Tuesday, July 22, 2008

உன்னோடுதான் என் ஜீவன் - II

இரவு உணவு முடிந்து தனது அறைக்கு படியேறி வந்த கிரிஜாவின் மொபைல் சிணுங்கியது. வீட்டு எண்ணைக் கண்டதும் உற்சாகமானவள் அப்படியே பால்கனிக்கு சென்றுப் பேச ஆரம்பித்தாள்.

"சொல்லும்மா"

"என்னடா பண்ணிட்டு இருக்க?"

"இப்போதான் சாப்பிட்டு ரூமுக்குப் போயிட்டு இருந்தேன். சரி காலைலதான பேசினேன். அதுக்குள்ள என்ன மறுபடியும்? என்ன விஷயம்?"

"ஏன் காலைல பேசினா இப்போ உன்கிட்டப் பேசக் கூடாதா?"

"அப்படி இல்லம்மா... எப்போமே இப்படி பண்ணினதில்லையே. அதான் கேட்டேன். ஏதும் முக்கியமான விஷயமோனு.." என்று இழுத்தாள்.

"முக்கியமான விஷயம் தான். எங்களுக்கு இப்போ இருக்கற ஒரே கவலை உன்னைப் பத்திதான். அதை விட வேற என்ன முக்கியமான விஷயம் இருக்கப் போகுது?"

"ஆரம்பிச்சிட்டியாம்மா. எனக்குனு ஆண்டவன் ஒருத்தனை என் தலைல எழுதி வச்சிருப்பான். எப்பன்னும் எழுதி வச்சிருப்பான். அந்த டைம் வந்தா ஆட்டொமேட்டிக்கா எல்லாம் நடக்கும்"

"சரி சரி. இப்போ ஏன் கோபப்படுற? என் கஷ்டத்தை உன்கிட்ட சொல்லாம நான் யார்கிட்ட சொல்லுவேன்" -தாயின் குரலில் தொய்வைக் காணவும் மனம் குழைந்தவள்

"சரி சொல்லுங்கம்மா என்ன விஷயம்?" என்று கேட்டாள்.

"நானும் அப்பாவும் ஒரு பையனை டிசைட் பண்ணி வச்சிருக்கோம்"

எப்பொழுதும் ஒரு பையன் ஜாதகம் பொருந்தி வருகிறது. குடும்பம் நன்றாயிருக்கிறது என்றே சொல்லும் அம்மா இன்று முடிவு செய்து வைத்திருக்கிறோம் என்று சொன்னதிலேயே அவரின் மனநிலையை அவளால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

"ம்ம்ம்"

"அப்பாவோட ஸ்கூல்ல இருந்து ஒண்ணா படிச்சவர் மனோகர்னு அடிக்கடி சொல்லுவாரில்ல. அவரோட பையன் கார்த்திக்தான். பையனும் பெங்களூர்லதான் இருக்காப்படியாம். டி.சி.எஸ்ல வேலை. காலேஜ் எல்லாம் நீ பாப்பனு தெரிஞ்சுதான் எல்லாமே விசாரிச்சு வச்சுட்டேன். கோயம்பத்தூர் பி.எஸ்.ஜி காலேஜ்-ல மெரிட் சீட்ல பி.இ படிச்சிட்டு முடிச்ச உடனே கேம்பஸ்-ல வேலைக்கு போயாச்சாம். ஒரே ஒரு தம்பி. சென்னைல விப்ரோ-ல வேலைல இருக்காப்படியாம். ஜாதகம் பாத்தாச்சு. சூப்பரா பொருந்தி வந்துடுச்சு. அவங்களுக்கு டபுள் ஓகே. சிவநேசன் பொண்ணுன்னா கண்ணை மூடிக்கிட்டு ஓகே சொல்லிடுவேனே-னு மனோ அங்கிள் சொல்லிட்டார். எங்களுக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு. இனி நீ பேசிட்டு ஓகே சொல்றது மட்டும் தான் பாக்கி"

அப்போ பேசிட்டு நான் ஓகேதான் சொல்லணும்னு அம்மா எதிர்பாக்கறாங்க என்று யோசித்தவளை

"என்னடா சத்தமே காணோம்?" என்ற குரல் கலைத்தது.

"இல்லம்மா. நான் பேசணும். பேசிப் பாத்துட்டுதான் எதுவா இருந்தாலும் சொல்லுவேன். நான் ஓகேதான் சொல்வேன்னு ரொம்ப ஹோப் வச்சுக்காதீங்க"

"ரொம்ப நல்ல பையன். பையனைப் பத்தியும் நல்லா விசாரிச்சிட்டோம். சோ உனக்கு கண்டிப்பா பிடிக்கும்னு எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் உன் முடிவுல நான் தலையிடலை. கார்த்திக்கு இந்நேரம் உன் நம்பர் குடுத்திருப்பாங்க. கால் பண்ணுவார். பேசு. கார்த்திக் நம்பரையும் நான் மெசேஜ் பண்ணிடறேன் சரியா?"

"ஹ்ம்ம்ம்.... சரிம்மா" - சுரத்தில்லாமல் தொடர்பைத் துண்டித்து விட்டு அங்கேயே நின்றிருந்தாள்.

'நான் சொன்ன எல்லா கண்டிஷன்ஸ்ம் சேட்டிஸ்ஃபை பண்றானே. எப்படி வேணாம்னு சொல்றது. பேசிப் பாப்போம். அட்லீஸ்ட் ஒரு காரணமாவது கிடைக்காமலா போயிடும். ஆனா அம்மாதான் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க. சோ அவனையே வேணாம்னு சொல்ல வச்சிடணும்' என்று எண்ணியவள் மனது திடீரென்று குண்டைத் தூக்கிப் போட்டது 'எவ்வளவு நாள்தான் இப்படியே ஏமாத்தறது? இப்படியே லேட் பண்ணிட்டேப் போனா கடைசில எவனாச்சும் சிக்கினா போதும்னு அவன் தலைலக் கட்டிட்டாங்கன்னா??' யோசித்துக் கொண்டிருக்கும்போதே மொபைல் மறுபடியும் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தவள் புதிய நம்பரைக் கண்டதும் ஒருவேளை அந்த கார்த்திக்காய் இருக்குமோ என்றெண்ணியபடி எடுத்து "ஹலோ" என்றாள்.

"ஹலோ மேடம்! வி ஆர் காலிங் ஃப்ரம் ஐசிஐசிஐ பேங்க். திஸ் இஸ் ரிகார்டிங் லைஃப்டைம் ஃப்ரீ க்ரெடிட் கார்ட்..." என்று அவன் பேசிக் கொண்டே செல்ல எரிச்சலுற்றவள்

"ஐம் நாட் இன்ட்ரெஸ்டெட். குட் யு ப்ளீஸ் ரிமூவ் மை நேம் ஃப்ரம் யுவர் டேட்டாபேஸ்" என்று முடிப்பதற்குள் எதிர்முனையில் இருந்தவன் கடகடவென சிரித்தான்.

"என்ன மேடம்? உங்களுக்கு யார் இந்த நேரத்துக்கு ஐசிஐசிஐ-ல இருந்து கால் பண்றாங்க?" என்று அவன் கேட்கவும்தான் அவளுக்கு யாரோ தன்னிடம் விளையாடுகிறார்கள் என்ற உண்மை உரைத்தது. உடன் பொங்கிய கோபத்தை வெளிக்காட்டாமல்

"ஹலோ! யார் பேசறீங்க?" என்றாள் வேகமாக.

"நான் கார்த்திக் பேசறேங்க. சாரி. சும்மா விளையாட்டுக்குதான் பேசினேன். தப்பா எடுத்துக்காதீங்க"- அவனது சாரியில் சற்றே கோபம் தணிந்தவள் இவனை எப்படி வேண்டாமென்று சொல்ல வைப்பது என்ற யோசனையில் அமைதியாகவே இருந்தாள்.

"அதான் சாரி சொல்லிட்டேன் இல்ல. இன்னும் ஏன் பேச மாட்டென்றீங்க?"

"இல்ல இல்ல... சொல்லுங்க"

"இன்ஃபோசிஸ்லதானே இருக்கீங்க?"

"ம்ம்ம்"

"எலக்ட்ரானிக் சிட்டி ஆபிஸா?"

