Showing posts with label அத்தை மகனே... அத்தானே.... Show all posts
Showing posts with label அத்தை மகனே... அத்தானே.... Show all posts

Wednesday, July 25, 2007

அத்தை மகனே! அத்தானே!! - III


"சுதா ப்ராதாப்ப போயி சாப்பிட வர சொல்லு" என்று அத்தை சொல்லவும்
"பசிச்சா அவனே வரட்டும். நானெல்லாம் போயி கூப்பிட முடியாது" என்று பதில் சொல்லி விட்டு கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கினாள்.

"போய் சொல்லு சுதா. என்னால மாடி ஏற முடியாது. அவன் வேற அப்பவே பசிக்குதுனு சொன்னான்" என்று அவர் கெஞ்சலாய் கேட்கவும் வேறு வழியின்றி எழுந்து சென்றாள்.
அவனிடம் பேசாமலே ஒரு நாளை கழித்தவள் இன்று தனிமையில் சந்திக்க நேரும்படி ஆயிற்றே என்று எண்ணியபடி படியேறினாள். அவனது அறைக்குள் நுழைந்தவள் அங்கே அவனை காணாது பின் கதவு வழியாக பால்கனியில் இருக்கிறானா என்று எட்டிப் பார்த்தாள். அங்கும் இல்லாது போகவே எங்கே சென்றிருப்பான் என்ற யோசனையில் அங்கேயே நின்றவள் கழுத்தில் ஏதோ குறுகுறுக்க வேகமாய் திரும்பவும் அப்படியே ப்ரதாப்பின் கைகளுக்குள் வந்தாள். அவனை வெகு அருகில் பார்த்ததும் இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள இமைக்காமல் பார்த்தாள். அவன் அப்படியே ஆள்காட்டி விரலை நெற்றியில் வைத்து மெதுவாக கீழ்நோக்கி விரலை நகர்த்தினான். மூக்கை தொட்டதும் தாள முடியாமல் லேசாய் தலையை பின்னால் சாய்த்து மெல்ல கண்களை மூடினாள். அவளது அந்த நிலையை கண்டு ரசித்தபடியே முன்னேறியவன் அவளது இதழ்களைத் தொட்டதும் அப்படியே அவளை நிமிர்ந்து நிற்க வைத்து கைகளை விலக்கினான். திடுக்கிட்டு விழித்தவள் அவன் புன்னகைத்தபடி நிற்பதை கண்டதும் சுய நினைவு வர 'ச்சே! இவன்கிட்ட இப்படி நடந்துக்கிட்டோமே' என்று எண்ணி வெட்கியபடி வேகமாக வெளியேறினாள்.

படிகளில் இறங்கும்போது மனம் கொதித்தது. 'ப்ச்! அன்னைக்கு எவ்வளவு ரோஷமா பேசினேன். இப்போ அந்த ரோஷம் எங்க போச்சு'-ன்னு என்று தன்னைத் தானே நொந்து கொண்டவள் கண்கள் துளிர்க்க நேராக சென்று படுக்கையில் விழுந்தாள். சிறிது நேரம் அப்படியே தலையணையை நனைத்தவள் சாப்பிட அழைப்பு குரல் கேட்கவும் முகம் கழுவிக் கொண்டு டைனிங் ஹாலுக்கு சென்றாள். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ப்ரதாப்பைக் கண்டதும் திரும்ப எத்தனித்தவளை அத்தையின் குரல் தடுத்தது.

"நீயும் சாப்பிட்டுட்டினா நான் போய் படுப்பேன்" என்று அவர் சொல்லவும் வேறு வழியின்றி டைனிங் டேபிளில் அமர்ந்தாள். அவன் ஏளனமாய் புன்னகைப்பதைக் கண்டதும் கோபம் சுறுசுறுவென்று தலைக்கேற

"அத்தை நாளைக்கு நான் ஊருக்கு கிளம்பறேன்" என்று சத்தமாய் உள்ளே தோசை சுட்டுக் கொண்டிருந்த அத்தைக்கு கூறினாள்.

