Sunday, February 22, 2009

Slum Dog Millionaire - தமிழில் ரீமேக் செய்தால்?!!

நேத்துதான் Slum Dog Millionaire படம் பாத்தேன். ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. பல காட்சிகள் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் "Jab we met" தமிழ்ல எடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன். அதுல பரத், தமன்னா நடிக்கறாங்கன்னும் கேள்விப்பட்டேன். உடனே மனசுல தோணினது ஆண்டவா! அந்தப் படத்த என்னென்னக் கொலை செய்யப் போறாங்களோனு. இந்தப் படத்தப் பாத்ததும் இதே படம் தமிழ்ல ரீமேக் பண்ணினா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாத்தேன். ஓ மை காட்!!!

தமிழ்ல எடுத்தா அதுல என்னென்ன மாற்றங்கள் செய்வாங்கனு என் சிற்றறிவுக்கு எட்டினதை லிஸ்ட் அவுட் பண்ணிருக்கேன். உங்களுக்கு தோணறத எடுத்து விடுங்க மக்கா...

1. ஹீரோவை கான்ஸ்டபிள் அடிக்க கையை ஓங்கும்போது படாரென்று அவர் மூக்கில் ஒரு குத்து விட்டு நம்ம ஹீரோ ஒரு பஞ்ச் டயலாக் பேசுவார்(like சொல்லி அடிக்கறதுல இவன் கில்லி... சொல்லாம அடிக்கறதுல இவன் ஒரு பல்லி...:P)

2. உடனே ஹீரோவுக்கு ஒரு என்ட்ரி சாங்(பாக்கத்தான் இவன் ஸ்லம் டாக்... மனசால ஒரு பொமரேனியன் டாக்... கோவம் வந்தா ஒரு ஸ்ட்ரீட் டாக்... ரவுண்டு கட்டி அடிக்கறதுல டாபர் டாக்...)

3. ஃப்ளாஷ்பேக் சீன்ல ஹீரோவோட அம்மா செத்துப் போறப்போ தாய்க்குலங்க மனச டச் பண்ற மாதிரி ஒரு சென்டிப் பாட்டு. (like அம்மா அம்மா எந்தன் ஆருயிரே...)

4. ஹீரோ குப்பைக் குழியில எல்லாம் படுத்து உருளும்போது அந்த அம்மாப் பாட்டு அப்படியே கன்டினியூ ஆகணும்.

5. ஹீரோயின விட்டுப் பிரிஞ்சு இருக்கறப்போ அப்பப்போ கனவுல அவங்களோட டூயட் பாடுவாரு. இதுக்கு இந்த லண்டன், பாரிஸ், ஜெர்மனி இப்படி கன்ட்ரீஸ்லப் போயி சாங்க சூட் பண்ணிக்கலாம்(ahem... நாங்க வேணா உடுத்திக்க நல்லத் துணிக் கூட இல்லாத சேரிக் காதலர்களா இருக்கலாம். ஆனா டூயட்டுனு வந்துட்டா யூரோப், யூவெஸ் இப்படி ப்ளேஸ்லதான் டூயட் பாடுவோம்)

6. பிரிஞ்சுப் போனக் காதலிய தேடி மும்பை வர ஈரோ அவளக் கண்டுபிடிக்கறதுக்காக தெரு தெருவா அவங்க சின்ன வயசுல பாடிட்டு இருந்தப் பாட்ட பாடிக்கிட்டே போவாரு. அதைக் கேட்டு ஈரோயின் சிக்னல் குடுக்க அவங்களப் போய் காப்பாத்திக் கூட்டிட்டு வருவாரு.

7. கோடீஸ்வரன் நிகழ்ச்சிய நடத்தறவரு ரெஸ்ட் ரூம்ல தப்பான விடைய சொல்லித் தந்தும் நிகழ்ச்சில சரியான விடைய சொல்ற நம்ம ஹீரோ நிகழ்ச்சிய நடத்தறவருக்கு மட்டும் கேக்கற மாதிரி ஒரு பஞ்ச் டயலாக் சொல்லுவாரு.

8. படத்துல கண்டிப்பா ஒரு குத்துப்பாட்டும் அட்லீஸ்ட்டு ரெண்டு ஃபைட்டாவது இருக்கோணும். அதும் ஈரோ சும்மா ஒரு அஞ்சாறு குண்டு ஆளுங்கள ஒரே அடில சுழட்டி அடிச்சு எழுந்திருக்க முடியாதபடி விழ வைக்கணும்.

9. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹீரோகிட்ட அவர் சொன்ன பதில் சரியானு கேக்கும்போது ஹீரோ ஒரு பஞ்ச் டயலாக் விடனும்(ஒரு தடவ சொல்லிட்டா என் பதில நானே மாத்திக்க மாட்டேன்...)

10. கால் சென்டர்-ல ட்ரெயினிங் க்ளாஸ் எடுக்கற பொண்ணு ஒரு பையன்ட கேள்விக் கேட்டு அவன் தெரியாம முழிக்கும்போது அங்க டீ கொண்டு வர நம்ம ஹீரோகிட்ட பதில் சொல்ல சொல்லிக் கேக்கும்போது ஹீரோ கைல வச்சிருந்த ட்ரேய மேல தூக்கி வீசிட்டு அந்த பொண்ணு கைல இருக்க மார்க்கர் பென்-ன வாங்கி அமெரிக்கன் அக்சென்ட்-ல இங்க்லிபிஷ் பேசி அந்த ட்ரெயினிங் செஸன் ஃபுல்லா எடுத்துடுவாரு(நோட் திஸ் பாயிண்ட். ஹீரோ ஸ்கூல் பக்கமே தலை வச்சுக் கூடப் படுக்காதவரு). முடிச்சிட்டு மார்க்கர வீசிட்டு அவர் திரும்ப வரும்போது அது வரைக்கும் அந்தரத்துலயெ நின்னுட்டு இருந்த ட்ரே இப்போ அவர் கைல கரெக்டா வந்து விழும்.

11. அவர் க்ளாஸ் எடுத்த அழகுல மயங்கிப் போயிடுது அந்த க்ளாஸ்ல இருந்த ஒரு பொண்ணு. இங்கதான் செகண்ட் ஹீரோயின் இன்ட்ரோ. அவங்க கனவுல ஹீரோவோட கவர்ச்சிகரமா டான்ஸ் ஆடுவாங்க. ஹீரோ பின்னாடியே சுத்துவாங்க. ஆனா ஹீரோ அவங்கள கண்டுக்கவே மாட்டாரு. ஹீரோயினயே நினைச்சுட்டு பீலிங்ஸா உட்டுட்டு இருப்பாரு.

12. ஹீரோ சின்னப் பையனா இருக்கும்போது அவங்க சேரில தலைவர் சூட்டிங்குக்கு வர மாதிரி வச்சு அவருக்கு ஒரு சாங்க வச்சுடணும். ஜோடியா நயன் தாரா(இவங்க பழசாயிட்டாங்களோ?!!), தமன்னா இப்படி யாரையாச்சும் கால்குறை ட்ரெஸ்ல ஆட விடணும்.

Last but not the least...

13. படம் பூஜைப் போட்டதுமே இந்தப் படம் தலைவர் படம்னு ஃபுல்லா நியூஸ் பரப்பி எடுக்கப் போற வெத்து வேட்டுப் படத்த சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கிடணும். NOM :)))

இந்தக் கதைக்குப் பொருத்தமான ஈரோ, ஈரோயின கொஞ்சம் சஜஸ்ட் பண்ணுங்க மக்கா :)))

Wednesday, February 4, 2009

இனிய இல்லறம்!!!



"ஏங்க! சாப்பிடலாமா?"

"சரிம்மா"

"இங்க பாருங்க. நான் செய்யறதுல என்ன குறை இருக்கோ அத அப்டியே சொல்லணும். அப்போதான் அடுத்த தடவை அந்த தப்பு இல்லாம என்னால செய்ய முடியும். சரியா?"

"சரி"

"எப்படி இருக்கு?"

"சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கு. காரமும் கம்மியா இருக்கு"

"போங்க நீங்க ரொம்ப மோசம். நான் ஆபிஸ் போயிட்டு அங்க அவ்ளோ வேலை செஞ்சுட்டு வீட்டுக்கு வந்து உங்களுக்காக ஆசை ஆசையா செஞ்சு குடுத்தா நீங்கப் பாட்டுக்கு குறை சொல்றீங்க..."

"@#$^#@$"

-------------------------------------------------------------------------------

"ஏங்க"

"என்னம்மா?"

"நான் ஒண்ணு கேப்பேன். நீங்க உண்மைய சொல்லணும்"

"கேளு சொல்றேன்"

"கண்டிப்பா?"

"கேளு"

"நான்... நான்... ரொம்ப அழகா? இல்ல ரொம்ப ரொம்ப அழகா?"

"ஆண்டவா! எனக்கு நெஞ்சு வலிக்குதே"

-------------------------------------------------------------------------------

"என்னங்க இந்த வாரம் ஊருக்குப் போகும்போது அம்மாட்ட சொல்லி உங்களுக்கு சுத்திப் போட சொல்லணும்"

"என்னடி திடீர்னு?"