"ஹ்ம்ம்ம்"

"நானும் எலக்ட்ரானிக் சிட்டி ஆபிஸ்லதான் இருக்கேன்"

மீட் பண்ணலாம் என்று கேட்பானோ? - கிரி

மீட் பண்ணனும்னு கேப்பேனு எதிர்பார்ப்பாளோ? - கார்த்திக்

"திருச்செங்கோடு வந்திருக்கீங்களா?"

"அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி வருவேன். அப்போ வரதுதான்"

"ஓ! ஓகே! அப்புறம் வேறென்னங்க?"

"அப்புறம் நீங்கதான் சொல்லணும்"

"நான் சொல்றதுக்கும் ஒண்ணுமில்லைங்க"

நான் எதாவது பேசணும்னு எதிர்பாக்கறானோ. இவன்ட்ட போய் என்ன பேசறது? - கிரி

ஏன் எதுமே பேச மாட்டேன்றா. ஷை-யா ஃபீல் பண்றாளோ - கார்த்திக்

"அப்புறம்?" என்றாள் சில நொடிகள் கழித்து.

"அப்புறம் நீங்கதான் சொல்லணும்"

"நான் என்னங்க சொல்லட்டும்? சொல்றதுக்கு ஒண்ணுமில்ல"

"எனக்கும் சொல்றதுக்கும் ஒண்ணுமில்ல"

இப்ப ஏன் இவன் பேச மாட்டேன்றான். ஷை-யா ஃபீல் பண்றானோ? என்னாலயும் எதும் பேச முடியலையே. இதுக்கு முன்னாடி இப்படி யார்ட்டயும் பெசினதில்ல. ஒரு மாதிரி டிஃபரண்ட் ஃபீலா இருக்கே. ஒருவேளை நாமளும் ஷை-யா ஃபீல் பண்றோமா?!!! !~#$%^&*& - கிரி

என்னது இது வாய் மூடாம பேசிட்டே இருப்பேன். பேசறதுக்கு ஒண்ணும் தோண மாட்டேங்குதே. அதை விட வார்த்தை வர மாட்டேங்குதேனே சொல்லலாம். என்ன பண்றது இப்போ?? - கார்த்திக்

"அப்புறம்"- மீண்டும் கிரி ஆரம்பிக்க அட மறுபடியும் அப்புறம் புராணமா என்று உள்ளுக்குள் சலித்தவன் ஒரு முடிவாய்

"இங்க பாருங்க கிரி. இப்படி பேசினா அப்புறம் அப்புறம் தவிர வேற எதையும் பேச மாட்டோம்னு நினைக்கறே. சோ லெட் அஸ் ஃபர்கெட் திஸ் ப்ரோபோஸல் அண்ட் லெட் அஸ் டாக் அஸ் ஃப்ரெண்ட்ஸ்" என்று படபடவென சொல்லி முடித்தான். அவன் சொன்னதும் அவளுக்கு சரியென்றுப் பட்டது.

"சரி. சொல்லுங்க" என்றாள்.

"நான் ரொம்ப ஜாலி டைப்புங்க. அதது அந்தந்த நேரத்துல தான் செய்யணும்ன்றது என் கொள்கை. எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ஜாஸ்தி. நான் இருக்கற இடம் கலகலனு இருக்கணும்னு விரும்புவேன். அதே டைம் அடுத்தவங்களையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ இப்படிதான் இருக்கணும்னு யாரையும் கம்பெல் பண்ணவும் மாட்டேன். என்னைப் பொறுத்த வரைக்கும் என் எதிர்காலம் எந்த பிரச்சினையும் இல்லாம ஸ்மூத்தா போகணும். தட்ஸ் ஆல்"

"ஹ்ம்ம்ம்... நான் ஜாலி டைப் எல்லாம் இல்ல. ஆனா என் ஃப்ரெண்ட்ஸோட பேரண்ட்ஸோட மட்டும் ஜாலியா இருக்கணும்னு நினைப்பேன். எனக்கு என் கெரியர் தான் ரொம்ப முக்கியம். லைஃப்ல நிறைய அச்சீவ் பண்ணனும். சும்மா பொறந்தோம் வளந்தோம் செத்துப் போனோம்னு ஒரு சராசரியா இல்லாம செய்யற வேலைல நம்ம பேரை பதிய விடணும்ன்றது என் கொள்கை. இதை தவிர எனக்கும் பெருசா எந்த கொள்கையும் இல்ல. என்னைப் பத்தி அவ்ளோதான்"

"ஹ்ம்ம்ம்... எனக்கு வரவங்ககிட்டயும் ரொம்ப எதிர்பார்ப்புகள் இல்ல. என் மேல ரொம்ப பாசமா இருந்தா போதும். என் ஃபேமிலியோட நல்லா மிங்கிள் ஆகணும். அவ்ளோதான்"

"எனக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கு. என் ஃப்ரீடம்ல தலையிடக் கூடாது. என் வேலை விஷயத்துலயும் தலையிடக் கூடாது. என் ஃபேமிலியோட நல்லா மிங்கிள் ஆகணும்"

"உங்களோட நல்ல ஃப்ரெண்டா இருக்கணும் ரைட்?"

"யெஸ்"

"ஹ்ம்ம்ம்... ஒருவேளை நமக்கு ஃபிக்ஸ் ஆச்சுனா நான் உங்களுக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டா இருப்பேன். ஓகேவா?"

எதிர்பாராத அவனது இந்த பதிலில் சற்றே விழித்தவள் என்ன சொல்வதென்று அறியாது

"ஹ்ம்ம்ம்ம்" என்றாள்.

"நீங்க எப்போ அடுத்து ஊருக்குப் போறீங்க?"

"நெக்ஸ்ட் வீக் எண்ட்"

"அப்போ அர்த்தநாரீஸ்வரர் கோவில் வருவீங்களா?"

"ஆமாம். ஏன்?"

"இல்லைங்க. நான் ஃபர்ஸ்ட் பாக்கப் போற பொண்ணு நீங்கதான். ஒரு வேளை நீங்களே கூட எனக்கு முடிவாகலாம். என்னவோ தெரியலை. எனக்கு ரொம்ப பிடிச்ச கோவில் உங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. சோ நான் உங்களை மொதல்ல அங்க வச்சுதான் மீட் பண்ணனும்னு இருக்கேன். அதான் எப்போ வரீங்கனு கேட்டேன்"

பரவாயில்லையே. இந்த நேரத்துக்கு வா-ன்னு சொல்லாம நான் போற நேரத்துக்கு வரேனு சொல்றானே! - கிரி

ஏன் இவ்ளோ யோசிக்கறா? ஓகே சொல்லுவாளா? - கார்த்திக்

சில நொடிகள் கழித்து "சரி" என்றாள்.

"சரிங்க. நேரமாச்சு. போய் தூங்குங்க. நாளைக்கு கால் பண்றேன்" என்றவனிடம் வேண்டாமென்று வாய் வரை வந்தாலும் சரியென்றே சொன்னாள்.

'அடுத்தவங்களையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ இப்படிதான் இருக்கணும்னு யாரையும் கம்பெல் பண்ணவும் மாட்டேன்' என்ற கார்த்திக்கின் வார்த்தைகளே காதில் ஒலித்துக் கொண்டிருக்க அட என்ன இது தூங்காமல் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தன்னையே கடிந்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

'லைஃப்ல நிறைய அச்சீவ் பண்ணனும். சும்மா பொறந்தோம் வளந்தோம் செத்துப் போனோம்னு ஒரு சராசரியா இல்லாம செய்யற வேலைல நம்ம பேரை பதிய விடணும்ன்றது என் கொள்கை' என்ற கிரியின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டிருந்தவன் ரொம்ப பொறுப்பான பொண்ணு போல. வீட்டுல ஒருத்தராவது பொறுப்பா இருக்கணுமில்ல. பாப்போம். என்ன ஆகுதுனு என்றெண்ணியபடியே தூங்க ஆரம்பித்தான்.

தொடரும்...