"ஏன் இன்னும் உனக்கு லீவ் இருக்கு இல்ல? அதுக்குள்ள என்ன??" என்று அவர் கேட்கவும்

"இல்ல நான் வந்து ஒரு நாலு நாள் ஆச்சு" என்று மென்று விழுங்கினாள். அதை கண்டதும் இன்னும் ஏளனமாய் புன்னகைத்தவன்
"ஏன் நான் இருக்கறதால பயமா? உன் கொள்கைல இவ்ளோதான் ஸ்ட்ராங்கா?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படியாய் கேட்டான். அவனது ஏளனப் புன்னகை அவளை உசுப்பி விட
"உன்னைப் பார்த்து எனக்கென்ன பயமாம்?" என்று அவன் கண்களை நேராய் பார்த்து கூறியவள்

"இல்ல அத்தை. இன்னும் ஒரு மூணு நாள் கழிச்சே போறேன்" என்றாள் சத்தமாக. அதை கேட்டு அவன் புன்னகைத்தபடி எழுந்து சென்றான். இரண்டு தோசையை அரைமணி நேரத்தில் எப்படியோ கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வந்த போது ஜம்மென்று சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே சென்றால் அவனுக்கு பயந்து கொண்டுதான் போகிறாள் என்று நினைத்துக் கொள்வான் என்றெண்ணி அங்கேயே உட்கார்ந்தாள்.

"உன் கண்ணிலே துளி நீரையும் நீ சிந்தவும் விட மாட்டேன்.... உன் நிழலையும் தரை மீதிலே நடமாடவும் விட மாட்டேன்.... ஒரே உடல் ஒரே மனம் ஒரே உயிர் நினைக்கையில் இனிக்கிறதே....." என்று டிவியில் ஓடிய பாடலுடன் சேர்ந்து அவன் பாட அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது. திரும்பி அவனை பார்க்கவும் அவளைப் பார்த்து "நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி" என்று பாடினான். அவள் வேகமாக ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றினாள்.

--------------------------------------ooOoo--------------------------------------

"ஏய்! இன்னைக்கு நாங்க ஃபிலிம் போறோம் வரயா?" என்று அவன் கேட்டதும்

"நாங்கன்னா?" என்றாள் கேள்வியாய் பார்த்தாள்.

"நானும் கவிதாவும் போறோம்" என்றதும் அவள் முகம் கோபத்தில் சிவந்தது.

"நான் எதுக்கு வரணும்? நீங்களே போயிட்டு வாங்க"

"அது சரி" என்றவன் "வயிறெரியாம இருந்தா சரி" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு திரும்ப கோபம் பொங்க அவனது சட்டையை பிடித்து திருப்பி

"எனக்கு எதுக்குடா வயிறெரியணும்?" என்றவள் முகம் கோபத்தில் சிவந்து இதழ்கள் துடிக்க கண்கள் நிரம்பியது.

அவன் மெதுவாய் புன்னகைக்கவும் அவனை விட்டு விட்டு கைகளால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதாள். இரு நிமிடம் கழித்து அவள் கைகளை அவன் விலக்கி

"இப்போ சொல்லு...... நானா வந்து கேட்டா கூட நீ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?" என்று அவன் மெதுவாய் கேட்கவும் தாங்க முடியாமல் அவனது கைகளுக்குள் புதைந்தாள். சில நிமிடங்கள் அவன் தோளில் புதைந்து அழுதவள்
"நான் ட்வெல்த் படிக்கறப்ப இருந்து உன்னை லவ் பண்றேன் தெரியுமா? நீதான் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படி சொல்லிட்ட"
"அட என் மாமன் மகளே! மக்கு ப்ளாஸ்திரி!! நீ ஃபிப்த் படிக்கும்போது நம்ம வீட்டு நாய் செத்து போச்சுன்னு என் நெஞ்சுல விழுந்து அழுதியே..... அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்..... வாழ்நாள் முழுக்க உன்னோட கண்ணீர், சந்தோஷம் எல்லாத்தையும் என் நெஞ்சுலதான் தாங்கணும்னு"

