Sunday, October 4, 2009

புரிந்துக் கொள்ளத் தவறிய உறவுகள்!


"இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அவர் எனக்குப் போட்ட லெட்டர்ஸ்" வெட்கத்துடன் என்னிடம் நீட்டிய பிரியாவின் முகம் என் கண்முன்னே வந்துப் போனது. எவ்வளவு நெருக்கமாய் நினைத்திருந்தால் எந்த தயக்கமுமின்றி அக்கடிதங்களை என்னிடம் படிக்கக் கொடுத்திருப்பாள். எண்ணும்போதே கடகடவென கண்களில் கண்ணீர் வழிந்தது. அதை துடைக்கக் கூட திராணியின்றி அமர்ந்திருந்தேன்.

"அப்போ அவர் நிறைய கவிதை எல்லாம் எழுதி அனுப்புவார். படிக்கறப்போ ரொம்ப அருமையா கவிதை எழுதறார்னு எனக்கு அப்படியே பெருமையா இருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு பாட்டுக் கேட்டப்போதான் இவரு குட்டு தெரிஞ்சது. எப்பயோ வந்த பாட்டுல நடுல இருந்து லைன்ஸ் எடுத்து எழுதி அனுப்பியிருக்காரு. அண்ணன் தங்கச்சி எல்லாம் ஒரே மாதிரிதான" என்று வழக்கமாம் போல அவரது தங்கையாய் நான் எடுத்துக் கொண்ட உரிமையை வைத்து என்னையும் சேர்த்து கிண்டலடித்தாள். வழக்கமான நலம் விசாரிப்புகளுடனும் நீயின்றி போனால் உயிர் வாழ மாட்டேன் என்ற அந்த வயதிற்குரிய காதல் மொழிகளுடன் எழுதப் பட்டிருந்த கடிதத்தைப் படித்து விட்டு அவளது கிண்டலால் விளைந்த புன்னகையுடன் திருப்பிக் கொடுத்ததும் ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது.

மூன்று வீடுகளைக் கொண்ட காம்பவுண்டில் எங்கள் வீட்டருகே எட்டு மாதக் கைக்குழந்தையுடன் குடி வந்த அவளுக்கும் எனக்கும் ஒரே வயதென்பதாலோ என்னவோ என்னுடன் நெருங்கிப் பழகினாள். கல்லூரி விடுமுறையில் மட்டுமே வரும் நான் அவளுடனேயே இருப்பேன். எனதுக் கல்லூரிக் கதைகளையும் ஒன்று விடாமல் சொல்வேன். அவளுக்கு அத்தைப் பையனுடன் வந்த காதல் பற்றியும், பன்னிரெண்டாவது படிக்கும்போதே வேறு சில பிரச்சினைகளால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதையும், புகுந்த வீட்டுப் பிரச்சினைகளால் தனிக்குடித்தனம் வந்ததுப் பற்றியும் பகிர்ந்துக் கொள்ள அவளுக்கு நான் மட்டுமே உற்றத் தோழியாய் இருந்தேன் போலும். எவ்வளவு இருந்தும் என்ன ஆயிற்று?

உனக்கு எதாவது ஒன்று ஆகி விட்டால்... எனக்கு ஆயிரம் தோழிகள் கிடைக்கலாம். ஆனால் உன்னைப் போலொரு மனதிற்கு நெருக்கமான உறவின் இழப்பு என்றும் ஈடு செய்ய முடியாததுதானே. ஏனடி இப்படி செய்தாய்? உள்ளுக்குள் எரிமலையாய் வார்த்தைகள் வெளிவராமல் குமுறிக் கொண்டிருக்க கண்கள் கண்ணீரை மட்டும் நிறுத்தாமல் உற்பத்தி செய்துக் கொண்டிருந்தது. அனைவரையும் பார்த்து பயந்து அத்தை மடியில் நிம்மதியாய் இருப்பதாய் எண்ணி உறங்கும் சூர்யாவின் தலையை கைகள் அனிச்சையாய் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தன.