"இன்னைக்கு பொரியல்க்கு வெண்டைக்காய் வெட்டி தந்தீங்க இல்ல. மதியம் லஞ்ச் அப்போ என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்டி இவ்ளோ பொடிசா நறுக்கினனு ஆச்சர்யமா கேட்டுட்டு இருந்தாங்க. என் வீட்டுக்கார்தான் வெட்டித் தந்தார்னு ரொம்ப பெருமையா சொன்னேன் :-)"

":-|"

"அதான் கண்டிப்பா சுத்திப் போடனும்னு சொன்னேன். ஏங்க... இன்னைக்கு கோவைக்காய் ஃப்ரை பண்ணலாம்னு வாங்கி வச்சிருக்கேன்..."

"!@$%^$#@"

-------------------------------------------------------------------------------

"ஏண்டி இருக்க இருக்க ஏறிட்டேப் போற?"

"கொஞ்சம்தான வெயிட் போட்டிருக்கேன்"

"கல்யாணத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் எவ்ளோ வெயிட்?"

"முன்னாடி 45 கே.ஜி தாஜ்மகால். அப்றம் 54 கே.ஜி தாஜ்மகால். கொஞ்சம்தான ஏறிருக்கேன்?"

"ஆண்டவா! எனக்கு ஏனிந்த சோதனை..."

-------------------------------------------------------------------------------

"ஏங்க வருஷ வருஷம் தீபாவளி அப்போ உங்க அம்மாவுக்கு உங்க அப்பா என்ன வாங்கி தருவார்?"

"உனக்கு தீபாவளிக்கு எதும் வேணும்னா நேரா கேளு"

"எனக்கு ஒண்ணும் வருஷ வருஷம் வேணாம். மொத தீபாவளினால இந்த வருஷம் மட்டும் வாங்கி கொடுங்க"

"சரி என்ன வேணும்?"

"ஒண்ணும் பெருசா எதும் வாங்கி தர வேணாம்"

"சரி என்ன வேணும்னு சொல்லு"

"ஒரே ஒரு... வைர ஒட்டியாணம் மட்டும் வாங்கித் தாங்கப் போதும்"

அப்போது வாயடைத்தவர் இரண்டு நாட்களுக்கு வாயை திறக்கவே இல்லை.

இப்படித்தான் எங்கள் இனிய இல்லறம் வெகு இனிதாய் நடந்துக் கொண்டிருக்கிறது :)

பி.கு: சிங்கம் களத்துல இறங்கிடுச்சு இல்ல...

Tuesday, November 18, 2008

என்றென்றும் காதலுடன்...!!!

சமயலறை விழுப்புண்களில்
மகிழவே செய்கிறேன்
எனக்கான துயரம்
தேங்கிய விழிகளுடன்
அன்பாய் நீ தரும்
முத்தங்களை எண்ணி...

என் உள்ளங்கைகளில்
பொத்தி பாதுகாத்திருக்கும்
உன் முத்தங்களின் இளஞ்சூட்டினை
இந்தப் பாழாய்ப் போன
கீபோர்டிற்குத் தர
எப்படி மனம் வரும் எனக்கு?

அதிசயம்தான்!
எனக்கு கழுத்தில்
மகுடம் சூட்டியிருக்கிறாயே!!

ஒரே தட்டில் உண்டு...
ஒரே கட்டிலில் உறங்கி...
இந்தக் கடவுள் மீது
கோபமாய் வருகிறது!
உடல்கள் மட்டும் ஏன்
இரண்டாய் படைத்தானென்று!!

எப்பொழுதும் உனது
கொஞ்சல் மொழிகளும்
கெஞ்சல் ஒலிகளுமே
காதுகளில் ஒலித்திருக்க
PR-களிலும் CR-களிலும்
எப்படி கவனம் செலுத்துவது??

தவமிருக்கிறேன்
எண்ணற்ற இதயங்கள்
வேண்டுமென்று...
அள்ளி அள்ளி
நீ தரும் காதலை
பொத்தி வைக்க
என் ஒரு இதயம்
போதவில்லையே...

Thursday, November 6, 2008

அவள் முடிவு சரியானதா?!!

