங்கப்பா மாசம் ஆனா வண்டி வண்டியா நெய் அனுப்பறாரு... போடி.... சொல்ல வந்துட்டா" என்றான் கிண்டலாய்.

"எங்கப்பா எதுக்குடா உனக்கு நெய் அனுப்பனும்?" என்று அவள் எகிற

"ஏ! மரியாதையா பேசுடி.... உங்கப்பா உனக்கு மரியாதை கூட சொல்லி தரலையா? வாங்க மாமா போங்க மாமானு மரியாதையா சொல்லு"

"வாடா மாமா..... போடா மாமா..... இது ஓகேவாடா மாமா உனக்கு???" என்று அவள் பழிப்பு காட்டினாள்.

"எவ்வளவு திமிருடி உனக்கு???" என்றபடி அவன் கையை ஓங்க

"அத்தை.... என்னை அடிக்கறான்" என்று கத்தியபடியே சமையலறைக்குள் ஓடினாள்.

"ஏன்டா அவள்ட்ட சும்மா வம்பு பண்ணிட்டே இருக்க?" என்று ப்ரதாப்பின் அம்மா சலித்துக் கொள்ள

"அவள மொதல்ல சும்மா இருக்க சொல்லுங்கம்மா" என்று அவன் புகார் வாசித்தான்.

"என்னவோ உங்க சண்டைல என்னை இழுக்காதீங்க" என்று அவர் கழண்டு கொள்ள அமுக்கமாய் சுதா கிளுக்கி சிரித்தாள்.

"உன்ன அப்புறம் கவனிச்சிக்கறேண்டி" என்று அவன் விரலை ஆட்டி சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

------------------------------------ooOoo------------------------------------

"ஏய்! என் பெயிண்டிங்ஸ் எடுத்து என்னடி பண்ற?" என்றபடியே வேக வேகமாய் ரூமுக்குள் வந்தான் ப்ரதாப். அவன் பெட்டில் அமர்ந்து அவனுடைய பெயிண்டிங்ஸ் எல்லாவற்றையும் எடுத்து அவளைச் சுற்றி பரப்பி வைத்திருந்த சுதா

"ஓ! இதெல்லாம் நீ வரைஞ்சதா மாமா???!!! நான் கூட ஏதோ பிக்காஸோ பெயிண்டிங்ஸ்தான் வாங்கி வச்சிருக்கியோஓஓஓ.......னு நினைச்சேன்" என்று அவள் உதட்டை பிதுக்கி சிரித்தாள்.

"உன்ன........" என்று பற்களை கடித்தவன் அவள் கழுத்தில் கைவைத்து சுவற்றோடு சாய்த்தான்.

"அய்யோ என்னை கொல்றான் கொல்றான்" என்று அவள் கத்த அவள் வாயில் கை வைத்து பொத்தினான். அவள் பயத்தில் விழிக்க அருகில் வந்தவன் அலைபாயும் அவளிரு விழிகளையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தான். அவள் அப்படியே கண்களை மூட ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன் பின் கைகளை விலக்கி திரும்பி வெளியே சென்றான்.

ஏதோ இனம் புரியாத உணர்வொன்று அவளை சூழ்ந்து கொள்ள அதுவரை சொல்லாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த காதல் மழை மேகம்
கண்ட மயில் தோகையாய் அழகாய் விரிந்து ஆடியது.

------------------------------------ooOoo------------------------------------

கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் வழியில் ஒரு சிறுவன் ஒரு சிறுமிக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுப்பதை கண்டதும் அவளையும் மீறி அவள் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.

"நீ நடக்க ஆரம்பிச்சப்ப பொசுக்கு பொசுக்குனு விழுந்துடுவ. ப்ரதாப் தான் ஓடி வந்து தூக்கி கைப்பிடிச்சி நடக்க வைப்பான்"

"அவன் எப்பயாச்சும் சான்ஸ் கிடைச்சா நல்லா அடிபடற மாதிரி தள்ளி விடலாம்னு ப்ளான் பண்ணிதான் இதெல்லாம் பண்ணியிருப்பான்" என்று அதற்கும் வாயாடியது நினைவுக்கு வர மெலிதாய் புன்னகைத்தாள்.

'இப்படி உன்னோட எப்பவும் சண்டை போட்டேதானடா எனக்கு பழக்கம்? எப்படி எனக்குள்ள வந்த??' என்றவளது எண்ணம் பின்னோக்கி சென்றது.