கம்ப்யூட்டர் வகுப்பில் இருந்தபோது ஃபோன் செய்து அருணுக்கும் பிரியாவிற்கும் ஏற்பட்ட பிரச்சினையால் அவள் மருந்துக் குடித்து மருத்துவமனையில் சேர்த்தப்பட்டிருப்பதாக அம்மா கூறியபோது கோபமாய் வந்தது. இதற்கு முன்பு நெருக்கமானவர் யாரேனும் மருந்துக் குடித்து மருத்துவமனையில் சென்று நாள் முழுதும் அழுதிருந்தால்தானே தெரியும். சாதரணமாய் ஏதோ செய்து விட்டாள். காப்பாற்றியிருப்பார்கள். போனதும் இரண்டு அறை விட்டு ஏனடி இப்படி செய்தாய் என்று கூற வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டல்லவா கிளம்பினேன். வழியெல்லாம் அருண் அண்ணாவின் மீது எக்கச்சக்க கோபம் வந்தது. போனதும் பார்த்து கண்டபடி திட்ட வேண்டும் என்றும் முடிவெடுத்துக் கொண்டு வந்தேன்.

ஆனால்... என் ஆருயிர் தோழி மூச்சு விடவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாளாம். கேட்டபோது நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. ICU-வின் கதவருகிலேயே கத்திக் கதறிக் கொண்டிருந்த அருணைப் பார்த்த போது எனது உயிரைப் பிசைவது போல இருந்தது. யாரைக் குற்றம் சொல்வது? அன்று இரவு குழந்தை அழுகிறான் என்று வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு வந்து விட்டேன். அழுதபடி தோளில் உறங்கிய அவனைப் பார்க்க பார்க்க அழுகைப் பொங்கியது. அம்மா இல்லாமல் வளர நேரிடுமோ என் செல்லமே! அடுத்த நாள் காலையிலேயே மருத்துவமனைக்கு ஓடிய எனக்கு நல்ல நேரம் போலும். உடல் நிலையில் இப்பொழுது சிறிது முன்னேற்றம் உள்ளது என்ற செய்திக் கிடைத்தது. நிம்மதியுடன் அம்மாவுடன் அருகிலிருந்த ஹோட்டலுக்கு சாப்பிடப் போனேன். அங்கே பிரியாவின் தங்கை...

"எங்கம்மாவுக்கு என்னையும் தங்கச்சியையும் விட தம்பியதான் ரொம்ப பிடிக்கும். அவனுக்குதான் எல்லாமே செய்வாங்க. அவனுக்கும் எங்க மேல பாசமே கிடையாது. நானாவது இப்போ நல்லா இருக்கேன். பாவம் தங்கச்சி" என்று அவள் வரும்போதெல்லாம் அவளுக்கு பிடித்ததை செய்து கொடுத்தவள் சாகக் கிடக்கிறாள். திருமணமாகி ஒரே வாரம் முடிந்த புதுப் பெண்ணாய் அலங்காரம் கலையாமல் வந்து அமைதியாய் அவள் கணவனின் அருகில் அமர்ந்திருந்த அவளது தங்கையைக் கண்டதும் எனக்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது. ச்சே! என்ன மனிதர்கள்... அவள் இப்படியெல்லாம் சொன்னதாலோ என்னவோ எனக்கும் பிடிக்காமல் போன அவள் தம்பியை நான் இதுவரை கவனிக்கவே இல்லை. சாப்பிட்டுத் திரும்பியதும் எனது கண்கள் தானாக அவனைத் தேடியது. அருணின் அருகில் அமர்ந்து கலங்கிய கண்களுடன் அவன். மனிதர்களை கணிக்கத் தெரியவில்லை அவளுக்கு. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் வெள்ளை உள்ளம் கொண்டவளுக்கா இந்த நிலைமை? கண்கள் மூடி அப்படியே அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அன்று ஓரளவு பரவாயில்லை என்ற தகவலே கிடைத்ததால் லேசான நிம்மதியுடன் வீட்டிற்குச் சென்றேன். இரண்டு நாட்களாய் சரியாய் உறங்காததாலும், தொடர்ந்த அழுகையாலும் அப்படியே உறங்கிப் போனேன். காலையில் வெகு நேரம் கழித்து எழுந்ததால் பதினொரு மணிப் போல் மருத்துவமனைக்குச் சென்றேன்.