அவள் - ஒரு நல்ல ரசிகை. எதைக் கண்டாலும் ரசிப்பவள். எப்பொழுது பார்த்தாலும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள். அம்மா, அப்பா, தம்பி மற்றும் நல்ல நண்பர்கள் என்று அழகான உலகம் அவளுடையது. புத்தகங்களுக்குள் புதைந்துப் போக விரும்புவாள். அம்மாவின் மடியில் தலை வைத்து அம்மாவுடன் கதை பேசிக் கொண்டே இருக்க ஏங்குவாள். தம்பியுடனான செல்ல சண்டைகளை ரசிப்பாள். உணவு உண்பதை விட தூங்குவதை வாழ்வின் அத்தியாவசிய ஒன்றாக கொண்டவள். எழுத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவள். தனக்கென்று ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து மனம் தளராமல் மொக்கைப் போட்டவள். காதல் கதைகள் ஓரளவு நன்றாக எழுதுபவள். கதை என்ற ஒன்று இல்லாமலே நாலு பாகங்கள் ஐந்து பாகங்கள் என்று எழுதும் அதீத திறனுடையவள். இவ்வாறு ஒன்றுமில்லாமலே வலையுலகில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவள்.



காதல் கவிதைகள், காதல் கதைகள் என்று எழுதி காதலை காதலித்துக் கொண்டிருந்தவளை ஏனோ காதலுக்குப் பிடிக்கவில்லைப் போலும். அவளுக்கு அவள் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவளது அந்த அழகான உலகில் காதல் விதையூன்றினான் அவன். அவளது கனவுகளை அவன் வசம் செய்தான். அவளது ஒவ்வொரு நொடியையும் கொள்ளை கொண்டான். இவ்வாறாக அவர்களது திருமண வாழ்க்கை சிறப்பாய் ஆரம்பித்தது. யார் கண்பட்டதோ என்னவோ அவளுக்கு வேலை மாற்றம் கிடைக்கவில்லை. அவள் பெங்களூரிலும். அவன் சென்னையிலும். மூன்று மாதங்கள் இடைவிடாமல் போராடி வேலை மாற்றம் பெற்றாள். அந்த மூன்று மாத இடைவெளியில் நூற்றுக்கணக்கான மைல்கள் அப்பாலிருந்த அவனை எண்ணி எண்ணி சோகத்தில் ஆழ்ந்திருப்பதையே தொழிலாய் கொண்டிருந்ததில் அவளது வலைப்பதிவை கவனிக்க இயலவில்லை. சென்னை வந்ததும் உங்க ஊர் மொக்கை இல்லை. எங்க ஊர் மொக்கை இல்லை. அந்த அளவு படுபயங்கரமாய் மொக்கைப் போட்டுக் குவிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னையில் வலது கால் எடுத்து வைத்தாள்.



மறுபடியும் யார் கண்பட்டதோ என்னவோ அவளால் எழுத இயலவில்லை. அவளில் எண்ணவோட்டமே இன்று இரவு டிபன் என்ன செய்யலாம், நாளை காலை என்ன செய்யலாம், வீடு துடைக்க வேண்டுமே, அழுக்குத் துணிக்கூடை நிரம்பி வழிகிறதே, எப்பொழுது துவைப்பது? வாஷிங்மெசினுக்கு கவர் வாங்கிப் போட வேண்டுமே, அடுத்த மாதம் கவிதாயினி கல்யாணத்திற்கு என்ன உடை உடுத்தலாம் என்றவாறே மாறிப் போனது. இவற்றை எல்லாம் மீறியும் வேலை நேரத்திற்கிடையில் எதாவது எழுதலாமென்று எடுத்து வைத்தாலும் எழுதுவதற்குத் தோன்றுவதில்லை.



காலையில் எழுந்து அரக்கப் பரக்க காலை மற்றும் மதிய உணவு செய்து, கணவருடன் ஆபிஸ் கிளம்பி, சாயந்திரம் திரும்பும்பொழுது MTC பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறி எவரேனும் எழுகிறார்களா என்று கண்கொட்டாமல் பார்த்து எவரேனும் எழுந்தால் ஓடிச் சென்று அந்த சீட்டில் அமர்ந்து நிறுத்தத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்தை சுற்றியுள்ள மரம், பூச்செடிகள், வேடிக்கைப் பேசியபடி சைக்கிளில் சுற்றும் பள்ளி மாணவர்கள் இப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஜாலியாய் வீட்டிற்கு நடந்து சென்று இரவு உணவிற்கான வேலையை துவங்கியபடியே பெற்றோருடனும் மாமியார், நாத்தனாருடனும் கதைகள் பேசிக்கொண்டிருந்து, கணவர் வந்ததும் இரவு உணவை முடித்துக் கொண்டு கம்ப்யூட்டரில் சண்டைப் போட்டுக் கொண்டு விளையாடுவது என்று இந்த வாழ்க்கையை அவள் மனம் வெகுவாய் ரசிக்கலாயிற்று. கொஞ்ச காலத்திற்கு இந்த வாழ்க்கையை முழுதாய் அனுபவிக்க வேண்டும். ஆனால் பதிவெழுத ஆரம்பித்தால் மனம் அதைப் பற்றியே யோசிக்க ஆரம்பித்து விடும். இரவு வந்ததும் கணினியையே நோண்டிக் கொண்டிருக்க வேண்டும். அதனால் சிறிது காலத்திற்கு வலைப்பதிவிற்கு விடுமுறை அளித்து விடலாம் என்ற முடிவிற்கு வந்து விட்டாள். அவள் முடிவு சரியானதா என்று கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன் :-)