Thursday, July 17, 2008

உன்னோடுதான் என் ஜீவன் - 1

உங்களுக்கு இன்னைக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ். புதுசா ரெண்டுப் பேரை அறிமுகம் பண்ணி வைக்கப் போறேன். அட அவங்க என் கூட இங்க இல்லைங்க. வாங்க... இப்ப நேரா இன்ஃபோசிஸ் கேம்பஸ்ல மூணாவது பில்டிங் போறோம். ஹ்ம்ம்ம்... ஒரு வழியா வந்துட்டோம். அவசரப்படாதீங்க. க்ரவுண்ட் ப்ளோர்லயே உள்ள நேராப் போய் அந்த டெட் எண்ட்ல அப்டியே ரைட்ல திரும்புங்க. செகண்ட் க்யூபிக்கிள்ல கைல ஏதோ கொஞ்சம் பேப்பர்ஸ் வச்சு அதுல எதோ படிச்சிட்டு இருக்காளே அவளைதான் இப்போ பாக்க வந்தோம். இனிமேல் நான் எதுக்கு? அவளேப் பேசுவா கேளுங்க.

"ஹாய்! நான் கிரிஜா. இன்ஃபோசிஸ்ல தான் வேலை செய்யறேன். அடுத்த அப்ரைசல்ல ப்ரோமோஷன் எதிர்பார்த்துட்டு இருக்கேன். என்னடா ஜாயின் பண்ணி மூணு வருஷத்துலயே ப்ரொமோஷன் கேக்கறேனு பாக்கறீங்களா? பின்ன என்னங்க? காலைல எட்டு மணிக்கு ஆபிஸ் வந்தா நைட்டு எட்டு மணிக்குதான் வீட்டுக்கு கிளம்பறேன். இது வரைக்கும் நாலு அவார்ட்ஸ் வாங்கி இருக்கேன். எட்டு கஸ்டமர் அப்ரிசியேஷன் மெயில்ஸ் வச்சிருக்கேன். ஆபிஸ் வந்துட்டா நோ மெயில்ஸ்... நோ சாட்ஸ்... நோ லாங்க் ப்ரேக்ஸ்... இப்படி இருக்கும்போது இதைக் கூட எதிர்பார்க்கக் கூடாதா என்ன?

ஃபுல்லா ஆபிஸ்லயே இருந்தா வீட்டோட எப்படி டைம் ஸ்பெண்ட் பண்ணுவேனு பாக்கறீங்களா? எங்க வீடுதான் ஈரோடுல இருக்கே. நான் இங்க ஹாஸ்டல்லதான் இருக்கேன். எனக்கு இருக்கற ஒரே ஒரு ஃப்ரெண்ட் துர்காவும் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டா. லவ் மேரேஜ் தான் பண்ணிக்கிட்டா. வீட்டுல பர்மிஷன் குடுக்க மாட்டெனு சொன்ன அப்பா அம்மாட்ட ரெண்டு வருஷமா போராடி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்கிட்டா. அப்பப்பா... அப்போல்லாம் எப்போ பாத்தாலும் சோகமாவே இருப்பா. எனக்கு ஒரே கடுப்பா இருக்கும்.

அப்படி எதுக்கு இந்த கருமம் புடிச்சத செஞ்சு தொலைக்கணும்? சும்மா நம்மளையும் கஷ்டப்படுத்திக்கிட்டு நம்மள சுத்தி இருக்கவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு?? என் டீம்மேட் தீபி-தான் சொல்லுவா. கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணினா மட்டும் லவ் இல்ல. கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம லைஃப் பார்ட்னர் மேல வச்சிருக்கற அந்த பாசமும் லவ்தான்னு. ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த உலகமே மணி ட்ரிவன் தான். என்ன சொல்றீங்க? லவ் பண்ணும்போது காசு பணம் தெரியாது. கல்யாணத்துக்கப்புறம் அந்த பையன் ஒழுங்கா சம்பாரிச்சுப் போடாம இவள லவ் பண்ணிட்டே இருந்தா மட்டும் போதுமா? அப்போ அவங்களுக்குள்ள அந்த காதல் எத்தனை நாளுக்கு இருக்கும்? சோ லவ்ன்றது எல்லாம் சுத்த பேத்தல். சரி அரேஞ்சுடு மேரேஜே எடுத்துக்கங்க. பொண்ணு வீட்டுல பையன் நல்லா சம்பாரிக்கிறானா நம்ம பொண்ணை கஷ்டப்படாம காப்பத்துவானான்னுதான் முக்கியமா பாக்கறாங்க. பையன் வீட்டுலயும் பொண்ணு வேலைக்கு போகுதா இல்ல வீட்டுல நல்லா செய்வாங்களா இப்படி தான் எதிர்பாக்கறாங்க. இதுலயும் பணம்தான் மொதல்ல வருது.

இதனாலதான் இந்த காதல் கத்திரிக்கா கல்யாணம் இதிலெல்லாம் ரொம்ப வெறுப்பாயிடுச்சு. எங்க வீட்டுலயும் எனக்கு மாப்பிள்ளைப் பாக்கறேனு நச்சிக்கிட்டே இருந்தாங்க. இன்னும் கொஞ்சம் நாள் இன்னும் கொஞ்ச நாள்னு தள்ளிப் போட்டுட்டே வந்தேன். இப்போ எங்கம்மாவ சமாளிக்க முடியல. சரின்னு சொல்லிட்டேன். ஆனா அவங்க பாக்கற மாப்பிள்ளையெல்லாம் இந்த கம்பனிலயா வேணாம் இதுவா படிச்சிருக்கான் அப்போ வேணாம் இப்படி எதாச்சும் சாக்கு சொல்லி தப்பிச்சிட்டு இருக்கேன்.

நம்மளால எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்ணே பொன்னேனு ஒருத்தன் பேத்தறதையெல்லாம் கேட்டுக்கிட்டு குப்பைக் கொட்ட முடியாது. எனக்குனு லைப்ல எவ்வளவோ லட்சியங்கள் இருக்கு. சீக்கிரமா பி.ம், டி.எம்-னு ஆகி என் பேரை இங்க நிலைக்க வைக்கணும். ஹ்ம்ம்ம்... என்னதான் ஆகுதுனு பாப்போம்.

சரிங்க. என் மேனேஜரோட ஒரு மீட்டிங் இருக்கு. நான் கிளம்பறேன். பை"

என்னங்க? அவதான் போயிட்டாளே. இன்னும் ஏன் அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கீங்க? அப்படியே அந்த இன்ஃபோசிஸ் கேம்பஸ்ல இருந்து வெளியே வந்து அந்த மெயின் ரோடுலயே நேரா வாங்க. ஹ்ம்ம்ம்... ஸ்டாப் ஸ்டாப். இதோ நாலவது இருக்கற டி.சி.எஸ் கேம்பஸ்குள்ள அப்படியே உள்ள வாங்க. நேரா போயி ரைட் சைட் திரும்பினா இதோ கேன்டீன். அங்க ரவுண்டு கட்டி கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்கற கும்பல்ல பேல் யெல்லோ அண்ட் பேல் க்ரீன் ஸ்டரைப்ஸ் போட்ட சர்ட்-ல இருக்கானே அவன்தான் கார்த்திக். "ஹே கார்த்திக்! இங்க வா. உன்னைப் பாக்கதான் வந்திருக்காங்க". இதோ வந்துட்டான். இனிமேல் உங்களை பேச விட மாட்டான் பாருங்க.

"ஹை ஹை ஹை... நான் தான் கார்த்திக். டி.சி.எஸ்லதான் நாலு வருஷமா வேலை செய்யறேன். நான் பயங்கர ஜாலி டைப்புங்க. லைஃபோட ஒவ்வொரு நிமிஷத்தையும் அணு அணுவா ரசிச்சு வாழணும்ன்றது என் கொள்கை. காலைல ஷார்ப்பா ஒன்பது மணிக்கு ஆபிஸ்ல இருப்பேன். சாயந்திரம் ஷார்ப்பா ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன். என் ஃபேமிலி திருச்செங்கோடுல இருக்கு. இங்க ஃப்ரெண்ட்ஸோடதான் தங்கி இருக்கேன். எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ். சாயந்திரம் ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா வெளில சுத்தறது இல்லைனா வீட்டுல எதாவது பண்ணிட்டு இருப்போம். ப்ளாக் படிக்கறது, கதை புக்ஸ், டி.வினு நேரம் போறதே தெரியாது.