உள்ளே நுழைந்ததும் அருண் அவசரமாய் என்னிடம் ஓடி வந்து ப்ளட் க்ரூப் என்ன என்றுக் கேட்டார். எனக்குத் தெரியாதே என்று நான் சொல்லவும் அவசரமாய் என்னை அழைத்துச் சென்று இரத்தப் பரிசோதனை நடக்குமிடத்தில் விட்டு பரிசோதனை செய்ய சொன்னார். என்னவாயிற்று என்று அருகிலிருந்தவரிடம் கேட்டபோது பிரியாவிற்கு உடனடியாய் ரத்தம் வேண்டுமாம். பல்ஸ் குறைந்து கொண்டே வருகிறது. ரத்தம் கிடைக்கவில்லையென்றால் காப்பாற்ற முடியாது என்று கையை விரித்து விட்டார்கள் என்று அவர் கூறியதில் தோன்றிய வலியில் நர்ஸ் கையில் ஊசியால் குத்தியது தெரியவில்லை. அவ ப்ளட் க்ரூப் என்ன என்று அவசரமாய் கேட்டேன். AB நெகட்டிவ் என்றார். கடவுளே! என்னுடையது AB நெகட்டிவாய் இருக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொண்டிருக்கும்போதே உங்களுடையது A1 பாசிட்டிவ் என்ற பதில் கிடைத்தது. என்ன ஆகுமோ என்ற பயம் உள்ளுக்குள் பரவ ICU-வின் முன்னால் வந்து அமர்ந்தேன். அதற்கு மேல் யாரும் மருத்துவமனையில் அழ வேண்டாம் என்று நினைத்தாளோ என்னவோ... என் தோழி முடிந்துப் போய் விட்டாள் என்ற செய்தி வந்தது. எங்கிருந்து அப்படியோர் அழுகை வந்ததென்றே தெரியவில்லை. அதுபோல் என் வாழ்வில் நான் கதறி அழுததேயில்லை. அருண் இருந்த பக்கம் நான் திரும்பவே இல்லை. திரும்பும் துணிவும் எனக்கு இல்லை. அனைவரும் சூர்யாவைப் பார்த்து அழவும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தபடி நின்றிருந்தவனை வாரியெடுத்து வெளியில் கொண்டு சென்றேன். அவளது உடலை வெளியே எடுத்துட் செல்கையில் அனைவரும் கதறியழ அவளது தங்கை மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் அமைதியாய் நின்றிருந்தாள். எனக்கோ உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது. சூர்யாவையும் அருணையும் அருணின் அம்மா அப்பா அழைத்துச் சென்று விட்டார்கள்.

அதன் பின் இரண்டு நாட்களாய் அழுதுக் கொண்டிருந்த என்னிடம் அவர்கள் வீட்டைக் காலி செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனது தாயார் சொன்னதும் ஓடிச் சென்றேன். அந்த வீட்டிற்குள் நுழையும் தைரியமில்லாமல் வெளியே நின்றிருந்தேன். வீட்டைக் காலி செய்து பூட்டி விட்டு அனைவரும் சென்றதும் அவளது தம்பி அந்தக் கதவைப் பிடித்தபடியே இமைக்காமல் உள்ளுக்குள் பார்த்துக் கொண்டிருந்தான். "சங்கர்" என்று அவனை அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பியவன் விழிகள் முழுவதும் நிரம்பியிருந்தது. துடைக்க துடைக்க வழியும் கண்களைத் துடைத்துக் கொண்டே வீட்டை திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே அவன் சென்றது இன்னும் என் கண்களுக்குள் இருக்கிறது.

பி.கு: இது கதை போல் இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. ஆனால் உண்மையாக இது எனது அனுபவம். எத்தனையோ ஜாலியான அனுபவங்கள் எழுதினேன். இது போல் ஒரு சோகமான தருணம் இது வரை என் வாழ்க்கையில் வந்ததே இல்லை. வெகு நாட்களாய் அவளை எண்ணி எண்ணி அழுது கொண்டேயிருந்த எனக்கு இப்பொழுது நினைத்தாலும் அழுகை வந்து விடுகிறது :((( தற்கொலையின் கோரமான விளைவுகளை கண்ணெதிரில் பார்த்ததிலும் நெருங்கிய தோழியின் மரணத்தை நேரில் கண்ட சோகத்திலும் விளைந்த பதிவு இது.