Friday, May 17, 2013

ஓ நண்பனே நண்பனே!!

ரெண்டு நாளைக்கு முன்னாடி லேட்டா மெஷின் -ல துணி போட்டுட்டு போரடிக்குதேனு உக்காந்திருந்தேன். பப்புக் குட்டி இருந்திருந்தா நான் தூங்க போற வரைக்கும் தூங்காம பூனைக் குட்டி மாதிரி என்னையே சுத்திட்டு இருப்பா. அவ வேற vacation-ன்னு அவ அம்மாயி வீட்டுக்குப் போயிட்டா :( சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப பேசாம படம் பாக்கலாமானு தோணுச்சு. படம் முழுசா பாக்கறதுக்குள்ள மெஷின் முடிஞ்சிடும் அதனால இன்னைக்குப் பாதி நாளைக்குப் பாதினு என் ப்ராஜக்ட் ப்ளானப் போட்டுட்டு என்ன படம் பாக்கலாம்னு தேடினப்போ கண்ணுல சிக்குச்சு இந்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'. ரொம்ப நாளா எல்லாரும் நல்லா இருக்குனு சொன்னாங்களே இதயேப் பாப்போம்னு ஆரம்பிச்சேன்.நைட்டு 3 மணிக்குதான் தூங்கினேன் :)

ஏற்கனவே பல தடவை சொல்லி இருக்கேன். நமக்கு இந்த விமர்சனம் எல்லாம் எழுத வராதுனு. So these are just my observations. படம் என்னவோ விறுவிறுனு தான் போச்சு. ஆனா இந்த ரிசப்ஷன் சீன் வந்தப்போ கொஞ்சம் போரடிச்ச மாதிரி இருந்துச்சு. சும்மா சொன்னதையே எவ்ளோ நேரம்தான் சொல்லிட்டே இருப்பாங்கன்ற மாதிரி. ஆனா அதுக்கப்புறம் நல்ல ஸ்பீடுதான். கதைல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் ப்ரேம், சரஸ்(இவரோட ஃபுல் நேம் என்னவா இருந்திருக்கும்?!) ஃப்ரெண்ட்ஷிப். செம இல்ல?! அவருக்கு இப்படி ஆயிடுச்சுனு தெரிஞ்சதும் மூக்கு விடைக்க அழுததும், அடுத்த நாளும் சரி ஆகலைன்றப்போ சோகத்துல என்ன பண்றதுனு தெரியாம குழம்பறதும், ரிசப்ஷன் அப்போ சொன்னதையே கேட்டு கேட்டு அலுக்காம பேசி பேசி சரி கட்டினதும், சரி ஆன உடனே 'நான் சொன்னா கேப்பியா மாட்டியா'னு கேட்டு விஜயோட பதிலுக்கு அவ்ளோ சந்தோஷப்பட்டதும்.. சான்ஸே இல்ல. என்னா எக்ஸ்பிரஷன்ஸ்... விஜய்-அ மட்டும் கொண்டாடறாங்க. இவர ஏன் கண்டுக்காம விட்டாங்கனு தெரில. அவரோட நடிப்ப விட எனக்கு இவரதான் ரொம்ப பிடிச்சிருந்தது.

இது உண்மைக் கதைனு சொன்னப்போ நிஜமாவே ப்ரேம் அண்ட் சரஸ் ஃப்ரெண்ட்ஷிப் மேல ஒரு சின்ன பொறாமையே வந்துச்சு. 'நீ சொன்னா பில்டிங் மேல இருந்து குதிக்கறது மட்டும் இல்ல. தெரியாத பொண்ணு கழுத்துல தாலி கூட கட்டுவேன்'-னு சொல்றப்போ அந்த இடத்துல நிஜ சரஸோட ஃபீலிங்க்ஸ் எப்படி இருந்திருக்கும். How much he would have treasured his friendship? புல்லரிக்குது எனக்கு! இந்த incident அவங்க ஃப்ரெண்ட்ஷிப்ப இன்னும் ஆழமாக்கி இருக்கும். Envying on them!!