நமக்கிருக்கறது ஒரே ஒரு வாழ்க்கை. அதை ஜாலியா சந்தோஷமா வாழ்ந்துட்டு போகனுமில்லையா? அதான் எஞ்சாய் பண்ணிட்டு இருக்கேன். என்னக் கேட்டீங்க? கேர்ள் ஃப்ரெண்டா? நமக்கு அந்த குடுப்பினை எல்லாம் இல்லைங்க. எனக்கு அமைஞ்சிருக்குமா இல்லையானு தெரியலை. ஆனா நான் ட்ரை பண்ணலை. எங்கம்மாதான் எனக்கு உயிர். சின்ன வயசுல இருந்து இந்த ட்ரெஸ் போட்டா நல்லா இருக்கும் இந்த ஸ்கூல்ல படிச்சா நல்லா இருக்கும்னு பாத்து பாத்து செஞ்ச அம்மாவுக்கு தெரியாதா எந்தப் பொண்ணைக் கட்டிக்கிட்டா நான் நல்லா இருப்பேன்னு. அதான் அவங்க சாய்ஸ்ல விடணும்னு ஒரு தீர்மானமா இருக்கேன்.

எனக்கு வரப் போற வைஃபதான் லவ் பண்ணனும். அவள இப்படிப் பாத்துக்கணும் அப்படிப் பாத்துக்கணும்னு பலக் கனவுகள். ராணி மாதிரி உள்ளங்கைல வச்சு தாங்குவேன். எங்கே இருக்காளோ என் தேவதை. எனக்கு ஃபிக்ஸ் ஆனதும் பத்திரிக்கை கொடுக்கறேன். கண்டிப்பா வந்துடுங்க. சரி என் ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்றாங்க. இன்னொரு நாள் பாப்போம். பை"

சரிங்க நாம கிளம்புவோமா? அட! மறந்துப் போயிட்டேன் பாருங்க. இன்னும் நாம பாக்க வேண்டிய ஒருத்தர் இருக்காங்க. அவங்களைப் பாத்துட்டு கிளம்பலாம் சரியா? நேரா உங்க கம்ப்யூட்டர்ல போய் உக்காருங்க. ஒரு IE இல்லைனா Firefox ஓப்பன் பண்ணுங்க. அட்ரஸ்ல http://imsaiarasi.blogspot.com/ -னு டைப் பண்ணுங்க. லோட் ஆயிடுச்சா? இவங்கதாங்க நம்ம இம்சை அரசி. பேருல மட்டும் தாங்க இப்படி. நிஜத்துல ரொம்ப அமைதியான, அடக்க ஒடுக்கமான மொத்தத்துல பிளாட்டினமான பொண்ணு. இவங்க நிஜப் பேரு ஜெயந்தி. இவங்க உங்ககிட்ட எதோ சொல்லணும்னு சொன்னாங்க. வாங்க என்னன்னு கேப்போம்.

"ஹலோ! நான் இம்சை அரசி. சுமார் ஒரு ரெண்டு வருஷமா இந்த ப்ளாக் எழுதறத மெயின் வேலையாவும், சாஃப்ட்வேர் இஞ்சினியர் வேலைய பார்ட் டைம் வேலையாவும் செஞ்சுட்டு இருக்கேன். இப்போ என்ன பண்ணப் போறேனு சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன். ரெண்டு டோட்டல் ஆப்போசிட் கேரக்டர்ஸா இருக்கற கிரியும், கார்த்திக்கும் சேர்ந்தா என்னாகும்? அப்படி அவங்க சேரணும்னு அவங்க தலையெழுத்த எழுதி வச்சுட்டேன். என்னப் பண்ணப் போறாங்களோ தெரியலை. பொறுத்திருந்துப் பாப்போமே. ஓகேங்க. என் வீட்டுக்கார் கூப்பிடறார். இவங்க கதையப் பாத்துட்டு லாஸ்ட்ல மீட் பண்ணுவோம். cya"

_/\_ தொடரும் _/\_

Monday, July 14, 2008

திண்ணை

ரெண்டு பேரு க்ரூப் சாட் போட்டு நம்ம அரை மணி நேரத்த சாப்பிட்டுட்டு மெதுவா திண்ணையப் பத்தி எதாச்சும் எழுதுங்கோ அக்கா-ன்னு மெதுவா கேட்டாங்க. அவ்ளோ நேரமா பேசிட்டு இருந்ததுல சரி பாசக்கார பயபுள்ளக கேட்டுட்டாங்க. ஸ்ரீ-ன்னு ஒரு பொண்ணு வேற நம்மள tag பண்ணிட்டாங்க. என்ன ஆயிடப் போவுது எழுதிடலாம்னு உக்காந்து யோசிச்சப்போதான் அந்த ஒரு பகிங்கரமான உண்மை படார்னு என்னை அறைஞ்சது. ச்சே! எதுக்கு இந்த பில்ட் அப் இம்சை? ஒழுங்கா சொல்லு...

அட ஆமாங்க... நான் நாலாவது படிச்ச வரைக்கும் ஒரு வீட்டுல குடி இருந்தோம். அந்த வீட்டுல மட்டும்தான் திண்ணை இருந்துச்சு. அதுக்கப்புறம் நாங்க இருந்த எந்த வீட்டுலயும் திண்ணையே இல்ல. என்ன கொடுமை இம்சை இது??? இதை வச்சு எப்படி எழுதறது? இப்படியெல்லாம் மானிட்டரையே பாத்து முறைச்சுட்டே இருந்ததுல அந்த திண்ணைல நடந்த கதையெல்லாம் கொசுவத்தி சுத்திட்டு வந்துச்சு. ஹி... ஹி... நமக்கு தான் நம்ம LKG வயசுல நடந்தது கூட ஞாபகம் இருக்குமே. அப்புறம் எப்டி இது மட்டும் மறந்துப் போகும்?? சரி நம்ம திண்ணைக் கதைக்கு போவோம்.

ஒன்ஸ் அப்பான் எ டைம் லாங் லாங் அகோ நாங்க குடியிருந்த ஒரு வீட்டுல வாசலுக்கு ரெண்டுப் பக்கமும் திண்ணை இருந்துச்சு. ஒரு மாதிரி மெரூன் கலர்ல பெயிண்ட் பண்ணீயிருப்பாங்க. வாசலுக்கு வலதுப் பக்கம் இருக்க திண்ணை நீளமா இருக்கும். இடதுப் பக்கம் இருக்கறது கொஞ்சம் நீளம் கம்மியா இருக்கும். அந்த பெரிய திண்ணைக்கு எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும். காலைல எழுந்து ப்ரஷ் பண்ணினதும் அம்மா தர காபிய வாங்கிகிட்டு வேக வேகமா போவோம் பெரிய திண்ணையப் பிடிக்க. அதுலப் போய் உக்காந்து ஒரு வெற்றி சிரிப்போட பெருமையா காபிக் குடிப்பேன். பாவம் அவன் சின்ன பையன்றதால என்கிட்ட ரொம்ப தோத்துப் போவான்.

எங்க எதிர்த்த வீட்டுல எங்களை மாதிரியே ஒரு அண்ணன் தங்கச்சி இருந்தாங்க. மகேந்திரன், கோமதினு பேரு. கோமதி என் செட்டுப் பொண்ணு. எனக்கும்(என் தம்பி யார்ட்டயும் சண்டை போட மாட்டான்) அவங்க ரெண்டு பேருல யாருக்குமாச்சும் சண்டை வந்து டூ விட்டுக்கிட்டா அவங்க வந்து எங்க திண்ணைல உக்காரக் கூடாது. நாங்க ரெண்டுப் பேரும் அவங்க திண்ணைக்கு போக மாட்டோம். இது எங்க எழுதப்படாத சட்டம். பழம் விடறப்போ யார் போய் பழம் விடறாங்களோ அவங்க வீட்டுத் திண்ணைலதான் உக்காந்து விளையாடுவோம்.

எங்க திண்ணைக்கு அடில ஆத்து மணல் கொட்டி வச்சிருந்தாங்க. அதுல கோவில் கட்டி வீட்டுல இருந்த பிஸ்கட், நொறுக்குத் தீனி எல்லாம் வச்சு சாமிக்குப் படைச்சு விளையாடுவோம். திண்ணை மேல ஒரு பக்கட் தண்ணி வச்சு அது மேல போற கம்பில ஒரு கொட்டாங்குச்சி கட்டின கயிறு விட்டு தண்ணி சேந்தி விளையாடுவோம். அச்சாங்கல், பல்லாங்குழி-னு என் சின்ன வயசு விளையாட்டுக்கெல்லாம் அந்த திண்ணைதான் ப்ளே க்ரவுண்டு.