பி.கு: அப்பாடா! என்னை ஹீரோயினா வச்சு ஒரு கதை எழுதணும்னு நெம்ப நாளா ஆசை. இன்னைக்கு நிறைவேறிடுச்சு :)))

Wednesday, October 15, 2008

ஃபிஷ் ஃப்ரை பிரியர்களுக்கு - சைவம்

நீங்க நான் வெஜ் பார்ட்டியா?



இல்ல ப்யூர் வெஜிடேரியனா?



இல்ல ரெண்டுமே சாப்பிடறவங்களா?



அப்ப மேல படிங்க... ஹி... ஹி... இதை தவிர வேற கேட்டகிரியே இல்லைனு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது. நமக்கு எது நல்லா வருமோ அதைதான் பண்ணனும். நமக்கு பில்ட் அப்புதானுங்க நல்லா வரும். அதைதான் பண்றேன்.



சரி சரி... கமிங் டு த பாயிண்ட்... ஃபிஷ் ஃப்ரை மாதிரியே வெஜிடேரியன்ல எப்படி பண்றதுனு என் ஆபிஸ்ல வேல செய்யற ஒரு பொண்ணு சொல்லிக் குடுத்தா. அதை நான் ரெண்டு தடவை சக்சஸ்ஃபுலா செஞ்சுட்டேன். அதான் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் தான் நம்ம கொள்கைனு உங்களுக்கே தெரியுமில்ல... ஹி... ஹி...



ஓகே... இனி வெஜிடேரியன் ஃபிஷ் ஃப்ரை செய்யற செய்முறை.



தேவையான பொருட்கள்:



பச்சைக் கலர்ல வாழைக்காய் - உங்களுக்கு வேணுங்கிற அளவு



உப்பு - இதுவும் உங்களுக்கு வேணுங்கிற அளவு



மிளகாய் பொடி - இதுவும் உங்களுக்கு வேணுங்கிற அளவுதானுங்க



இந்த வாழைக்காய்க்கும் மீனுக்கும் ரொம்ப ஒற்றுமை இருக்கு. வாழைக்காய் எப்படி ரெண்டுப் பக்கமும் கட் பண்ணி லைட்டா தோல் சீவறோமோ அதே மாதிரி மீனையும் தலையும் வாலும் கட் பண்ணி செதில் சீவுவோம். இந்த ஒற்றுமையே சாமுராய் படத்துல விக்ரம் நாசரோட மனைவிக்கு சொல்லித் தந்தப்போதான் எனக்கும் தெரிஞ்சது. ஓ மை காட்! செய்முறை சொல்ல வந்துட்டு எங்கேயோ போயிட்டேன். சாரி சாரி...



செய்முறை:



வாழைக்காய நல்லா கழுவிட்டு ரெண்டுப் பக்கமும் கட் பண்ணி தூக்கி டஸ்ட் பின்ல போட்டுடுங்க. அப்றம் வாழைக்காய அப்டியே ரவுண்டு ரவுண்டா கட் பண்ணிக்கங்க. ரொம்ப ஸ்லைஸா வேணாம். அதுக்காக ரொம்ப மொத்தமாவும் வேணாம். கட் பண்ணினத எல்லாம் எடுத்து குக்கர்லப் போட்டு தண்ணி ஊத்தி கொஞ்சம் சால்ட் போட்டு அடுப்புல வச்சு மூணு விசில் விடுங்க. ப்ரெஷர் அடங்கினதும் எடுத்து தண்ணிய வடிச்சுட்டு ஒரு தட்டுல பரப்பி ஃபேன்க்கு அடில வச்சு நல்லா ஈரம் ஆற விடுங்க. அப்றம் மிளகாய் பொடியோட சால்ட், தண்ணி கலந்து அந்த வாழைக்காய் துண்டு ஒவ்வொண்ணுலயும் ரெண்டு பக்கம் தடவி மறுபடியும் தட்டுல பரப்பி ஈரம் காய விடுங்க. ஈரம் காயலைனா நிறைய எண்ணை இழுக்கும். ஈரம் காய்ஞ்சதும் எடுத்து தோசைக்கல்ல கொஞ்சம் நல்லா எண்ணை விட்டு அதுல போட்டு பொரிச்சு எடுங்க. அப்றம் தட்டுல அழகா அடுக்கி உங்களுக்கு தெரிஞ்ச டெக்கரேஷன் எல்லாம் செஞ்சு சர்வ் பண்ணுங்க. சுவையான வெஜிடேரியன் ஃபிஷ் ஃப்ரை ரெடி.