இந்த வார்த்தைகளை கேட்டதும் அவள் காதுகளையே நம்ப முடியாமல் ஆச்சர்யத்தில் மூழ்கியவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அவன் பரிவாய் புன்னகைக்கவும்

"அப்புறம் ஏன் அன்னைக்கு எனக்கு எதுவும் தோணவே இல்லைன்னு சொன்ன?" என்று செல்ல கோபத்தில் அவன் நெஞ்சில் குத்தினாள். அவள் கைகளை பிடித்து தடுத்தவன்

"நீ என்ன பொண்ணு மாதிரி வெக்கப்பட்டுக்கிட்டா சொன்ன? பெரிய இவளாட்டம் சட்டை காலரை பிடிச்சு ஐ லவ் யூன்னு சொன்னா நாங்க உடனே ஒத்துக்கனுமா?" என்று அவன் கிண்டலாய் சிரித்தான். அவனது மனோநிலை அவளையும் தொற்றிக் கொள்ள பொய் கோபத்தில் மூக்கு விடைத்துக் கொண்டு அவனை தள்ளி விட்டு

"ஆமாண்டா...... அப்படிதான் சொல்லுவேன்" என்று திமிராய் அவள் சொல்ல

"எவ்ளோ கொழுப்புடி உனக்கு" என்று அவளை எட்டிப் பிடித்தான்.

"ஆமா...... ம்ம்ம்ம்ம்" என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அதற்கு மேல் பேச முடியாமல் இதழ்களைப் பற்றினான்.



(முடிந்தது)

Tuesday, July 24, 2007

அத்தை மகனே! அத்தானே!! - II


ப்ரதாப் அவனது கம்ப்யூட்டரில் ஏதோ வேலையாயிருக்க அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்த சுதா "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கிறது" என்று அவனைப் பார்த்து பாடியபடியே வந்தாள். சத்தம் கேட்டு அவன் திரும்பி பார்த்த போது அவசர அவசரமாய் வேறுபுறம் பார்வையை திருப்பினாள். அவன் கையில் காபியை கொடுத்தவள் அவனுக்கு எதாவது புரிந்திருக்குமோ என்ற ஆசையாய் அவனைப் பார்த்தால் அவனோ எதையும் சட்டை செய்யாமல் அவனது வாழ்க்கையின் சந்தோஷமே அந்த காபியை குடிப்பதில்தான் இருக்கிறது என்பது போல காபியை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தான். சற்றே எரிச்சலுற்றவள் இன்று எப்படியாவது சொல்லி விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். எவ்வளவுதான் தைரியமான பெண்ணாயிருந்தாலும் காதல் கோழையாக்கி விடுவது இயல்புதானே. அதற்கு சுதா மட்டும் விதிவிலக்கா என்ன? எப்படி ஆரம்பிப்பதென்று யோசித்தவள் மீண்டும் பாடலின் துணையையே நாடினாள்.

"காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவி நான்" என்று அவனுக்கு நேராய் ஜன்னலில் சாய்ந்து நின்றபடி பாடினாள். இம்முறை அவளது பாடலுக்கு செவி சாய்த்தவன் நிமிர்ந்து பார்த்தான். இப்பொழுதாவது புரிந்து விட்டதா? இதயம் படபடவென்று வேகமாய் அடிக்க கண்களில் காதல் ததும்ப அவனை ஆவலாய் பார்த்தாள்.

