Showing posts with label சிந்தித்தது. Show all posts
Showing posts with label சிந்தித்தது. Show all posts

Friday, January 6, 2017

இம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு! :-)

ஒரு ரெண்டு நாளுக்கு முன்னாடி யதேச்சையா என் ப்ளாக் பக்கம் எட்டிப் பாத்தப்ப தான் தெரிஞ்சது இம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சுனு. மூணு நாளா ஒரே சந்தோஷத்துல என் பதிவுகளெல்லாம் படிச்சுட்டு இருந்தேன். ஒண்ணொண்ணும் படிக்கும் போதும் நாமளா இப்படி எழுதினோம் நாமளா இப்படி கமெண்ட்ஸ் போட்டிருக்கோம்னு ஒரே ஆச்சரியம் :-) ஆனா லைஃப்ல மறந்து போன பல விஷயங்கள ஒரு டைரி மாதிரி ஞாபகப்படுத்திட்டு இருக்கு.

ஆரம்ப காலத்துல பெருசா என்ன எழுதறதுனு தெரியாம ஏதோ கிறுக்கிட்டு இருந்த என்னை உற்சாகப்படுத்தி தொடர்ந்து என் மொக்கையெல்லாம் தாங்கிக்கிட்ட நீங்க மட்டும் தான் என்னோட பலம். என் ப்ளாக் விகடன் வரவேற்பறைல வந்தது, அத்தை மகனே அத்தானே கதை சில ஃபோரம்ல ஷேர் ஆகியிருக்கு, அதே கதை சில ஆண்ட்ராய்ட் ஆப்-ல ஷேர் ஆகி இருக்கு. இந்த வெற்றிக்கு முழு காரணமும் நீங்க மட்டும் தான்.

என் மேல நிறைய பேருக்கு வருத்தம். அவங்க ப்ளாக்க்கு வர மாட்டென்றேன்.. கமெண்ட்ஸ் போடமாட்டேன்கிறேன்னு. நான் ப்ளாக் ஆரம்பிச்சது இன்போஸில் ஜாயின் பண்ணின புதுசுல. அப்போ இன்டர்நெட் சாயந்திரம் 5 - 7 மட்டும்தான். அதுல என் ப்ளாக் பாக்கறதுக்கும் பிரெண்ட்ஸோட  பேசறதுக்குமே சரியா போயிடும். அதனால வேற ஏதும் என்னால பாக்க முடிஞ்சதில்ல :-)

அப்புறம் நிறைய பேர் காதல் பத்தியே எழுதறேன்னும் ஒரே கம்ப்ளெயிண்ட். கல்யாணம் ஆகி சில வருஷங்கள் கழிச்சு இதே மாதிரி எழுதுவியான்னுலாம் கேள்வி. எதெது எந்த வயசுல பண்ண முடியுமோ அந்த வயசுல பண்ணனும். அந்த ஏஜ் காதல் கல்யாணம் பத்தின கற்பனைகளுக்கான ஏஜ். கல்யாணம் ஆகி சில வருஷங்கள் ஆகிட்டா பொறுப்பான குடும்பஸ்திரிக்கான ஏஜ். காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிக்க வேண்டியதுதான் :) டென்த் படிக்கறவன்ட்ட போயி நீ ஏன் டென்த் படிக்கற. ட்வெல்த் படிக்க வேண்டியதுதானான்னு கேட்டா என்ன பண்றது? :D

எல்லா கதைலயும் உங்க சொந்த கதையானு நிறைய பேர் கேட்டிருக்காங்க. எந்த கதையும் என் சொந்த கதை இல்ல. ஆனா சின்ன சின்ன விஷயங்கள் எனக்கு நடந்ததை சேர்த்திருப்பேன். உதாரணத்துக்கு கவிதையே தெரியுமா கதைல வந்த பஸ் ஸ்டான்ட் இன்சிடென்ட், ஸ்பைடர் தட்டி விடறது லாம் எனக்கு நடந்தது. ஆனா அவங்கலாம் யார்னு கூட எனக்கு தெரியாது. ஆனா கதைல நல்லாருக்கு இல்ல :)

உன்னோடு தான் என் ஜீவன் கதையை முடிக்காததுக்கு ரொம்ப சாரி. அதை எப்படி எழுதணும்னு பிளான் பண்ணி வச்சிருந்ததை சுத்தமா மறந்து போயிட்டேன். அதுல தான் என் சொந்த கதையை சேர்த்து எழுதணும்னு நினைச்சிருந்தேன் ;) கதை நியாபகம் இல்ல :(

என்னை அரசி அரசினு கமெண்ட் போடறப்போ எல்லாம் நிஜமா ஒரு கிரீடத்தை எடுத்து என் தலைல வச்ச மாதிரியே இருக்கும் :) அத ரொம்ப மிஸ் பண்றேன்னு அப்பப்போ கஸ்டமா இருக்கும். ஆனா அதை விட ஒரு பெரிய கிரீடம் இப்போ தலைல இருக்கு :) அம்மான்ற கிரீடம் :)) அட! உங்களுக்கு சொல்லவே மறந்துட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு குட்டி இளவரசன் வந்தாச்சு :)) அவர் பேர் தேவஹரி. வாழ்க்கையே இந்த ரெண்டு குட்டிங்கள சுத்தியே நகருது. சென்னைல இருந்து சிட்னி புலம் பெயர்ந்து மூணு வருஷம் ஆச்சு :)

ஏதாவது என்கிட்டே சொல்லணும்னு ஆசைப்பட்டிங்கனா jayanthijj@gmail.com ன்ற மெயில் ஐடிக்கு மெயில் பண்ணுங்க :)

Happy new year to you and your family :))