Value added: மிளகாய் தூள் உப்போட கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்தும் பண்ணலாம்.



வாழைக்காய் ரவுண்ட் ரவுண்டா கட் பண்ணி செஞ்சா ரொம்ப நேரம் எடுக்குதேனு வருத்தப்படற என்னைய மாதிரி சுடு சோம்பேறிங்களுக்காக: வாழைக்காய் பஜ்ஜிக்கு சீவற மாதிரி நீளமாவும் சீவிப் போடலாம்.



புரட்டாசி மாசம், அமாவாசை அந்த நாளு இந்த நாளுன்னெல்லாம் சாப்பிட முடியாம கஷ்டப்படறவங்களுக்காக என்னுடைய இந்தப் பதிவு சமர்ப்பணம். சீக்கிரம் வெஜிடேரியன் சில்லி சிக்கனோட வரேன்.



பி.கு: ஒரு குடும்ப ஸ்தீரியா மாறிட்ட தேஜஸ் என் பதிவுல தெரியுதானு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க மக்கா... :)))

Tuesday, October 14, 2008

ஓர் இரவை எண்ணி...

தன்னை மறந்து

தனித்துறங்கிய

இரவின் விடியலில்

கண் மலரும் பொழுதில்

துடிதுடித்துப் போகிறேன்...

உன்னிரு கரங்களுக்குள்

துயிலாமல் தொலைத்த

ஓர் இரவை எண்ணி...

Tuesday, October 7, 2008

பேரம் பேசறதுல கில்லாடியா நீங்க??

பேரம் பேசி வாங்கறதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். கொஞ்சம் பயமும் கூட.எங்க ஊர்ல சனிக்கிழமை மட்டும்தான் சந்தை கூடும். நான் அஞ்சாவது படிச்சப்போ இருந்து எங்கம்மாக் கூட சந்தைக்குப் போக ஆரம்பிச்சேன்(அப்போ இருந்தே வீட்டு வேலைக் கத்துக்கோன்னு ஒரே அர்ச்சனை... இருந்தாலும் ஒண்ணுமே கத்துக்காம சாதிச்சிட்டோமில்ல). காய் வாங்கும்போது எந்த காய் எப்படி எப்படி பாத்து வாங்கணும்னு சொல்லிக் கொடுப்பாங்க. ஒரு கடைலக் கூட அட்லீஸ்ட் ஒரு ஐம்பது பைசாவாவது குறைச்சுக் கேட்காம வாங்க மாட்டாங்க. எனக்கு ஒரே எரிச்சலா வரும். ஏம்மா! சூப்பர்மார்க்கெட்ல போய் வாங்கறீங்கல்ல. அங்கல்லாம் பேரம் பேச மாட்டிங்க. இங்க மட்டும் வந்து நல்லா கேளுங்க. எவ்ளோ பாவம் இவங்கனு எங்கம்மாட்ட சண்டைப் போடுவேன். சூப்பர்மார்க்கட்ல எல்லாம் விலை கரெக்டா வச்சிருப்பாங்க. இங்க எல்லாம் அவங்க சொல்றதுதான் விலை. அதனால இஷ்டத்துக்கு சொல்லுவாங்கனு எங்கம்மாவும் எதேதோ காரணம் சொல்லுவாங்க. ஆறாவ்து போனதுக்கப்புறம் என்னை தனியா சந்தைக்கு அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க. நான் போனப்போ குறைச்சுக் கேட்டுப் பாப்பேன். முடியாதுனு சொல்லிட்டாங்கனா எதும் பேசாம அவங்க சொன்ன விலைக்கு வாங்கிட்டு வந்துடுவேன்.



