Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, December 14, 2011

போராளி மற்றும் ஒஸ்தி!

போன வாரத்துக்கு முந்தின வார சனிக்கிழமை போராளியும் போன சனிக்கிழமை ஒஸ்தியும் போய் பாத்தேன். என்னோட விமர்சனம்... ஹி ஹி...

போராளி:

பாட்டு 

காமெடி

intermission - அட! அதுக்குள்ளயா?!!

ஃப்ளாஷ்பேக்

க்ளைமாக்ஸ்

படம் முடிஞ்சி போச்சு

படம் என்ன ஒரு மணி நேரம் தானா?!!!!!


ஒஸ்தி:

சென்டிமெண்ட்

வில்லன் என்ட்ரி

ஹீரோ என்ட்ரி

பாட்டு

காமெடி

சிவாஜி த பாஸ் மாதிரி ஒஸ்தி த மாஸ்' - இப்படி அப்பப்போ பஞ்ச் டயலாக்ஸ்...

முடியல

ஹீரோயின் என்ட்ரி

காதல் - எதுக்காக இது வந்துச்சு??

பாட்டு - அதுக்குள்ளயா?

அய்யய்யோ இன்னும் intermission வரலையே :|

சென்டிமெண்ட்

intermission - அப்பாடி! ஒரு வழியா வந்துச்சுடா சாமி...

காமெடி

சென்டிமெண்ட்

கல்யாணம்

பாட்டு

சோகம்

ஃப்ளாஷ்பேக்

பழி வாங்கும் படலம்

பாட்டு - யாராச்சும் காப்பாத்துங்களேன்....

க்ளைமாக்ஸ்

தேங்க் காட்! ஒரு வழியா படம் முடிஞ்சுதுடா.... மி த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்.....

Monday, October 24, 2011

அன்புள்ள..


குழந்தை உறங்கிக் கொண்டிருந்த அந்த மதிய வேளையில் பீரோ லாக்கரை நோண்டிக் கொண்டிருந்த எனது கைகளுக்கு அப்பாவின் அந்த பழைய கைப்பை கிடைத்தது. எனக்கு தெரிந்து அந்த கைப்பைக்கு எனது வயதிருக்கும். சிறுவயது முதலாய் பார்த்திருக்கிறேன். அப்பாவின் சிறு வயது புகைப்படங்கள், தாத்தா பாட்டியின் புகைப்படங்கள், அத்தைகள் அவருக்கு எழுதிய கடிதங்கள், அவரது நண்பர்களின் முக்கியமான கடிதங்கள் என்று அந்தப் பைக்குள் அவர் சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் ஏராளம். பதினொன்றாம் வகுப்பிலேயே விடுதியில் தங்கி படிக்க நேரிட்டதாலும் அதன் பிறகு கல்லூரி, வேலை, திருமணம் என்று வீட்டை விட்டு விலகியே இருந்ததாலும் அந்த வீட்டின் பிரதான இடங்கள் அந்நியமாகத்தான் போயிருந்தன. பத்தாம் வகுப்பிற்குப் பிறகு முதன் முறையாக அந்த வீட்டில் இவ்வளவு தங்க நேரிட்டது இந்த பிரசவக் காலத்தில் தான். இந்த இடைப்பட்ட இடைவெளியில் அவரது கைப்பைக்குள் இடம் பெற்றிருக்கும் நானறியா பொக்கிஷங்களை பார்க்கும் ஆவல் பிறந்தது.



மெத்தை மேல் நன்றாக சம்மணமிட்டு அந்தப் பையை திறக்கும்போது உள்ளே நுழைந்த அம்மா ‘அடுத்தவங்க பையை பாக்கறது தப்பில்ல’ என்று புன்னகைத்தார். ‘எங்கப்பா ஒண்ணும் அடுத்தவரில்ல’ என்று பதிலுடன் புன்னகையை தந்தவாறு மேலிருந்த கடிதங்களை பிரித்தெடுத்து அலசத் தொடங்கினேன். அவற்றின் நடுவில் நான் முதன் முதலில் விடுதி சேர்ந்த பொழுது எழுதிய அத்தனைக் கடிதங்களும் இருந்தன. முதன் முதலாய் எழுதிய கடிததை எடுத்துப் பிரித்துப் படித்தபோது என்னையுமறியாமல் கண்கள் தளும்பியது. அன்று வீட்டை விட்டு அம்மாவை அப்பாவை தம்பியை பிரிந்து அங்கு இருக்க முடியாமல் அடக்க முயன்றும் முடியாமல் கண்களில் வழிந்த கண்ணீர் பட்டுத் தெறித்த அந்த கடிதம் அன்றைய மனநிலையை அப்படியேத் தந்தது. எனக்கு நன்றாக நினைவிருந்தது. அன்று கடிததில் சிந்தியது ஒரு துளிதான். ஆனால் அதன் அருகே இன்னொரு கண்ணீர் துளியின் தடம். நான் யோசித்துக் கொண்டிருந்த போது அம்மா சொன்னார். ‘இந்த லெட்டர் வந்தப்போ படிக்கும்போதே அப்பா கண்ல தண்ணி வந்துடுச்சு. உன்னைப் பிரிஞ்சு இருக்கறதுக்கு ரொம்ப ஃபீல் பண்றாருனு எனக்கே அப்போதான் தெரியும்’. கேட்டதும் அழுகை வந்து விட்டது. ‘என் மேல நீங்கதான் எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க அப்பா. இந்த கடிதங்கள எடுத்துப் பாக்கலைனா எனக்காக நீங்க கண்ணீர் சிந்தினது எனக்குத் தெரியாமலேப் போயிருக்கும்’


பொறுமையாக நான் எழுதிய அனைத்துக் கடிதங்களையும் படித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு கடிதத்தின் போதும் அதை எழுதிய மனநிலை எனக்குள் வந்து வந்து சென்றது. பள்ளியில் இருந்த கையெழுத்திற்கும் கல்லூரிக் காலத்தின் கையெழுத்திற்கும்தான் எத்தனை வித்தியாசங்கள். எனது கையெழுத்தை கிட்டத்தட்ட மறந்தே போயிருக்கும் காலநிலை இது. எவ்வளவு விஷயங்களை நினைவூட்டுகின்றன. பேனா தொலைத்ததிலிருந்து தோழியிடம் சண்டைக் கட்டியது வரை ஒரு குழந்தைப் போல அப்பாவிடம் கொட்டித் தீர்த்திருக்கிறேன். அம்மாவிற்காக மல்லைகைப்பூ, பண்டிகை காலங்களில் ஊருக்கு வருவதற்கு முன்பே வாழ்த்து அட்டைகள், தம்பியின் தேர்விற்காக வாழ்த்துகள் என்று எத்தனை எத்தனை என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது குழந்தை சிணுங்கினாள். அதன் பிறகு அவற்றைப் பற்றி நினைக்க நேரமில்லாமல் போனது.


சென்னை வந்த பிறகு எனது கணவர் ஒரு ஸ்கூட்டர் பரிசளித்தார். முதன் முறையாக அதில் அமர்ந்து ஓட்டிப் பார்த்தபொழுது எங்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென என் அப்பா புது வண்டி வாங்குவதற்கு யோசித்துக் கொண்டே வெகு காலமாய் அந்தப் பழைய ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டிருந்தது ஏனோ நினைவுக்கு வந்தது. கூடவே அந்தக் கடிதங்களின் நினைவும். அப்பாவிற்கு கிடைத்த இது போன்ற சந்தோசங்கள் இமெயில், சாட், வீடியோ சாட், ஃபேஸ்புக் என்றாகி விட்ட இந்த நவீன யுகத்தில் எனக்கு கிடைக்குமா? எனக்குத் தெரிந்து மொபைல் ஃபோன் வந்த பிறகு அப்பாவிற்கு ஒரு கடிதமேனும் எழுதிய நினைவில்லை. நானே இப்படியென்றால் எனது பெண்? அவளும் என்னைப் போல விடுதி செல்ல நேர்ந்தால் அவளது கையெழுத்தே எனக்கு தெரியாமல் போய் விடும் அல்லவா? என்னதான் மெயில்களை சேகரித்து வைத்தாலும் அவள் கைப்பட எழுதியது போலாகுமா? இத்தனைக் கேள்விகளுக்கும் விடைத் தெரியும். ஆனால் மனம் என்னவோ இந்த சந்தோஷங்களைப் பெரிதும் இழப்பது போல ஒரு உணர்வைத் தந்துக் கொண்டேயிருந்தது. பரவாயில்லை. எனக்கு கிடைக்காமல் போவதற்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் என் அப்பாவிற்கேனும் கடைசி வரை கிடைக்க செய்ய என்னால் முடியும். வீடு வந்ததும் ஒரு இன்லாண்ட் லெட்டரை எடுத்து எழுத ஆரம்பித்தேன். ‘அன்புள்ள அப்பா, புதிதாய் ஒரு வண்டி வாங்கி இருக்கிறேன். இன்று நான் நினைத்ததை நினைத்த பொழுது வாங்கிக் கொள்கிறேன் என்றால் அதன் பின் ஒளிந்திருப்பது உங்கள் தியாகங்கள் தான்…’


இதை நான் தொலைபேசி வழியாக ஒரு நிமிடத்தில் முடித்திருக்கலாம். ஆனால் திரும்ப திரும்ப படித்து மகிழும் தருணங்களையும், பொக்கிஷமாய் வைத்து பாதுகாக்கும் சந்தோஷத்தையும் இது மட்டுமே தருமென எனக்கு நன்றாகத் தெரியும்.

Wednesday, September 14, 2011

மாதத்தில் ஒரு முறையேனும்..

நாம் நமது குழந்தைகளைப் பார்த்து எவ்வளவு ஆனந்தம் அடைகிறோம். அதன் கொஞ்சு மொழியில், தளிர் நடையில் உலகை மறந்து சொர்க்கத்தில் திளைக்கிறோம். நமது உலகே நமது குழந்தைதான் என்று முற்றிலுமாய் மாறிப் போகிறோம். பிறந்தது முதல் இரவுகளில் தூங்க விடாமல், உணவு உண்ணாமல், குறும்புத்தனங்கள் செய்து நம்மை பாடாய் படுத்தும் நமது குழந்தையை வேண்டாம் என்று என்றேனும் தூக்கி எறிந்து விடுகிறோமா? கிடையாது. ஆனால் இது போல் அத்தனையும் பொறுத்துக் கொண்டு நம்மை சீராட்டி பாராட்டி வளர்த்த பெற்றவர்களை ஏன் மறந்து போகிறோம்?? வயதான காலங்களில் நமது அருகாமையை நேசிக்கும் அவர்களது உணர்வுகளை புரிந்த கொள்ள ஏன் மறுக்கிறோம்?

ஒரு முறை எனது அப்பா பற்றி எனது கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘முன்னலாம் இப்படி பேசவே மாட்டார். இப்ப விட மாட்டேனு இழுத்து வச்சு தேவை இல்லாத கதை எல்லாம் தொண தொணனு சொல்லிட்டு இருக்கார்’. எனது குற்றச்சாட்டுகளை பொறுமையாக கேட்ட என் கணவர் ‘வயசானவங்க அப்படிதாண்டா பேசுவாங்க. அவங்களுக்கு நாம எங்க அவங்க பேச்சக் கேக்காம போயிடுவோமோனு ஒரு பயம். மோர் தன் தட் அவங்களுக்கு நம்மகிட்ட பேசணும்னு ஒரு ஆசை. அவங்கள நாமதான் புரிஞ்சு நடந்துக்கணும். சின்ன வயசுல நீ உளறினத எல்லாம் அவங்க சந்தோஷமா பொறுமையா கேக்கல. உனக்கு ஏன் அந்த பொறுமை இல்லாமப் போச்சு. இனிமேல் அவர் எதாவது பேச ஆசைப்பட்டா கூட உக்காந்து கொஞ்ச நேரம் பேசிட்டு வா’ என்றார். அதன் பிறகுதான் நான் செய்து கொண்டிருந்த தவறுகளை உணர்ந்தேன். இப்பொழுதெல்லாம் அடிக்கடி ஃபோன் செய்து அவர்களுடன் நிறைய நேரம் பேசுகிறேன். எனது பெண்ணையும் பேச வைக்கிறேன்.

இந்த பதிவை எழுத தூண்டியது சென்ற வாரம் நான் சென்று வந்த ஒரு முதியோர் இல்லம். மக்கள் அனைவரும் படிக்கின்றனர். மற்றவரது உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றனர். உறவுகளை மதிக்கின்றனர். அதனால் முதியோர் இல்லங்கள் வெகுவாக குறைந்து விட்டன என்ற எனது கணிப்பை பெரிதும் தவறு என்றுணர்த்திய அந்த சில மணித்துளிகள். இதுவரை மூன்று தடவை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலை 4 மணி எப்பொழுது வருமென ஆவலுடன் காத்திருப்போம் என்று நான் பேசிய அனைத்து பாட்டிகளும் சொன்னார்கள். கேட்கும்பொழுது சந்தோஷம்தான் என்றாலும் அவர்களைப் பார்க்கையில் பாவமாக இருந்தது. உண்ணும் உணவிற்கு பிரச்சினையில்லை. உடுத்த துணிக்கு குறைவில்லை. ஆனால் மகன் மகள் பேரன் பேத்திகள் என்று கடைசி காலத்தைக் கழிக்க வேண்டிய இந்த வயதில் பேசத் துணை வேண்டி ஏங்கி இருக்கும் அவர்களைப் பார்க்கையில் வேதனையாகவே இருக்கும். நான் முதல் முறை சென்ற போது பேசிய ஒரு பாட்டியிடம் என் பெண்னைப் பற்றி சொன்னேன். அதன் பின் ஆறு மாதங்களில் இரண்டு முறை மட்டுமே செல்ல முடிந்த என்னிடம் அவர் ஞாபகமாய் என் குழந்தையைப் பற்றி விசாரித்தார். அங்கு சென்று வந்ததன் பலனாய் அதை மட்டுமே நினைக்கிறேன். வேறொருவர் நம்மைப் பற்றி அன்பாய் நினைப்பதை விட வேறென்ன வேண்டும்?

இன்னொரு பாட்டியின் கதையோ பெரும் சோகம். சொத்தை எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து விட்டு விட்டார்கள். வந்துப் பார்த்தால் கூடவே வீட்டுக்கு வந்து விடுவார் என்ற பயத்தில் யாரும் வந்து பார்ப்பதில்லை. பணத்தை மட்டும் அனுப்பி வைத்து விடுவார்களாம். அந்த பாட்டிக்கோ குடும்பத்தாரை பார்க்க வேண்டும் என்று ஆசை. சொல்லி சொல்லி புலம்பினார். அவர் வீட்டினரைப் பார்த்தால் நன்றாக கேட்க வேண்டும் போல் இருந்தது. என்ன செய்ய முடியும் நம்மால்?? :((

வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி செய்தால் அந்த புண்ணியம் எனது பெற்றோர்களுக்குப் போய் சேரும் என்பது என் எண்ணம். அடிக்கடி செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனது குழந்தை கொஞ்சம் பெரியவளானதும் அழைத்து செல்ல வேண்டுமென எண்ணியிருக்கிறேன்.

பணத்தால் மட்டுமின்றி மனதால் நாம் உதவிக்கரம் நீட்ட எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. மனம் வையுங்கள். உங்களால் முடிந்த பொழுது உங்கள் நேரத்தை தானமளியுங்கள். அவர்கள் இழந்துக் கொண்டிருக்கும் இந்த சின்ன சின்ன சந்தோஷங்களை திரும்ப பெற அவர்களுக்கு உதவிடுங்கள். மாதம் ஒரு நாள் இரண்டு மணி நேரம் என்பது நமக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் அந்த நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் அந்த உள்ளங்களுக்கு அது மிகவும் பெரிய விஷயம்.


For more info, Please visit www.teameverestindia.org 
                                                              www.everestserveindia.org                                              
                                                                                12/365:
                                                            
Volunteer at least once a month!

Monday, April 11, 2011

பாட்டி வடை சுட்ட கதை!

நேத்து நைட்டு என் பொண்ணுக்கு கதை சொல்லலாம்னு நினைச்சு நம்ம ட்ரெடிசனல் ஸ்டோரி பாட்டி வடை சுட்ட கதைல இருந்து ஆரம்பிக்கலாம்னு நினைச்சு ஆரம்பிச்சேன். இனி நடந்தது என்ன?? இதோ.. ஹி..ஹி..


‘செல்லக்குட்டி அம்மா உங்களுக்கு கதை சொல்லப் போறேன். சமத்தா கேக்கணும் சரியா’-னு நான் சொல்லவும் என் பொண்ணு பாவமா முழிச்சுக்கிட்டே என்னைப் பாத்தா. கதையக் கேக்காம எங்கேயும் ஓடிடக் கூடாதேனு மடில உக்கார வச்சு நல்லா பிடிச்சுக்கிட்டு கதை சொல்ல ஆரம்பிச்சேன்.

‘நம்ம J-பாட்டி(என் மாமியார்) இருக்காங்க இல்ல. நல்லா கமகமனு வாசமா மொருமொரு-னு டேஸ்ட்டா வடை சுட்டாங்களா’ -னு சொல்லிட்டிருந்த என் கண்ணுல பிரபு(என் கணவர்) பட்டார். உடனே கதைய இப்படி மாத்திட்டேன்.
‘அப்ப இந்த பிரபு காக்கா இருக்கு இல்ல தங்கம். அது வாசத்த மோப்பம் பிடிச்சு வேகமா பறந்து வந்து நம்ம பால்கனி கிரில் கேட்டுக்குள்ள நெம்பி நெம்பி உள்ள வந்துச்சாம். அப்போ பாத்து பப்புக் குட்டி ஏதோ சத்தம் போட உடனே J-பாட்டி பப்புக்கு என்னாச்சோனு உள்ள ஓடினாங்கலாம். அந்த சமயம் பாத்து இந்த பிரபு காக்கா சத்தம் போடாம ஒரு வடைய திருடிட்டு மறுபடியும் பால்கனி கிரில்-ல நெம்பி நெம்பி வெளில போய் நம்ம பக்கத்து வீட்டுல இருக்க மாமரத்து மேல உக்காந்துக்கிச்சாம். அப்போ அந்த பக்கமா J-அம்மா(நான் :)) வந்தாங்களாம். அவங்களுக்கு இந்த பிரபு காக்காவப் பாத்ததும் ஒரே கோபமா வந்துடுச்சாம். J-பாட்டிக்கு தெரியாம எப்படி இந்த வடைய திருடிட்டு வரலாம்-னு செம கோபமாம். அதனால அந்த காக்காட்ட இருந்து தந்திரமா வடைய வாங்கணும்னு நினைச்சு அதப் பாத்து பிரபு காக்கா பிரபு காக்கா! நீ ரொம்ப அழகா இருக்க.. ஒரு பாட்டு பாடே-னு J-அம்மா சொன்னாங்களாம். உடனே பிரபு காக்காக்கு பயங்கர சந்தோசமாயிடுச்சாம். அடடா! இந்த உலகத்துல நம்மளப் பாத்து யாருமே அழகா இருக்கே-னு சொன்னதில்லையே-னு பயங்கர குஷியாகி கா கா-னு கத்துச்சாம். அப்ப அது வாய்ல இருந்த வடை கீழ விழுந்துடுச்சாம். அத J-அம்மா எடுத்துட்டு போயி டஸ்ட் பின்ல போட்டுட்டாங்களாம். இதுல மாரல் ஆஃப் த ஸ்டோரி என்னன்னா..’-னு நான் சொல்றதுக்குள்ள அது வரைக்கும் பொறுமையா கதையக் கேட்டுட்டு இருந்த பிரபு வேக வேகமா

‘உங்கம்மாக்கு யார் சந்தோஷமா இருந்தாலும் பிடிக்காது. முக்கியமா உங்கப்பா சந்தோஷமா இருந்தா பிடிக்கவே பிடிக்காது’-ன்னாரேப் பாக்கலாம். அவர கிண்டல் பண்ண ட்ரை எனக்கு செம பல்பு.. ஹி.. ஹி.. நாம பாக்காத பல்பா?! கலர் கலரா வித விதமா எத்தனை பாத்திருப்போம்னு அப்படியே ஊதி தள்ளிட்டு என் கதைய கன்டினியூ பண்ண ஆரம்பிச்சேன் ;))))

Monday, February 21, 2011

அன்புள்ள அம்மா!


