"சுதா ப்ராதாப்ப போயி சாப்பிட வர சொல்லு" என்று அத்தை சொல்லவும்
"பசிச்சா அவனே வரட்டும். நானெல்லாம் போயி கூப்பிட முடியாது" என்று பதில் சொல்லி விட்டு கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கினாள்.
"போய் சொல்லு சுதா. என்னால மாடி ஏற முடியாது. அவன் வேற அப்பவே பசிக்குதுனு சொன்னான்" என்று அவர் கெஞ்சலாய் கேட்கவும் வேறு வழியின்றி எழுந்து சென்றாள்.
அவனிடம் பேசாமலே ஒரு நாளை கழித்தவள் இன்று தனிமையில் சந்திக்க நேரும்படி ஆயிற்றே என்று எண்ணியபடி படியேறினாள். அவனது அறைக்குள் நுழைந்தவள் அங்கே அவனை காணாது பின் கதவு வழியாக பால்கனியில் இருக்கிறானா என்று எட்டிப் பார்த்தாள். அங்கும் இல்லாது போகவே எங்கே சென்றிருப்பான் என்ற யோசனையில் அங்கேயே நின்றவள் கழுத்தில் ஏதோ குறுகுறுக்க வேகமாய் திரும்பவும் அப்படியே ப்ரதாப்பின் கைகளுக்குள் வந்தாள். அவனை வெகு அருகில் பார்த்ததும் இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள இமைக்காமல் பார்த்தாள். அவன் அப்படியே ஆள்காட்டி விரலை நெற்றியில் வைத்து மெதுவாக கீழ்நோக்கி விரலை நகர்த்தினான். மூக்கை தொட்டதும் தாள முடியாமல் லேசாய் தலையை பின்னால் சாய்த்து மெல்ல கண்களை மூடினாள். அவளது அந்த நிலையை கண்டு ரசித்தபடியே முன்னேறியவன் அவளது இதழ்களைத் தொட்டதும் அப்படியே அவளை நிமிர்ந்து நிற்க வைத்து கைகளை விலக்கினான். திடுக்கிட்டு விழித்தவள் அவன் புன்னகைத்தபடி நிற்பதை கண்டதும் சுய நினைவு வர 'ச்சே! இவன்கிட்ட இப்படி நடந்துக்கிட்டோமே' என்று எண்ணி வெட்கியபடி வேகமாக வெளியேறினாள்.
படிகளில் இறங்கும்போது மனம் கொதித்தது. 'ப்ச்! அன்னைக்கு எவ்வளவு ரோஷமா பேசினேன். இப்போ அந்த ரோஷம் எங்க போச்சு'-ன்னு என்று தன்னைத் தானே நொந்து கொண்டவள் கண்கள் துளிர்க்க நேராக சென்று படுக்கையில் விழுந்தாள். சிறிது நேரம் அப்படியே தலையணையை நனைத்தவள் சாப்பிட அழைப்பு குரல் கேட்கவும் முகம் கழுவிக் கொண்டு டைனிங் ஹாலுக்கு சென்றாள். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ப்ரதாப்பைக் கண்டதும் திரும்ப எத்தனித்தவளை அத்தையின் குரல் தடுத்தது.
"நீயும் சாப்பிட்டுட்டினா நான் போய் படுப்பேன்" என்று அவர் சொல்லவும் வேறு வழியின்றி டைனிங் டேபிளில் அமர்ந்தாள். அவன் ஏளனமாய் புன்னகைப்பதைக் கண்டதும் கோபம் சுறுசுறுவென்று தலைக்கேற
"அத்தை நாளைக்கு நான் ஊருக்கு கிளம்பறேன்" என்று சத்தமாய் உள்ளே தோசை சுட்டுக் கொண்டிருந்த அத்தைக்கு கூறினாள்.
"ஏன் இன்னும் உனக்கு லீவ் இருக்கு இல்ல? அதுக்குள்ள என்ன??" என்று அவர் கேட்கவும்
"இல்ல நான் வந்து ஒரு நாலு நாள் ஆச்சு" என்று மென்று விழுங்கினாள். அதை கண்டதும் இன்னும் ஏளனமாய் புன்னகைத்தவன்
"ஏன் நான் இருக்கறதால பயமா? உன் கொள்கைல இவ்ளோதான் ஸ்ட்ராங்கா?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படியாய் கேட்டான். அவனது ஏளனப் புன்னகை அவளை உசுப்பி விட
"உன்னைப் பார்த்து எனக்கென்ன பயமாம்?" என்று அவன் கண்களை நேராய் பார்த்து கூறியவள்
"இல்ல அத்தை. இன்னும் ஒரு மூணு நாள் கழிச்சே போறேன்" என்றாள் சத்தமாக. அதை கேட்டு அவன் புன்னகைத்தபடி எழுந்து சென்றான். இரண்டு தோசையை அரைமணி நேரத்தில் எப்படியோ கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வந்த போது ஜம்மென்று சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே சென்றால் அவனுக்கு பயந்து கொண்டுதான் போகிறாள் என்று நினைத்துக் கொள்வான் என்றெண்ணி அங்கேயே உட்கார்ந்தாள்.