எனக்கு மனதுக்கு நெருக்கமான ரொம்ப ரொம்ப பிடிச்ச ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர். ஒருத்தி ஃபேஸ்புக், ப்ளாக் வாசமே இல்லாம அடுப்படி, வீட்டுக்கார், குழந்தைங்க, மாமனார், மாமியார்-னு திருச்சி-ல இருக்கா. இன்னொருத்தன் ஆபிஸ், ஆஃப்சோர் கால்ஸ், மனைவி, குழந்தை-னு US-ல உக்காந்திருக்கான். இவங்க என் பக்கத்துல இல்லயேனு எவ்ளோ ஏங்கி இருக்கேன். இந்தப் படம் ரொம்ப கிளப்பி விட்டுடுச்சு. Badly missing you my dear friends :( Love you... :)

பி.கு: இந்தப் போஸ்ட் எழுதலாம்னு வந்துப் பாத்தப்போதான் ஒரு உண்மை பளார்னு என் கன்னத்துல அறைஞ்சது. ஆமா! 2012-ல ஒரு போஸ்ட் கூட போடல :(

பி.கு-க்கு பி.கு: அதனால இனிமேல் எழுதி குவிக்கலாம்னு நினைச்சுட்டு இருக்கேன். அது மட்டும் நடந்தது அந்த ஆண்டவனால கூட உங்கள காப்பாத்த முடியாது... ஹி ஹி...

Wednesday, December 14, 2011

போராளி மற்றும் ஒஸ்தி!

போன வாரத்துக்கு முந்தின வார சனிக்கிழமை போராளியும் போன சனிக்கிழமை ஒஸ்தியும் போய் பாத்தேன். என்னோட விமர்சனம்... ஹி ஹி...

போராளி:

பாட்டு 

காமெடி

intermission - அட! அதுக்குள்ளயா?!!

ஃப்ளாஷ்பேக்

க்ளைமாக்ஸ்

படம் முடிஞ்சி போச்சு

படம் என்ன ஒரு மணி நேரம் தானா?!!!!!


ஒஸ்தி:

சென்டிமெண்ட்

வில்லன் என்ட்ரி

ஹீரோ என்ட்ரி

பாட்டு

காமெடி

சிவாஜி த பாஸ் மாதிரி ஒஸ்தி த மாஸ்' - இப்படி அப்பப்போ பஞ்ச் டயலாக்ஸ்...

முடியல

ஹீரோயின் என்ட்ரி

காதல் - எதுக்காக இது வந்துச்சு??

பாட்டு - அதுக்குள்ளயா?

அய்யய்யோ இன்னும் intermission வரலையே :|

சென்டிமெண்ட்

intermission - அப்பாடி! ஒரு வழியா வந்துச்சுடா சாமி...

காமெடி

சென்டிமெண்ட்

கல்யாணம்

பாட்டு

சோகம்

ஃப்ளாஷ்பேக்

பழி வாங்கும் படலம்

பாட்டு - யாராச்சும் காப்பாத்துங்களேன்....

க்ளைமாக்ஸ்

தேங்க் காட்! ஒரு வழியா படம் முடிஞ்சுதுடா.... மி த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்.....

Monday, October 24, 2011

அன்புள்ள..


குழந்தை உறங்கிக் கொண்டிருந்த அந்த மதிய வேளையில் பீரோ லாக்கரை நோண்டிக் கொண்டிருந்த எனது கைகளுக்கு அப்பாவின் அந்த பழைய கைப்பை கிடைத்தது. எனக்கு தெரிந்து அந்த கைப்பைக்கு எனது வயதிருக்கும். சிறுவயது முதலாய் பார்த்திருக்கிறேன். அப்பாவின் சிறு வயது புகைப்படங்கள், தாத்தா பாட்டியின் புகைப்படங்கள், அத்தைகள் அவருக்கு எழுதிய கடிதங்கள், அவரது நண்பர்களின் முக்கியமான கடிதங்கள் என்று அந்தப் பைக்குள் அவர் சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் ஏராளம். பதினொன்றாம் வகுப்பிலேயே விடுதியில் தங்கி படிக்க நேரிட்டதாலும் அதன் பிறகு கல்லூரி, வேலை, திருமணம் என்று வீட்டை விட்டு விலகியே இருந்ததாலும் அந்த வீட்டின் பிரதான இடங்கள் அந்நியமாகத்தான் போயிருந்தன. பத்தாம் வகுப்பிற்குப் பிறகு முதன் முறையாக அந்த வீட்டில் இவ்வளவு தங்க நேரிட்டது இந்த பிரசவக் காலத்தில் தான். இந்த இடைப்பட்ட இடைவெளியில் அவரது கைப்பைக்குள் இடம் பெற்றிருக்கும் நானறியா பொக்கிஷங்களை பார்க்கும் ஆவல் பிறந்தது.