காலேஜ்-ல என் ஃப்ரெண்ட் யசோ சூப்பரா பேரம் பேசுவா. ஒரு தடவை திருச்சில பர்மா பஜார் போனோம். ஒரு கடைல ட்ரெஸ் வாங்கலாம்னு போய் ட்ரெஸ் எல்லாம் செலக்ட் பண்ணி வச்சுட்டோம். அவ மெல்ல இது எவ்ளோங்கனு கேட்டா. இருநூறு ரூபாய்னு அவர் சொன்னதும் ஒரு ரெண்டு செகண்ட் யோசிச்சவ எழுபத்தைஞ்சு ரூபாய்க்குக் குடுங்கனு கேட்டாளே பாக்கலாம். எனக்கு உதற ஆரம்பிச்சிடுச்சு. அவர் எதாச்சும் கேவலமா திட்டிடப் போறாரோனு ஒரே பயம் எனக்கு. அவரோ கூலா அவ்ளோ கம்மியா எல்லாம் குடுக்க முடியாது. வேணா நூத்தி எண்பதுக்கு தரேனு சொன்னார். இவ உடனே சரி வாடி போலாம்னு என் கையப் பிடிச்சு இழுக்க அவர் வேகமா நூத்தி ஐம்பது குடுத்துட்டு எடுத்துக்கங்க. அதுக்கு மேலக் குறைக்க முடியாதுனு சொன்னார். திரும்பி இவ பேச அவர் பேச ரெண்டு பேரும் பேசி கடைசில தொண்ணூறு ரூபாய்க்கு அந்த ட்ரெஸ்ஸ வாங்கிக் குடுத்தா. நான் ஆ-னு வாயப் பொழந்துக்கிட்டு பாத்துக்கிட்டு இருந்தேன். நல்லவேளை போன ஜென்மத்துல நான் செஞ்ச புண்ணியமமோ என்னவோ வாய்க்குள்ள ஈ போகல.ஹி... ஹி...



அதுல இருந்து அவளோட போகும்போதெல்லாம் ஒரெ உதறலாதான் இருக்கும். என்னைக்கு எவன்கிட்ட அடி வாங்கப் போறோமோனு. நீயும் எங்கம்மாவும் ஒண்ணுடி. கஷ்டப்படறவங்ககிட்டதான் போய் பேரம் பேசுவீங்கனு சொன்னதுக்கு கோனார் நோட்ஸ் கணக்கா விளக்கவுரை சொன்னா. ஒரு தடவ ஒரு கடைல அவ எதோ வாங்கிட்டு இருந்தப்போ ஒருத்தர் பயங்கரமா பேரம் பேசி குறைச்சு வாங்கிட்டுப் போனாராம்.அவர் போனதுக்கப்புறம் அவர்ட்ட வியாபாரம் பண்ணினவரை கூட இருந்தவர் திட்டினாராம். எப்போமே எல்லாரும் பேரம் பேசதான் செய்வாங்க. இதுக்கு தான் நீ ஒரு நூறு ரூபா இருநூறு ரூபா அதிகம் சொல்லி இருக்கணும்னு. அதைக் கேட்டதுல இருந்துதான் இவ இப்படி ஆயிட்டாளாம். பாருங்க ஒவ்வொருத்தரும் நிறைய ஹிஸ்டரி வச்சிருக்காங்க :P.



இப்படியே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்லி வச்சதுல பேரம் பேசறதுனாவே ஒரு பயம் வந்து ஐ மீன் பேரமோஃபோபியா வந்து ஃபிக்சட் ரேட் கடைகங்களுக்கு மட்டுமேப் போயிருந்தேன். பெங்களூர்ல MG ரோடுக்கு ஒரு தடவை ஷாப்பிங் போயிருந்தோம். ரொம்ப ஆசையா ஒரு துப்பட்டா வாங்கினேன். விலை எவ்ளோனு கேட்டதும் நூத்தி இருபது ரூபானு சொல்லிட்டு இன்னொருத்தவங்களுக்கு துணி எடுத்து காட்டப் போயிட்டான். என் ஃப்ரெண்டு பக்கத்துல இருந்து மெதுவா எண்பது ரூபாய்க்கு கேளுடி கேளுடினு இடிக்கறா. எனக்கு பேரமோஃபோபியா வந்து உதற ஆரம்பிச்சு மெல்ல அவகிட்ட நீயே கேளுடி செல்லம்ன்னு நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள அவன் திரும்பி வந்துட்டான். அவன் நான் என்ன சொல்லுவேனு என்னையப் பாக்கறான் அப்புறம் துப்பட்டாவப் பாக்கறான். இவளா வாயத் தொறக்க மாட்டேங்கறா. எனக்கு ஒரே கடுப்பு. சரி நாமளே டீல் பண்ணிக்கலாம்னு நூறு ரூபாய்க்கு குடுங்கனு மெல்ல கேட்டேன். இருந்தாலும் திட்டிப்புடுவானோனு உள்ளுக்குள்ள ஒரே பயம். அவன் உடனே எதும் பேசாம சரிங்க மேடம்னு சொல்லிட்டான். எனக்கா என் மேலயே கோபம் கோபமா வருது. அடியே அவ சொன்ன மாதிரி எண்பது ரூபாய்க்கு கேட்டிருக்க மாட்டனு. அந்த பக்க திரும்பினா அவ மொற மொறைனு மொறைக்கிறா. அப்புறம் என்ன? நூறு ரூபாயக் குடுத்துட்டு துப்பட்டாவ வாங்கிட்டு வந்துட்டேன். வர வழியெல்லாம் அதுக்கு அர்ச்சனை. நாம வாழ்க்கைல வாங்காத அர்ச்சனையா? ப்பூனு ஊதி தள்ளிக்கிட்டே வந்து சேர்ந்துட்டேன்.