இந்த பதிவு ரொம்ப நாளா எழுதணும்னு நினைச்சுட்டே இருந்தேன். இன்னைக்கு தான் டைம் கிடைச்சது.

நமக்கு வாழ்க்கைல கிடைக்கற ஒரு உன்னதமான விஷயம் தாய்மை. அத அனுபவிக்கறவங்களுக்கு மட்டும் தான் அதோட சந்தோஷம் புரியும். என்னோட ஆறாவது மாசத்துல இருந்து அவளோட மூவ்மென்ட்ஸ், உதைக்கறது, தொட்டு பாத்தா அவ கை, கால் தெரியறது இது மாதிரி விஷயங்கள ரொம்ப ரொம்ப அனுபவிச்சேன். என் வீட்டுக்காரர பாத்தா பாவமா இருக்கும். இந்த மாதிரி சந்தோஷங்கள் அவருக்கு கிடைக்க வாய்ப்பில்லையேனு. பொண்ணா பிறந்ததுக்காக நான் ரொம்ப பெருமைபட்ட தருணங்கள் அது.

இந்த சந்தோஷங்களோட நம்ம கடமை முடிஞ்சு போயிடறது இல்ல. பிரசவத்துக்குப் பின்னாடி இருக்க பொறுப்புகள்லயும் நமக்கு தான் முக்கிய பங்கு இருக்கு. இதுல ரொம்ப முக்கியமானது தாய்ப்பால். என் கணவரோட கஸின் ஒரு பீடியாட்ரிஷன். அவர் எனக்கு ரொம்ப கைடு பண்ணினார். அத உங்களோட ஷேர் பண்ணதான் இந்த பதிவு எழுதறேன். என்னடா இம்சை ரொம்ப பொறுப்பா மாறிடுச்சேனு வாயப் பொளக்காதீங்க. நான் எப்பவுமே ரொம்ப பொறுப்பான பொண்ணுதான்.. ஹி ஹி.. (நாமளா சொல்லிக்கிட்டாதான் ஆச்சு..)

1. குழந்தைக்கு தாய்ப்பால் மூலமாதான் எல்லா சத்தும் போகும். கால்சியம், இரும்பு சத்து இப்டி எல்லா சத்தும்.

2. நம்ம உடம்புல நோய்க்கு எதிர்ப்பு சக்தியா இருக்க ஆன்டிஜென், ஆன்டிபாடீஸ் எல்லாமும் தாய்ப்பால் மூலமா குழந்தைக்கு போகும். அதாவது சளிப் பிடிக்காம இருக்க ஆன்டிஜென், ஆன்டிபாடீஸ் கிடைக்கறதால குழந்தைக்கு அவ்ளோ ஈஸியா சளி பிடிக்காது. மனித நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி தாய்ப்பால்-ல மட்டும் தான் கிடைக்கும்.

3. மூளை வளர்ச்சிக்கான முக்கியமான சத்துக்கள் தாய்ப்பால்-ல மட்டும் தான் ஒரு குழந்தைக்கு கிடைக்கும். இது பசும்பால்லயோ இல்ல பவுடர் பால்-லயோ கிடைக்கவே கிடைக்காது. குழந்தையோட ஒரு வயசுக்குள்ளதான் மூளை வளர்ச்சி பெருமளவு இருக்குமாம். சோ உங்க குழந்தை ப்ரெய்னியா வரணும்னா ஒரு வருடம் கண்டிப்பா தாய்ப்பால் குடுக்கணும்.

4. தாய்ப்பாலினால் குழந்தைக்கு அபாயகரமான தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி. அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் இந்த தொற்று நோய்கள் எல்லாம் லிஸ்ட் பண்ணி இருக்காங்க.
  • bacterial meningitis
  • bacteremia
  • diarrhea
  • respiratory tract infection
  • necrotizing enterocolitis
  • otitis media
  • urinary tract infection
  • late-onset sepsis in preterm infants
5. Sudden Infant Death Syndrome(SIDS)-ம் ரொம்ப குறைஞ்சிருக்காம்.

6. அவங்க பண்ற ரிசர்ச்-ல இந்த வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் தாய்ப்பால் அதிகம் குடுத்து வளர்த்த குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட ரொம்ப ரொம்ப குறைவாம்
  • insulin-dependent (type 1) and non–insulin-dependent (type 2) diabetes mellitus
  • lymphoma
  • leukemia
  • Hodgkin disease
  • overweight and obesity
  • hypercholesterolemia
  • asthma
7. இதனால அம்மாவுக்கும் breast cancer, ovarian cancer, hip fractures, osteoporosis in the postmenopausal period இது மாதிரி பல வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் ரொம்ப குறைவுனு சொல்றாங்க.

8. குழந்தைக்கு ஆறு மாதங்கள் முடியற வரைக்கும் ஒன் அண்ட் ஒன்லி தாய்ப்பால் மட்டும் தான் குடுக்கணும். வெற எதுவும் தண்ணி கூட குடுக்க தேவை இல்ல.

9. தாய்ப்பால் மட்டும் குடிக்கற குழந்தைக்கு பத்து நாட்களுக்கு மோஷன் போகலைனா கூட பிரச்சினை இல்ல. அப்புறம் நிறைய நாள் மோஷன் போகலைனா வயிறு வலிக்கும் அது இதுனு சொல்லுவாங்க. அதை பத்தி கவலையேப் படாதீங்க.

10. ஜீரணம் ஆகறதுக்கு அதை குடு இதை குடுனு சொல்லுவாங்க. என் டாக்டர் இதான் சொன்னார். ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் ஜீரணம் ஆகலைனா உலகத்துல எந்த ஃபுட்டும் அதுக்கு ஜீரணமாகாதுனு. சோ எதுமே குடுக்க தேவை இல்ல.

11. breastmilk insufficient-ஆ இருந்தா மட்டும் டாக்டர்-கிட்ட கேட்டுட்டு வேற என்ன பண்ணனும்னு முடிவு பண்ணுங்க. ஆனா குறைஞ்சு போகுதுனா அது முழுக் காரணமும் நீங்கதான். ஒழுங்கா சாப்பிட்டா எந்த பிரச்சினையும் இருக்காது. தாய்ப்பால் அதிகம் இருக்க என்னென்ன சாப்பிடலாம்?

  • மட்டன்
  • மீன்
  • பிரெட்
  • மில்க் ரஸ்க்
  • பீட்ரூட்
  • வெந்தயம்
  • வெந்தயக் கீரை
  • பாலக் கீரை
  • கத்தரிக்காய்
  • கோஸ்
  • பரோட்டா
  • ஆல் மைதா மாவு அயிட்டம்ஸ்
  • பாசிப்பயறு
  • சுண்டல்
  • பருப்பு வகைகள்
  • நிறைய லிக்விட் அயிட்டெம்ஸ்
12. அப்புறம் நீங்க மட்டன் சாப்பிட்டா குழந்தைக்கு சரியா ஜீரணம் ஆகாது. வயிறு வலிக்கும். கிரைப் வாட்டர் குடுனு எல்லாம் சொல்லுவாங்க. அதெல்லாம் எதுமே தேவை இல்ல. எக்காரணத்தக் கொண்டும் டாக்டர்ட்ட கேக்காமலோ தேவை இல்லாமலோ கண்ட மருந்தையும் குடுக்காதீங்க.

13. For your reference,

http://aappolicy.aappublications.org/cgi/content/full/pediatrics;115/2/496

அம்மா ஆனவங்களுக்கும், ஆகப் போறவங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்! :))))

Tuesday, January 18, 2011

ஹையா!அஞ்சு ரூபா மிச்சம் பண்ணிட்டேனே!!

எனக்கு சின்ன வயசுல இருந்து செடி வளத்தனும்னு ரொம்ப ஆசை. ஆனா நாங்க இருந்த வீட்டுல செடி வைக்கற மாதிரி இடமே இல்ல. தொட்டி வாங்கி வைக்கலாம்மா-னு சொன்னதுக்கு அடி விழாத குறை தான்.

நாய்குட்டி வளத்தலாமானு கேட்டதுக்கும் எங்கம்மா உன்னை வச்சு சாப்பாடு போடறதே பெரிய விஷயம். இன்னும் நாய்க்குட்டி வேறயானு தடா போட்டாங்க. அதெல்லாம் முடியாது எனக்கு வேணும்னு அடம் பண்ணினதுக்கு நாய் வளத்தினா அது டெய்லி மோஷன் போகும். அடிக்கடி யூரின் போகும். அதும் கண்ட இடத்துல போய் வைக்கும். நீதான் க்ளீன் பண்ணனும். பண்றியானு கேட்டாங்க. உடனே கண்ணு முன்னாடி நாய் பப்பி ஷேம் பண்ணி வச்ச மாதிரியும் அத நான் க்ளீன் பண்ற மாதிரியும் சீன் ஓடுச்சு. உவ்வே! Yuk!!(இந்த உவ்வே, Yuk எல்லாம் இப்ப பப்புக் குட்டி துணிய துவைக்கறப்ப வரதில்ல :))) அதுக்கப்புறம் அம்மாட்ட கேட்டதே இல்ல. கல்யாணத்துக்கப்புறம் ஒரு தடவை என் பழைய ஆபிஸ்(ஆபிஸ் மாறிட்டேனாக்கும்) புல்லெட்டின் போர்டுல 'Puppies for sale' அப்படினு ஒரு போஸ்ட பாத்ததும் சின்ன வயசு ஆசை மனசுல அப்படியே லைட்டா தூக்க அத அப்படியே என் வீட்டுக்காரருக்கு ஃபார்வார்ட் பண்ணினேன் இத வாங்கலாமான்ற request-டோட. உடனே ரிப்ளை. உனக்கு தான் நான் இருக்கேனே-னு. அப்படியே எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. வீட்டுக்கு போனதும் பாவமா முகத்த வச்சுக்கிட்டு அத வாங்கலாமேங்கனு கேட்டேன். அவர் அப்போதான் நான் சீரியஸா கேக்கறேனு தெரிஞ்சு வாங்கறது பெருசில்லடா. நாம அடிக்கடி ஊருக்குப் போவோம். அப்போ அத எங்க விட்டுட்டு போறதுனு கேட்டதும்தான் அவர் சொன்னது புரிஞ்சது. கஷ்டம்தான். அதோட அந்த ஆசைக்கு சமாதி கட்டியாச்சு.

அட! செடி பத்தி எழுத ஆரம்பிச்சு கடைசில ட்ராக்கு மாறி எங்கேயோ போயிட்டேன். பேக் டு த பாயிண்ட். சென்னை வந்ததும் ரோஜா செடி தொட்டி வாங்கி வைக்கணும்னு ஆசைப்பட்டேன். நாய்குட்டிக்கு சொன்ன கதையவே என் வீட்டுக்கார் சொல்லி என்னை ஆஃப் பண்ணிட்டார். ஒவ்வொரு தடவையும் எங்கத்தை சென்னை கொத்தமல்லி வாங்கறப்பவும் உரம் போட்டுடறாங்க. அதான் வாசமே இல்லாம இவ்ளோ பெருசா வளருது-னு ஃபீல் பண்றப்போ எல்லாம் நாம ஏன் கொத்தமல்லி செடி வளத்த கூடாதுனு நினைப்பேன். அது அப்படியே மறந்து போயிடும். கிறிஸ்துமஸ் டைம்ல நானும் என் வீட்டுக்காரும் மார்க்கெட் போயிருந்தோம். கொத்தமல்லி ஒரு கத்தை 10 ரூபானு சொன்னதும் எனக்கு நெஞ்சு வலியே வந்துடுச்சு. அண்ணே! என்ன இவ்ளோ விலை சொல்றீங்கனு கேட்டதுக்கு கிறிஸ்துமஸ் வந்துடுச்சு இல்ல பாப்பா (நோட் திஸ் பாயிண்ட்.. அவராதான் சொன்னாரு). எல்லாம் பிரியாணி பண்ணுவாங்க. அதான் இவ்ளோ ரேட்டுனு சொன்னார். அன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் உடனடியா ஒரு தொட்டி எடுத்து வந்து புதினா தண்ட எல்லாம் நட்டு வச்சு நடுல கொத்தமல்லி போட்டு புதைச்சு வச்சேன். ஒரு மூணு நாள் கழிச்சு புதினா தழைஞ்சது. ஆனா ரெண்டு நாள்ல அது காஞ்சு போயிடுச்சு :(( அப்றமா ஒரு வாரம் கழிச்சு கொத்தமல்லி தழைய ஆரம்பிச்சுடுச்சு. டெய்லியும் ரெண்டு நேரமும் மறக்காம தண்ணி ஊத்திட்டு இருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் வீட்டுக்கார்ட்ட டெய்லி நாலு தடவையாவது அஞ்சு ரூபா உங்களுக்கு மிச்சம் பண்ணிட்டேன் பாருங்கனு சொல்லிட்டே இருக்கேன். சீக்கிரம் ரோஜா செடி வாங்கணும் :)))

கீழ இருக்க படம் என்னோட கொத்தமல்லி செடிங்கதான்... கி.பி. 2007ஆம் ஆண்டு ஓசை செல்லா அண்ணா லால்பாக்ல நடத்தின ஃபோட்டோக்ராபி செஷன்ல ஃபர்ஸ்ட் பெஞ்ச்ல உக்காந்து தூங்கிட்டதால ஃபோட்டோஸ் சுமாராதான் இருக்கும் ஹி ஹி...



அடுத்து வெந்தயக் கீரை போடலாம்னு இருக்கேன் :))))

Sunday, August 29, 2010

வா வா என் தேவதையே!!

எனக்கு வாழ்க்கைல கிடைச்ச மிகப் பெரிய ப்ரொமோஷன் மிஸ்.ஜெயராஜ்-ல இருந்து மிஸஸ்.மோகன் பிரபு-வா பதவி உயர்வு வாங்கினது. என் அன்பு கணவரோட பாசத்துக்கும் காதலுக்கும் நான் அவருக்கு எதாவது கிஃப்ட் குடுக்க வேணாமா? அதுக்காக பொத்தி பொத்தி பாதுகாத்து பத்து மாதம் எனக்குள்ளேயே வச்சிருந்து போன ஜுன் 23ஆம் தேதி நைட் 10:14க்கு அவருக்கு ஒரு குட்டி தேவதைய கிஃப்ட்டா குடுத்திருக்கேன். இந்த கிஃப்ட்டால எனக்கு மறுபடியும் இன்னொரு ப்ரொமோஷன். அம்மா-ன்ற பதவி. அந்த ஃபீலிங்ஸ் செமயா இருக்கு. அனுபவிக்க மட்டும்தான் முடியும். யாராலயும் வார்த்தைகள்ல விவரிக்க முடியாது.

பொண் குழந்தை பிறந்தா அஞ்சலி-னு பேர் வைக்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனா விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரத்துல பிறந்த அவளுக்கு ந, நி, நு, நே-ல பேர் வைக்க சொன்னாங்க. நானும் பிரபுவும் நிலா-னு வைக்கலாமானு யோசிச்சோம். ஆனா எல்லாரும் வேணாம்னு சொல்லிட்டாங்க. பிரபுவோட கஸினோட பொண்ணு நிலா-னு சொன்னா எல்லாரும் moon-அ தான் பாப்பாங்க. baby-ய யாரும் பாக்க மாட்டாங்கனு சொல்லிட்டா. சரி நேஹா நல்லா இருக்குனு யோசிச்சோம். எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. இன்னும் பெஸ்ட்டா ட்ரை பண்ணலாம்னு இருந்தோம். கடைசில அது இது-னு யோசிச்சு 'நேஹா பிரபு'-னே வச்சுட்டோம்.

உடனே நீங்க எல்லாரும் ஆஹா! இம்சை இளவரசி-னு யோசிக்கறது எனக்கு நல்லாவே தெரியுது. அப்படி சொன்னிங்கனா எனக்கு கெட்ட கோபம் வரும். ஹி ஹி... இம்சை பேரரசி-னு சொல்லுங்க. அந்த அளவுக்கு மேடம் வேலை பண்ணிட்டு இருக்காங்க. நைட்டெல்லாம் தூங்கறதே இல்ல. சில நாட்கள்ல பகல்லயும் தூங்கறது இல்ல. நல்லா துரு துருனு வாலு குட்டியா வரும்னு எல்லாரும் சொல்றாங்க. எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். எவ்ளோ சுகவாசியா இருந்த. உன்ன நல்லா ட்ரில் வாங்கட்டும்னு. எங்கப்பா ஒருநாள் எங்கம்மாட்ட ஃபீல் பண்ணி சொன்னாராம். ஜெயந்தி இருந்த ஜாலிக்கு இப்போ ரொம்ப கஷ்டப்படுதுனு :((( சரி போகட்டும். என் பொண்ணுக்காகதானே.

இப்பல்லாம் நல்லா என்னையே பாக்கறா. க்யூட்டா சிரிக்கறா. இப்போ என் டைம் ஃபுல்லா அவள சுத்தியே நகருது. அவள பாத்தா எனக்கு பாட தோணற வரிகள்

"ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசைதான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன் மேல் மேகம்தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான்குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் புது மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இன்ப வெள்ளி தாரகை" - (அஞ்சலி அஞ்சலி பாடலிலிருந்து)

ஓகே ஃப்ரெண்ட்ஸ். கூடிய சீக்கிரம் வேற ஒரு போஸ்ட்ல மீட் பண்ணுவோம். பை.

Saturday, November 21, 2009

வச்சுட்டாங்கய்யா ஆப்பு!!