மெத்தை மேல் நன்றாக சம்மணமிட்டு அந்தப் பையை திறக்கும்போது உள்ளே நுழைந்த அம்மா ‘அடுத்தவங்க பையை பாக்கறது தப்பில்ல’ என்று புன்னகைத்தார். ‘எங்கப்பா ஒண்ணும் அடுத்தவரில்ல’ என்று பதிலுடன் புன்னகையை தந்தவாறு மேலிருந்த கடிதங்களை பிரித்தெடுத்து அலசத் தொடங்கினேன். அவற்றின் நடுவில் நான் முதன் முதலில் விடுதி சேர்ந்த பொழுது எழுதிய அத்தனைக் கடிதங்களும் இருந்தன. முதன் முதலாய் எழுதிய கடிததை எடுத்துப் பிரித்துப் படித்தபோது என்னையுமறியாமல் கண்கள் தளும்பியது. அன்று வீட்டை விட்டு அம்மாவை அப்பாவை தம்பியை பிரிந்து அங்கு இருக்க முடியாமல் அடக்க முயன்றும் முடியாமல் கண்களில் வழிந்த கண்ணீர் பட்டுத் தெறித்த அந்த கடிதம் அன்றைய மனநிலையை அப்படியேத் தந்தது. எனக்கு நன்றாக நினைவிருந்தது. அன்று கடிததில் சிந்தியது ஒரு துளிதான். ஆனால் அதன் அருகே இன்னொரு கண்ணீர் துளியின் தடம். நான் யோசித்துக் கொண்டிருந்த போது அம்மா சொன்னார். ‘இந்த லெட்டர் வந்தப்போ படிக்கும்போதே அப்பா கண்ல தண்ணி வந்துடுச்சு. உன்னைப் பிரிஞ்சு இருக்கறதுக்கு ரொம்ப ஃபீல் பண்றாருனு எனக்கே அப்போதான் தெரியும்’. கேட்டதும் அழுகை வந்து விட்டது. ‘என் மேல நீங்கதான் எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க அப்பா. இந்த கடிதங்கள எடுத்துப் பாக்கலைனா எனக்காக நீங்க கண்ணீர் சிந்தினது எனக்குத் தெரியாமலேப் போயிருக்கும்’


பொறுமையாக நான் எழுதிய அனைத்துக் கடிதங்களையும் படித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு கடிதத்தின் போதும் அதை எழுதிய மனநிலை எனக்குள் வந்து வந்து சென்றது. பள்ளியில் இருந்த கையெழுத்திற்கும் கல்லூரிக் காலத்தின் கையெழுத்திற்கும்தான் எத்தனை வித்தியாசங்கள். எனது கையெழுத்தை கிட்டத்தட்ட மறந்தே போயிருக்கும் காலநிலை இது. எவ்வளவு விஷயங்களை நினைவூட்டுகின்றன. பேனா தொலைத்ததிலிருந்து தோழியிடம் சண்டைக் கட்டியது வரை ஒரு குழந்தைப் போல அப்பாவிடம் கொட்டித் தீர்த்திருக்கிறேன். அம்மாவிற்காக மல்லைகைப்பூ, பண்டிகை காலங்களில் ஊருக்கு வருவதற்கு முன்பே வாழ்த்து அட்டைகள், தம்பியின் தேர்விற்காக வாழ்த்துகள் என்று எத்தனை எத்தனை என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது குழந்தை சிணுங்கினாள். அதன் பிறகு அவற்றைப் பற்றி நினைக்க நேரமில்லாமல் போனது.