அவள் பன்னிரெண்டாம் வகுப்பிலிருந்த போது அவன் கல்லூரி இறுதியாண்டு. ப்ராஜக்டிற்காக ஹைதராபாத் கிளம்பி கொண்டிருந்தான். முடித்தபின் அங்கேயே வேலையில் சேர்ந்து கொள்வது போல கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியிருந்தான். அவனுக்கு விடை கொடுப்பதற்காக சுதா வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர். எப்பொழுதும் போல இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது யதேச்சையாய்

"இனிமேல் பாருடி... அங்க போயி ஒரு நல்ல ஃபிகரா பாத்து ஃப்ரெண்டு பிடிச்சு அவளோடதான் பேசுவேன். உன்னோட இனி பேசக் கூட
மாட்டேன்" என்று அவன் சொன்னதும் அவளுக்கு பொசுக்கென்று கோபம் வந்தது.

"நீ பேசலைனு நான் ஒண்ணும் அழலை. எங்கேயோ போயி எக்கேடோ கெட்டு போ...... எனக்கென்ன வந்துச்சாம்" என்று எரிந்து விழுந்தவள் அவனிடம் அதற்கு பிறகு பேசவே இல்லை.

அதற்கு பின் ஒவ்வொரு முறையும் அவன் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் எதோ ஒன்றை தொலைத்தது போலவே தவித்தாள். என்னவென்று புரியாமல் குழம்பினாள். ஃபோன் செய்து பேசலாம் என்று நினைக்கும்போதெல்லாம் அவனாய் பேசும் வரை தானும் பேசக் கூடாது என்ற ஈகோ வந்து தடுத்தது. இந்த நிலையில் முழுத் தேர்வு வந்தது. அதில் கவனம் செலுத்தியதில் அவனைப் பற்றிய நினைவு சிறிது விலகிப் போயிருந்தது. தேர்வுக்கு இரண்டு நாட்களே இருக்கும்போது அவனிடம் இருந்து தேர்வு நன்றாய் எழுத வாழ்த்து அட்டை வந்தது. அதை கண்டதும் வாழ்க்கையில் தொலைத்த அதி அத்தியாவசியமான பொருள் ஒன்று மீண்டும் கைசேர்ந்தது போல பொங்கிய சந்தோஷத்தில் கண்கள் பனித்தது. ஓடிச் சென்று அவசர அவசரமாய் ஃபோன் செய்து அவனிடம் பேசினாள். நான்கு மாதங்களாய் சேர்த்து வைத்திருந்த ஏக்கங்கள் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாள்.

அன்று மனதில் பூத்த காதல் இது நாள் வரை அவளது இதயத்தில் மட்டுமே மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அவனிடம்தான் முதலில் சொல்ல
வேண்டுமென்ற எண்ணத்தில் அவளது நெருங்கிய தோழியிடம் கூட சொல்லாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தாள். ஆனால் அவனிடம்
சொல்வதற்கு இதுவரை தைரியமே வரவில்லை. இதுவரை அவன் என்ன நினைக்கிறான் என்பது பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தவள் நேற்று
அவன் நடந்து கொண்ட விதத்தில் அதையும் சிந்திக்க ஆரம்பித்தாள். இந்த முறை நிச்சயம் சொல்லி விட வேண்டுமென்று முடிவெடுத்த வேளையில்
வீட்டை அடைந்திருந்தாள்.

"அம்மா இங்க பாருங்களேன் உங்க அண்ணன் மகள.... இவளுக்கு அப்போவே கீழ்ப்பாக்கத்துல ஒரு சீட் புக் பண்ணிடலாம்னு அப்பவே சொன்னேன். யாராவது கேட்டீங்களா??? அய்யோ.... இப்ப வேற சீட் கிடைக்குமானு தெரியலையே" என்று ப்ரதாப் புலம்ப அவனை என்ன என்பது போல பார்த்தாள்.

"உனக்கு மொதல்ல சீட் இருக்கானு பாரு" என்று மெதுவாய் சொன்னாள்.

"நானா கைல குடைய வச்சுக்கிட்டு மழைல நனைஞ்சுகிட்டே ட்ரீம் அடிச்சிட்டு வரேன்???" என்று அவன் கேட்டதும் தான் கவனித்தாள் கையிலேயே குடையை வைத்துக் கொண்டு தொப்பலாய் நனைந்திருப்பதை...
தொடரும்....