நான் பெங்களூர்ல இருந்தப்போ ஆசை ஆசையா ஒரு pepe jean வாங்கினேன். அதுல ரெண்டு இடத்துல கட் பண்ணி நூல் பிரிஞ்சு அதுல பின்க் கலர்ல ஜிக்ஜாக் அடிச்ச மாதிரி டிசைன் போட்டிருந்தாங்க. அத ரொம்ப ரசிச்சு வாங்கினேன். ஒரு தடவ ஊருக்கு போனப்ப அத துவைக்க எடுத்துட்டுப் போயிருந்தேன். நல்லா தூங்கிட்டு இருந்த என்னை எங்கம்மாவோட அதிர்ச்சியான குரல் எழுப்புச்சு. அவசரமா எழுந்து என்னங்கம்மா என்ன ஆச்சுனு பதறிப் போயிக் கேட்டா எங்கம்மா அந்த jean-அ கைல எடுத்துட்டு வந்தாங்க. கண்ணு உனக்கு விவரமே தெரிய மாட்டேங்குது. இப்படி ஏமாந்துப் போயி வந்திருக்கன்னாங்க. என்னடா இது புது குழப்பம்னு தெளிவா சொல்லுங்கனு சொன்னதும் அந்த jean-அ உள்பக்கமா திருப்பி காட்டினாங்க. பிரிச்சு விட்டிருந்த நூல் மேல மேல பிரியாம இருக்கறதுக்காக உள்பக்கமா துணி குடுத்து தச்சிருந்தாங்க. அதக் காட்டி பாரு இவ்ளோ விலைக் குடுத்து ஒட்டுப் போட்ட துணிய வாங்கிட்டு வந்திருக்கனு சொன்னாங்களே பாக்கலாம். எனக்கு வந்த கடுப்புக்கு அளவே இல்ல. அம்மா இல்லம்மா. இது டிசைன் அப்படி. அது இன்னும் பிரியாம இருக்கறதுக்காக அப்டி தச்சிருக்காங்கனு அவ்ளோ தூரம் எடுத்து சொல்றேன். அன்னைக்கு வீட்டுக்கு வந்த எங்கத்தைக்கிட்ட புலம்பறாங்க. பெங்களூர் போயி என்ன ஆச்சுனே தெரில. ஒட்டுப் போட்ட துணிய எல்லாம் அவ்ளோ விலைக் குடுத்து வாங்கிட்டு இருக்குனு. எப்படியோ எல்லார்ட்டயும் புலம்பி என் மானத்த வாங்கிட்டாங்க :(

------------ooOoo------------

சென்னை வந்த புதுசுல என் ஆருயிர் தோழி வீட்டுக்கு வந்தா. அவளுக்கு கொஞ்ச நாள்ல கல்யாணம். பர்ச்சேஸ் போகணும்னு சொன்னா. அவளுக்கு சலங்கை வச்ச மெட்டி மேல ரொம்ப ஆசை. அந்த மாதிரி எங்க ஊர்ல எல்லாம் கிடைக்காது. அதனால இங்க வாங்கணும்னு சொன்னா. ரெண்டு பேரும் கிளம்பி டி.நகர் GRT போனோம். அந்த கடைல எங்க ஆபிஸ் மக்கள்ஸ்க்கு 5% டிஸ்கவுண்ட் உண்டு(குறிப்பிட்ட சிலதுக்கு மட்டும். அதும் செய்கூலிலயோ என்னவோ). அதனாலதான் அங்க அவளக் கூட்டிட்டுப் போனேன். அங்க போயி சூப்பரா ஒரு மெட்டி செலக்ட் பண்ணிட்டோம். அந்த செக்ஷன்-ல இருந்தவரு பில் போட ஆரம்பிச்சார். நான் உடனே எங்க ஐடி கார்ட காட்டி எங்களுக்கு 5% டிஸ்கவுண்ட் இருக்குனு பெருமையா சொன்னேன். அவர் 125 ரூபாய்னு பில் போட்டு அதுல டிஸ்கவுண்ட் 25 ரூபா போட்டிருந்தார். போட்டவர் சும்மா இருக்காம இப்ப வெள்ளிக்கு செய்கூலி சேதாரம் எல்லாம் இல்லாம குடுக்கறோம். அதான் 25 ரூபா கம்மினு சொன்னாரு. எனக்கு வந்ததே கோபம். அப்போ எங்களுக்கு குடுக்க வேண்டிய 5% எங்கனு சண்டைப் போட்டேன். ஒரு 10 நிமிஷ சண்டைக்கு பிறகு 90 ரூபாய்க்கு குடுத்தார். எனக்கு ஒரே சந்தோஷம். அன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் என் வீட்டுக்கார்ட்ட அன்னைக்கு என்னைப் பாத்து சிரிச்சீங்களே. இன்னைக்கு பாருங்க எப்படி பேரம் பேசினேனு சொல்லி நடந்ததை எல்லாம் சொல்லி பெருமையா அவர் முகத்த பாக்கறேன். அவர் விழுந்து விழுந்து சிரிக்கறார். எனக்கு சப்புனு போச்சு. ஏண்டி அவன் எல்லாம் தினமும் கோடிக் கணக்குல டர்ன் ஓவர் பண்றான். அவன்ட்ட போயி 125 ரூபாய்க்கு வாங்கிட்டு பத்து ரூபாய்க்கு பத்து நிமிஷமா சண்டைப் போட்டிருக்கனு சிரிக்கறாரு. எனக்கு ஒரே அவமானம். மறுபடியும் சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டோமானு கம்முனு இருந்துக்கிட்டேன் :((

------------ooOoo------------

ஒரு நாள்ல வீட்டுல ஜாலியா உக்காந்து TV பாத்துட்டு இருந்தேன். திடிர்னு எங்கம்மாவும் பக்கத்து வீட்டக்காவும் பேசற சவுண்டு கேட்டுச்சு. சரி என்ன பேசறாங்கனு கொஞ்சம் காது குடுத்துக் கேட்டேன். பக்கத்து வீட்டக்கா பாருங்க இப்பல்லாம் வீட்டுல வேலை செய்ய வரவங்க எல்லாம் ஒழுங்காவே செய்ய மாட்டேங்கறாங்க. உங்க வீட்டுக்கு துவைக்க வர அம்மா கூட அப்டிதான் போல. பேண்ட்ட ஒழுங்கா உதறிக் கூட காயப் போடாம போயிருக்காங்க-னு என் பேண்ட்டைக் காட்டி சொல்லிட்டு இருந்தாங்க. உடனே வேகமா எங்கம்மா இல்லம்மா. அந்த பேண்டே அப்டிதான். பாவாடை மாதிரி ரொம்ப பெருசா இருக்குன்னாங்க. அவங்க ஆச்சரியமா அப்படியா என்ன பேண்ட் அதுனு கேக்கவும் எங்கம்மா அது ஏதோ பாட்டி பேண்ட்டாம்னு சொன்னாங்க. எனக்கு அப்டியே புஸுபுஸுனு வந்துச்சு. உடனே வேகமா எழுந்துப் போயி அய்யோ அம்மா அது பாட்டி பேண்ட்டும் இல்ல. பேத்தி பேண்ட்டும் இல்ல. பாட்டியாலா பேண்ட்டு-னு கத்தினேன். இன்னமும் எங்கம்மா அத பாட்டி பேண்ட்டுனேதான் சொல்லி சொல்லி என்னை வெறுப்பேத்தறாங்க :(((

------------ooOoo------------

போன செப்டம்பர்ல பெங்களூர் போயிருந்தோம். அவர் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தோம். போற அன்னைக்கே ஃபீவர் வந்துடுச்சு. மாத்திரை எல்லாம் போட்டு சரியாயிடுச்சுனு நினைச்சு தைரியமா போயிட்டேன்(அங்க போயி நிறைய ட்ரெஸ் எடுத்து தரேனு சொல்லி இருந்தார். அதான் ;)))) ஆனா ட்ரெயின்லயே நல்லா ஃபீவர் வந்துடுச்சு. அங்கப் போயி அடுத்த நாள் காலைல பக்கத்துல இருந்த ஹாஸ்பிட்டல்க்கு 2 பேரும் கூட்டிட்டுப் போனாங்க. அங்க போனா 1 வாரமா ஃபீவர் இருக்கு. 2 பாட்டல் ட்ரிப்ஸ் இறக்கணும்னு குண்டத் தூக்கிப் போட்டாங்க. அடக் கடவுளே! 2 பாட்டலானு நான் ங-னு முழிச்சிட்டு இருந்தேன். என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு அவங்க டாக்டர் அத்தைக்கு ஃபோன போட்டாங்க. அவங்க அவ தண்ணியே ஒழுங்கா குடிச்சிருக்க மாட்டா. அதான் டெம்ப்ரேச்சர் ஜாஸ்தி ஆயிருக்கும்னு சொல்லி ஒரு மாத்திரை குடுத்து அடிக்கடி எலக்ட்ரால் குடுக்க சொன்னாங்க. அன்னைக்கு மாதிரி நான் வாழ்க்கைல தண்ணிக் குடிச்சதே இல்ல. அன்னைக்கு நல்லானேன்.அடுத்த நாள் திருப்பி ஃபீவர் வந்துடுச்சு. இப்படியே இருக்கேனு என் வீட்டுக்கார் என் பக்கத்துல உக்காந்து கவலையாப் பாத்துட்டு இருந்தார். பாக்கவே ரொம்ப பாவமா இருந்துச்சு. சரி நாம இது வரைக்கு ஆராய்ந்து அறிந்த அரிய உண்மைய சொல்லிடலாம்னு ஏங்க-னு ஆரம்பிச்சேன். எனக்கு ஏன் ஃபீவர் வந்துச்சுனு ரீஸன் கண்டுபிடிச்சிட்டேன்னு ஆர்வமா பாத்தேன். அவரும் ஆர்வமாயி ஏன்னு கேட்டார். போன தடவை ஊருக்குப் போயிட்டு வந்ததும் என்ன சொன்னேன்? அவரும் ரொம்ப யோசிச்சு தெரியலையேனு சொன்னார். போங்க நீங்க. உங்ககிட்ட எது சொன்னாலும் மறந்துடுவீங்கனு சலிச்சிக்கிட்டு போன தடவை ஊருக்கு போனப்போ ஜாதகம் பாக்கப் போனேன் இல்ல. அந்த ஜோசியர் என்ன சொன்னாருனு கேட்டதும் முறைக்க ஆரம்பிச்சார். எனக்கு அஷ்டம சனி முடியுது இல்ல. அதான் இப்படி பாடாபடுத்துது. வேற ஒண்ணும் இல்லனு சந்தோஷமா சொல்றேன். அவரு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு. இதுல மடச்சினு எனக்கு பேரு வேற :(((( உண்மைய சொன்னா நம்பணும். சரி இதனால எல்லாருக்கும் நான் சொல்ல வரது என்னன்னா எல்லாரும் நல்லா தண்ணிய ஐ மீன் வாட்டர குடிங்க... குடிங்க... குடிச்சிட்டே இருங்க...
எனக்கு அப்டிதான் ஃபீவர் சரியாச்சு. இப்பல்லாம் நல்லா தண்ணி குடிக்க ஆரம்பிச்சிட்டேன் :)))

Sunday, October 4, 2009

புரிந்துக் கொள்ளத் தவறிய உறவுகள்!


"இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அவர் எனக்குப் போட்ட லெட்டர்ஸ்" வெட்கத்துடன் என்னிடம் நீட்டிய பிரியாவின் முகம் என் கண்முன்னே வந்துப் போனது. எவ்வளவு நெருக்கமாய் நினைத்திருந்தால் எந்த தயக்கமுமின்றி அக்கடிதங்களை என்னிடம் படிக்கக் கொடுத்திருப்பாள். எண்ணும்போதே கடகடவென கண்களில் கண்ணீர் வழிந்தது. அதை துடைக்கக் கூட திராணியின்றி அமர்ந்திருந்தேன்.

"அப்போ அவர் நிறைய கவிதை எல்லாம் எழுதி அனுப்புவார். படிக்கறப்போ ரொம்ப அருமையா கவிதை எழுதறார்னு எனக்கு அப்படியே பெருமையா இருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு பாட்டுக் கேட்டப்போதான் இவரு குட்டு தெரிஞ்சது. எப்பயோ வந்த பாட்டுல நடுல இருந்து லைன்ஸ் எடுத்து எழுதி அனுப்பியிருக்காரு. அண்ணன் தங்கச்சி எல்லாம் ஒரே மாதிரிதான" என்று வழக்கமாம் போல அவரது தங்கையாய் நான் எடுத்துக் கொண்ட உரிமையை வைத்து என்னையும் சேர்த்து கிண்டலடித்தாள். வழக்கமான நலம் விசாரிப்புகளுடனும் நீயின்றி போனால் உயிர் வாழ மாட்டேன் என்ற அந்த வயதிற்குரிய காதல் மொழிகளுடன் எழுதப் பட்டிருந்த கடிதத்தைப் படித்து விட்டு அவளது கிண்டலால் விளைந்த புன்னகையுடன் திருப்பிக் கொடுத்ததும் ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது.

மூன்று வீடுகளைக் கொண்ட காம்பவுண்டில் எங்கள் வீட்டருகே எட்டு மாதக் கைக்குழந்தையுடன் குடி வந்த அவளுக்கும் எனக்கும் ஒரே வயதென்பதாலோ என்னவோ என்னுடன் நெருங்கிப் பழகினாள். கல்லூரி விடுமுறையில் மட்டுமே வரும் நான் அவளுடனேயே இருப்பேன். எனதுக் கல்லூரிக் கதைகளையும் ஒன்று விடாமல் சொல்வேன். அவளுக்கு அத்தைப் பையனுடன் வந்த காதல் பற்றியும், பன்னிரெண்டாவது படிக்கும்போதே வேறு சில பிரச்சினைகளால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதையும், புகுந்த வீட்டுப் பிரச்சினைகளால் தனிக்குடித்தனம் வந்ததுப் பற்றியும் பகிர்ந்துக் கொள்ள அவளுக்கு நான் மட்டுமே உற்றத் தோழியாய் இருந்தேன் போலும். எவ்வளவு இருந்தும் என்ன ஆயிற்று?

உனக்கு எதாவது ஒன்று ஆகி விட்டால்... எனக்கு ஆயிரம் தோழிகள் கிடைக்கலாம். ஆனால் உன்னைப் போலொரு மனதிற்கு நெருக்கமான உறவின் இழப்பு என்றும் ஈடு செய்ய முடியாததுதானே. ஏனடி இப்படி செய்தாய்? உள்ளுக்குள் எரிமலையாய் வார்த்தைகள் வெளிவராமல் குமுறிக் கொண்டிருக்க கண்கள் கண்ணீரை மட்டும் நிறுத்தாமல் உற்பத்தி செய்துக் கொண்டிருந்தது. அனைவரையும் பார்த்து பயந்து அத்தை மடியில் நிம்மதியாய் இருப்பதாய் எண்ணி உறங்கும் சூர்யாவின் தலையை கைகள் அனிச்சையாய் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தன.

கம்ப்யூட்டர் வகுப்பில் இருந்தபோது ஃபோன் செய்து அருணுக்கும் பிரியாவிற்கும் ஏற்பட்ட பிரச்சினையால் அவள் மருந்துக் குடித்து மருத்துவமனையில் சேர்த்தப்பட்டிருப்பதாக அம்மா கூறியபோது கோபமாய் வந்தது. இதற்கு முன்பு நெருக்கமானவர் யாரேனும் மருந்துக் குடித்து மருத்துவமனையில் சென்று நாள் முழுதும் அழுதிருந்தால்தானே தெரியும். சாதரணமாய் ஏதோ செய்து விட்டாள். காப்பாற்றியிருப்பார்கள். போனதும் இரண்டு அறை விட்டு ஏனடி இப்படி செய்தாய் என்று கூற வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டல்லவா கிளம்பினேன். வழியெல்லாம் அருண் அண்ணாவின் மீது எக்கச்சக்க கோபம் வந்தது. போனதும் பார்த்து கண்டபடி திட்ட வேண்டும் என்றும் முடிவெடுத்துக் கொண்டு வந்தேன்.

ஆனால்... என் ஆருயிர் தோழி மூச்சு விடவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாளாம். கேட்டபோது நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. ICU-வின் கதவருகிலேயே கத்திக் கதறிக் கொண்டிருந்த அருணைப் பார்த்த போது எனது உயிரைப் பிசைவது போல இருந்தது. யாரைக் குற்றம் சொல்வது? அன்று இரவு குழந்தை அழுகிறான் என்று வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு வந்து விட்டேன். அழுதபடி தோளில் உறங்கிய அவனைப் பார்க்க பார்க்க அழுகைப் பொங்கியது. அம்மா இல்லாமல் வளர நேரிடுமோ என் செல்லமே! அடுத்த நாள் காலையிலேயே மருத்துவமனைக்கு ஓடிய எனக்கு நல்ல நேரம் போலும். உடல் நிலையில் இப்பொழுது சிறிது முன்னேற்றம் உள்ளது என்ற செய்திக் கிடைத்தது. நிம்மதியுடன் அம்மாவுடன் அருகிலிருந்த ஹோட்டலுக்கு சாப்பிடப் போனேன். அங்கே பிரியாவின் தங்கை...

"எங்கம்மாவுக்கு என்னையும் தங்கச்சியையும் விட தம்பியதான் ரொம்ப பிடிக்கும். அவனுக்குதான் எல்லாமே செய்வாங்க. அவனுக்கும் எங்க மேல பாசமே கிடையாது. நானாவது இப்போ நல்லா இருக்கேன். பாவம் தங்கச்சி" என்று அவள் வரும்போதெல்லாம் அவளுக்கு பிடித்ததை செய்து கொடுத்தவள் சாகக் கிடக்கிறாள். திருமணமாகி ஒரே வாரம் முடிந்த புதுப் பெண்ணாய் அலங்காரம் கலையாமல் வந்து அமைதியாய் அவள் கணவனின் அருகில் அமர்ந்திருந்த அவளது தங்கையைக் கண்டதும் எனக்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது. ச்சே! என்ன மனிதர்கள்... அவள் இப்படியெல்லாம் சொன்னதாலோ என்னவோ எனக்கும் பிடிக்காமல் போன அவள் தம்பியை நான் இதுவரை கவனிக்கவே இல்லை. சாப்பிட்டுத் திரும்பியதும் எனது கண்கள் தானாக அவனைத் தேடியது. அருணின் அருகில் அமர்ந்து கலங்கிய கண்களுடன் அவன். மனிதர்களை கணிக்கத் தெரியவில்லை அவளுக்கு. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் வெள்ளை உள்ளம் கொண்டவளுக்கா இந்த நிலைமை? கண்கள் மூடி அப்படியே அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அன்று ஓரளவு பரவாயில்லை என்ற தகவலே கிடைத்ததால் லேசான நிம்மதியுடன் வீட்டிற்குச் சென்றேன். இரண்டு நாட்களாய் சரியாய் உறங்காததாலும், தொடர்ந்த அழுகையாலும் அப்படியே உறங்கிப் போனேன். காலையில் வெகு நேரம் கழித்து எழுந்ததால் பதினொரு மணிப் போல் மருத்துவமனைக்குச் சென்றேன்.