சென்னை வந்த பிறகு எனது கணவர் ஒரு ஸ்கூட்டர் பரிசளித்தார். முதன் முறையாக அதில் அமர்ந்து ஓட்டிப் பார்த்தபொழுது எங்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென என் அப்பா புது வண்டி வாங்குவதற்கு யோசித்துக் கொண்டே வெகு காலமாய் அந்தப் பழைய ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டிருந்தது ஏனோ நினைவுக்கு வந்தது. கூடவே அந்தக் கடிதங்களின் நினைவும். அப்பாவிற்கு கிடைத்த இது போன்ற சந்தோசங்கள் இமெயில், சாட், வீடியோ சாட், ஃபேஸ்புக் என்றாகி விட்ட இந்த நவீன யுகத்தில் எனக்கு கிடைக்குமா? எனக்குத் தெரிந்து மொபைல் ஃபோன் வந்த பிறகு அப்பாவிற்கு ஒரு கடிதமேனும் எழுதிய நினைவில்லை. நானே இப்படியென்றால் எனது பெண்? அவளும் என்னைப் போல விடுதி செல்ல நேர்ந்தால் அவளது கையெழுத்தே எனக்கு தெரியாமல் போய் விடும் அல்லவா? என்னதான் மெயில்களை சேகரித்து வைத்தாலும் அவள் கைப்பட எழுதியது போலாகுமா? இத்தனைக் கேள்விகளுக்கும் விடைத் தெரியும். ஆனால் மனம் என்னவோ இந்த சந்தோஷங்களைப் பெரிதும் இழப்பது போல ஒரு உணர்வைத் தந்துக் கொண்டேயிருந்தது. பரவாயில்லை. எனக்கு கிடைக்காமல் போவதற்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் என் அப்பாவிற்கேனும் கடைசி வரை கிடைக்க செய்ய என்னால் முடியும். வீடு வந்ததும் ஒரு இன்லாண்ட் லெட்டரை எடுத்து எழுத ஆரம்பித்தேன். ‘அன்புள்ள அப்பா, புதிதாய் ஒரு வண்டி வாங்கி இருக்கிறேன். இன்று நான் நினைத்ததை நினைத்த பொழுது வாங்கிக் கொள்கிறேன் என்றால் அதன் பின் ஒளிந்திருப்பது உங்கள் தியாகங்கள் தான்…’


இதை நான் தொலைபேசி வழியாக ஒரு நிமிடத்தில் முடித்திருக்கலாம். ஆனால் திரும்ப திரும்ப படித்து மகிழும் தருணங்களையும், பொக்கிஷமாய் வைத்து பாதுகாக்கும் சந்தோஷத்தையும் இது மட்டுமே தருமென எனக்கு நன்றாகத் தெரியும்.

Wednesday, September 14, 2011

மாதத்தில் ஒரு முறையேனும்..

நாம் நமது குழந்தைகளைப் பார்த்து எவ்வளவு ஆனந்தம் அடைகிறோம். அதன் கொஞ்சு மொழியில், தளிர் நடையில் உலகை மறந்து சொர்க்கத்தில் திளைக்கிறோம். நமது உலகே நமது குழந்தைதான் என்று முற்றிலுமாய் மாறிப் போகிறோம். பிறந்தது முதல் இரவுகளில் தூங்க விடாமல், உணவு உண்ணாமல், குறும்புத்தனங்கள் செய்து நம்மை பாடாய் படுத்தும் நமது குழந்தையை வேண்டாம் என்று என்றேனும் தூக்கி எறிந்து விடுகிறோமா? கிடையாது. ஆனால் இது போல் அத்தனையும் பொறுத்துக் கொண்டு நம்மை சீராட்டி பாராட்டி வளர்த்த பெற்றவர்களை ஏன் மறந்து போகிறோம்?? வயதான காலங்களில் நமது அருகாமையை நேசிக்கும் அவர்களது உணர்வுகளை புரிந்த கொள்ள ஏன் மறுக்கிறோம்?

