'அய்யோ அவளை மாட்டி விட்டுட்டேனே! என்ன பண்ணப் போறாளோ'
'ச்சே... அவங்கப்பா வேற எதாவது ஃபோன்ல பிரச்சினைனு நினைச்சிருப்பாரு'
'ஒருவேளை அவர் அப்படி நினைக்காம வேற எதும் திங்க் பண்ணினார்னா...'
மனது இரண்டாய் பிரிந்து உட்கார்ந்து பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க அந்த ஏ.சி வால்வோ பஸ் பயணம் அவனுக்கு நெருப்பின் மேல் உட்கார்ந்திருப்பது போல் இருந்தது.
அடுத்த நாள் காலையில் ஆபிஸிற்கு கிளம்பி கொண்டிருந்தவன் மொபைல் பாட்டு பாட ஆவலாய் ஓடி சென்று எடுத்தான். ஊரிலிருந்து ஆனால் புதிய நம்பர்... யாராய் இருக்கும்? என்ற கேள்வியுடன் எடுத்து "ஹலோ" என்றான்.
"அண்ணா! நான் உமா பேசறேன்" என்றதும் ஒரு மெல்லிய பதட்டம் உடலில் பரவ
"என்னாச்சு உமா என்னாச்சு? எதாச்சும் பிரச்சினையா?" என்று கேட்டான்.
"அனு நைட் என்கிட்ட பேசினா. நேத்து அப்பாகிட்ட எதோ பேசிட்டிங்களாமே. அவருக்கு எதோ ரொம்ப சந்தேகம் வந்துடுச்சாம். அவ என்ன பண்றான்னு நோட் பண்ணிட்டே இருக்காராம். அவர் தூங்கினதுக்கப்புறம் தெரியாம எனக்கு ஃபோன் பண்ணினா. உங்ககிட்ட இதை சொல்ல சொன்னா" என்றாள்.
"சரி அவள எதும் கவலைப்படாம இருக்க சொல்லு"
"இல்ல அண்ணா. அவ ரொம்ப பயந்துட்டே இருக்கா. நெத்து நைட் ஒரே அழுகை. அந்த பையன் வீட்டுல வேற ரொம்ப ப்ரெஸ் பண்ணி கேக்கறாங்களாம். என்ன ஆகுமோன்னு தெரியலைனு சொல்லி அழுதுட்டே இருக்கா"
இதைக் கேட்டதும் அவன் கண்கள் அவனையும் அறியாமல் தளும்பியது.
"அவகிட்ட நான் இருக்கேன். தைரியமா இருன்னு சொல்ல சொன்னேனு சொல்லு. ரொம்ப தேங்ஸ் மா"
"ஓகே அண்ணா. எதாவது சொல்ல சொன்னா நான் மறுபடியும் ஃபோன் பண்றேன்" என்று ஃபோனை வைத்து விட்டாள்.
நான்கு நாட்கள் என்ன ஆயிற்று ஏது ஆயிற்று என்று தெரியாமலே நகர்ந்தன. அவனுக்கு வாழ்க்கையே இருண்டு போய் விட்டது போல தோன்றியது. சாப்பிடாமல், தூங்காமல், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் சகலத்தையும் தொலைத்தவன் போல திரிந்து கொண்டிருந்தான். வியாழக்கிழமை இரவு வீட்டிற்கு ஃபோன் செய்த போது அம்மாவிடம் பேச்சு வாக்கில் அனு வீட்டை இழுத்து வந்தான்.
"அந்த பொண்ண யாரோ கேட்டுகிட்டே இருக்காங்கன்னு சொன்னீங்களே என்னாச்சும்மா?"
"ஓ! அதுவா.... பாரு மறந்தே போயிட்டேன். அனு அப்பா இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருந்தார்டா. அப்பாகிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார். அந்த பையனுக்கு இப்போதைக்கு நிச்சயம் பண்ணிடலாம்னு யோசிச்சிட்டு இருக்காராம். அப்பாவுக்கு தெரிஞ்சவங்கன்றதால கொஞ்சம் இடம் எப்படினு விசாரிக்க சொல்லிட்டு போயிருக்காரு"
இதைக் கேட்டதும் அவனால் ஒன்றுமே பேச முடியவில்லை.
"சரிம்மா. நமக்கெதுக்கு அவங்க பிரச்சினை. நான் சாப்பிட போறேன். அப்புறம் பேசறேன்" என்று வைத்து விட்டு சென்று படுக்கையில் விழுந்தான். அவனது மொபைல் அடிப்பது கூட உணராமல் படுத்தேக் கிடந்தவன் திடீரென்று உணர்வு வந்தவனாய் வேகமாய் எடுத்து பேசினான்.