உள்ளே நுழைந்ததும் அருண் அவசரமாய் என்னிடம் ஓடி வந்து ப்ளட் க்ரூப் என்ன என்றுக் கேட்டார். எனக்குத் தெரியாதே என்று நான் சொல்லவும் அவசரமாய் என்னை அழைத்துச் சென்று இரத்தப் பரிசோதனை நடக்குமிடத்தில் விட்டு பரிசோதனை செய்ய சொன்னார். என்னவாயிற்று என்று அருகிலிருந்தவரிடம் கேட்டபோது பிரியாவிற்கு உடனடியாய் ரத்தம் வேண்டுமாம். பல்ஸ் குறைந்து கொண்டே வருகிறது. ரத்தம் கிடைக்கவில்லையென்றால் காப்பாற்ற முடியாது என்று கையை விரித்து விட்டார்கள் என்று அவர் கூறியதில் தோன்றிய வலியில் நர்ஸ் கையில் ஊசியால் குத்தியது தெரியவில்லை. அவ ப்ளட் க்ரூப் என்ன என்று அவசரமாய் கேட்டேன். AB நெகட்டிவ் என்றார். கடவுளே! என்னுடையது AB நெகட்டிவாய் இருக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொண்டிருக்கும்போதே உங்களுடையது A1 பாசிட்டிவ் என்ற பதில் கிடைத்தது. என்ன ஆகுமோ என்ற பயம் உள்ளுக்குள் பரவ ICU-வின் முன்னால் வந்து அமர்ந்தேன். அதற்கு மேல் யாரும் மருத்துவமனையில் அழ வேண்டாம் என்று நினைத்தாளோ என்னவோ... என் தோழி முடிந்துப் போய் விட்டாள் என்ற செய்தி வந்தது. எங்கிருந்து அப்படியோர் அழுகை வந்ததென்றே தெரியவில்லை. அதுபோல் என் வாழ்வில் நான் கதறி அழுததேயில்லை. அருண் இருந்த பக்கம் நான் திரும்பவே இல்லை. திரும்பும் துணிவும் எனக்கு இல்லை. அனைவரும் சூர்யாவைப் பார்த்து அழவும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தபடி நின்றிருந்தவனை வாரியெடுத்து வெளியில் கொண்டு சென்றேன். அவளது உடலை வெளியே எடுத்துட் செல்கையில் அனைவரும் கதறியழ அவளது தங்கை மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் அமைதியாய் நின்றிருந்தாள். எனக்கோ உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது. சூர்யாவையும் அருணையும் அருணின் அம்மா அப்பா அழைத்துச் சென்று விட்டார்கள்.

அதன் பின் இரண்டு நாட்களாய் அழுதுக் கொண்டிருந்த என்னிடம் அவர்கள் வீட்டைக் காலி செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனது தாயார் சொன்னதும் ஓடிச் சென்றேன். அந்த வீட்டிற்குள் நுழையும் தைரியமில்லாமல் வெளியே நின்றிருந்தேன். வீட்டைக் காலி செய்து பூட்டி விட்டு அனைவரும் சென்றதும் அவளது தம்பி அந்தக் கதவைப் பிடித்தபடியே இமைக்காமல் உள்ளுக்குள் பார்த்துக் கொண்டிருந்தான். "சங்கர்" என்று அவனை அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பியவன் விழிகள் முழுவதும் நிரம்பியிருந்தது. துடைக்க துடைக்க வழியும் கண்களைத் துடைத்துக் கொண்டே வீட்டை திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே அவன் சென்றது இன்னும் என் கண்களுக்குள் இருக்கிறது.

பி.கு: இது கதை போல் இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. ஆனால் உண்மையாக இது எனது அனுபவம். எத்தனையோ ஜாலியான அனுபவங்கள் எழுதினேன். இது போல் ஒரு சோகமான தருணம் இது வரை என் வாழ்க்கையில் வந்ததே இல்லை. வெகு நாட்களாய் அவளை எண்ணி எண்ணி அழுது கொண்டேயிருந்த எனக்கு இப்பொழுது நினைத்தாலும் அழுகை வந்து விடுகிறது :((( தற்கொலையின் கோரமான விளைவுகளை கண்ணெதிரில் பார்த்ததிலும் நெருங்கிய தோழியின் மரணத்தை நேரில் கண்ட சோகத்திலும் விளைந்த பதிவு இது.

Thursday, September 17, 2009

கா for கா... த... ல்...



காதல்... இந்த மூணெழுத்து வார்த்தை நம்மளப் படுத்தறப் பாடு இருக்கே... அப்பப்பா... சொல்லி மாளாது... உடனே நீ இன்னும் திருந்தலையானு கேக்காதீங்க? ;) திருந்தலையானு கேக்கற அளவுக்கு அது என்ன அவ்ளோ பெரிய கொலைக்குத்தமா என்ன? ஹி... ஹி... இப்படில்லாம் கேப்பேனு நினைச்சிங்களா? வவ்வவ்வவே... நீங்க என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லயே... :P

சரி விஷயத்துக்கு வருவோம். ஆக்சுவலா இத போன போஸ்ட்ல சமீபத்திய ஃப்ளாஷ்பேக்-னு போட்டு எழுதணும்னு நினைச்சேன். அத எழுதும்போது மறந்துப் போயிட்டேன். வயசாவுதுல்ல ;)

வீட்டுல என் இம்சை தாங்க முடியாம எங்கப்பா என்னைக் கொண்டுப் போய் ஹாஸ்டல்ல தள்ளிட்டார். அங்க ஒரு பட்டாளமே சேர்ந்து கும்மியடிச்சுட்டு இருந்தோம். அதுல ஒருத்திக்கு 9th படிக்கறப்ப இருந்தே லவ்வு. அதும் அவ அத்தைப் பையன் மேல. அவ அதேப் பையனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு பெங்களூர்ல செட்டில் ஆயிட்டா இப்போ. எங்க கேங்-ல இன்னொருத்தி இருந்தா. அவளோட அத்தைப் பையன் அவள லவ் பண்றானோனு எங்களுக்கெல்லாம் ஒரு டவுட். அவன டவுட் பண்ணியே இவ அவன லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா. அதுல எங்களுக்கெல்லாம் டென்ஷன் ஆக ஆரம்பிச்சது. வேறேன்ன? எப்படியாவது இவங்கள சேத்து வைக்கணுமேன்ற கவலைதான். அதுக்கு ஃபர்ஸ்ட் அவன் இவள லவ் பண்றான்னு கன்ஃபார்ம் பண்ணனும். அவளுக்கு பொலம்பறதே வேலையாப் போச்சு. எப்பப் பாத்தாலும் கண்ணக் கசக்கிட்டே அவன் என்னை லவ் பண்றானானு தெரியலை. அவன் நோ சொல்லிட்டா அப்புறம் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேனு அவங்க செத்துப் போன பாட்டி மேலல்லாம் சத்தியம் பண்ணினா. சோ அத தெரிஞ்சுக்க உடனடியா செயல்ல இறங்கணும்னு ஒரு சனிக்கிழமை தீர்மானிச்சோம்.

அந்த 9th லவ் பொண்ணு அவ கசின்க்கு ஸ்டடி ஹாலிடேஸ். சோ இவ கசின்க்கும் கண்டிப்பா ஸ்டடி ஹாலிடேஸ் இருக்கும்னு நாங்களா முடிவுப் பண்ணிக்கிட்டோம். சரி இவள எப்படி வீட்டுக்கு அனுப்பறது? எங்க ஸ்கூல்ல பேரண்ட்ஸ் வந்து கையெழுத்துப் போட்டுதான் கூட்டிட்டுப் போகணும். வீட்டுக்குப் போறதுக்கு எதாவது ஸ்ட்ராங் ரீசன் இருக்கணும். எல்லாரும் ரவுண்டுக் கட்டி யோசிச்சோம். மஞ்சள் காமாலை வந்துடுச்சு, ஒரே நெஞ்சு வலியாவே இருக்கு - இப்டில்லாம் நான் சொன்ன நல்ல நல்ல யோசனையெல்லாம் ரிஜக்ட் பண்ணிட்டாளுங்கன்ற கோவத்துல என்னதான் சொல்லப் போறாளுங்கன்னு நானும் வேடிக்கைப் பாத்துட்டு இருந்தேன். அவளும் என்ன பண்றதுன்னே தெரியாம சோடாப்புட்டிக் கண்ணாடிக்குள்ள உருட்டி உருட்டி முழிச்சிட்டு இருந்தா. அப்போதான் அந்த இன்னொரு லவ் பண்ற பொண்ணு உன் கண்ணாடியக் கழட்டிக் கொடுடினு சொன்னா. நாங்க எல்லாம் இப்ப எதுக்கு இதக் கேக்கறானு ஆச்சர்யமாப் பாத்தோம். அத வாங்கி கண்ணாடிக்கும் கண்ணாடிய காதுல மாட்டறதுக்கு இருக்கற கம்பிக்கும் உள்ள தொடர்ப துண்டிச்சா. அட அதாங்க அது ரெண்டையும் ஜாயிண்ட் பண்ற ஸ்க்ரூவக் கழட்டினா. போய் HM-ட்ட கண்ணாடி உடைஞ்சுடுச்சுனு சொல்லி அப்பாவ வர சொல்லு. இங்கயே கடைலக் குடுத்து சரி பண்ணிக்கலாமேனு சொல்லுவார். இல்ல இப்ப பவர் செக் பண்ணி மாத்தணும்னா ஒரேடியா மாத்திட்டு வந்துடுவேன். அதே டாக்டர்ட்டதான் பாக்கணும்னு சொல்லுனு சொல்லிக் குடுத்தா. நாங்கெல்லாம் கைத் தட்டாத கொறதான். எவ்ளோ சூப்பர் ஐடியா இல்ல? ஆனா காதலிக்கறவங்களுக்குதான்பா இப்படியெல்லாம் எடக்கு முடக்கா ஐடியா எல்லாம் தோணும் ;)

நம்மாளு நேரா HM ரூமுக்கு போனா. நாங்களும் கூடவேப் போய் HM ரூமுக்கு வெளில நின்னுட்டு இருந்தோம். அவர் அவ சொன்ன மாதிரியே இங்கயேக் குடுத்து சரி பண்ணிக்கலாமேனு கேட்டார். இவ கோழி திருடுனவ மாதிரி திரு திருனு முழிச்சுட்டே இல்ல பவர் செக் பண்ணனும் அப்டினு அவ சொல்லி குடுத்த மாதிரியே உளறிக் கொட்டினா. ஹூர்ர்ரேரே... எங்க ப்ளான் சக்ஸஸ். அவ வீட்டுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லிட்டாங்க. அம்மணியும் டிப்டாப்பா கிளம்பிப் போனாங்க. நாங்க எப்படா திங்கக்கிழமை வரும். அவன் என்ன பதில் சொல்லிருப்பான்? ஆமானு ஒத்துக்கிட்டு இருப்பானோ இல்ல நோ சொல்லி இருப்பானோ. அவன் நோ சொல்லிட்டா இவ என்ன பண்ணுவா இப்படி பல விதமா யோசிச்சு ஞாயித்துக் கிழமைய நகத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.

ஒரு வழியா திங்கள் கிழமை காலைல வந்து சேர்ந்தா. அவ அப்பாவுக்கு டாடா பை பை எல்லாம் சொல்லி அனுப்பி வச்சு வேகமா அவள ரூமுக்கு இழுத்துட்டு வந்து என்னடி ஆச்சுன்னு கேட்டா பெக்க பெக்கனு சிரிக்கறா. ஞாயித்துக் கிழமை எங்களுக்கு இருந்த டென்ஷன்க்கு BPயே வந்திருக்கணும். நாங்க அவ்ளோ டென்ஷனா இருக்கோம். அந்த குப்பிக் கழுதை ஊருக்குப் போய் ஆட்டுக்கால் சூப்பும் கோழி பிரியாணியும் தின்னுட்டு புதுப் படம் ரெண்டுப் பாத்துட்டு வந்துட்டேனு கூலா சொல்லுது. எல்லாம் சேர்ந்து நல்லா மொத்தி எடுத்தோம். அவனுக்கு செமஸ்டர் எக்ஸாம் நடக்குதாம். அவன் வீட்டுக்கு வரலைனு எங்கத்த சொன்னாங்க நான் என்னடிப் பண்ணட்டும்னு அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு கேட்டா. போய் தொலை. நீயுமாச்சு உன் லவ்வுமாச்சுனு விட்டுட்டோம்.

அதுக்கப்புறம் அவ லவ்வ சொல்லி அவன் ஒத்துக்காமப் போயி கடைசில ரெண்டும் சண்டைக் கட்டிக்கிட்டு திருப்ப சமாதானம் ஆகி... இந்த விஷயம் வீட்டுக்குத் தெரியாம வீட்டுலயேப் பேசி முடிச்சு அவங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. இப்ப குழந்தைக் குட்டியோட சந்தோஷமா இருக்கா :)))

ஆனாப் பாருங்க. லவ் பண்றவங்கள விட லவ்வுக்கு ஹெல்ப் பண்றவங்க படற பாடு இருக்கே. அப்பப்பா... எனக்கு நிறைய அனுபவம் உண்டு. இது நாடோடிகள் படம் பாத்ததும் ஞாபகத்துல வந்துச்சு. இதே மாதிரி ஹெல்ப் பண்ணப் போய் பல்பு வாங்கின கதை இருந்தா ஷேர் பண்ணுங்க (அடுத்தவங்க பல்பு வாங்கினத கேக்கறதுலதான் என்ன சுகம் என்ன சுகம் ;))))

Wednesday, September 2, 2009

ச்சும்மா...

என்னத்த எழுதறதுன்னு ஒரு மண்ணும் தோண மாட்டேங்குது... சரி நம்ம லேட்டஸ்ட் சரித்திரத்த எழுதலாம்னு வந்துட்டேன். பதிவ படிக்கப் போறீங்களா? இனி உங்கள அந்த ஆண்டவனாலக் கூட காப்பாத்த முடியாது... கிகிகிகிகிகி...

சமீபத்திய சந்தோஷம்:
==========================================================

புதுசா எக்லெஸ் கேக், பிஸ்கட் புட்டிங், போலேநாத் வண்டில பாதாம் கீர்-னு விப்பாங்க இல்ல அது எல்லாம் செய்ய கத்துக்கிட்டேன். நான் செஞ்ச கேக்க எங்க ஆபிஸ்ல கொண்டு போய் குடுத்ததும் என் டீம்மேட் நல்லா இருக்கேனு கேட்டு ரெசிப்பி எல்லாம் வாங்கிட்டுப் போய் அவனும் செஞ்சுப் பாத்தான். நான் செஞ்சத விட அவன் செஞ்சது ரொம்ப சூப்பரா இருந்துச்சு. ஹி ஹி... சொல்லிக் குடுத்த நமக்கு இத விட வேற என்ன வேணும்.

சமீபத்திய துக்கம்:
==========================================================

என்ன ட்ரை பண்ணியும் அவன் செஞ்ச கேக் மாதிரி எனக்கு செய்ய வரமாட்டேங்குது. அதனால என் வீட்டுக்கார்ட்ட நம்ம வீட்டு microwave oven தான் சரி இல்லனு ஏமாத்தி வச்சிருக்கேன். ஹி ஹி...

சமீபத்திய பாராட்டு:
==========================================================

என் ஆபிஸ் நண்பரிடம் நேற்று சொன்னது:

கடுகு கருவப்பில்ல தாளிச்சு, தக்காளிய வெட்டிப் போட்டு புளியக் கரைச்சு ஊத்தி ஒரு கொதி விட்டா ரசம். இது ஒரு பெரிய வேலையா? சாதத்த மத்துப் போட்டு நல்லாஆஆஆ கடைஞ்சு அதுல பாலை ஊத்தி மறுபடியும் கட்டி விழாம நல்லாஆஆஆக் கடைஞ்சு அதுல தயிறு கொஞ்சம் ஊத்தி மறுபடியும் கட்டி விழாம நல்லாஆஆஆக் கடைஞ்சு, அதுல கொத்தமல்லி தழை வெட்டிப் போட்டு, இஞ்சி கட் பண்ணிப் போட்டு தயிர்சாதம் செய்யறது எவ்ளோ பெரிய வேலை??

அதுக்கு அவர் சொன்னது:

ஆனா பேச்சுலயே ரசம் வைக்கறது ஈஸி தயிர்சாதம் செய்யறது ரொம்ப கஷ்டம்னு அடுத்தவங்கள நம்ப வைக்க உங்களால மட்டும்தாங்க முடியும்

:))))))))))))

சமீபத்திய ஆப்பு:
==========================================================

எங்க யூனிட்ல எல்லாருக்கும் யூனிட் பேரு போட்டு கைல போட்டுக்கற பேண்ட் ஒண்ணு கொடுத்தாங்க. பெருசா இருக்கேனு கைல வச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ அங்க வந்த ஒரு நார்த் இண்டியன் ஃப்ரெண்ட் அத பிடுங்கி அவன் கைலப் போட்டுக்கிட்டான். ரெண்டு நாள் கழிச்சு அவன் கைல அத பாத்துட்டு அவன ஓட்டணும்னு நினைச்சு என்னது இது? சிங்குச்சா சிங்குச்சா மஞ்ச கலரு சிங்குச்சா-னு கேட்டேன். உடனே அவன் இத ஒரு பைத்தியம் குடுத்துச்சுனு சொன்னான். உடனே வேகமா நான் குடுக்கல-னு சொல்ல ஆரம்பிச்சேன். அவன் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டான். அப்போதான் நானே ஒத்துக்கிட்டேனேனு எனக்குப் புரிஞ்சது :(((( ஆக்சுவலா நான் இதக் குடுக்கல நீயாதான் பிடிங்கிக்கிட்டனு அவன ஓட்ட நினைச்சு சொல்ல ஆரம்பிச்சேன். எனக்கே ஆப்பாயிடுச்சு :(((( பாருங்க எவ்ளோ அப்பாவிப் பொண்ணு நான்...

சமீபத்திய ஃபீலிங்:
==========================================================

இப்ப அடிக்கடி இந்த FM-ல பேப்பர் வாழை இலைக்கு விளம்பரம் போடறாங்க. அதக் கேட்டாலே கோபமா வருது. வாழை இலைல சாப்பிடறது உடம்புக்கு எவ்ளோ நல்லது. விஷேசத்துக்கெல்லாம் அதப் போடாம பேப்பர் வாழை இலை வாங்கிப் போட்டா நல்லா இருக்குமா? இனிமேல் நிறையப் பேர் அத வாங்க ஆரம்பிச்சுடுவாங்க. யப்பா... கடைசில இலையக் கூட விட்டு வைக்க மாட்டேன்றாங்கப்பா... அதையும் ஆர்டிஃபிசியலா பண்ணிட்டாங்க...