ஒரு முறை எனது அப்பா பற்றி எனது கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘முன்னலாம் இப்படி பேசவே மாட்டார். இப்ப விட மாட்டேனு இழுத்து வச்சு தேவை இல்லாத கதை எல்லாம் தொண தொணனு சொல்லிட்டு இருக்கார்’. எனது குற்றச்சாட்டுகளை பொறுமையாக கேட்ட என் கணவர் ‘வயசானவங்க அப்படிதாண்டா பேசுவாங்க. அவங்களுக்கு நாம எங்க அவங்க பேச்சக் கேக்காம போயிடுவோமோனு ஒரு பயம். மோர் தன் தட் அவங்களுக்கு நம்மகிட்ட பேசணும்னு ஒரு ஆசை. அவங்கள நாமதான் புரிஞ்சு நடந்துக்கணும். சின்ன வயசுல நீ உளறினத எல்லாம் அவங்க சந்தோஷமா பொறுமையா கேக்கல. உனக்கு ஏன் அந்த பொறுமை இல்லாமப் போச்சு. இனிமேல் அவர் எதாவது பேச ஆசைப்பட்டா கூட உக்காந்து கொஞ்ச நேரம் பேசிட்டு வா’ என்றார். அதன் பிறகுதான் நான் செய்து கொண்டிருந்த தவறுகளை உணர்ந்தேன். இப்பொழுதெல்லாம் அடிக்கடி ஃபோன் செய்து அவர்களுடன் நிறைய நேரம் பேசுகிறேன். எனது பெண்ணையும் பேச வைக்கிறேன்.

இந்த பதிவை எழுத தூண்டியது சென்ற வாரம் நான் சென்று வந்த ஒரு முதியோர் இல்லம். மக்கள் அனைவரும் படிக்கின்றனர். மற்றவரது உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றனர். உறவுகளை மதிக்கின்றனர். அதனால் முதியோர் இல்லங்கள் வெகுவாக குறைந்து விட்டன என்ற எனது கணிப்பை பெரிதும் தவறு என்றுணர்த்திய அந்த சில மணித்துளிகள். இதுவரை மூன்று தடவை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலை 4 மணி எப்பொழுது வருமென ஆவலுடன் காத்திருப்போம் என்று நான் பேசிய அனைத்து பாட்டிகளும் சொன்னார்கள். கேட்கும்பொழுது சந்தோஷம்தான் என்றாலும் அவர்களைப் பார்க்கையில் பாவமாக இருந்தது. உண்ணும் உணவிற்கு பிரச்சினையில்லை. உடுத்த துணிக்கு குறைவில்லை. ஆனால் மகன் மகள் பேரன் பேத்திகள் என்று கடைசி காலத்தைக் கழிக்க வேண்டிய இந்த வயதில் பேசத் துணை வேண்டி ஏங்கி இருக்கும் அவர்களைப் பார்க்கையில் வேதனையாகவே இருக்கும். நான் முதல் முறை சென்ற போது பேசிய ஒரு பாட்டியிடம் என் பெண்னைப் பற்றி சொன்னேன். அதன் பின் ஆறு மாதங்களில் இரண்டு முறை மட்டுமே செல்ல முடிந்த என்னிடம் அவர் ஞாபகமாய் என் குழந்தையைப் பற்றி விசாரித்தார். அங்கு சென்று வந்ததன் பலனாய் அதை மட்டுமே நினைக்கிறேன். வேறொருவர் நம்மைப் பற்றி அன்பாய் நினைப்பதை விட வேறென்ன வேண்டும்?

இன்னொரு பாட்டியின் கதையோ பெரும் சோகம். சொத்தை எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து விட்டு விட்டார்கள். வந்துப் பார்த்தால் கூடவே வீட்டுக்கு வந்து விடுவார் என்ற பயத்தில் யாரும் வந்து பார்ப்பதில்லை. பணத்தை மட்டும் அனுப்பி வைத்து விடுவார்களாம். அந்த பாட்டிக்கோ குடும்பத்தாரை பார்க்க வேண்டும் என்று ஆசை. சொல்லி சொல்லி புலம்பினார். அவர் வீட்டினரைப் பார்த்தால் நன்றாக கேட்க வேண்டும் போல் இருந்தது. என்ன செய்ய முடியும் நம்மால்?? :((

வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி செய்தால் அந்த புண்ணியம் எனது பெற்றோர்களுக்குப் போய் சேரும் என்பது என் எண்ணம். அடிக்கடி செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனது குழந்தை கொஞ்சம் பெரியவளானதும் அழைத்து செல்ல வேண்டுமென எண்ணியிருக்கிறேன்.