"தம்பி அப்பா பேசறேன்"
"சொல்லுங்கப்பா"
"சனிக்கிழமை எதாவது வேலை இருக்கா?"
"இல்ல"
"சரி நாளைக்கு கிளம்பி வீட்டுக்கு வா. உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்"
"என்ன வி... ஷ... ய...ம்???"
"கிளம்பி வான்னா வா. சரி வைக்கறேன்"
'எதுக்கு அப்பா வர சொல்றார். ஒருவேளை மாமா பேசினது நாந்தான்னு கண்டுபிடிச்சிருப்பாரோ?? அப்பாகிட்ட போட்டு குடுத்திருப்பாரோ???' பயத்தில் நாக்கு உலர்ந்தது.
'அப்பா கேட்டா என்னன்னு சொல்றது. அவர்ட்ட நேர்ல நின்னே பேச மாட்டேனே'
அடுத்த நாள் முழுவதும் இப்படியே யோசனையில் கழிந்தது. அடுத்த நாள் இரவு ஊருக்கு பயணமானான். அடுத்த நாள் காலையில் அப்பா எழுவதற்கு முன் எழுந்து குளித்து கிளம்பி அவரது அழைப்பிற்காக காத்திருக்கலானான். கிளம்பி வந்தவர் அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.
"நம்ம நடேசன் மாமாவோட சின்ன பொண்ணு அனுவ தேரியுமா?"
"ஒரு ரெண்டு மூணு தடவை பாத்திருக்கேன்பா" பயத்தில் நா உலர்ந்தது.
"ஹ்ம்ம்ம். அந்த பொண்ணை நம்ம தங்கவேலு பையனுக்கு கேக்கறாங்களாம். அவங்க அப்பா வந்து அவங்களப் பத்தி விசாரிக்க சொன்னார்"
"சரிங்கப்பா" பயத்திலும் துக்கத்திலும் வார்த்தைகள் தடுமாறின. மனம் அனிச்சையாய் 'ஒருவேளை நம்மளைப் போயி விசாரிக்க சொல்லுறாரோ' என்று எண்ணியது.
"ரொம்ப நல்ல பொண்ணுப்பா. தங்கம். அப்படி பொண்ணு கிடைக்கறதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்" என்றவர் அமைதியாகி அவன் முகத்தை ஆராய்ந்தார். எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் அடுத்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்தான்.
"முன்னாடி இருந்தே எனக்கு ரொம்ப ஆசை. அனுவ உனக்கு கட்டி வச்சு நம்ம வீட்டு மருமகளாக்கிக்கணும்னு. நான் கேட்டா பதிலேதும் பேசாம சரின்னு சொல்லிடுவார். இருந்தாலும் உன் வாழ்க்கை. உன்னை கேக்காம நான் முடிவு பண்ணக் கூடாதுனு தான் நேத்து அவர்கிட்ட எதுவும் பேசலை. இனி உன் பதில்லதான் இருக்கு"
'ஆஹா! கரும்பு தின்ன கூலியா??!!! நம்ம பிரச்சினை இப்படி அல்வா சாப்பிடற மாதிரி முடியும்னு நினைக்கவே இல்லையே! கடவுளே!! ரொம்ப ரொம்ப நன்றி' மனம் குதியாட்டம் போட முகம் அதை வெளிக்காட்டாமல்
"உங்க இஷ்டம் எப்படியோ அப்படியே பண்ணுங்கப்பா. உங்க முடிவு எதுவாயிருந்தாலும் எனக்கு சம்மதம்" என்று நல்ல பிள்ளையாய் அவன் நடிக்கவும் அவர் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.
வேறென்னங்க? நிச்சயம் ஆகி இந்த ஜோடி கல்யாணத்துக்கு காத்துட்டு இருக்கு. அநேகமா அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருவாங்க. என்னடா இதுனு பாக்கறீங்களா?? இதுல வர நிகழ்ச்சிகள் என் கூட வேலை பார்க்கும் நண்பர் ஒருவரோடது. அவரை பாக்கும்போதெல்லாம் எனக்கு காதல் மேல ஒரு மரியாதையே வரும். அதனால இந்த தொடர் நாலும் அவரோட காதலுக்கு சமர்ப்பணம் :)))
--சுபம்...