"ஏன்டி..... ஏழாங்கிளாஸ்லயே ஏழு தடவ உக்காந்து உக்காந்து வந்த..... நீயெல்லாம் எங்க ஒரே அட்டம்ப்ட்ல பாஸ் பண்ண போற?" என்று சத்தம் போட்டு சிரித்த சிரிப்பு அவளுள் இருந்த சுயமரியாதையை தட்டி எழுப்ப

"ட்வெல்த்லயும் ஸ்கூல் ஃபர்ஸ்ட்.... இதுவரைக்கும் எல்லா செமஸ்டர்லயும் ஃபர்ஸ்ட் மார்க்... என்ன பாத்தாடா ஏழாங்கிளாஸ்லயே ஏழு தடவ ஃபெயிலுனு சொல்ற" என்றபடியே அவன் தலையில் அடித்தாள். அவன் சிரித்தபடியே தடுக்க கோபம் பொங்கியவளாய் அறையை விட்டு வெளியேறினாள்.

நேராக வீட்டிற்கு வெளியே சென்றவள் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தாள். கோபத்தில் இதழ்கள் துடிக்க ஒரு ஐந்து நிமிடம் அமைதியாய் இருந்தாள். ச்சே. எப்பவும் போல விளையாட்டுக்குதான பேசினான். ஏன் இப்படி கோபப்பட்டு வந்தேன் என்று தன்னைதானே கடிந்து கொண்டவளுக்கு இது அவனது கிண்டலினால் வந்த கோபம் அல்ல. அவளது காதலை அவன் புரிந்து கொள்ளாததால் வந்த கோபம் என்று தெளிவாக புரிந்தது. ப்ச்.... பாவம் அவனை வேறு அடித்து விட்டோமே என்று வருந்தியவள் எழுந்து அவனது அறைக்கு சென்றாள். அவன் யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததால் அமைதியாய் பின்னால் நின்றாள்.

"டேய்! ப்ளீஸ்டா செல்லம். நாளைக்கு உன்னை கண்டிப்பா ஷாப்பிங் கூட்டிட்டு போறேன். இதுக்காக எல்லாம் பேச மாட்டேனு சொல்லாத.... நீ பேசாம என்னோட யார் பேசுவாங்கன்னு சொல்லு.... செல்லம் இல்ல.... தங்கம் இல்ல.... என் புஜ்ஜி இல்ல....." என்று அவன் பாட்டுக்கு கொஞ்சி கொண்டிருக்க அவளுக்கு ஏதோ சுறுசுறுவென்று ஏறியது. சிறிது நேரத்தில் அவன் வைத்து விட அவன் முன் போய் நின்றவள்

"யாருகிட்ட மாமா இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்த?" என்றாள்.

"இப்போதான் பெரிய இவளாட்டம் கோவிச்சிக்கிட்டு போன? இப்ப மட்டும் எதுக்குடி பேசற?"

"நீ மொதல்ல சொல்லு.... யார்ட்ட பேசிட்டு இருந்த?"

"என் ஃப்ரெண்டுடி.... கூட வொர்க் பண்றா...."

"அதுக்குனு இப்படி கொஞ்சிட்டு இருக்கற"

"ஏய்! அவ எனக்கு ரொம்ப க்ளோஸ். இன்னைக்கு ஷாப்பிங் போகணும்னு சொல்லியிருந்தா. என் டேமேஜர் அதுக்குள்ள வேலைய குடுத்து உக்கார வச்சுட்டாரு. அதான் கோவிச்சிக்கிட்டு பேச மாட்டென்றா" என்றவாறு அவன் எழுந்து வெளியே செல்ல அவன் சட்டையை பிடித்து உள்ளிழுத்தாள். அவனை சுவறோடு சாய்த்து அவன் சட்டை காலரைப் பிடித்து

"இங்க பாரு. இனிமேல் ஃப்ரெண்டு அவ இவனு யார்கூடயாவது சுத்திட்டு இருந்த...... என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது...... சரியா?" என்றாள். அவன் திகைத்து விழிக்க

"இங்க பாரு மாமா உன்னைதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு என்னைக்கோ முடிவு பண்ணிட்டேன். ஐ லவ் யூ"