பணத்தால் மட்டுமின்றி மனதால் நாம் உதவிக்கரம் நீட்ட எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. மனம் வையுங்கள். உங்களால் முடிந்த பொழுது உங்கள் நேரத்தை தானமளியுங்கள். அவர்கள் இழந்துக் கொண்டிருக்கும் இந்த சின்ன சின்ன சந்தோஷங்களை திரும்ப பெற அவர்களுக்கு உதவிடுங்கள். மாதம் ஒரு நாள் இரண்டு மணி நேரம் என்பது நமக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் அந்த நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் அந்த உள்ளங்களுக்கு அது மிகவும் பெரிய விஷயம்.


For more info, Please visit www.teameverestindia.org 
                                                              www.everestserveindia.org                                              
                                                                                12/365:
                                                            
Volunteer at least once a month!

Monday, April 11, 2011

பாட்டி வடை சுட்ட கதை!

நேத்து நைட்டு என் பொண்ணுக்கு கதை சொல்லலாம்னு நினைச்சு நம்ம ட்ரெடிசனல் ஸ்டோரி பாட்டி வடை சுட்ட கதைல இருந்து ஆரம்பிக்கலாம்னு நினைச்சு ஆரம்பிச்சேன். இனி நடந்தது என்ன?? இதோ.. ஹி..ஹி..


‘செல்லக்குட்டி அம்மா உங்களுக்கு கதை சொல்லப் போறேன். சமத்தா கேக்கணும் சரியா’-னு நான் சொல்லவும் என் பொண்ணு பாவமா முழிச்சுக்கிட்டே என்னைப் பாத்தா. கதையக் கேக்காம எங்கேயும் ஓடிடக் கூடாதேனு மடில உக்கார வச்சு நல்லா பிடிச்சுக்கிட்டு கதை சொல்ல ஆரம்பிச்சேன்.

‘நம்ம J-பாட்டி(என் மாமியார்) இருக்காங்க இல்ல. நல்லா கமகமனு வாசமா மொருமொரு-னு டேஸ்ட்டா வடை சுட்டாங்களா’ -னு சொல்லிட்டிருந்த என் கண்ணுல பிரபு(என் கணவர்) பட்டார். உடனே கதைய இப்படி மாத்திட்டேன்.
‘அப்ப இந்த பிரபு காக்கா இருக்கு இல்ல தங்கம். அது வாசத்த மோப்பம் பிடிச்சு வேகமா பறந்து வந்து நம்ம பால்கனி கிரில் கேட்டுக்குள்ள நெம்பி நெம்பி உள்ள வந்துச்சாம். அப்போ பாத்து பப்புக் குட்டி ஏதோ சத்தம் போட உடனே J-பாட்டி பப்புக்கு என்னாச்சோனு உள்ள ஓடினாங்கலாம். அந்த சமயம் பாத்து இந்த பிரபு காக்கா சத்தம் போடாம ஒரு வடைய திருடிட்டு மறுபடியும் பால்கனி கிரில்-ல நெம்பி நெம்பி வெளில போய் நம்ம பக்கத்து வீட்டுல இருக்க மாமரத்து மேல உக்காந்துக்கிச்சாம். அப்போ அந்த பக்கமா J-அம்மா(நான் :)) வந்தாங்களாம். அவங்களுக்கு இந்த பிரபு காக்காவப் பாத்ததும் ஒரே கோபமா வந்துடுச்சாம். J-பாட்டிக்கு தெரியாம எப்படி இந்த வடைய திருடிட்டு வரலாம்-னு செம கோபமாம். அதனால அந்த காக்காட்ட இருந்து தந்திரமா வடைய வாங்கணும்னு நினைச்சு அதப் பாத்து பிரபு காக்கா பிரபு காக்கா! நீ ரொம்ப அழகா இருக்க.. ஒரு பாட்டு பாடே-னு J-அம்மா சொன்னாங்களாம். உடனே பிரபு காக்காக்கு பயங்கர சந்தோசமாயிடுச்சாம். அடடா! இந்த உலகத்துல நம்மளப் பாத்து யாருமே அழகா இருக்கே-னு சொன்னதில்லையே-னு பயங்கர குஷியாகி கா கா-னு கத்துச்சாம். அப்ப அது வாய்ல இருந்த வடை கீழ விழுந்துடுச்சாம். அத J-அம்மா எடுத்துட்டு போயி டஸ்ட் பின்ல போட்டுட்டாங்களாம். இதுல மாரல் ஆஃப் த ஸ்டோரி என்னன்னா..’-னு நான் சொல்றதுக்குள்ள அது வரைக்கும் பொறுமையா கதையக் கேட்டுட்டு இருந்த பிரபு வேக வேகமா