நான் மண்டிப் போட்டு ஸ்லேட்டுல அ, ஆ... A, B, C, D... எழுதக் கத்துக்கிட்டது எல்லாம் அந்த திண்ணைலதான். ட்ராயிங் கத்துக்க ஆரம்பிச்சப்ப, கோலம் போட ஆசைப்பட்டப்ப எல்லாம் மொதல்ல தேடி ஓடினது அந்த திண்ணையதான். அம்மா திட்டினப்போ, அப்பா சாப்பிட சொல்லி மிரட்டினப்போ தஞ்சம் புகுந்ததும் அந்த திண்ணைகிட்டதான். இப்படி என் ஃப்ரெண்ட் மாதிரி இருந்த திண்ணைய் பிரிஞ்சுப் போனப்போ அப்போ ஒண்ணும் தெரியலை. திரும்ப ஒரு தடவை அந்தப் பக்கம் கோமதியப் பாக்க போக நேர்ந்தப்போ பூட்டியிருந்த அந்த காலி வீட்டுத் திண்ணைலப் போயி கொஞ்ச நேரம் உக்காந்துட்டு வந்தேன். ஏன் அப்படி பண்ணீனேனு இன்னமும் தெரியலை. ஹ்ம்ம்ம்... அதுக்கப்புறம் திண்ணையோட நட்பு எனக்கு வாழ்க்கைல கிடைக்கவே இல்ல.

ஒரு தடவை எங்கம்மாகிட்ட கேட்டேன். "கோமதி வீட்டுல, சாந்தி அக்கா வீட்டுல, சந்திரா அக்கா வீட்டுல, ராஜா அண்ணா வீட்டுலனு எல்லார் வீட்டுலயும் திண்ணை இருக்கே. எதுக்கங்கம்மா வீட்டுக்கு திண்ணை வச்சுக் கட்டி இருக்காங்க?"-னு. அதுக்கு எங்கம்மா "அந்தக் காலத்துல இப்படி சைக்கிள், பைக், கார்னு எதுமே கிடையாது. எல்லாரும் நடந்துதான் போவாங்க. வழில கால் வலிச்சோ இல்ல வேற எதுக்காகவோ உக்காரணும்னு நினைச்சா இடம் வேணும் இல்லையா? அதுக்காகதான் வழிப் போக்கர்கள் உக்காந்து ரெஸ்ட் எடுத்துட்டுப் போறதுக்காக அப்படிக் கட்டினாங்க"-னு சொன்னாங்க.

இந்தக் காலத்துல கண்ணு முன்னாடியே உயிருக்குப் போரடினாக் கூட நமக்கென்னனு கண்டும் காணாமப் போறவங்க வழிப் போக்கர்கள் உக்காரட்டும்னா பாக்கப் போறாங்க? இப்போ திண்ணை வச்சுக் கட்டற பழக்கம் இல்லாமப் போனதுக்கு இதும் கூட ஒரு காரணமா இருக்கலாம். ஹ்ம்ம்ம்...

சரிங்க... கொசுவத்தி சுத்தி சுத்தி கண்ணுல அந்த திண்ணையேதான் தெரியுது. அடுத்த தடவை ஊருக்குப் போகும்போது கண்டிப்பா போய் ஒரு அஞ்சு நிமிஷமாவது உக்காந்திருந்துட்டு வரணும்னு நினைச்சுட்டு இருக்கேன். இப்போ என் முறையா???

இந்தப் பதிவு எழுத சொல்லி க்ரூப் சாட்ல சொன்ன, என்னோட எல்லாப் படைப்புகளையும் ரசிச்சு விமர்சனம் பண்ற, ப்ளாக் ஆரம்பிச்சு பேருக்கு நாலு போஸ்ட் போட்டுட்டு அதுக்கப்புறம் தலை வச்சுப் படுக்காமலே இருக்கும் என் அன்பு தங்கச்சி வைதேகி... திண்ணைப் பதிவு மூலமா ரீஎன்ட்ரி கொடுடா செல்லம் :)))

ரெண்டுப் பேர பண்ணனுமாம். இன்னொருத்தர் யாரைப் பண்றது??? அடடா... அமெரிக்கால உக்காந்துக்கிட்டு அமெரிக்க மாப்பிள்ளை கதை எழுதி திரிஞ்சுட்டு இருக்கற நம்ம ஜி-ய சும்மா விடலாமா? யப்பா பூட்சு போட்ட பூனையாரே. எழுதிடுங்க :)))

Wednesday, July 9, 2008

காதலெனப்படுவது யாதெனில்...

நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ இருக்காரே.... சும்மாவே இருக்க மாட்டாரு. எதாவது ஒரு சிக்கல்ல மாட்டிக்க வேண்டியது. அப்புறம் நான் நிம்மதியா இருக்கறது பிடிக்காம என்னையும் மாட்டி விட வேண்டியது. இப்ப "காதலெனப்படுவது யாதெனில்"-ன்ற தலைப்புல எதாச்சும் எழுதுங்கனு மாட்டி விட்டுட்டாரு. இவ்வளவு அழகான தலைப்ப வச்சு சோகமா எழுதுனதே பெரிய தப்பு. இதுல என்னை வேற மாட்டி விட்டு இன்னும் பெரிய தப்பு பண்ணிட்டாரு... ஹி... ஹி... நாமதான் எந்த தலைப்புக் கிடைச்சாலும் அதை கொலைப் பண்ணாம விட மாட்டோமில்ல... மேடம் இதை வச்சு ஒரு கவிதை எழுத ட்ரை பண்ணி இருக்காங்க... தேறுமானு சொல்லிட்டுப் போங்கப்பூ....

******************************************



காதலெனப்படுவது யாதெனில்...
இதற்கு மேல் தொடரத்
தெரியவில்லை
உன்னைக் காணும் முன்பு...

எத்தனையோ விளக்கங்கள்
எத்தனையோ செய்திகள்
முன்பு கேட்டிருந்தாலும்
ஒரு புரிதல் இல்லாமலே நான்...

சொல்லவொண்ணா சோகங்களில்
நில்லாமல் வழிந்த விழிநீரில்
மனம் கசிந்து என்னுடன்
உனதிருப்பை உணர்த்திய
உன் உள்ளங்கையின்
மௌன மொழியா காதல்?

சிறு பிள்ளையாய்
அடம் பிடிக்கும் சமயங்களில்
விளையாட்டாய் சண்டையிட்டு
முகம் சுருங்கும் என்னை
ஆதரவாய் இழுத்தணைக்கும்
அணைப்பின் சுகமா காதல்?

கிண்டல்களில் துளிர்க்கும்
கோபங்களை ரசித்து
விடைத்த மூக்கில்
குறும்பாய் நீ வைக்கும்
முத்தத்தின் ஈரப்பதமா காதல்?

எழவும் துணிவற்ற
நலமிழந்த தருணங்களில்
நொடியும் பிரியாமல்
அடைகாக்கும் கோழியாய்
எனை கவனித்த உன்
உள்ளத்தின் தாய்மையா காதல்?

தனித்திருக்கும் பொழுதுகளில்
இதமாய் அணைத்து
காதுமடலில் மெலிதாய்
சூடுப் பரப்பிச் செல்லும்
முத்தங்களின் ஸ்பரிசங்களா காதல்?

உனைப் பிரிகையில்
எனையும் அறியாமல்
துளிர்க்கும் நீரைக் கண்டு
கூடாதென்று எவருமறியாமல்
சொல்லும் உன் சைகையில்
பொதிந்த அரவணைப்பா காதல்?

என்னாயிற்று எனக்கு?
சுருங்க சொல்லாமல்
விவரித்துக் கொண்டிருக்கிறேனே!!
காதலெனப்படுவது யாதெனில்
அன்பே நீதான்.... நீ மட்டும்தான்....
******************************************

அப்பாடா.... ஒரு வழியா தலைல விழுந்த பொறுப்பை சரியாவோ மொக்கையாவோ செஞ்சாச்சு... இனி அடுத்தவங்க தலைல கட்ட வேண்டியதுதான். யார் தலைல கட்டலாம்??? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....................(யோசிக்கிறேன் ;))))

நம்ம அண்ணன் இருக்கும்போது வேற யாரைப் போயி tag பண்றது?? ஹி... ஹி... நம்ம வெண்பா வாத்தி, ஃப்ரொபஷனல் கொரியர், என் அருமை பாசமலர் அண்ணா ஜீவ்ஸை இதை தொடர அழைக்கிறேன்.....