அவன் விழிகள் அதிர்ச்சியில் அப்படியே உறைய
"இங்க பாரு உனக்கு ரெண்டே ரெண்டு சாய்ஸ்தான். ஒண்ணு மி டூன்னு சொல்லு. இல்லைனா எப்போ கல்யாணத்த வச்சுக்கலாம்னு கேளு".
அவன் மௌனமாய் இருக்கவே

"நீ எனக்கு தாலி கட்டறியா இல்ல உன்னை தூக்கிட்டு போய் நான் கட்டவா?" என்று அவள் பொறுமையிழந்து கேட்கவும் நினைவு வந்தவனாய் அவள் கையை எடுத்து விட்டவன்

"என்னடி விட்டா ரொம்ப பேசிட்டே போற?" என்று மீண்டும் சேரில் அமர்ந்தான்.

"உன் பதில் என்னன்னு சொல்லு"

எவ்வித உணர்ச்சியுமின்றி ஒரு நிமிடம் அவளையே இமைக்காமல் பார்த்தான்.
"ஏன்டி உனக்கு இப்படியெல்லாம் தோணுது? இதுவரைக்கும் எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்ல. இனிமேலும் வருமோனு தெரியாது" என்று அவன் சொன்னதை கேட்டதும் அவளால் அங்கே நிற்க முடியவில்லை. எதோ இருட்டிக் கொண்டு வருவது போல இருந்தது. அப்படியே தலையை பிடித்துக் கொண்டு பெட்டில் அமர்ந்தாள். ஒரு ஐந்து நிமிடம் பொறுத்து அவன் எழுந்து அவளருகில் வந்தான்.
"என்னடி ஆச்சு?" என்றபடி அவள் தலையில் கைவைக்க அவனது கைகளை பட்டென்று தட்டி விட்டாள். வேகமாய் எழுந்தவள்

"இங்க பாரு. இனிமேல் நீயா வந்து கேட்டா ஏன் காலைப் பிடிச்சு கெஞ்சினா கூட நான் உன்னை நிச்சயமா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று அவனை நேராக பார்த்து சொல்லி விட்டு விடுவிடுவென்று அறையை விட்டு வெளியேறினாள்.
தொடரும்......

Monday, July 23, 2007

அத்தை மகனே! அத்தானே!! - I


வேக வேகமாய் ஓடி வந்த சுதா பிரதாப்பின் மேல் மோதி நின்றாள். ஒரு நிமிடம் தடுமாறி சுதாரித்தவன்

"எரும மாடே! கண்ணு தெரியல? உங்கப்பா உன்ன இப்படிதான் வளத்தாரா? அடக்க ஒடுக்கம்னா என்னன்னே தெரியாது" என்று திட்ட சுய நினைவுக்கு வந்தவள்

"எவ்ளோ கொழுப்பு இருந்தா நீ எங்கப்பாவ பத்தியெல்லாம் பேசுவ? உங்கம்மாட்ட அப்பவே சொன்னேன். இவனுக்கு நெய் ஊத்தி போடாதீங்க. கொழுப்பு ஏறிட்டே போகுதுனு. உங்கம்மா கேட்டாதான?" என்று இடுப்பில் கைவைத்து அவள் திமிராய் சொல்ல

"ஆமா.... உங்கப்பா மாசம் ஆனா வண்டி வண்டியா நெய் அனுப்பறாரு... போடி.... சொல்ல வந்துட்டா" என்றான் கிண்டலாய்.

"எங்கப்பா எதுக்குடா உனக்கு நெய் அனுப்பனும்?" என்று அவள் எகிற

"ஏ! மரியாதையா பேசுடி.... உங்கப்பா உனக்கு மரியாதை கூட சொல்லி தரலையா? வாங்க மாமா போங்க மாமானு மரியாதையா சொல்லு"

"வாடா மாமா..... போடா மாமா..... இது ஓகேவாடா மாமா உனக்கு???" என்று அவள் பழிப்பு காட்டினாள்.

"எவ்வளவு திமிருடி உனக்கு???" என்றபடி அவன் கையை ஓங்க

"அத்தை.... என்னை அடிக்கறான்" என்று கத்தியபடியே சமையலறைக்குள் ஓடினாள்.