‘உங்கம்மாக்கு யார் சந்தோஷமா இருந்தாலும் பிடிக்காது. முக்கியமா உங்கப்பா சந்தோஷமா இருந்தா பிடிக்கவே பிடிக்காது’-ன்னாரேப் பாக்கலாம். அவர கிண்டல் பண்ண ட்ரை எனக்கு செம பல்பு.. ஹி.. ஹி.. நாம பாக்காத பல்பா?! கலர் கலரா வித விதமா எத்தனை பாத்திருப்போம்னு அப்படியே ஊதி தள்ளிட்டு என் கதைய கன்டினியூ பண்ண ஆரம்பிச்சேன் ;))))

Tuesday, March 15, 2011

நேஹா குட்டி கவிதைகள்!!

Mee Mee கருவறையில் பிறந்து
நாயுடு ஹாலின் நிழலில்
தவமாய் தவமிருந்த நான்
நேற்று என்னுள் இருந்து
தண்ணீரில் நீ தத்தி தத்தி
விளையாடிய பொழுதில் தான்
பிறவிப் பயனை அடைந்தேன்
                             இப்படிக்கு
         நேஹா பப்புவின் புதிய பாத்டப்

————–ooOoOOoOoo————–

கொடியில் காயும்
துணிகளின் நடுவே
என்னுடையதை மட்டும்
அடையாளம் கண்டு
அதைக் கூட கொஞ்சுகிறாய்!
உன்னைப் போல என்னைக்
கொஞ்ச இவ்வுலகில்
யாரால் தான் முடியும்?!

————–ooOoOOoOoo————–

Pappu version of ‘Baa baa black sheep’ Rhyme :)

Baa baa black sheep, have you any wool?
Yes sir, yes sir, three bags full!
One for the master, one for the dame,
And one for the little pappu who loves Mom
 

————–ooOoOOoOoo————–

உயிருள்ள கவிதை
உனக்கு முன்னால்
எனது எந்த கவிதை
அவ்வளவு அழகானதாகவோ
இல்லை சிறப்பானதாகவோ
இருந்து விடப் போகிறது?!

Thursday, February 24, 2011

முத்தம் சிந்தும் நேரம்!

அவசர அவசரமாய்
நீ பறக்க விட்டுச் செல்லும்
ஒற்றை முத்தத்திற்காக
இரு கன்னங்களும் சண்டையிட
வெற்றிப் பெருமிதத்தில்
புன்னகைக்கின்றன
திருட்டுத்தனமாய்
அபகரித்துக் கொண்ட இதழ்கள்!

:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x


அழகிய சங்கீதம் போல்
வண்டுகள் ரீங்காரமிடும்
ஒரு ரம்மியமான இரவில்
காமத்தின் நெடியினூடே
சுகந்தமாய் மணம்
பரப்பி செல்கிறது நீ
காதலுடன் நெற்றியில் தந்த
ஒற்றை முத்தம்!

:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x

முதல் முத்தம் பற்றிய பேச்சில்
உரிமைதான் என்றாலும்
ஏதோ தவறு செய்வது போல்
படபடத்த இதயம் தான்
நினைவில் உள்ளது என்று
முடிப்பதற்குள் முத்தமிட்டு
கிறங்கியிருக்கும் என்னை
தட்டி எழுப்பி சிரிக்கிறாய்
அந்த முதல் முத்ததின் தித்திப்பை
என் இதயக் கூட்டில்
பதுக்கி  வைத்திருப்பதை அறியாமல்...