இப்படியாப்பட்ட என்னோட பேரம் பேசற ஹிஸ்டரி தெரியாம என் வீட்டுக்காரர் நாங்க சென்னை வீடு பால் காய்ச்சறதுக்கு முன்னாடி நாள் பூ வாங்கக் கூட்டிட்டுப் போனார். அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தின்றதால அன்னைக்கு பூ விலை எக்கச்சக்கம். ஃபர்ஸ்ட்டே அவர் பேரம் பேசி ஒரு முழத்துக்கு இவ்ளோனு குறைச்சிட்டார். ஆஹா! நம்மாளு என்னமா பேரம் பேசறாருனு சந்தோஷத்துல அப்படியே வேடிக்கைப் பார்த்துட்டு நின்னுட்டு இருந்தேன். அந்தம்மா பூவைக் குடுத்துட்டு மொத்தம் நூத்தி முப்பத்தைஞ்சு ரூபானு சொன்னுச்சு. இவர் அதெல்லாம் முடியாது நூத்திப் பதினைஞ்சு ரூபாதானு மொட்டையா சொன்னார். உடனே அந்தம்மா சாமிப் பூ தொண்ணுத்தி அஞ்சு ரூபா. மல்லிகைப் பூ நாப்பது ரூபா. அப்ப மொத்தம் நூத்தி முப்பத்தைஞ்சு ரூபானு சொன்னுச்சு. நான் மனசுக்குள்ள வேக வேகமா கணக்குப் போட்டேன். 95+40 = 135 தான சரியாதான் அந்தம்மா சொல்லி இருக்குனு சரியா கணக்குப் போட்ட எனக்கு ஒரு சபாஷ் சொல்லிக்கிட்டு ஆமாங்க நூத்தி முப்பத்தைஞ்சு ரூபாதானு சொல்லிட்டேன்.நான் சொன்னதால அந்தம்மா அதுக்கு மேல இறங்காம அப்படியெ பிடிச்சுக்கிச்சு. சரினு அவரும் நூத்தி முப்பத்தைஞ்சு ரூபா குடுத்துட்டு பூ வாங்கிட்டு வந்தார். பைக்ல போகும்போது அடியேய்! நான் நூத்தி பதினைஞ்சுதான் குடுப்பேனு சொல்லிட்டிருக்கேன். நீ நூத்தி முப்பத்தைஞ்சு ரூபாதானு சொல்றன்னு ஆரம்பிச்சார். அய்யோ! நான் அதை சொல்லலைங்க. 95+40 = 135 அப்படினு அந்த அம்மா சொன்ன கணக்கு சரினு சொன்னேன். மத்தபடி வேற எதுவும் சொல்லலைனு அப்பாவியா சொன்னேன். ஆண்டவா! இவள வச்சுக்கிட்டு நான் எப்படி பொழைக்கப் போறேனோனு சொல்லி அன்னைக்கு சிரிச்சவர்தான். என் ஃப்ரெண்ட்ஸ் முதற்கொண்டு எல்லார்ட்டயும் இந்த விஷயத்த சொல்லி சிரிச்சு சிரிச்சு மானத்த வாங்கறார் :(((. நீங்களே சொல்லுங்க. இது என் தப்பா இல்ல என்னோட பேரம்ப்ப்ஃபோபியா பத்தி தெரிஞ்சுக்காம பேரம் பேசக் கூட்டிட்டுப் போன அவரோட தப்பா? அவர் மேல தப்ப வச்சுக்கிட்டு என்னை சொல்லி சொல்லி சிரிக்கறார். என்ன கொடுமை சார் இது?!!