சமீபத்திய கோபம்:
==========================================================

என் நாத்தனாரின் கணவர் ஒரு லிங்க்கைக் கொடுத்துப் பார்க்க சொன்னார். அதப் பாத்ததும் ரொம்ப கஷ்டமாயிடுச்சு. இவங்கல்லாம் மனுஷங்களா இல்ல மிருகங்களா? கண்டிப்பா மனுஷங்களா இருக்கவே முடியாது. நீங்களும் பாத்துட்டு சொல்லுங்க.

http://maaruthal.blogspot.com/2009/08/blog-post_29.html

சமீபத்திய சிந்தனை:
==========================================================

பாலிதின் கவர் யூஸ் பண்ணாதிங்க பண்ணாதிங்கனு எல்லாருக்கும் அட்வைஸ் பண்றத விட்டுட்டு கவர்மென்ட்டே பாலிதின் கவர் ப்ரொடக்ஷன நிறுத்தினா என்ன?!!

சமீபத்தில் ரசித்தப் பாடல்:
==========================================================

கந்தசாமி படத்துல வர எக்ஸ்கியூஸ் மி மிஸ்டர் கந்தசாமிப் பாட்டு அவ்ளோ பிடிக்குதுங்க எனக்கு. அந்த பாட்ட பாத்ததில்ல இன்னும்(அதனாலதான் பிடிக்குதோ :S) சுச்சி வாய்ஸ் அவ்ளோ சூப்பரா இருக்கு. ஸ்டார்ட்டிங்க்ல மியூஸிக் செமயா இருக்கு. என் மொபைல்க்கு அததான் ரிங்க்டோனா வச்சிருக்கேன் :)

சமீபத்தில் பார்த்த படம்:
==========================================================

சமீபத்தில் பார்க்க ஆரம்பித்த படம்னு சொல்லலாம். என்கிட்ட பேண்ட பிடுங்கின அந்த ஃப்ரெண்ட்... ப்ரெண்ட் இல்ல எனிமி... ஒரு படம் குடுத்தான். சூப்பரா இருக்கும். பாருனு. பத்தே நிமிஷம்தான் பாத்திருப்போம். ப்ரபு வேணாம்னு ஆஃப் பண்ணிட்டாங்க. அவ்ளோ கொடூரம். ஆரம்பிச்சதுல இருந்து கொலை கொலை கொலை. அதும் ரொம்ப கொடூரமா. யப்பா. எடுத்தவன் சைக்கோவா இருப்பான் போல. அந்தப் படம் பாக்கணும்னு உங்களுக்கு ஆசையா இருக்கா? "My Bloody Valentine" தான் அந்தப் படம். வீக்கெண்ட்ல பாத்து எஞ்சாய் பண்ணுங்க.

படம்னு சொல்லும்போது இத சொல்லியே ஆகனும். என் வீட்டுக்கார் எப்போப் பாத்தாலும் இங்க்லிஷ் படமேப் பாத்துட்டு இருப்பார். அடிக்கடி என் மாமியார் கடுப்பாகி தமிழ் படம் போட்டா என்னடா-னு கேட்டுட்டே இருப்பாங்க. ஒரு நாள் அவங்க அப்படி கேட்டதும் இவங்க ஒரு சூப்பர் தமிழ் படம் போட்டாங்க. அதப் பாத்ததுக்கப்புறம் என் மாமியார் தமிழ் படமே கேக்கறதில்ல. அப்படி என்ன படம்னு கேக்கறீங்களா? ஹி ஹி... நம்ம டாக்டர் நடிச்ச வில்லு படம்தான்.

சமீபத்திய ஃபோட்டோ:
==========================================================

ப்ரபுவோட கசின்ஸ் வந்திருந்தப்போ மகாபல்லிபுரம் போயிருந்தோம். அங்க அவர் தங்கச்சி ஹஸ்பெண்ட் எங்களுக்குத் தெரியாம எடுத்த ஃபோட்டோ இது :)))



ஓக்கேய்... நிறைய எழுதணும்னு நினைச்சேன். எல்லாம் மறந்துப் போயிட்டேன். சீக்கிரம் மீட் பண்ணுவோம். பை பை... :)))

Saturday, May 30, 2009

ஐயகோ! என்ன ஒரு அவமானம்!!

கோவிலுக்கு போறப்போ எல்லாம் அம்மா அம்மா-னு பின்னாடியே வர பிச்சைக்காரங்களப் பாத்தா உங்களுக்கு என்ன தோணும்? எனக்கு சில டைம் பாத்தா பாவமா இருக்கும். சில டைம் கோபமா வரும்(ஹிஹி... அது நம்ம மூட பொறுத்ததாக்கும்). எனக்கு சின்ன வயசுல எல்லாம் ஒரே டவுட்டா இருக்கும். ஏன் இவங்க எல்லாம் இப்படி காசு கேக்கறாங்க? இந்த அம்மா ஒரு நாலணா போட்டா என்னனு அம்மா மேல வேற தேவை இல்லாம கோபமா வரும். நம்ம கைல காசு இருந்தா எல்லாருக்கும் போடலாமெனு நினைப்பேன். பத்தாவது படிக்கற வரைக்கும் என் கைல காசே தர மாட்டாங்க. அதனால அவங்களுக்கு காசு போடற சான்ஸ் எனக்கு கிடைக்கவே இல்ல. ப்ளஸ் டூ-வும் கொண்டு போய் ஹாஸ்டல்-ல தள்ளிட்டாங்க :( அந்த ஸ்கூல்ல இருந்து லீவு கிடைச்சு ஊருக்கு போறதே ரொம்ப கஷ்டம். கிடைக்கற அந்த கொஞ்ச நாள்ல எங்க போய் பிச்சைக்காரங்களப் பத்தி நினைக்கறது??

ப்ளஸ் டூ-ல என் க்ளோஸ் ஃப்ரெண்ட் பிருந்தா. லீவுல அவ வீட்டுக்குப் போயிருந்தப்ப நாங்க ரெண்டு பேரும் சாயந்திரமா வெளில கிளம்பினோம். வழில நிறையப் பிச்சைக்காரங்க. ஆனா அவ யாருக்கும் ஒரு பைசா கூட போடல. எனக்கு கொஞ்சம் கடுப்பாயிடுச்சு. ஏன் இவ இப்படி கஞ்சத்தனமா இருக்கா. வீட்டுக்குப் போனதும் ரெண்டு டோஸ் குடுக்கலாம்னு நினைச்சேன். அப்போ திடீர்னு அவ இங்கயே நில்லு. நான் 2 mins-ல வந்துடறேனு சொல்லிட்டு ரோட க்ராஸ் பண்ணிப் போனா. எதுக்குப் போறானு நானும் அவளையே வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தேன். அவ அந்தப் பக்கம் போயி அங்க இருந்த ஒரு ரொம்ப வயசான தாத்தாவுக்கு 5 ரூபா போட்டுட்டு திரும்பி வந்தா. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. ஏண்டி இவ்ளோ பேர் வழில வந்தாங்க. அவங்களுக்கு எல்லாம் போடல-னு நான் ஆச்சர்யமா கேட்டதும் அவங்களுக்கெல்லாம் என்ன இல்ல சொல்லு. கால் கை எல்லாம் நல்லாதான இருக்கு. எதாச்சும் ஒரு சின்ன வேலையாச்சும் அட்லீஸ்ட் சாப்பாட்டுக்காகவாவது செஞ்சுக்கலாம் இல்ல. சோ அவங்களுக்கு எல்லாம் போட மாட்டேன். இந்த தாத்தா-வால நடக்க முடியாது. கண் பார்வை இல்ல. ரொம்ப வயசானவர். அவரால ஒண்ணும் பன்ண முடியாது. அதான் எப்ப இந்தப் பக்கம் வந்தாலும் அவருக்கு எதாவது செய்வேனு சொன்னா. எனக்கும் அவ சொன்னது ரொம்ப ரொம்ப சரினு பட்டது. அதுல இருந்து யாராவது பிச்சைக் கேட்டா நல்லா யோசிச்சு இவங்களுக்கு இத விட்டா வேற வழியே இல்லைனு தோணினாதான் காசு போடுவேன்.

பேங்களூர்ல இருந்தப்போ சில சமயம் ஆபிஸ்ல இருந்து ஓசூர் வந்து பஸ் பிடிச்சுப் போவேன். அங்க பஸ் ஸ்டாண்ட் அநியாயத்துக்கு மோசம். சின்ன சின்ன பொண்ணுங்க பசங்க எல்லாம் வந்து கையத் தொட்டு தொட்டு அக்கா அக்கா-னு கேக்கறப்ப எல்லாம் இழுத்து ஒரு அறை விடணும் போல தோணும். ஆனா பேசாம தள்ளி நின்னுக்குவேன். ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஃப்ரெண்ட்ஸோட பீச் போயிருந்தப்போ ஒரு வயசான அம்மா வந்து தொண தொணனு கேட்டுட்டே இருந்துச்சு. ஒருத்தர் சலிச்சுக்கிட்டே எடுத்து 1 ரூபா குடுத்தார். அட ஏன் இதுக்குப் போய் இவ்ளோ சலிச்சுக்கறிங்க. வயசான அம்மாதான-னு நான் அப்பாவியா(அட நெசமாத்தான்) கேட்டதுக்கு அவர் இது நேரா எங்க போகும் தெரியுமா. பிச்சை எடுத்து காசு சேத்து நைட் போய் தண்ணி அடிக்கும். இதுக்கு முன்னாடி நான் ஒரு அம்மாவ அப்டி நேராப் பாத்தேன் அப்டினு சொன்னார். என்னடா இது ஒவ்வொருத்தரும் ஒரொரு மாதிரி சொல்றாங்களேனு ஃப்ரீயா விட்டுட்டேன்.

பெங்களூர்ல என் நாத்தனார் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பிச்சைக்காரர் இருப்பார். யார்ட்டயும் போய் நச்சரிக்க மாட்டார். யாராச்சும் குடுத்தா மட்டும் வாங்கிப்பார். அவரால ரொம்ப எல்லாம் நல்லா நடக்க முடியாது. ஆனாலும் கஷ்டப்பட்டு அவர் ட்ரெஸ் எல்லாம் வாஷ் பண்ணி சுத்தமாதான் போட்டிருப்பார். எங்கத்தை அவரப் பத்தி ஒரு நாள் பேசிட்டு இருந்தப்போ வாழ்ந்துக் கெட்டவர் போல-னு சொல்லிட்டு இருந்தாங்க. ஹ்ம்ம்ம்... இப்படியும் சிலர்னு நினைச்சுக்கிட்டேன். நாங்க யார் அந்த வழியாப் போனாலும் அட்லீஸ்ட் ஒரு ரூபாயாச்சும் போடுவோம். எங்கண்ணா அவர ஃபேமிலிப் பிச்சைக்காரார்னு விளையாட்டா சொல்லுவார். எங்க மீராக் குட்டிப் போனா டாடா எல்லாம் சொல்லுவார் :) so cool na :))

பிச்சைக்காரங்க-ன்ற டாபிக் எடுத்தாலே என் லைஃப்ல நடந்த ஒரு முக்கியமான சம்பவம் ஞாபகத்துக்கு வரும். அந்த ஸீந்ல இருந்த என் ஃப்ரெண்ட்ஸ் இன்னமும் சொல்லி சொல்லி சிரிச்சு என் BP ஏற வைக்கற அளவுக்கு எனக்கு நடந்த அவமானம். நீங்க சொல்லி சொல்லி சிரிக்க மாட்டேனு ப்ராமிஸ் பண்ணினா உங்களுக்கு சொல்றேன்.

ப்ராமிஸ்???

ப்ராமிஸ் பண்ணிட்டிங்கனா தொடர்ந்துப் படிங்க. ப்ராமிஸ் பண்ணாம படிச்சா சாமி உங்க கண்ணக் குத்திடும். ஜாக்கிரதை....

காலேஜ் லீவுல திருச்சிப் போயிட்டு ஊருக்கு திரும்பறதுக்காக ஜங்ஷன்ல இருக்க பஸ் ஸ்டாண்ட் போயிருந்தோம். அப்போ என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட் அப்படியே எங்களப் பாக்க வந்திருந்தார். அவர்ட்ட பேசிட்டு இருந்தப்போ ஒரு வயசான பாட்டி வந்து கைய நீட்டிக்கிட்டே இருந்துச்சு. யாரும் அத மதிக்கக் கூட இல்ல. நானும் போடலாமா வேணாமா-னு ரொம்ப யோசிச்சு சரி போனா போகுது கொஞ்சமா குடுத்துடலாம்னு நினைச்சு என் பர்ஸ எடுத்து துழவி துழவி ஒரு நாலணா-வ எடுத்து அது கையில போட்டுட்டு பெருமையாப் பாத்தேன். அந்தப் பாட்டி அது கையில இருந்த நாலணாவப் பாத்துது. என்னையப் பாத்துது. அப்படி ரெண்டு தடவைப் பாத்ததும்தான் எனக்கு ஒரு பயம் வந்து நான் என் ஃப்ரெண்டப் பாத்தேன். அவருக்கு ஒரே சிரிப்பு. உடனே அந்த பாட்டி ஏன் பாப்பா! எதுக்கு இதக் குடுத்த? இத வச்சு என்னால என்ன பண்ண முடியும்னு நினைச்சுக் குடுத்த? இத வச்சு என்னால ஒரு டீ குடுக்க முடியுமா?-னு அது பாட்டுக்கு காசு வச்சிருந்தக் கைய என் முன்னாடி நீட்டி நீட்டி சத்தம் போட்டு போட்டுக் கேக்குது. எனக்கா ஒரே பயம். எங்க அந்தம்மா என் கையப் பிடிச்சு என் கையில திரும்ப அந்த நாலணாவக் குடுத்துடுமோனு. அதுக்குள்ள என் ஃப்ரெண்ட் ஒரு அஞ்சு ரூபா காயின எடுத்துப் போட்டதும் அமைதியா போயிடுச்சு. கூட இருந்த டாக்ஸ்லாம் இன்னமும் இத சொல்லி சொல்லி சிரிக்குங்க. என்னே ஒரு வில்லத்தனம். நானாச்சும் நாலணாப் போட்டேன். அதுங்க எதுமே போடாம எப்படி என்னையப் பாத்து சிரிக்கலாம். நீங்களே நியாயத்த சொல்லுங்க மக்கா!!

Wednesday, February 4, 2009

இனிய இல்லறம்!!!



"ஏங்க! சாப்பிடலாமா?"

"சரிம்மா"

"இங்க பாருங்க. நான் செய்யறதுல என்ன குறை இருக்கோ அத அப்டியே சொல்லணும். அப்போதான் அடுத்த தடவை அந்த தப்பு இல்லாம என்னால செய்ய முடியும். சரியா?"

"சரி"

"எப்படி இருக்கு?"

"சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கு. காரமும் கம்மியா இருக்கு"

"போங்க நீங்க ரொம்ப மோசம். நான் ஆபிஸ் போயிட்டு அங்க அவ்ளோ வேலை செஞ்சுட்டு வீட்டுக்கு வந்து உங்களுக்காக ஆசை ஆசையா செஞ்சு குடுத்தா நீங்கப் பாட்டுக்கு குறை சொல்றீங்க..."

"@#$^#@$"

-------------------------------------------------------------------------------

"ஏங்க"

"என்னம்மா?"

"நான் ஒண்ணு கேப்பேன். நீங்க உண்மைய சொல்லணும்"

"கேளு சொல்றேன்"

"கண்டிப்பா?"

"கேளு"

"நான்... நான்... ரொம்ப அழகா? இல்ல ரொம்ப ரொம்ப அழகா?"

"ஆண்டவா! எனக்கு நெஞ்சு வலிக்குதே"

-------------------------------------------------------------------------------

"என்னங்க இந்த வாரம் ஊருக்குப் போகும்போது அம்மாட்ட சொல்லி உங்களுக்கு சுத்திப் போட சொல்லணும்"

"என்னடி திடீர்னு?"

"இன்னைக்கு பொரியல்க்கு வெண்டைக்காய் வெட்டி தந்தீங்க இல்ல. மதியம் லஞ்ச் அப்போ என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்டி இவ்ளோ பொடிசா நறுக்கினனு ஆச்சர்யமா கேட்டுட்டு இருந்தாங்க. என் வீட்டுக்கார்தான் வெட்டித் தந்தார்னு ரொம்ப பெருமையா சொன்னேன் :-)"

":-|"

"அதான் கண்டிப்பா சுத்திப் போடனும்னு சொன்னேன். ஏங்க... இன்னைக்கு கோவைக்காய் ஃப்ரை பண்ணலாம்னு வாங்கி வச்சிருக்கேன்..."

"!@$%^$#@"

-------------------------------------------------------------------------------

"ஏண்டி இருக்க இருக்க ஏறிட்டேப் போற?"

"கொஞ்சம்தான வெயிட் போட்டிருக்கேன்"

"கல்யாணத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் எவ்ளோ வெயிட்?"

"முன்னாடி 45 கே.ஜி தாஜ்மகால். அப்றம் 54 கே.ஜி தாஜ்மகால். கொஞ்சம்தான ஏறிருக்கேன்?"

"ஆண்டவா! எனக்கு ஏனிந்த சோதனை..."

-------------------------------------------------------------------------------

"ஏங்க வருஷ வருஷம் தீபாவளி அப்போ உங்க அம்மாவுக்கு உங்க அப்பா என்ன வாங்கி தருவார்?"

"உனக்கு தீபாவளிக்கு எதும் வேணும்னா நேரா கேளு"

"எனக்கு ஒண்ணும் வருஷ வருஷம் வேணாம். மொத தீபாவளினால இந்த வருஷம் மட்டும் வாங்கி கொடுங்க"

"சரி என்ன வேணும்?"

"ஒண்ணும் பெருசா எதும் வாங்கி தர வேணாம்"

"சரி என்ன வேணும்னு சொல்லு"

"ஒரே ஒரு... வைர ஒட்டியாணம் மட்டும் வாங்கித் தாங்கப் போதும்"

அப்போது வாயடைத்தவர் இரண்டு நாட்களுக்கு வாயை திறக்கவே இல்லை.

இப்படித்தான் எங்கள் இனிய இல்லறம் வெகு இனிதாய் நடந்துக் கொண்டிருக்கிறது :)

பி.கு: சிங்கம் களத்துல இறங்கிடுச்சு இல்ல...

Tuesday, August 19, 2008

The 3 mistakes of my life...

ஹி... ஹி... அப்படி என்ன மூணு மிஸ்டேக்ஸ் பண்ணினேன்னு பாக்கறீங்களா? மூணே மூணு மிஸ்டேக்ஸ் மட்டும் பண்ற அளவுக்கு நான் ஒண்ணும் கஞ்சம் பிடிச்சவ இல்ல. எண்ண முடியாத அளவுக்கு சராமரியா மிஸ்டேக்ஸா பண்ணிக் குவிப்போமில்ல... ;))) சரி மேட்டருக்கு வருவோம்.