"ஏன்டா அவள்ட்ட சும்மா வம்பு பண்ணிட்டே இருக்க?" என்று ப்ரதாப்பின் அம்மா சலித்துக் கொள்ள

"அவள மொதல்ல சும்மா இருக்க சொல்லுங்கம்மா" என்று அவன் புகார் வாசித்தான்.

"என்னவோ உங்க சண்டைல என்னை இழுக்காதீங்க" என்று அவர் கழண்டு கொள்ள அமுக்கமாய் சுதா கிளுக்கி சிரித்தாள்.

"உன்ன அப்புறம் கவனிச்சிக்கறேண்டி" என்று அவன் விரலை ஆட்டி சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

------------------------------------ooOoo------------------------------------

"ஏய்! என் பெயிண்டிங்ஸ் எடுத்து என்னடி பண்ற?" என்றபடியே வேக வேகமாய் ரூமுக்குள் வந்தான் ப்ரதாப். அவன் பெட்டில் அமர்ந்து அவனுடைய பெயிண்டிங்ஸ் எல்லாவற்றையும் எடுத்து அவளைச் சுற்றி பரப்பி வைத்திருந்த சுதா

"ஓ! இதெல்லாம் நீ வரைஞ்சதா மாமா???!!! நான் கூட ஏதோ பிக்காஸோ பெயிண்டிங்ஸ்தான் வாங்கி வச்சிருக்கியோஓஓஓ.......னு நினைச்சேன்" என்று அவள் உதட்டை பிதுக்கி சிரித்தாள்.

"உன்ன........" என்று பற்களை கடித்தவன் அவள் கழுத்தில் கைவைத்து சுவற்றோடு சாய்த்தான்.

"அய்யோ என்னை கொல்றான் கொல்றான்" என்று அவள் கத்த அவள் வாயில் கை வைத்து பொத்தினான். அவள் பயத்தில் விழிக்க அருகில் வந்தவன் அலைபாயும் அவளிரு விழிகளையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தான். அவள் அப்படியே கண்களை மூட ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன் பின் கைகளை விலக்கி திரும்பி வெளியே சென்றான்.

ஏதோ இனம் புரியாத உணர்வொன்று அவளை சூழ்ந்து கொள்ள அதுவரை சொல்லாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த காதல் மழை மேகம்
கண்ட மயில் தோகையாய் அழகாய் விரிந்து ஆடியது.

------------------------------------ooOoo------------------------------------

கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் வழியில் ஒரு சிறுவன் ஒரு சிறுமிக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுப்பதை கண்டதும் அவளையும் மீறி அவள் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.

"நீ நடக்க ஆரம்பிச்சப்ப பொசுக்கு பொசுக்குனு விழுந்துடுவ. ப்ரதாப் தான் ஓடி வந்து தூக்கி கைப்பிடிச்சி நடக்க வைப்பான்"

"அவன் எப்பயாச்சும் சான்ஸ் கிடைச்சா நல்லா அடிபடற மாதிரி தள்ளி விடலாம்னு ப்ளான் பண்ணிதான் இதெல்லாம் பண்ணியிருப்பான்" என்று அதற்கும் வாயாடியது நினைவுக்கு வர மெலிதாய் புன்னகைத்தாள்.

'இப்படி உன்னோட எப்பவும் சண்டை போட்டேதானடா எனக்கு பழக்கம்? எப்படி எனக்குள்ள வந்த??' என்றவளது எண்ணம் பின்னோக்கி சென்றது.