ஸ்ஸ்ஸ்ஸ்..... அப்பா.... சோடா எங்க? சோடா எங்க?? ;)))

Thursday, July 3, 2008

என்னைப் பாத்து நாலுக் கேள்வியா?!!

என்னைப் பாத்து நாலுக் கேள்வியா?!!

நெஜமா நல்லவன்... நீங்க நிஜமாவே நல்லவரா? ஏன் என் மேல இந்த கொலைவெறி? இப்படியெல்லாம் எக்குத்தப்பா கேள்வி கேட்டா பச்சப்புள்ள நான் என்ன செய்வேன்??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............

இருந்தாலும் என்னைய மதிச்சு, என்னோட பதிவுகளை நியாபகம் வச்சு கேள்விக் கேட்ட உங்கப் பாசத்துல புல்லரிச்சுப் போயி இந்தப் பதிவ எழுதி இருக்கேன்.

நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...

*********************************************

1.உங்களது முதல் நாவல் அச்சுவடிவில் வெளிவந்த தருணம், முதல் பதிவு வெளிவந்த தருணம், விகடன் வரவேற்பறையில் வலைப்பூ அறிமுகம் கண்ட தருணம் இதில் எப்பொழுது நீங்கள் மிக மகிழ்வாக உணர்ந்தீர்கள்? எப்படிப்பட்ட உணர்வுகள் என்று விவரிக்க முடியுமா?

என் நாவல் வெளி வந்த தருணம் எப்படி இருந்ததுனு என்னோட "அழகென்ற சொல்லுக்கு" பதிவுல எழுதி இருந்தேன். எப்படின்னா "முதல் பிரசவம்... மனதளவில் உணர்ந்தேன் பிரசவ வலியை..."

நான் முதல் முதலா சாதம் வச்சப்போ பயங்கர சந்தோஷம். ஹை! நாமளும் சாதம் செய்யறோமேனு. சாதம் வைக்கறது வாழ்க்கைல தினசரி வேலைகள்ல ஒண்ணு. அதை கத்துக்கிட்டப்போ எவ்ளோ சந்தோஷம் இருக்குமோ அந்த சந்தோஷம் தான் என் முதல் பதிவு வெளி வந்த தருணம்.

விகடன்-ல என் வலைப்பூ வந்தப்போ சந்தோஷமா இருந்துச்சு. அட நாம கூட கொஞ்சம் உருப்படியா எழுதறோம் போலனு. அது பத்தாவதுல பாஸ் ஆன சந்தோஷம்.

இதுல எது ரொம்ப மகிழ்வான தருணம்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் :)))

2.என்னதான் பொண்ணுங்க மேக்கப் போட்டு போஸ் கொடுத்தாலும் மேக்கப்பே போடாம மாப்பிள்ளைங்க பெயரை அள்ளிக்கிட்டு போய்டுறாங்க. இதை பற்றி உங்களுக்கு நல்லாவே தெரியும். பொண்ணுங்களுக்கு மேக்கப் அவசியமா? அவசியமென்றால் எப்படி எந்த அளவிற்கு இருக்கலாம்?

\\  என்னதான் பொண்ணுங்க மேக்கப் போட்டு போஸ் கொடுத்தாலும் மேக்கப்பே போடாம மாப்பிள்ளைங்க பெயரை அள்ளிக்கிட்டு போய்டுறாங்க  \\

அப்படியா?!! எனக்கு தெரியவே தெரியாதே... ;)))

ஏனுங்க உங்களுக்கே இது நியாயமா இருக்கா? ஸ்மைல் பண்ணினதால எங்காத்துக்காரர் என்னை விட அழகா இருந்தார்னு எல்லாரும் சொன்னாங்கனுதான் சொன்னேன். ஸ்மைல் பண்ணாம இருந்திருந்தா அவரை விட நான் அழகா இருந்தேனு சொல்லி இருக்கலாம். நான் சொல்ல வந்தது என்னதான் மேக்-அப் பண்ணிக்கிட்டாலும் ஒரு ஸ்மைல் தர அழகுக்கு முன்னாடி அது ஒண்ணுமே இல்லனு. பொண்ணுதான் அழகு மாப்பிள்ளை தான் அழகுனு சொல்ல வரலை :)))

மேக்-அப் கண்டிப்பா அவசியம்தான். ஸ்மைல் தர அழகு மட்டுமே போதும்னாலும் சினிமா-ல ஸ்நேகா-வுக்கோ ரோஜாவுக்கோ மேக்-அப் போடாம ஸ்மைல் மட்டும் பண்ண விட்டிருந்தா அவங்க பெரிய ஹீரோயின் ஆயிருப்பாங்களா?

எங்கேயாவது வெளில போனிங்கனா உங்களோட ட்ரெஸ் மற்றும் லுக்கப் பாத்து தான் மரியாதை கிடைக்கும். பேங்க்ல கோடி கோடியா பணம் வச்சிருந்தாலும் எண்ணெய் வடிஞ்சு ஒரு சாதாரண ட்ரெஸ்-ல போய் பாருங்க அப்போ தெரியும் மேக்-அப்போட அவசியம் :)

அடுத்தவங்க கண்ணை உறுத்தாத அளவுக்கு இருக்கற வரைக்கும் மேக்-அப் ஓகே தான்...

3."வாழ்க்கை சர்க்கரையாய்
இனிக்க வேண்டும்
ஆனால்
சர்க்கரை நோயாய்
மாறி விடக் கூடாது"

இது நீங்கள் பத்தாவது படித்தபோது எழுதிய கவிதை. இப்பொழுது உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? பதில் ஒரு கவிதையாக கூட இருக்கலாம்.

அளவா சர்க்கரை கலந்த பால் மாதிரி இருக்கு. சுத்தமா... டேஸ்ட்டா... திகட்டாம... :)))

4.''நான் வாங்கின பையனுக்கு நான் எதுக்கு ஹெல்ப் பண்ணனும். சோ நோ பாத்திரம் கழுவிங், நோதுணி துவைச்சிங், நோ சமைச்சிங். அவன்தான் எல்லாமே செய்யணும்"

இது நீங்க திருமணத்திற்கு முன் உங்க பதிவுல சொன்ன கமெண்ட் தான். இப்போதைய நிலைமை என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?

நான் எதிர்பார்த்தது எனக்கு வரவர் எவ்வளவு குடுக்கறாங்கனு பாக்காம என்னைப் பாத்து கல்யாணம் பண்ணிக்கணும்னு. அதை மனசுல வச்சுதான் இந்த பதிவு எழுதினேன். இப்போ அதே மாதிரியே நடந்துடுச்சு. சோ நான்தான் காசுக் குடுத்து வாங்கலையே. அப்புறம் எப்படி செய்ய சொல்ல முடியும்???


*********************************************

இப்போ என் turn :)))

அகில உலக வ.வா.ச ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த, இருக்கும் முக்கால்வாசி க்ரூப் பளாக்கிலும் இணைந்திருந்தாலும் அதன் பக்கமே தலை வைத்துப் படுக்காத, ரஞ்சனி மகா என்ற இரண்டு கனவுப் பெண்களின் காதலன், புலி கவுஜ ஸ்பெஷலிஸ்ட், சின்னத்தல ராயல் ராமிடம் இதோ இந்த நான்கு கேள்விகளை முன் வைக்கிறேன்.

1. 'சின்னத்தல'-ன்னு பேரு வாங்கிட்டு வா.வ.சங்கம் பக்கம் எட்டிப் பாக்காமலே இருக்கீங்களே ஏன்?

2. ஒரு பெரிய ப்ரொபஷனல் கொரியர் ச்சே... ப்ரொபஷனல் போட்டோகிராபர் ஆயிட்டு வரதால இந்த கேள்வி. பின்நவீனத்துவமா புலிக் கவுஜ, எலிக் கவுஜனு எழுதற உங்களால பின்நவீனத்துவமா போட்டோ எடுப்பது எப்படினு சொல்ல முடியுமா? அதில் புனைவு ஃபோட்டோ கூட முடியுமா? அப்படியே புனைவு, பின்நவீனத்துவம்னா என்ன அது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னு மூத்தப் பதிவர் நீங்க சொன்னா எங்களை மாதிரி தெரியாத ஆளுங்க தெரிஞ்சுக்குவோம்.