லாங் லாங் அகோ... ஒன்ஸ் அப்பான் அ டைம் எப்போ பாத்தாலும் புக்கும்(ஒன்லி ஸ்டோரி புக்ஸ்) கையுமாதான் இருப்பேன். சாப்பிடறப்போ படிக்காதனு எங்கம்மாட்ட டெய்லியும் திட்டு வாங்குவேன். அப்படி இருந்த நான் காலெஜ் முடிச்சிட்டு வேலைல சேர்ந்ததும் ஆபிஸ்ல வாங்குற ஆப்புகளுக்கு நடுலயும் என் பணி ப்ளாக் எழுதிக் கிடப்பதே-னு சபதம் எல்லாம் போட்டு என்னை முழுசா ப்ளாக்குக்கு அர்ப்பணிச்சிட்டதால(யாரு அங்க உன்னோடுதான் என் ஜீவன் பார்ட் III எங்கனு கேக்கறது?) புத்தகம் படிக்கறப் பழக்கத்த விட்டுட்டேன். எனக்கே ஷேம் ஷேமாதான் இருக்கு. என்ன பண்றது? இந்த ப்ளாகுக்காக எல்லாத்தையும் தியாகம் பண்ண வேண்டியதா போயிடுச்சு.... ஓகே ஓகே... பேக் டு தி மேட்டர்...

இது ரொம்ப காலத்துக்கு அப்புறமா நான் படிச்ச ஒரு புக். Chetan Bagat-ன்றவரு எழுதின புக். என் டீம்மேட்கிட்ட(ஒரு போஸ்ட்டுக்கு கவிதை எழுதி தந்தாரில்ல. அவரு) இருந்து சுட்டுட்டுப் போய் படிச்சேன். எனக்கு ரொம்ப பிடிச்சது. உங்களோட ஷேர் பண்ணலாம்னுதான் இந்த போஸ்ட்.

அவருக்கு வர தற்கொலை மெயிலோட ஸ்டார்ட் ஆகுது கதை. அந்த மெயில் அனுப்பின பையனைத் தேடிப் போய் ஹாஸ்பிட்டல்ல அவனைக் கண்டுபிடிச்சு அவன்கிட்ட கதையக் கேட்டு எழுதற மாதிரி நாவலை ஃப்ரேம் பண்ணி இருக்காரு. அவனை மீட் பண்ணினதுக்கப்புறம் அவனே கதைய நேரேட் பண்றான்.

அப்பா வேற ஒரு பெண்ணோட போயிட ஸ்நேக்ஸ் பிசினஸ் பண்ற அம்மாவோட ஒரே பையனான கோவிந்த் பட்டேல் தான் கதையோட ஹீரோ. ஆஸ்ட்ரேலியா பீச் அழகிகளைப் பாக்கும்போது கூட மேத்ஸ் கால்குலேஷன்தான் வருதேனு அவனே நொந்துக்கற அளவுக்கு ஒரு maths lover. அவனோட கனவு ஒரு பெரிய பிசினஸ்மேன் ஆகணும்ன்றது. அவனோட உயிர் தோழர்களான இஷானையும் ஓமியையும் கூட்டா வச்சிக்கிட்டு ஒரு கடை திறக்கறான். கிரிக்கட் பைத்தியத்தால மிலிட்டரி வேலையை விட்டுட்டு ஓடி வந்த இஷானோட திருப்திக்காகவும் சில பல பிசினஸ் கால்குலேஷன்ஸாலயும் ஸ்போர்ட்ஸ் கடை ஆரம்பிக்கறாங்க. பிஸினெஸ்-ல வர பணத்தை பெருசா எடுக்காத இஷான், ஓமி, ஓமியோட மாமா கொண்டு வர அரசியல், குஜராத் நிலநடுக்கம், குஜராத் ரயில் குண்டுவெடிப்பு, மேத்ஸ் டியூஷன் எடுக்கப் போயி இஷானோட தங்கைகிட்ட வர காதல், அதனால இஷானோட வர பிரச்சினைகள் இப்படி பல பல காரணங்களால அவனும் அவன் பிஸினெஸும் என்ன ஆகுதுன்றதுதான் கதை. தங்கையோட தனக்கிருந்தக் காதல் தெரிஞ்சதுல இருந்து மூணு வருஷமா இஷான் பேசாம இருந்து ஒரு கட்டத்துல இஷான் "dishonest"-னு இவனை சொன்னதால ரொம்ப மனசு உடைஞ்சுப் போய் தற்கொலை பண்ணிக்கப் போயிடறான். கடைசில நம்ம Chetan அவனைக் கண்டுபிடிச்சு அவனோட ஃப்ரெண்டையும் காதலியையும் அவனோட சேர்த்து வைக்கறார். இதான் கதை.

ரொம்ப நல்லா நகருது. ஆன நடுவுல ஒரு விசிட்டிங் கார்ட காட்டி எல்லாரையும் ஏமாத்திட்டு ஆஸ்ட்ரேலியன் கிரிக்கெட் ப்ளேயர் ஒருத்தரை மீட் பண்றது, அவரோட தயவுல ஆஸ்ட்ரேலியா போயிட்டு வரது, கசமுச மசாலா காதல்னு கொஞ்சம் சினிமாத்தனம். என்னக் காரணத்துக்காக வித்யா அவனை லவ் பண்ண ஆரம்பிக்கறானே தெரியல. அவ அண்ணன் அம்மா அப்பா எல்லாரும் அவன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தா அவன் ரூம் கதவ லாக் பண்ணிட்டு டியூஷன் எடுக்கறதுக்கும் ஒண்ணும் சொல்லாம இருந்திருப்பாங்க. ஆனா நம்ம ஹீரோவுகும் குற்ற உணர்ச்சி ரொம்பவே இருக்கும். எந்த ஒரு உணர்வுக்கும் இடம் குடுக்காம இருந்த நம்ம கோவிந்த எப்படி லவ் பண்ன வச்சுடறா வித்யா. அதான். பொண்ணுங்க நினைச்சா என்ன எதை வேணாலும் சாதிக்க முடியும்.

இந்தக் கதைல என்னைப் பொறுத்தவரைக்கும் கோவிந்த் விட இஷான் தான் ஒரு நல்ல பிஸினஸ்மேன். அக்கவுண்ட்ஸ்லாம் பாத்துக்காட்டியும் கஸ்டமர்ட்ட திறமையாப் பேசி பிஸினஸ் பண்றானில்லையா? அவங்க சொல்ற விலைக்கு இறங்கிப் போய் சேல்ஸ முடிக்கறதை விட நாம சொல்ற விலைக்கு அவங்களை வாங்க வைக்கறதுதான் திறமையான பிசினஸ். என்ன சொல்றீங்க?

சரி. டைம் இருந்தாப் படிங்க. என் வாழ்க்கைல நான் பண்ணின பெரிய மிஸ்டேக் இந்த புக்கப் படிச்சதுதானு நினைக்கறேன். இல்லைனா Chetan-ஓட Five point someone and One night @ the Call center கண்டிப்பாப் படிக்கணும்னு முடிவுப் ப்ண்ணிருப்பேனா?? ;)))

Monday, July 14, 2008

திண்ணை

ரெண்டு பேரு க்ரூப் சாட் போட்டு நம்ம அரை மணி நேரத்த சாப்பிட்டுட்டு மெதுவா திண்ணையப் பத்தி எதாச்சும் எழுதுங்கோ அக்கா-ன்னு மெதுவா கேட்டாங்க. அவ்ளோ நேரமா பேசிட்டு இருந்ததுல சரி பாசக்கார பயபுள்ளக கேட்டுட்டாங்க. ஸ்ரீ-ன்னு ஒரு பொண்ணு வேற நம்மள tag பண்ணிட்டாங்க. என்ன ஆயிடப் போவுது எழுதிடலாம்னு உக்காந்து யோசிச்சப்போதான் அந்த ஒரு பகிங்கரமான உண்மை படார்னு என்னை அறைஞ்சது. ச்சே! எதுக்கு இந்த பில்ட் அப் இம்சை? ஒழுங்கா சொல்லு...

அட ஆமாங்க... நான் நாலாவது படிச்ச வரைக்கும் ஒரு வீட்டுல குடி இருந்தோம். அந்த வீட்டுல மட்டும்தான் திண்ணை இருந்துச்சு. அதுக்கப்புறம் நாங்க இருந்த எந்த வீட்டுலயும் திண்ணையே இல்ல. என்ன கொடுமை இம்சை இது??? இதை வச்சு எப்படி எழுதறது? இப்படியெல்லாம் மானிட்டரையே பாத்து முறைச்சுட்டே இருந்ததுல அந்த திண்ணைல நடந்த கதையெல்லாம் கொசுவத்தி சுத்திட்டு வந்துச்சு. ஹி... ஹி... நமக்கு தான் நம்ம LKG வயசுல நடந்தது கூட ஞாபகம் இருக்குமே. அப்புறம் எப்டி இது மட்டும் மறந்துப் போகும்?? சரி நம்ம திண்ணைக் கதைக்கு போவோம்.

ஒன்ஸ் அப்பான் எ டைம் லாங் லாங் அகோ நாங்க குடியிருந்த ஒரு வீட்டுல வாசலுக்கு ரெண்டுப் பக்கமும் திண்ணை இருந்துச்சு. ஒரு மாதிரி மெரூன் கலர்ல பெயிண்ட் பண்ணீயிருப்பாங்க. வாசலுக்கு வலதுப் பக்கம் இருக்க திண்ணை நீளமா இருக்கும். இடதுப் பக்கம் இருக்கறது கொஞ்சம் நீளம் கம்மியா இருக்கும். அந்த பெரிய திண்ணைக்கு எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும். காலைல எழுந்து ப்ரஷ் பண்ணினதும் அம்மா தர காபிய வாங்கிகிட்டு வேக வேகமா போவோம் பெரிய திண்ணையப் பிடிக்க. அதுலப் போய் உக்காந்து ஒரு வெற்றி சிரிப்போட பெருமையா காபிக் குடிப்பேன். பாவம் அவன் சின்ன பையன்றதால என்கிட்ட ரொம்ப தோத்துப் போவான்.

எங்க எதிர்த்த வீட்டுல எங்களை மாதிரியே ஒரு அண்ணன் தங்கச்சி இருந்தாங்க. மகேந்திரன், கோமதினு பேரு. கோமதி என் செட்டுப் பொண்ணு. எனக்கும்(என் தம்பி யார்ட்டயும் சண்டை போட மாட்டான்) அவங்க ரெண்டு பேருல யாருக்குமாச்சும் சண்டை வந்து டூ விட்டுக்கிட்டா அவங்க வந்து எங்க திண்ணைல உக்காரக் கூடாது. நாங்க ரெண்டுப் பேரும் அவங்க திண்ணைக்கு போக மாட்டோம். இது எங்க எழுதப்படாத சட்டம். பழம் விடறப்போ யார் போய் பழம் விடறாங்களோ அவங்க வீட்டுத் திண்ணைலதான் உக்காந்து விளையாடுவோம்.

எங்க திண்ணைக்கு அடில ஆத்து மணல் கொட்டி வச்சிருந்தாங்க. அதுல கோவில் கட்டி வீட்டுல இருந்த பிஸ்கட், நொறுக்குத் தீனி எல்லாம் வச்சு சாமிக்குப் படைச்சு விளையாடுவோம். திண்ணை மேல ஒரு பக்கட் தண்ணி வச்சு அது மேல போற கம்பில ஒரு கொட்டாங்குச்சி கட்டின கயிறு விட்டு தண்ணி சேந்தி விளையாடுவோம். அச்சாங்கல், பல்லாங்குழி-னு என் சின்ன வயசு விளையாட்டுக்கெல்லாம் அந்த திண்ணைதான் ப்ளே க்ரவுண்டு.

நான் மண்டிப் போட்டு ஸ்லேட்டுல அ, ஆ... A, B, C, D... எழுதக் கத்துக்கிட்டது எல்லாம் அந்த திண்ணைலதான். ட்ராயிங் கத்துக்க ஆரம்பிச்சப்ப, கோலம் போட ஆசைப்பட்டப்ப எல்லாம் மொதல்ல தேடி ஓடினது அந்த திண்ணையதான். அம்மா திட்டினப்போ, அப்பா சாப்பிட சொல்லி மிரட்டினப்போ தஞ்சம் புகுந்ததும் அந்த திண்ணைகிட்டதான். இப்படி என் ஃப்ரெண்ட் மாதிரி இருந்த திண்ணைய் பிரிஞ்சுப் போனப்போ அப்போ ஒண்ணும் தெரியலை. திரும்ப ஒரு தடவை அந்தப் பக்கம் கோமதியப் பாக்க போக நேர்ந்தப்போ பூட்டியிருந்த அந்த காலி வீட்டுத் திண்ணைலப் போயி கொஞ்ச நேரம் உக்காந்துட்டு வந்தேன். ஏன் அப்படி பண்ணீனேனு இன்னமும் தெரியலை. ஹ்ம்ம்ம்... அதுக்கப்புறம் திண்ணையோட நட்பு எனக்கு வாழ்க்கைல கிடைக்கவே இல்ல.

ஒரு தடவை எங்கம்மாகிட்ட கேட்டேன். "கோமதி வீட்டுல, சாந்தி அக்கா வீட்டுல, சந்திரா அக்கா வீட்டுல, ராஜா அண்ணா வீட்டுலனு எல்லார் வீட்டுலயும் திண்ணை இருக்கே. எதுக்கங்கம்மா வீட்டுக்கு திண்ணை வச்சுக் கட்டி இருக்காங்க?"-னு. அதுக்கு எங்கம்மா "அந்தக் காலத்துல இப்படி சைக்கிள், பைக், கார்னு எதுமே கிடையாது. எல்லாரும் நடந்துதான் போவாங்க. வழில கால் வலிச்சோ இல்ல வேற எதுக்காகவோ உக்காரணும்னு நினைச்சா இடம் வேணும் இல்லையா? அதுக்காகதான் வழிப் போக்கர்கள் உக்காந்து ரெஸ்ட் எடுத்துட்டுப் போறதுக்காக அப்படிக் கட்டினாங்க"-னு சொன்னாங்க.

இந்தக் காலத்துல கண்ணு முன்னாடியே உயிருக்குப் போரடினாக் கூட நமக்கென்னனு கண்டும் காணாமப் போறவங்க வழிப் போக்கர்கள் உக்காரட்டும்னா பாக்கப் போறாங்க? இப்போ திண்ணை வச்சுக் கட்டற பழக்கம் இல்லாமப் போனதுக்கு இதும் கூட ஒரு காரணமா இருக்கலாம். ஹ்ம்ம்ம்...

சரிங்க... கொசுவத்தி சுத்தி சுத்தி கண்ணுல அந்த திண்ணையேதான் தெரியுது. அடுத்த தடவை ஊருக்குப் போகும்போது கண்டிப்பா போய் ஒரு அஞ்சு நிமிஷமாவது உக்காந்திருந்துட்டு வரணும்னு நினைச்சுட்டு இருக்கேன். இப்போ என் முறையா???

இந்தப் பதிவு எழுத சொல்லி க்ரூப் சாட்ல சொன்ன, என்னோட எல்லாப் படைப்புகளையும் ரசிச்சு விமர்சனம் பண்ற, ப்ளாக் ஆரம்பிச்சு பேருக்கு நாலு போஸ்ட் போட்டுட்டு அதுக்கப்புறம் தலை வச்சுப் படுக்காமலே இருக்கும் என் அன்பு தங்கச்சி வைதேகி... திண்ணைப் பதிவு மூலமா ரீஎன்ட்ரி கொடுடா செல்லம் :)))

ரெண்டுப் பேர பண்ணனுமாம். இன்னொருத்தர் யாரைப் பண்றது??? அடடா... அமெரிக்கால உக்காந்துக்கிட்டு அமெரிக்க மாப்பிள்ளை கதை எழுதி திரிஞ்சுட்டு இருக்கற நம்ம ஜி-ய சும்மா விடலாமா? யப்பா பூட்சு போட்ட பூனையாரே. எழுதிடுங்க :)))

Tuesday, July 1, 2008

ஐயகோ! பாவம் செய்து விட்டேனே!!

உயிரைக் கொல்றது பாவமாங்க?? என் மனசு என்னவோ பாவம்தானு அடிச்சு சொல்லுது. ஆனா சில நேரங்கள்ல அந்த மனசு எங்கதான் ஓடி ஒளிஞ்சுக்குதுனே தெரியலை. ஹ்ம்ம்ம் :(((

நான் ஸ்கூல் படிக்கும்போது ஹிஸ்டரி புக்ல சமணத் துறவிகள் பத்திப் படிச்சிருக்கேன். அவங்க நடக்கும்போது நடக்கற பாதையை மயிலிறகால கூட்டிக்கிட்டே போவாங்களாம். அதுக்கு என்ன காரணம்னா அவங்க கால் பட்டு வழில இருக்கற எறும்பு, பூச்சி மாதிரி உயிரினங்கள் செத்துப் போயிடக்கூடாதுனு அப்டி பண்ணுவாங்களாம். அப்போ ச்சே! எவ்ளோ க்ரேட் அவங்க-னு தோணுச்சு. அப்போ நாமளும் எந்த உயிரையும் கொல்லக் கூடாதுனு முடிவுப் பண்ணினேன். என்னை எறும்பு கடிச்சாக் கூட அதைப் பிடிச்சு தூரப் போட ஆரம்பிச்சேன். இப்டிலாம் நல்லப் பொண்ணா மாறரதுக்கு பயங்கரமா ட்ரை பண்ணிட்டு இருந்தாலும் ஞாயித்துக் கிழமையானா அம்மா வைக்கற கோழிக் குழம்பு வாசம் கும்முனு வந்து அப்பாவிப் பொண்ணு என்னைய ஒரு உயிரைக் கொன்ன பாவியா மாத்திடும். ஹ்ம்ம்ம். நாமளா கொன்னோம்? இல்லையே.... செத்துப் போனத சாப்பிடறதால நம்மள பாவம் பிடிக்காதுனு சமாதானப்படுத்திக்குவேன்.

அப்போ நான் டியூஷன் படிச்ச சார் என்கிட்ட பயங்கரமா ஆர்க்யூ பண்ணுவார். ஒரு உயிரக் கொன்னு சாப்பிடறியே பாவமில்லையானு. ஹி... ஹி... நான் எங்க சார் கொன்னேன்? கடைல கொன்னு வச்சுடறாங்க. அது வேஸ்ட்டாப் போகக் கூடாதேன்ற ஒரு நல்ல எண்ணத்துலதான் நான் சாப்பிட்டுட்டு இருக்கேன். வேற எந்த ஒரு காரணமும் கிடையாதுனு சொல்லி சமாளிச்சேன். இப்படி சிக்கன் சாப்பிடறதுக்கு மட்டும் ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சேன். மத்தபடி உயிரை வதைக்கா கொள்கைய கடைபிடிச்சுட்டுதான் இருந்தேன். அப்போதான் என் கொள்கைக்கு இன்னொரு சோதனை வந்துச்சு.

என் இம்சை தாங்க முடியாம எங்கப்பா என்னைக் கொண்டுப் போயி ஹாஸ்டல்ல தள்ளிட்டார். ஹாஸ்டல் பொண்ணுங்கன்னாவே உங்களுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் என்ன ஞாபகத்துக்கு வருமோத் தெரியாது. எனக்கு டக்குனு இந்த பேன் தான் ஞாபகத்துக்கு வரும். அது நாள் வரைக்கும் நான் கஷ்டப்பட்டு சாப்பிட்டு சேர்த்து வச்ச நாலு சொட்டு ரத்தத்தையும் மனசாட்சியே இல்லாம அதும் என் தலைல இருந்துகிட்டே குடிச்சுதுன்னா அதுக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கும் பாருங்களேன். சரி ரெண்டாவது முறையா நம்ம கொள்கைய தளர்த்திக்குவோம்னு முடிவு பண்ணினேன்.