அவள் பன்னிரெண்டாம் வகுப்பிலிருந்த போது அவன் கல்லூரி இறுதியாண்டு. ப்ராஜக்டிற்காக ஹைதராபாத் கிளம்பி கொண்டிருந்தான். முடித்தபின் அங்கேயே வேலையில் சேர்ந்து கொள்வது போல கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியிருந்தான். அவனுக்கு விடை கொடுப்பதற்காக சுதா வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர். எப்பொழுதும் போல இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது யதேச்சையாய்

"இனிமேல் பாருடி... அங்க போயி ஒரு நல்ல ஃபிகரா பாத்து ஃப்ரெண்டு பிடிச்சு அவளோடதான் பேசுவேன். உன்னோட இனி பேசக் கூட
மாட்டேன்" என்று அவன் சொன்னதும் அவளுக்கு பொசுக்கென்று கோபம் வந்தது.

"நீ பேசலைனு நான் ஒண்ணும் அழலை. எங்கேயோ போயி எக்கேடோ கெட்டு போ...... எனக்கென்ன வந்துச்சாம்" என்று எரிந்து விழுந்தவள் அவனிடம் அதற்கு பிறகு பேசவே இல்லை.

அதற்கு பின் ஒவ்வொரு முறையும் அவன் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் எதோ ஒன்றை தொலைத்தது போலவே தவித்தாள். என்னவென்று புரியாமல் குழம்பினாள். ஃபோன் செய்து பேசலாம் என்று நினைக்கும்போதெல்லாம் அவனாய் பேசும் வரை தானும் பேசக் கூடாது என்ற ஈகோ வந்து தடுத்தது. இந்த நிலையில் முழுத் தேர்வு வந்தது. அதில் கவனம் செலுத்தியதில் அவனைப் பற்றிய நினைவு சிறிது விலகிப் போயிருந்தது. தேர்வுக்கு இரண்டு நாட்களே இருக்கும்போது அவனிடம் இருந்து தேர்வு நன்றாய் எழுத வாழ்த்து அட்டை வந்தது. அதை கண்டதும் வாழ்க்கையில் தொலைத்த அதி அத்தியாவசியமான பொருள் ஒன்று மீண்டும் கைசேர்ந்தது போல பொங்கிய சந்தோஷத்தில் கண்கள் பனித்தது. ஓடிச் சென்று அவசர அவசரமாய் ஃபோன் செய்து அவனிடம் பேசினாள். நான்கு மாதங்களாய் சேர்த்து வைத்திருந்த ஏக்கங்கள் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாள்.

அன்று மனதில் பூத்த காதல் இது நாள் வரை அவளது இதயத்தில் மட்டுமே மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அவனிடம்தான் முதலில் சொல்ல
வேண்டுமென்ற எண்ணத்தில் அவளது நெருங்கிய தோழியிடம் கூட சொல்லாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தாள். ஆனால் அவனிடம்
சொல்வதற்கு இதுவரை தைரியமே வரவில்லை. இதுவரை அவன் என்ன நினைக்கிறான் என்பது பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தவள் நேற்று
அவன் நடந்து கொண்ட விதத்தில் அதையும் சிந்திக்க ஆரம்பித்தாள். இந்த முறை நிச்சயம் சொல்லி விட வேண்டுமென்று முடிவெடுத்த வேளையில்
வீட்டை அடைந்திருந்தாள்.

"அம்மா இங்க பாருங்களேன் உங்க அண்ணன் மகள.... இவளுக்கு அப்போவே கீழ்ப்பாக்கத்துல ஒரு சீட் புக் பண்ணிடலாம்னு அப்பவே சொன்னேன். யாராவது கேட்டீங்களா??? அய்யோ.... இப்ப வேற சீட் கிடைக்குமானு தெரியலையே" என்று ப்ரதாப் புலம்ப அவனை என்ன என்பது போல பார்த்தாள்.

"உனக்கு மொதல்ல சீட் இருக்கானு பாரு" என்று மெதுவாய் சொன்னாள்.

"நானா கைல குடைய வச்சுக்கிட்டு மழைல நனைஞ்சுகிட்டே ட்ரீம் அடிச்சிட்டு வரேன்???" என்று அவன் கேட்டதும் தான் கவனித்தாள் கையிலேயே குடையை வைத்துக் கொண்டு தொப்பலாய் நனைந்திருப்பதை...
தொடரும்....