3. காதல் பத்தி என்ன நினைக்கறீங்க? ரஞ்சனி மகாவுடனான பேச்சு வார்த்தை எந்த அளவில் இருக்கு?

4. வலையுலகுக்கு வந்தது மூலம் உங்களுக்கு கிடைச்சதா நினைக்கற விஷயங்கள் என்ன?

பதில் சொல்லுங்கண்ணாவ் :)))))))))

Wednesday, July 2, 2008

ரசிக்க மறந்த பாடல்களில் ஒன்று...

எனக்கு ஒரு பாட்டு பிடிக்கும்னா ஒண்ணு அதோட இசை நல்லா இருக்கணும். அப்புறம் முக்கியமா வரிகள் நல்லா இருக்கணும். இசை நல்லா இல்லைனா கூட வரிகள் நல்லா இருந்தா அது எனக்கு பிடிச்சப் பாட்டா ஆயிடும். ஆனா இந்தப் பாட்டுல ரெண்டுமே ரொம்ப நல்லா இருக்கும். அப்படியே ஒருப் பொண்ண நினைச்சு நினைச்சு உயிர் உருகப் பாடினா எப்படி இருக்குமோ அப்படி இருக்கற பாட்டு.

சிலப் பாட்டு மொக்கையா இருந்தாக் கூட படம் ஹிட் ஆச்சுனா ஓரளவு எல்லாருக்கும் தெரிஞ்சிடும். ஆனா மொக்கைப் படத்துல வர நல்ல பாட்டு கூட அந்த படம் காரணமா வெளில தெரியாமப் போயிடுது. அப்படிப் போன பாட்டுல இதும் ஒண்ணுனு நினைக்கறேன். எத்தனை பேரு இந்தப் பாட்டு பாத்திருப்பீங்கனு தெரியலை. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. படத்துல இல்லாத காதலிக்காக அஜித் உருகி உருகிப் பாடுவார். பாட்டுலதான் ஜோதிகா வருவாங்களேனு கேக்கப்பிடாது. அது ஜோதிகாவோட கனவு.

படம் பாத்தப்போ அஜித் பிரியங்கா திரிவேதியோட ஃப்ளாஷ்பேக் கதைக்காக நான் ரொம்ப ஃபீல் பண்ணினேன். நாம காதலிச்ச உயிர் பிரிஞ்சுப் போனாக் கூட உலகத்துல எங்கேயோ ஒரு மூலைல சந்தோஷமா இருந்தா சரினு விட்டுடலாம். ஆனா உலகத்த விட்டேப் போனா எவ்ளோப் பெரியக் கொடுமை. அதும் கண்ணு முன்னாடியேனா?? அதனால இந்தப் படத்துல அஜித் கேரக்டர பார்த்தா பாவமா இருந்துச்சு. ஆனா கடைசில அந்த பிரியா-வ விட்டுட்டேன் இந்த பிரியா-வ விட மாட்டேன்னு சொல்லி ஜோதிகாவா கூட்டிட்டுப் போனப்போ கடுப்பாயிடுச்சு. சரி யார் எப்படி போனா நமக்கென்னங்க? பாட்டு எப்படி இருக்குனு கொஞ்சம் சொல்லிட்டு போங்க... :))))


Get Your Own Hindi Songs Player at Music Plugin

நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு
நீ பேசினாய் என்னுள்ளே தென்றல் தொடும் உணர்வு
ஒரே முறை நீ கண் பாரடி
அதில் கண்டேன் நான் தாயின் மடி
காதல் என்று சொன்னாலே தியானமல்லவா
உன்னை எண்ணி நானும் தான் தியானம் செய்யவா

(நீ பார்க்கின்றாய்)

நீயும் நடந்தால் என்னைக் கடந்தால்
ஒரு பூங்காவே என் மீது மோதும் சுகம்
கண்ணை அசைத்தால் என்னை இசைத்தால்
ஒரு பனிப்பாறை என்னுள்ளே தோன்றும் கனம்
உன்னை சுற்றிடும் விண் கலமாகிறேன்
உந்தன் பார்வையில் நான் வளமாகிறேன்
நீ ஒற்றை ரோஜா தந்தால் அதில் உலகப் பூவின் வாசம்
நீ ஓரக் கண்ணில் பார்த்தால் சில லட்சம் மின்னல் வீசும்
அன்பே அன்பே நீ தரை வானவில்
உன்னைப் பாடும் நான் தவப் பூங்குயில்

(நீ பார்க்கின்றாய்)

உந்தன் விழிக்குள் என்னை அடைத்தால்
ஒரு அழகான சிறைச்சாலை இதுவல்லவா
உன்னைப் பிரிந்தால் எந்தன் விழிக்குள்
ஒரு முந்நூறு முள் வந்து நடமாடுதே
கொன்று விட்டதே உன் ஒரு பார்வையே
அன்பு செய்திடு என் அதிகாரியே
நீ பூமிப் பந்தில் வந்து நடமாடும் குட்டி சொர்க்கம்

நீ கல்லில் அல்ல பெண்ணே கனியாலே செய்த சிற்பம்
உந்தன் கண்கள் அது ஒரு அங்குலம்
ஆனால் அதில் என் உயிர் சங்கமம்

(நீ பார்க்கின்றாய்)

Tuesday, July 1, 2008

ஐயகோ! பாவம் செய்து விட்டேனே!!

உயிரைக் கொல்றது பாவமாங்க?? என் மனசு என்னவோ பாவம்தானு அடிச்சு சொல்லுது. ஆனா சில நேரங்கள்ல அந்த மனசு எங்கதான் ஓடி ஒளிஞ்சுக்குதுனே தெரியலை. ஹ்ம்ம்ம் :(((

நான் ஸ்கூல் படிக்கும்போது ஹிஸ்டரி புக்ல சமணத் துறவிகள் பத்திப் படிச்சிருக்கேன். அவங்க நடக்கும்போது நடக்கற பாதையை மயிலிறகால கூட்டிக்கிட்டே போவாங்களாம். அதுக்கு என்ன காரணம்னா அவங்க கால் பட்டு வழில இருக்கற எறும்பு, பூச்சி மாதிரி உயிரினங்கள் செத்துப் போயிடக்கூடாதுனு அப்டி பண்ணுவாங்களாம். அப்போ ச்சே! எவ்ளோ க்ரேட் அவங்க-னு தோணுச்சு. அப்போ நாமளும் எந்த உயிரையும் கொல்லக் கூடாதுனு முடிவுப் பண்ணினேன். என்னை எறும்பு கடிச்சாக் கூட அதைப் பிடிச்சு தூரப் போட ஆரம்பிச்சேன். இப்டிலாம் நல்லப் பொண்ணா மாறரதுக்கு பயங்கரமா ட்ரை பண்ணிட்டு இருந்தாலும் ஞாயித்துக் கிழமையானா அம்மா வைக்கற கோழிக் குழம்பு வாசம் கும்முனு வந்து அப்பாவிப் பொண்ணு என்னைய ஒரு உயிரைக் கொன்ன பாவியா மாத்திடும். ஹ்ம்ம்ம். நாமளா கொன்னோம்? இல்லையே.... செத்துப் போனத சாப்பிடறதால நம்மள பாவம் பிடிக்காதுனு சமாதானப்படுத்திக்குவேன்.

அப்போ நான் டியூஷன் படிச்ச சார் என்கிட்ட பயங்கரமா ஆர்க்யூ பண்ணுவார். ஒரு உயிரக் கொன்னு சாப்பிடறியே பாவமில்லையானு. ஹி... ஹி... நான் எங்க சார் கொன்னேன்? கடைல கொன்னு வச்சுடறாங்க. அது வேஸ்ட்டாப் போகக் கூடாதேன்ற ஒரு நல்ல எண்ணத்துலதான் நான் சாப்பிட்டுட்டு இருக்கேன். வேற எந்த ஒரு காரணமும் கிடையாதுனு சொல்லி சமாளிச்சேன். இப்படி சிக்கன் சாப்பிடறதுக்கு மட்டும் ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சேன். மத்தபடி உயிரை வதைக்கா கொள்கைய கடைபிடிச்சுட்டுதான் இருந்தேன். அப்போதான் என் கொள்கைக்கு இன்னொரு சோதனை வந்துச்சு.