"உன் கண்ணிலே துளி நீரையும் நீ சிந்தவும் விட மாட்டேன்.... உன் நிழலையும் தரை மீதிலே நடமாடவும் விட மாட்டேன்.... ஒரே உடல் ஒரே மனம் ஒரே உயிர் நினைக்கையில் இனிக்கிறதே....." என்று டிவியில் ஓடிய பாடலுடன் சேர்ந்து அவன் பாட அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது. திரும்பி அவனை பார்க்கவும் அவளைப் பார்த்து "நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி" என்று பாடினான். அவள் வேகமாக ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றினாள்.
--------------------------------------ooOoo--------------------------------------
"ஏய்! இன்னைக்கு நாங்க ஃபிலிம் போறோம் வரயா?" என்று அவன் கேட்டதும்
"நாங்கன்னா?" என்றாள் கேள்வியாய் பார்த்தாள்.
"நானும் கவிதாவும் போறோம்" என்றதும் அவள் முகம் கோபத்தில் சிவந்தது.
"நான் எதுக்கு வரணும்? நீங்களே போயிட்டு வாங்க"
"அது சரி" என்றவன் "வயிறெரியாம இருந்தா சரி" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு திரும்ப கோபம் பொங்க அவனது சட்டையை பிடித்து திருப்பி
"எனக்கு எதுக்குடா வயிறெரியணும்?" என்றவள் முகம் கோபத்தில் சிவந்து இதழ்கள் துடிக்க கண்கள் நிரம்பியது.
அவன் மெதுவாய் புன்னகைக்கவும் அவனை விட்டு விட்டு கைகளால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதாள். இரு நிமிடம் கழித்து அவள் கைகளை அவன் விலக்கி
"இப்போ சொல்லு...... நானா வந்து கேட்டா கூட நீ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?" என்று அவன் மெதுவாய் கேட்கவும் தாங்க முடியாமல் அவனது கைகளுக்குள் புதைந்தாள். சில நிமிடங்கள் அவன் தோளில் புதைந்து அழுதவள்
"நான் ட்வெல்த் படிக்கறப்ப இருந்து உன்னை லவ் பண்றேன் தெரியுமா? நீதான் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படி சொல்லிட்ட"
"அட என் மாமன் மகளே! மக்கு ப்ளாஸ்திரி!! நீ ஃபிப்த் படிக்கும்போது நம்ம வீட்டு நாய் செத்து போச்சுன்னு என் நெஞ்சுல விழுந்து அழுதியே..... அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்..... வாழ்நாள் முழுக்க உன்னோட கண்ணீர், சந்தோஷம் எல்லாத்தையும் என் நெஞ்சுலதான் தாங்கணும்னு"
இந்த வார்த்தைகளை கேட்டதும் அவள் காதுகளையே நம்ப முடியாமல் ஆச்சர்யத்தில் மூழ்கியவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அவன் பரிவாய் புன்னகைக்கவும்
"அப்புறம் ஏன் அன்னைக்கு எனக்கு எதுவும் தோணவே இல்லைன்னு சொன்ன?" என்று செல்ல கோபத்தில் அவன் நெஞ்சில் குத்தினாள். அவள் கைகளை பிடித்து தடுத்தவன்
"நீ என்ன பொண்ணு மாதிரி வெக்கப்பட்டுக்கிட்டா சொன்ன? பெரிய இவளாட்டம் சட்டை காலரை பிடிச்சு ஐ லவ் யூன்னு சொன்னா நாங்க உடனே ஒத்துக்கனுமா?" என்று அவன் கிண்டலாய் சிரித்தான். அவனது மனோநிலை அவளையும் தொற்றிக் கொள்ள பொய் கோபத்தில் மூக்கு விடைத்துக் கொண்டு அவனை தள்ளி விட்டு
"ஆமாண்டா...... அப்படிதான் சொல்லுவேன்" என்று திமிராய் அவள் சொல்ல
"எவ்ளோ கொழுப்புடி உனக்கு" என்று அவளை எட்டிப் பிடித்தான்.
"ஆமா...... ம்ம்ம்ம்ம்" என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அதற்கு மேல் பேச முடியாமல் இதழ்களைப் பற்றினான்.
இந்த வார்த்தைகளை கேட்டதும் அவள் காதுகளையே நம்ப முடியாமல் ஆச்சர்யத்தில் மூழ்கியவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அவன் பரிவாய் புன்னகைக்கவும்
"அப்புறம் ஏன் அன்னைக்கு எனக்கு எதுவும் தோணவே இல்லைன்னு சொன்ன?" என்று செல்ல கோபத்தில் அவன் நெஞ்சில் குத்தினாள். அவள் கைகளை பிடித்து தடுத்தவன்
"நீ என்ன பொண்ணு மாதிரி வெக்கப்பட்டுக்கிட்டா சொன்ன? பெரிய இவளாட்டம் சட்டை காலரை பிடிச்சு ஐ லவ் யூன்னு சொன்னா நாங்க உடனே ஒத்துக்கனுமா?" என்று அவன் கிண்டலாய் சிரித்தான். அவனது மனோநிலை அவளையும் தொற்றிக் கொள்ள பொய் கோபத்தில் மூக்கு விடைத்துக் கொண்டு அவனை தள்ளி விட்டு
"ஆமாண்டா...... அப்படிதான் சொல்லுவேன்" என்று திமிராய் அவள் சொல்ல
"எவ்ளோ கொழுப்புடி உனக்கு" என்று அவளை எட்டிப் பிடித்தான்.
"ஆமா...... ம்ம்ம்ம்ம்" என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அதற்கு மேல் பேச முடியாமல் இதழ்களைப் பற்றினான்.

(முடிந்தது)