காலேஜ் முடிஞ்சு சென்னைல ப்ராஜக்ட்ன்ற பேருல குப்பை கொட்ட வந்தப்போ நாங்க நாலு பேரு சேர்ந்து வீடு எடுத்து தங்கி இருந்தோம். நாலு பேருல எனக்குதான் ஓரளவு சமையல் தெரியும். அதையே பயங்கரமா பிட்ட போட்டு போட்டு சீஃப் குக் ரேஞ்சுக்கு எனக்கு மரியாதை குடுக்க வச்சிட்டேன். ஒரு நாள் சிக்கன் ஆசை வந்து சரி நாமளே செய்வோம்னு ஒரு தைரியத்துல களத்துல இறங்கிட்டோம். நானும் என்னைப் போல வீரமுள்ள இன்னொருத்தியும் சிக்கன் வாங்கலாம்னு கடைக்கு கிளம்பினோம். அரைக் கிலோ சிக்கந்னு சொல்லிட்டு வெயிட் பண்ணிட்டிருந்தப்போதான் அந்த கொடூரமான காட்சியப் பாத்தேன். கோழியோட கழுத்த கீறி விட்டு பாதியா வெட்டி வச்சிருந்த குடத்துக்குள்ள விட்டுட்டாங்க. அது துடி துடினு துடிச்சு இறக்கைய படபடனு அடிச்சுட்டு இருந்துச்சு. அதைப் பாக்க பாக்க எனக்கு ஹார்ட் பீட்டு எகிறுது. என் கழுத்தை அறுத்து விட்ட மாதிரி ஒரு ஃபீலிங். அதோட இறக்கை அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சிவப்பு கலர்ல மாறி கொஞ்ச கொஞ்சமா அதோட துடிப்பு நின்னுடுச்சு. எனக்கு மனசே ஆறலை. ச்சே! இப்படியா ஒரு உயிரை துடிக்க துடிக்க கொன்னு அதை சாப்பிட்டு நம்ம உடம்ப வளக்கணும்னு ஒரே வருத்தம். எப்படியோ கயமுயானு போட்டு சிக்கன் செஞ்சுட்டோம். ஆனா சாப்பிடப் போனப்போ அந்தக் கோழி இறக்கைய அடிச்சுட்டு துடிச்சதே ஞாபகம் வந்து நான் சாப்பிடவே இல்ல. அதுக்கப்புறம் ரொம்ப நாளா சாப்பிடாமலே இருந்தேன். திருப்பி பெங்களூரு வந்ததுக்கப்புறம் ரொம்ப நாள் கழிச்சுதான் அதை மறந்துப் போனதாலோ என்னவோ சாப்பிட ஆரம்பிச்சேன். இப்படியா என் பாவ மூட்டை ஏறிட்டே போறப்போதான் அடுத்த ஒரு கொடுமை நடந்துச்சு.

பெங்களூருல எங்க ரூம் சூப்பரா இருக்கும். திங்க்ஸ் வச்ச இடம் போக மீதி இடம் படுக்கறதுக்கு மட்டும்தான் இருக்கும். இப்படியாப்பட்ட எங்க குட்டி வசந்த மாளிகைல நாங்க ராஜ்ஜியம் பண்ணிட்டிருந்தப்போதான் வில்லனாட்டம் வந்து சேந்துச்சுங்க இந்த கரப்பான் பூச்சிங்க. எனக்கு மொதல்ல எல்லாம் கொள்கை ஞாபகத்துக்கு வந்து அடிக்காம விட்டுடுவேன். கொஞ்ச நாள் போகப் போக அதுங்களோட அட்டூழியம் தாங்க முடியலை. காய், பழம் எல்லாம் கடிச்சு வச்சுட வேண்டியது. துணிங்களுக்குள்ளப் போயி சுகமா தூங்க வேண்டியது. இப்படியே நாசம் பண்ண ஆரம்பிச்சா விடுவோமா? எங்களோட வீரவாளை அட அதாங்க துடைப்பத்தை எடுத்துட்டுப் போருக்குப் புறப்பட்டோம். எதிரிங்களை கண்டுபிடிச்சு துரத்தி துரத்தி அடிச்சுக் கொன்னோம். வேற வழி? கொளகையாவது மண்ணாவது???

தலைல பேனும், வீட்டுல கரப்பான் பூச்சி, எலித் தொல்லையும் இருந்திருந்தா திருவள்ளுவரே ஏன்டா உயிரைக் கொல்வது பாவம்னு எழுதினோம்னு அவரோட 133 அடி சிலை உச்சில இருந்து டகால்னு கடலுக்குள்ள விழுந்து சூசைட் பண்ணிட்டிருந்திருப்பாரு.

என் வீட்டுக்கார் சுத்த சைவம். egg content இருக்கற சாக்லேட் கூட சாப்பிட மாட்டார். என்கிட்ட அடுத்த உயிரைக் கொன்னு சாப்பிடறதுனு சொல்லுவார். ஆனா நான் கண்டுக்கவே மாட்டேன். ஒரு நாள் ரெண்டு பேரும் அனிமல் ப்ளேனட் சேனல் பாத்துட்டு இருந்தோம். ஒரு சிலந்தி வலைல ஒரு தேள் மாட்டிக்கிச்சு. அந்த சிலந்தி அதைக் கொட்டிக் கொட்டி கொல்ல ஆரம்பிச்சது. என்னால பாக்க முடியல. அய்யோ அது உயிரோட இருக்கைலயே அதை அப்டி கொட்டி கொட்டி சாப்பிட ஆரம்பிச்சா அந்த தேளுக்கு எப்படி இருக்கும்னு சொல்லிக்கிட்டே கண்ணை இறுக்க மூடிக்கிட்டு சேனலை மாத்துங்கனு சொன்னேன். உடனே வேகமா என்கிட்டத் திரும்பி அப்போ கோழி உயிரோட இருக்கும்போதே அதோட கழுத்த அறுத்தா அதுக்கு எப்படி இருக்கும்னு கேட்டாரேப் பாக்கலாம். நான் எதுமே பேசாம நைசா எஸ் ஆகப் பாத்தேன். பதில சொல்லுனு சொல்லி அவர் சிரிக்கவும் எனக்கு சுறுசுறுனு ஏறுச்சு. இங்கப் பாருங்க. சிங்கம் புல்ல சாப்பிடாது. அது விலங்குகளை வேட்டையாடி சாப்பிடணும்ன்றதுதான் அதுக்கு எழுதி வச்சிருக்கு. அப்படி பாவம் பாத்து சாப்பிடாம விட்டா அது செத்துப் போயிடும். அதுக்காக சிங்கம் பாவம் செய்யுதுனு அர்த்தம் இல்ல. அதே மாதிரிதான் நாமளும் மாமிசப் பட்சிணிகள். சோ நாம சாப்பிடறது ஒண்ணும் தப்பில்ல அப்டி இப்டினு ஏதேதோ உளறி எஸ் ஆயிட்டேன்.

சைவமா மாறிடலாம்னு நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டு இருக்கேன். ஆனா முடிய மாட்டேன்றது. என்னதான் சொல்லுங்க. இந்த பெப்பர் சிக்கன நினைச்சாலே நாக்கு ஊறுது. என்னதான் சமாதானத்துக்கு காரணம் சொல்லிக்கிட்டாலும் மனசு இப்பொல்லாம் கஷ்டமா இருக்கு. கூடிய சீக்கிரம் வெஜிடெரியனா மாறிடுவேன்னு நம்பிட்டு இருக்கேன் :)))

Wednesday, March 5, 2008

கவிதை... கவித... கவுஜ...

கவிதை எனக்கு அறிமுகமானது சின்ன வயசுலயே. புத்தகம் வாசிக்கறப் பழக்கம் இருந்தா சீக்கிரம் எதையும் கிரகிச்சிக்கற திறமை வரும்னு வீட்டுல என்னை சின்ன வயசுல இருந்து சிறுவர்மலர் குடுத்துப் படிக்க சொல்லுவாங்க. அதுக்கும் இவ்வளவு நேரத்துக்குள்ளப் படிக்கணும்னு deadline வேற(என்ன கொடுமை சார் இது???) அப்போ புத்தகம் படிக்க ஆரம்பிச்சப் பழக்கம்தான் இங்க வரைக்கும் கொண்டு வந்து உங்களையெல்லாம் இம்சை பண்ண வச்சிருக்குன்றதுல எனக்கு எந்த டவுட்டும் இல்ல. உங்களுக்கு??? :)))

ஆங்... மறந்துட்டேன். கவிதைப் பத்திப் பேச ஆரம்பிச்சோம் இல்ல. சின்ன வயசுல சிறுவர்மலர்ல கவிதைகள் எல்லாம் படிச்சிருக்கேன். அப்போ எல்லாம் நம்மள மாதிரி மக்கள்ஸ் எழுதறதுதானு எனக்குத் தெரியாது. அதுக்காகவே பிறந்து வளர்ந்தவங்க எழுதறாங்கன்னு நினைச்சுக்குவேன். புள்ளைக்கு இவ்ளோ திறமை இருக்குனு எங்கம்மா அப்பாவுக்கு அப்போத் தெரியலை. இல்லைனா அப்போ இருந்தே எழுதி ஒரு பெரிய கவிஞர் ஆகி இருப்பேனாக்கும். தமிழ் கூறும் நல்லுலகம் எங்கம்மா அப்பவோட அறியாமையால ஒரு நல்ல அறிவாளிக் கவிஞரை மிஸ் பண்ணிடுச்சு :(((

அப்படியே சிறுவர்மலர்ல இருந்து வீட்டுக்குத் தெரியாம வாரமலர் படிக்க ஆரம்பிச்சு அதுலயும் கவிதைகள் புரியாட்டியும் ரசிச்சுட்டு இருந்த நான் பத்தாவது படிச்சப்போ JCsல இருந்து வந்து ஏதோ லீடர்ஷிப் க்ளாஸ் எல்லாம் எடுத்தாங்க. அப்போ ஒரு நாள் கவிதைப் போட்டி வச்சாங்க. மலை/மழை பத்தி கவிதை எழுதி தரணும். நானும் எங்கயாவது படிச்சோமான்னு யோசி யோசின்னு யோசிச்சேன். ஞாபகம் வந்தா அப்படியே எழுதிக் கொடுத்துடலாம்னு தான். அன்னைக்குனு பாத்து நம்ம குருவி மூளைக்கு எதுமே எட்டலை :(((

அதுல மொதல் பரிசு என் தோழி ஒருத்தி வாங்கினா. அந்த வயசுலயே ரொம்ப நல்லா எழுதி இருந்தா. ஆனா ரொம்ப நாளா அவ எங்கேயோ படிச்ச கவிதைய நல்லா ஞாபகம் வச்சு எழுதிட்டானுதான் நினைச்சுட்டு இருந்தேன். ஹி... ஹி... நம்மளைப் போலவேதான எல்லாரையும் நினைக்கத் தோணுது ;))) அன்னைக்கு வீட்டுக்குப் போனதும் எங்கம்மாட்ட இதுப் பத்தி சொல்லி எனக்கு மட்டும் எழுத வர மாட்டென்றதுனு ஃபீல் பண்ணிட்டு இருந்தப்போதான் அம்மாவுக்குப் புரிஞ்சதுப் போல புள்ளைக்கு இருக்கற திறமை. அப்போ சொன்னாங்க. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணக் கூடாது. எடுத்ததுமே எழுத வராது. எழுத எழுததான் நல்லா ப்ராக்டிஸ் ஆகும். அதுக்கு நிறைய கவிதை புக்ஸ் படிக்கணும். சுத்தி நடக்கறத அப்சர்வ் பண்ணனும். அதை வச்சு கவிதை எழுதணும்னு ஒரே அட்வைஸ்.

அப்போதான் எனக்குள்ள இருந்த கவிதாயினி கண்ணு முழிச்சா. உடனே வேகமா நோட்ட எடுத்துட்டு உக்காந்துக்கிட்டேன். வேற எதுக்கு? சுத்தி நடக்கரத அப்சர்வ் பண்ணத்தான். நோட்டு தேடிப் பிடிச்சு எழுதறதுக்குள்ள மறந்துப் போயிட்டா. அதான் முன்னெச்செரிக்கையா நோட்டும் கையுமா உக்காந்தாச்சு. நானும் சுத்திப் பாக்கறேன். ஒண்ணுமே நடக்க மாட்டேன்றது. செவுத்துல பல்லி ஒண்ணுதான் நடந்துச்சு. ச்சே! என்ன கொடுமைடா சாமினு வீட்டுக்கு வெளில சேர் போட்டு உக்காந்து எதாவது நடக்குதான்னு பார்த்தேன். ரொம்ப நேரம் கழிச்சு ரெண்டு எருமை மாடுதான் நடந்துப் போச்சு. நான் கவிதை எழுதறேன்னு பொறாமைலதான் எதுமே நடக்க மாட்டென்றதுனு எனக்கு வந்ததே கோபம். என்ன வாழ்க்கை இது? எதிர்பார்த்ததே நடக்க மாட்டேன்றது-ன்னு சலிச்சுட்டப்பதான் எனக்கு பொறித் தட்டுச்சு. வாழ்க்கை!!!! இதைப் பத்தி ஏன் கவிதை எழுதக் கூடாதுனு எனக்குள்ள ஒரு பல்பு எரிஞ்சது. உடனே உக்காந்து பயங்கரமா யோசிச்சு என் வாழ்க்கையோட சில மணி நேரங்களை மோட்டுவளையப் பாத்தே செலவிட்டு நான் மொத மொத எழுதின அரும் பெரும் கவிதை

"வாழ்க்கை சர்க்கரையாய்
இனிக்க வேண்டும்
ஆனால்
சர்க்கரை நோயாய்
மாறி விடக் கூடாது"

ஹி... ஹி... எப்படி ஒரு அரும் பெரும் தத்துவத்த அஞ்சு வரில சொல்லிட்டேனு பெருமையா எங்கம்மாட்ட தூக்கிட்டுப் போய் காட்டினேன். எங்கம்மாவுக்கு அதைப் பாத்ததும் சிரிப்பு வந்துடுச்சு. அப்போ ஒரு கவிஞரைப் பெத்த பெருமைல சிரிக்கறாங்கனு நினைச்சுக்கிட்டேன். இப்போதான் தெரியுது :((( அப்போ சொன்னாங்க எதாவது மெசேஜ் சொல்ற மாதிரி இருக்கணும். இல்ல வர்ணனையா இருக்கணும். அது சந்தோஷமா இருக்கலாம். இல்ல துக்கமாவும் இருக்கலாம். அந்த மாதிரி எழுத ட்ரை பண்ணுனு சொன்னாங்க. என் கவிதை சூப்பரா இருக்குனு சொல்லலையேனு ஒரே கோபம். அதுக்கப்புறம் பத்தாவதுல கவிதை எழுத ட்ரை பண்ணவே இல்ல. பதினொண்ணாவது ஹாஸ்டல்ல போய் தள்ளினதும்தான் வீட்டைப் பிரிஞ்ச துக்கத்துல கவிதையா உள்ளுக்குள்ள ஊறுச்சு. அம்மாவுக்கு அப்பாவுக்குன்னு கவிதையா எழுதி தள்ளினேன். எங்க செட்டுலயே நான் தான் பெரிய கவிஞர்னு பேரெடுத்தேன்னா பாத்துக்கங்களேன். அப்புறம் பன்னிரெண்டாவது முடிக்கப் போறப்போ எங்க பிரிவுக்காக எழுதின கவிதைதான் எனக்கு பேர் வாங்கித் தந்துச்சு.

"எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்த
நாம் இங்கே
பள்ளியென்னும் தூணில்
நட்பென்னும் கயிற்றால்
ஒன்றாய் பிணைக்கப்பட்டுள்ளோம்
புறத்தில் வேறுபட்டாலும்
அகத்தில் ஒன்றாகி
நட்பு வானில்
சிறகடித்திருக்கும் இவ்வேளையில்
பிரிவென்னும் வேடன்
நம்மைப் பிரிப்பதேனோ...
என்ன செய்ய?
காலமென்னும் கூட்டில்
அடைந்துதானே ஆகவேண்டும்"

இன்னும் கொஞ்சம் நல்லாவே இருந்துச்சு. எனக்கு சில வார்த்தைகள் மறந்துப் போயிடுச்சு. அந்த வயசுல்ல இது ரொம்ப பெரிய இலக்கிய கவிதை ரேஞ்சுக்குத் தெரிஞ்சது. அப்புறம் காலேஜ் சேந்ததுக்கப்புறம் இப்படிதான் தத்துப் பித்துனு எதாவது எழுதிட்டு இருப்பேன். ஒருநாள் எங்க தமிழ் சார் கவிதைப் பத்தி எடுக்கும்போது ஒரு கேள்விக் கேட்டார்.

"மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?"-ன்னுக் கேட்டார்.

நிறையப் பேர் நிறைய பதில் சொன்னாங்க. நான் சொன்னேன் "எல்லாருக்கும் ஐ மீன் படிக்காதவங்களுக்குக் கூட ஈஸியாப் புரியற மாதிரி எழுதறது புதுக் கவிதை. மரபுக் கவிதைன்னா தமிழ் புலமை நல்லா இருக்கறவங்களுக்கு மட்டும்தான் புரியும்"-னு. உடனே அவர்

"கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது- இது உங்களுக்கு புரியுதா?"-ன்னார். நான் ஆமாம்னு தலையாட்டினேன்.

"சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தப்போ பாமர மக்களுக்கும் புரியணும்னு நாமக்கல் கவிஞர் எழுதின இது சுத்தமான மரபுக் கவிதை"-னு சொன்னார். அதுக்கு மேல யோசிக்க விருப்பப்படாம அமைதியா உக்காந்துக்கிட்டேன். அப்போ அவர் கொடுத்த விளக்கம்

"தமிழ் கவிதைக்கான சுத்தமான இலக்கணத்தோட எழுதப்படறதுதான் மரபுக் கவிதை. எந்தவித இலக்கணங்களுக்கும் உட்படாம எழுதறது புதுக் கவிதை. இது யார் வேணும்னாலும் எழுதலாம். எப்படி வேணும்னாலும் எழுதி அதை கவிதைனு சொல்லிக்கலாம்"-னு அவர் சொன்னப்போதான் புதுக் கவிதைக்கான இலக்கணமே எனக்குப் புரிஞ்சது. ஹைய்யா! அப்போ நான் எழுதறதும் கவிதைதான் அன்னைக்கு மனசுல ஊன்றிய விதை இன்று மரமாக வளர்ந்து உங்கள் முன் அப்பப்போ வந்து பூப்பூத்துட்டு இருக்கு :)))

நான் எழுதறது கவிதை இல்ல கவுஜன்னு சிலர் சொல்லி இருக்காங்க. யார் என்ன சொன்னாலும் எனக்கு தோணுவதை மட்டுமே செய்யும் நான் என்னுடையவை கவிதைகள் என்றே இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆஹா! தமிழ் நல்லாவே வருது :P

என் டீம்மேட் ஒரு பையன் ஒருநாள் காலைல நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன். எப்படி இருக்குனு சொல்லுனு சொன்னான். சரி சொல்லுனு சொன்னதுக்கு கிடைச்சக் கவிதை

"தலைக் கட்டாமலிருந்தால்
கொத்துமாம் பாம்பு!
உண்மைதான்...
உனது விழிகளும்
இமைகளால் கட்டப்படாமல்
இருந்தன"

எனக்கு இது ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. சும்மா இருக்க மாட்டாம சூப்பரா எழுதி இருக்கனு அவனப் புகழப் போயி அவன் "நான் முன்னாடியெல்லாம் சூப்பரா எழுதுவேன் தெரியுமா. காலேஜ் போய் தான் வேஸ்ட்டாப் போயிட்டேன். கவிதைக் கூட சும்மா திட்டற மாதிரியே வருது like
சட்டில சுடணும் தோசை
உனக்கு வைக்கப் போறேன் பூசை
ஏய் டண்டனக்கா டணக்குணக்கா"-ன்னு TR ஸ்டைல்ல சொன்னான். என்னால சிரிப்பு அடக்க முடியலை. சரி ஒரு கவிதை எழுதிக் குடுனு நான் கேட்டுக்கிட்டதுக்காக அவன் எழுதித் தந்தக் கவிதை இங்க... இதுல மொதல்ல 'சை'ன்னு முடியற மாதிரி வார்த்தைகள் தேடிப் பிடிச்சு அடுத்தடுத்த வரில எழுதிட்டு அப்புறமா முன்னாடி இருக்கற வார்த்தைகள் எழுதினான்.

"மனசுக்குள்ள ஆசை
நடத்தவேணும் பூசை
சம்பாதிக்கல காசை
நமக்கெதுக்கு மீசை
சட்டில கிடக்குது தோசை
தின்னுப்புட்டு தூங்குடா சூசை"

அவனோட இந்தக் கவிதைய எழுதறதுக்கு முன்னாடியே என் ப்ளாக்ல போடறதா தெரியாத்தனமா ப்ராமிஸ் பண்ணிக் கொடுத்துட்டேன். அதான்....... :)))

Thursday, February 21, 2008

மரகதம் (கருங்குயில் குன்றத்துக் கொலை)

என்னடா இந்த பொண்ணு கொலை-ன்னு எல்லாம் போட்டிருக்கு. எதாவது த்ரில்லர் ஸ்டோரி எழுத ஆரம்பிச்சிடுச்சோனு நெனக்காதீங்க. நாமல்லாம் வந்தோமா மொக்கை போட்டோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு தேவையில்லாத வேலையெல்லாம் பண்ணக் கூடாதுன்றதுல நான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கேன். சோ அந்த மாதிரியெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

அப்போ என்னதான் இதுனு தலைல இருக்கற நாலு முடியையும் நீங்க பிச்சிக்கறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன். இது ஒரு படம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள்ல இதுக்கு ரொம்ப முக்கியமான இடம் இருக்கு. நான் குட்டிப் பொண்ணா இருந்தப்போ சன் டிவி-ல இது எம்.ஜி.ஆர் வாரம், நகைச்சுவை வாரம்னு, சாம்பார் வாரம், சட்னி வாரம்னு ஒரு வாரத்துக்கு ஒரு டாபிக் எடுத்து அது சம்பந்தமான படங்களை போடுவாங்க. அப்படி போட்ட சிவாஜி வாரத்துலதான் இந்தப் படத்தை மொதல்லப் பாத்தேன். மொதல்லப் பாத்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. தேடிப் பிடிச்சு CD வாங்கி வச்சிட்டேன். வீட்டுக்கு போறப்போ எல்லாம் அடிக்கடி இந்த படம் பாப்பேன்.

இந்த படம் பத்தி தெரிஞ்சவங்க ரொம்ப கொஞ்சம் பேருதான் இருப்பீங்கனு நினைக்கறேன். ஏனா இது ஒரு பக்கா கருப்பு வெள்ளை படம். ஆனா அந்த படத்துல வர ஒரு பாட்டைத் தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது. அதாங்க... நம்ம சந்திரபாபு சார் நடிச்ச "குங்குமப் பூவே கொஞ்சு புறாவே" பாட்டு. அதை தவிர வேற பாட்டு எல்லாம் வேற எங்கேயும் நானும் கேட்டதில்ல.

கதை ஆரம்பிக்கறதே இலங்கைல. சிவாஜியும் அவரோட ஃப்ரெண்ட்ஸும் குதிரைல போறப்போ கொள்ளைக்காரங்க வழிமறிச்சுக் கடத்திட்டுப் போறாங்க. ஏனா அவர் தமிழ்நாட்டுல ஒரு சிற்றரசோட ராஜா வீட்டுப் பிள்ளை. அந்த கொள்ளைக்காரனோட இடத்துக்கே பத்மினி அவரக் காப்பாத்த வராங்க. ஏற்கனவே பத்மினி செஞ்ச ஒரு உதவிக்காக என்ன கேட்டாலும் தரேனு சத்தியம் பண்ணிக் கொடுத்திருந்த கொள்ளைக்காரனும் அவங்களை விட்டுடறான். அப்புறம் உடம்பு சரியில்லாமப் போகிற சிவாஜிய அப்பாவோட மட்டும் வனாந்திரப் பகுதில வாழ்ந்துட்டிருக்கற பத்மினி வீட்டுல வச்சு பாத்துக்கும்போது அவங்க ரெண்டு பேருக்கும் வேறென்னங்க அந்தப் பாழாப் போன கருமம்தான் வந்து தொலைக்குது.

சிவாஜி நல்லாகி ஊருக்கு புறப்படும்போது அவங்க அப்பாட்ட பொண்ணு கேக்கறப்போ அவர் மறுத்துடறார். அதனால பத்மினி அழ அப்போதான் வருது ஃப்ளாஷ்பேக். கருங்குயில் சிற்றரசோட ராஜா கால் ஊனம்ன்ற காரணத்தால தான் கல்யாணம் பண்ணிக்காம தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கறார். தம்பியோட மனைவி வீட்டுக்கும் இவங்களுக்கும் பகை வந்துடுது. அதனால தம்பிய விவாகரத்துப் பண்ண சொல்றார். அவர் மறுக்கவும் வீட்டை விட்டு வெளியேப் போக இவர் சொல்ல அவர் முடியாது எனக்கு சொத்துல பங்கு இருக்குனு சொல்ல ஒரே பிரச்சினை. உன்னைக் கொன்னுடுவேனு அண்ணனைத் தம்பி மிரட்டிட்டுப் போயிடறார். அடுத்த நாள் பார்த்தா அண்ணன் இறந்துக் கிடக்கறார். சாட்சிகள் எல்லாம் இவருக்கு பாதகமா போக ஜெயில்ல போட்டுடறாங்க. அவர் தப்பி ஓடி வந்து அவரோட மூன்று வயது மகளைத் தூக்கிட்டு இலங்கை வந்துடறார். அவர்தான் இங்க அப்பா. அந்த மூணு வயசு பாப்பாதான் இப்போ 19 வயசு பத்ம்னி. அவரோட மனைவியோட தம்பிதான் நம்ம தலைவர் சிவாஜி.

இந்த கதையக் கேட்டுட்டு அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு சிவாஜியயும் மறக்க முடியாம இருக்கறப்போதான் அந்தக் கொள்ளைக்காரன் பிரச்சினை பண்றான். இவங்க படகுல ஏறி தப்பி ஓடும்போது நடக்கிற சண்டைல அப்பாவும் பொண்ணும் பிரிஞ்சிடறாங்க. கடற்கரைல மயங்கி கிடக்கிற பத்மினிய அவங்க அம்மாவே காப்பாத்தி செத்துப் போயிட்டதா அவங்க நினைச்சுட்டு இருக்கற அவங்களோட பொண்ணு போலவே இருக்கறதால பாசமாப் பாத்துக்கறாங்க. கடைசி வரைக்கும் தான் யார்னு சொல்லாம பத்மினியும், பாதில அவங்களை இன்னார்னு தெரிஞ்சிக்கற சிவாஜியும் உண்மையான கொலைகாரங்களைக் கண்டுபிடிக்கறதுதான் மிச்சக் கதை.

ரொம்ப அருமையான படம். கிடைச்சா பாருங்க. பாட்டு எல்லாம் நல்லா இருக்கும். பத்மினி அவங்க அம்மா எல்லாரும் கருங்குயில் குன்றம் போயிருக்கறப்போ வரவேற்புக்காக ரெண்டு பொண்ணு ஆடுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும். இந்தப் படத்துல என்ன ஒரு விசித்திரம்னா பதினாறு வருடம் கழிச்சு இலங்கைல இருந்து வர அப்பா பொண்ணுகிட்டதான் உருவ மாற்றம் தெரியும். மத்தவங்க எல்லாரும் பதினாறு வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாங்களோ அப்படியேதான் இருக்காங்க. ஒருவேளை அது நம்ம தமிழ் மண்ணோட மகிமையோ என்னவோ ;)))

Wednesday, February 20, 2008

கோடி புண்ணியம் செய்த நான்...


உன்னுடனான நெருக்கம்
நீ பிறந்தது முதல்...
சிறு வயதுகளில் உன்னுடன்
சண்டையிட்டிருக்கலாம்
ஆனால் இப்பொழுது...
என் நண்பர்கள் பலர்
உன்னைக் கண்டுப்
பொறாமைப்படும் வேளைகளில்
பெருமிதமாய் உணர்வேன்
என் சந்தோஷ நொடிகளை
பகிர்ந்துக் கொள்ளும்
நண்பனாய் நீ
என் துயர வேளைகள்
தேடும் தாய்மடி நீ
பிள்ளையாய் பாவித்து
என்னைத் தாங்கும்
தந்தை உள்ளம் நீ
சகோதரனாய் பழகும்
நண்பன் கிடைப்பது எளிது
சகோதரனே நண்பனாயிருந்தால்...
ஆயிரம் அண்ணன்களோடு
பிறந்த ஆனந்தம் அடைகிறேன்
தம்பி உன் ஒருவனுக்கு
தமக்கையாய் பிறக்க
கோடி புண்ணியம் செய்த நான்...

Monday, February 4, 2008

கம்ப்யூட்டர் லேபுக்கு ஏன் ஏசி போடறாங்க?


எனக்கு கம்ப்யூட்டர் எப்போ அறிமுகமாச்சுனு எனக்கேத் தெரியாது. அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த நாளை குறிச்சு வைக்காம விட்டுட்டேன். பின்னாடி வரலாறுல எழுதும்போது இதைப் பத்தி எழுதலைனா நல்லா இருக்காது இல்ல. அதான். நான் பத்தாவது படிச்சப்போ எங்க மாமா வீட்டுல புதுசா கம்ப்யூட்டர் வாங்கினாங்க. என் மாமாவோட செஸ் விளையாடறது சின்ன வயசுல இருந்து வழக்கம் எனக்கு. கஜினி முஹம்மது கணக்கா பல தடவை முயற்சிப் பண்ணி கடைசில ஒரு நாள் அவரை நான் ஜெயிச்சதுக்காக சிங்கப்பூர் போயிட்டு வந்தப்போ எனக்கு மேக்னட்டிக் செஸ் போர்ட் வாங்கிட்டு வந்துக் கொடுத்தார். அவர் எதாவது புதுசா கத்துக்கிட்டா எனக்குக் கத்துக் கொடுப்பார். அதனால அவர் என்னை வரச் சொல்லி கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாட சொல்லிக் கொடுத்தார். அந்த நாளை சரித்திரத்துல போட்டுக்கலாம்னு முடிவுப் பண்ணி வச்சிருக்கேன்.

அப்போ ரொம்ப ஆர்வத்தோட விளையாடினாலும் எவ்வளவோ கஷ்டப்பட்டு என் கை அந்த நாலு arrow keys தவிர வேற எங்கேயும் படாம பாத்துக்கிட்டேன். ஒரு தடவை என் சுண்டு விரல் தெரியாம Ctrl key மேல பட்டுடுச்சு. கம்ப்யூட்டருக்கு எதாவது ஆயிடுமோனு பயந்தேப் போனேன். அதுக்கப்புறம் வேற எங்கேயும் கைப்படாம விளையாடி ப்ராக்டிஸ் பண்ணிட்டேன்.

நான் பத்தாவது முடிச்சிட்டு லீவுல இருந்தப்போ எங்கப்பாக்கிட்ட போய் அப்பா நான் கம்ப்யூட்டர் க்ளாஸ் போறேன்னு கேட்டதுக்கு எங்கப்பா மொதல்ல டைப் க்ளாஸ் போங்க. அப்போதான் கம்ப்யூட்டர்ல ஸ்பீடா டைப் பண்ண வரும்னு சொன்னார். அப்போ அவரைப் பொறுத்த வரைக்கும் கம்ப்யூட்டர்னா புதுவித டைப்ரைட்டர்னு எனக்கு அப்போ தெரியாமப் போயிடுச்சு. தந்தை சொல்லைத் தட்டாதப் பெண்ணல்லவா நான். அதான் சமத்துப் பிள்ளையா அப்பா சேர்த்து விட்ட டைப் இன்ஸ்டியூட்ல என் தம்பியோட சமத்தாப் போய் டைப் அடிக்க கத்துக்க ஆரம்பிச்சேன்(அந்தக் கதைய இங்க சொல்ல முடியாது. அதுக்கு தனிப் பதிவே போடணும். அம்புட்டு பெரியக் கதை).

அப்புறம் ரிசல்ட் வந்து பதினொண்ணாவது சேர்ந்து என் இம்சை தாங்க முடியாம எங்கப்பா என்னைக் கொண்டுப் போயி ஹாஸ்டல்லத் தள்ளிட்டார். அங்கயும் ஆறு பேரு சேர்ந்து ஒரு வானரப் படையமைச்சோம். பதினொண்ணாவதுல பயாலஜி அதாங்க ஃபர்ஸ்ட் க்ரூப்ல இருந்தேன். எங்கப் படைல மூணுப் பேரு பயாலஜி. மூணு பேரு கம்ப்யூட்டர் சயின்ஸ். எனக்கு அப்போல்லாம் கம்ப்யூட்டர் க்ரூப்ல இருந்தவங்களப் பார்த்தா ஒரு பொறாமையா இருக்கும். நாமளும் அதுலயே சேர்ந்திருக்கலாமோன்னு. அப்போதான் பாதிலயே பன்னிரெண்டாவது சிலபஸ் எடுக்க ஆரம்பிச்சாங்க. மத்ததெல்லாம் ஓகே. ஆன இந்த ஜுவாலஜி. உவ்வே... அந்த அனாடமியெல்லாம் படிக்கறதுக்குள்ள வாந்தியெடுக்காத கொறைதான். இயற்கையிலேயே எனக்கு கொஞ்சம் இளகிய மனசா. அதான்... அடம் பிடிச்சு எனக்கு க்ரூப் மாத்தி தரலைனா படிக்க மாட்டேனு எல்லாம் சபதம் எடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப்புக்கு மாறிட்டேன். எடுத்த சபதம் முடித்தப் பெண்ணல்லவா நான்... ஹி... ஹி... ஹி...


நான் அந்த க்ரூப்புக்கு மாற இருந்த இடைப்பட்டக் காலத்துல நடந்ததுதான் இந்தப் பதிவெழுதக் காரணமான அந்த வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சம்பவம். நானும் என் வானரக் கூட்டத்து தோழி ஒருத்தியும் கம்ப்யூட்டர் லேப் முன்னாடி உக்காந்து படிக்கறோம்ன்ற பேருல கதையடிச்சுட்டு இருந்தோம். அப்போதான் அவ கேட்டா "கம்ப்யூட்டர் லேபுக்கு மட்டும் ஏன் ஏசி போடறாங்கன்னு தெரியுமா உனக்கு?" அட ஆமா! இத்தனை நாளா இதை நோட் பண்ணினது இல்லையே. கெமிஸ்ட்ரி லேபுல அடுப்பு... ச்சே... விளக்குப் பத்த வைப்போம். அது அணைஞ்சிடும். சோ அங்க ஏசி போட முடியாது. ஆனா பிசிக்ஸ் லேப், பயாலஜி லேபுல போட்டிருக்கலாமே. அங்க எல்லாம் போடாம இங்க மட்டும் ஏன் போட்டாங்க? நான் கேள்வியாய் அவளைப் பார்த்தேன். இதுக் கூடத்தெரியாதா உனக்குன்ற மாதிரி என்னைப் பாத்துக் கேவலமா ஒரு லுக்கு விட்டு அந்தப் பிசாசு சொன்னுச்சு.

"கம்ப்யூட்டர் லேப்ல ஏசி போடலைனா வைரஸ் வந்துடும். அது அட்டாக் பண்ணிட்டா கம்ப்யூட்டரே வேஸ்ட் ஆயிடும்"-னு சொன்னா.

அடக் கடவுளே! இத்தனை நாளா இது தெரியாமாப் போச்சே-னு என்னையே நொந்துக்கிட்டேன். எவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கா என்று ஆச்சர்யமாய் அவளைப் பாத்தப்போதான் தோணுச்சு. அய்யய்யோ எங்க மாமா வீட்டுல ஏசி போடலையேனு எனக்கு ஒரே வருத்தம். அப்புறம் கிட்டத்தட்ட ஒரு வருஷமா கம்ப்யூட்டர் ஒரு மெஷின்தான. அதை எப்படி வைரஸ் அட்டாக் பண்ணும். அது உயிருள்ள விஷயங்களைதான அட்டாக் பண்ணும்ன்ற கேள்வி என் மண்டையக் குடைஞ்சிட்டே இருந்துச்சு.

காலேஜ் சேர்ந்து கொஞ்ச நாளுல கம்ப்யூட்டர் வைரஸ்னா ஒரு சாஃப்ட்வேர் ப்ரோக்ராம்தானு நான் தெரிஞிட்டப்போ அவ மேல வந்த கொலை வெறி இருக்கே.... grrrrrrrrrrrrrrr......... இன்னும் என் கேள்விக்கு விடைக் கிடைக்கலை. அந்த துரோகி வேணும்னே அப்டி சொன்னாளா இல்லை நிஜமாவே அவளும் அப்படி யார்ட்டயோ லூசாயிட்டு வந்து அதுதான் உண்மைனு நினைச்சு சொன்னாளான்னு. ஹ்ம்ம்ம்ம்....

இது மாதிரி உங்களுக்கும் நிறைய அனுபவம் இருக்கும்னு நினைக்கறேன். முடிஞ்சா சொல்லுங்க மக்கள்ஸ். விரைவில் டைப் கத்துக்கிட்ட கதையுடன் மேடம் வருவாங்க :))))