என் இம்சை தாங்க முடியாம எங்கப்பா என்னைக் கொண்டுப் போயி ஹாஸ்டல்ல தள்ளிட்டார். ஹாஸ்டல் பொண்ணுங்கன்னாவே உங்களுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் என்ன ஞாபகத்துக்கு வருமோத் தெரியாது. எனக்கு டக்குனு இந்த பேன் தான் ஞாபகத்துக்கு வரும். அது நாள் வரைக்கும் நான் கஷ்டப்பட்டு சாப்பிட்டு சேர்த்து வச்ச நாலு சொட்டு ரத்தத்தையும் மனசாட்சியே இல்லாம அதும் என் தலைல இருந்துகிட்டே குடிச்சுதுன்னா அதுக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கும் பாருங்களேன். சரி ரெண்டாவது முறையா நம்ம கொள்கைய தளர்த்திக்குவோம்னு முடிவு பண்ணினேன்.

காலேஜ் முடிஞ்சு சென்னைல ப்ராஜக்ட்ன்ற பேருல குப்பை கொட்ட வந்தப்போ நாங்க நாலு பேரு சேர்ந்து வீடு எடுத்து தங்கி இருந்தோம். நாலு பேருல எனக்குதான் ஓரளவு சமையல் தெரியும். அதையே பயங்கரமா பிட்ட போட்டு போட்டு சீஃப் குக் ரேஞ்சுக்கு எனக்கு மரியாதை குடுக்க வச்சிட்டேன். ஒரு நாள் சிக்கன் ஆசை வந்து சரி நாமளே செய்வோம்னு ஒரு தைரியத்துல களத்துல இறங்கிட்டோம். நானும் என்னைப் போல வீரமுள்ள இன்னொருத்தியும் சிக்கன் வாங்கலாம்னு கடைக்கு கிளம்பினோம். அரைக் கிலோ சிக்கந்னு சொல்லிட்டு வெயிட் பண்ணிட்டிருந்தப்போதான் அந்த கொடூரமான காட்சியப் பாத்தேன். கோழியோட கழுத்த கீறி விட்டு பாதியா வெட்டி வச்சிருந்த குடத்துக்குள்ள விட்டுட்டாங்க. அது துடி துடினு துடிச்சு இறக்கைய படபடனு அடிச்சுட்டு இருந்துச்சு. அதைப் பாக்க பாக்க எனக்கு ஹார்ட் பீட்டு எகிறுது. என் கழுத்தை அறுத்து விட்ட மாதிரி ஒரு ஃபீலிங். அதோட இறக்கை அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சிவப்பு கலர்ல மாறி கொஞ்ச கொஞ்சமா அதோட துடிப்பு நின்னுடுச்சு. எனக்கு மனசே ஆறலை. ச்சே! இப்படியா ஒரு உயிரை துடிக்க துடிக்க கொன்னு அதை சாப்பிட்டு நம்ம உடம்ப வளக்கணும்னு ஒரே வருத்தம். எப்படியோ கயமுயானு போட்டு சிக்கன் செஞ்சுட்டோம். ஆனா சாப்பிடப் போனப்போ அந்தக் கோழி இறக்கைய அடிச்சுட்டு துடிச்சதே ஞாபகம் வந்து நான் சாப்பிடவே இல்ல. அதுக்கப்புறம் ரொம்ப நாளா சாப்பிடாமலே இருந்தேன். திருப்பி பெங்களூரு வந்ததுக்கப்புறம் ரொம்ப நாள் கழிச்சுதான் அதை மறந்துப் போனதாலோ என்னவோ சாப்பிட ஆரம்பிச்சேன். இப்படியா என் பாவ மூட்டை ஏறிட்டே போறப்போதான் அடுத்த ஒரு கொடுமை நடந்துச்சு.

பெங்களூருல எங்க ரூம் சூப்பரா இருக்கும். திங்க்ஸ் வச்ச இடம் போக மீதி இடம் படுக்கறதுக்கு மட்டும்தான் இருக்கும். இப்படியாப்பட்ட எங்க குட்டி வசந்த மாளிகைல நாங்க ராஜ்ஜியம் பண்ணிட்டிருந்தப்போதான் வில்லனாட்டம் வந்து சேந்துச்சுங்க இந்த கரப்பான் பூச்சிங்க. எனக்கு மொதல்ல எல்லாம் கொள்கை ஞாபகத்துக்கு வந்து அடிக்காம விட்டுடுவேன். கொஞ்ச நாள் போகப் போக அதுங்களோட அட்டூழியம் தாங்க முடியலை. காய், பழம் எல்லாம் கடிச்சு வச்சுட வேண்டியது. துணிங்களுக்குள்ளப் போயி சுகமா தூங்க வேண்டியது. இப்படியே நாசம் பண்ண ஆரம்பிச்சா விடுவோமா? எங்களோட வீரவாளை அட அதாங்க துடைப்பத்தை எடுத்துட்டுப் போருக்குப் புறப்பட்டோம். எதிரிங்களை கண்டுபிடிச்சு துரத்தி துரத்தி அடிச்சுக் கொன்னோம். வேற வழி? கொளகையாவது மண்ணாவது???

தலைல பேனும், வீட்டுல கரப்பான் பூச்சி, எலித் தொல்லையும் இருந்திருந்தா திருவள்ளுவரே ஏன்டா உயிரைக் கொல்வது பாவம்னு எழுதினோம்னு அவரோட 133 அடி சிலை உச்சில இருந்து டகால்னு கடலுக்குள்ள விழுந்து சூசைட் பண்ணிட்டிருந்திருப்பாரு.

என் வீட்டுக்கார் சுத்த சைவம். egg content இருக்கற சாக்லேட் கூட சாப்பிட மாட்டார். என்கிட்ட அடுத்த உயிரைக் கொன்னு சாப்பிடறதுனு சொல்லுவார். ஆனா நான் கண்டுக்கவே மாட்டேன். ஒரு நாள் ரெண்டு பேரும் அனிமல் ப்ளேனட் சேனல் பாத்துட்டு இருந்தோம். ஒரு சிலந்தி வலைல ஒரு தேள் மாட்டிக்கிச்சு. அந்த சிலந்தி அதைக் கொட்டிக் கொட்டி கொல்ல ஆரம்பிச்சது. என்னால பாக்க முடியல. அய்யோ அது உயிரோட இருக்கைலயே அதை அப்டி கொட்டி கொட்டி சாப்பிட ஆரம்பிச்சா அந்த தேளுக்கு எப்படி இருக்கும்னு சொல்லிக்கிட்டே கண்ணை இறுக்க மூடிக்கிட்டு சேனலை மாத்துங்கனு சொன்னேன். உடனே வேகமா என்கிட்டத் திரும்பி அப்போ கோழி உயிரோட இருக்கும்போதே அதோட கழுத்த அறுத்தா அதுக்கு எப்படி இருக்கும்னு கேட்டாரேப் பாக்கலாம். நான் எதுமே பேசாம நைசா எஸ் ஆகப் பாத்தேன். பதில சொல்லுனு சொல்லி அவர் சிரிக்கவும் எனக்கு சுறுசுறுனு ஏறுச்சு. இங்கப் பாருங்க. சிங்கம் புல்ல சாப்பிடாது. அது விலங்குகளை வேட்டையாடி சாப்பிடணும்ன்றதுதான் அதுக்கு எழுதி வச்சிருக்கு. அப்படி பாவம் பாத்து சாப்பிடாம விட்டா அது செத்துப் போயிடும். அதுக்காக சிங்கம் பாவம் செய்யுதுனு அர்த்தம் இல்ல. அதே மாதிரிதான் நாமளும் மாமிசப் பட்சிணிகள். சோ நாம சாப்பிடறது ஒண்ணும் தப்பில்ல அப்டி இப்டினு ஏதேதோ உளறி எஸ் ஆயிட்டேன்.

சைவமா மாறிடலாம்னு நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டு இருக்கேன். ஆனா முடிய மாட்டேன்றது. என்னதான் சொல்லுங்க. இந்த பெப்பர் சிக்கன நினைச்சாலே நாக்கு ஊறுது. என்னதான் சமாதானத்துக்கு காரணம் சொல்லிக்கிட்டாலும் மனசு இப்பொல்லாம் கஷ்டமா இருக்கு. கூடிய சீக்கிரம் வெஜிடெரியனா மாறிடுவேன்னு நம்பிட்டு இருக்கேன் :)))