Wednesday, June 18, 2008

மேக்-அப்

நம்ம முகத்துக்கு மேக்-அப் அவசியமானு எப்பயாச்சும் யோசிச்சிருக்கிங்களா? நான் பல தடவை யோசிச்சிருக்கேன். சின்ன வயசுல எல்லாம் இந்த Fair & Lovely, Fairever விளம்பரம் எல்லாம் பாக்கும்போது இது என்னம்மா-னு எங்கம்மாட்ட கேப்பேன். எங்கம்மா அது வெள்ளையாவறதுக்கு போடற க்ரீம்-னு சொன்னாங்க. அப்போ எனக்குனு கேட்டதுக்கு நீ ஏற்கனவே ரொம்ப வெள்ளையா இருக்கற கண்ணு. அதை போட்டு இன்னும் வெள்ளையானா எல்லாரும் உன்ன வித்தியாசமா பாப்பாங்க அப்டி இப்டினு சொல்லி சமாளிச்சிட்டாங்க. அப்புறம் ஒரு எட்டாவது படிச்சப்போ என் ஃப்ரெண்ட் ஒருத்தி நல்லா பளபளனு வருவா. நான் எண்ணை வடிஞ்சு பாவம்போல போவேன். ஒருநாள் அவட்ட உன் அழகோட ரகசியம் என்னடி-னு கேட்டேன். Fair & Lovely தானு சொன்னாளே பாக்கலாம். எனக்கு எங்கம்மா மேல வந்த கடுப்புக்கு அளவே இல்ல. அப்புறம் நானும் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்.

இங்கதான் எங்கம்மாவோட திறமைய நான் எடுத்து சொல்லணும். எதாவது அவங்க வேண்டாம்னு சொல்லி நான் வேணும்னு அடம்பிடிச்சா என்னைத் திருப்பி கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா இது பண்ணினா இப்படி ஆகும் அப்படி ஆகும்னு சொல்லி நானே பயந்து போயோ இல்ல வெறுத்துப் போயோ தானா நிறுத்திடுவேன். ப்யூட்டி பார்லர் வச்சா கண்டவங்க முகத்த க்ளீன் பண்ணனும். காலை எல்லாம் தொடணும். நீயே பயங்கரமா சுத்தம் பாப்ப. நீ எப்படி இதையெல்லாம் செய்வ-னு கேட்டு என்னோட ப்யூட்டி பார்லர் கனவை என்ன வச்சே தகர்த்து எரிஞ்சுட்டாங்க. அப்பேற்பட்டவங்க என் Fair & Lovely மேட்டர சும்மா விடுவாங்களா? Fair & Lovely போட்டா இப்போ நல்லா இருக்கும். ஆனா சீக்கிரமாவே சுருக்கம் வந்து முகம் கிழவியாட்டம் ஆயிடும்னெல்லாம் பயமுறுத்தி அதுக்கப்புறம் Fair & Lovely என்ன பவுடரே வேணாம்னு நிறுத்திட்டேன். அதுக்கப்புறம் வாழ்க்கைல முகத்துக்கு எதுமே போட்டதில்ல. யாராவது இதைப் பத்திக் கேட்டா நாங்கெல்லாம் நேச்சுரல் ப்யூட்டிப்பா. எனக்கெதுக்கு இதெல்லாம்-னு சொல்லி சிரிப்பேன்.

கல்யாணம் முடிவானதும் எங்கக்கா கல்யாண மேக்-அப்க்காக ஒரு பார்லர் கூட்டிட்டுப் போனாங்க. எங்க ஊருல அவங்கதான் நம்பர் ஒன். நிறைய கல்யாணத்துல அவங்க பண்ணி விட்ட மேக்-அப் பாத்து ஆச்சர்யப்பட்டிருக்கேன். மூணு கோட் நாலு கோட்னு இல்லாம ரொம்ப சிம்பிளா ஆனா அதே சமயம் ரொம்ப அழகா பண்ணி இருப்பாங்க. அவங்ககிட்ட போனதும் கல்யாண தேதி எல்லாம் கேட்டுட்டு மூணு தடவை ஃபேஷியல் பண்ணிக்கோனு சொல்லிட்டாங்க. சரி கல்யாணத்துக்காகதானனு நானும் சரி சொல்லிட்டேன். மொத தடவை ஃபேஷியல் பண்ணப் போனப்போ என்ன முகம் இவ்ளோ ரஃப்-பா இருக்கு? என்ன க்ரீம் போடுவனு கேட்டாங்க. நான் பெருமையா எதுமே போட மாட்டேனு சொன்னேன். எதும் போடலைனா இப்படி தான் ரஃப் ஆகும்னு சொன்னாங்களே பாக்கலாம். தாய்க்குலத்து மேல தீராத கோபம். வீட்டுக்குப் போய் சண்டையான சண்டை போட்டேன். அவங்க எல்லாம் அப்படிதான் சொல்லுவாங்க. ஆன நீ எதும் போடாதனு அப்பவும் அம்மா அதையே சொன்னாங்க.சரி-னு சொல்லிட்டு அப்புறமா வாங்கி போட ஆரம்பிச்சிடலாம்னு விட்டுட்டேன்.

கல்யாணத்துக்கு முன்னாடி ஃபேஷியல்-ன்ற பேருல முகத்த தேச்சு தேச்சு எடுத்தாங்க. எல்லாரும் பாத்துட்டு அட! கல்யாண களை வந்துடுச்சே... அப்டினு சொன்னப்போ எல்லாம் மனசுல அது எப்டினு எனக்குதான தெரியும். பார்லர்ல அந்த அளவுக்கு தேச்சு எடுத்தா வராமலா இருக்கும்னு நானா நினைச்சுக்கிட்டு சிரிச்சு வச்சேன். அப்றமா மூணாவது தடவையா பண்ண போனப்போ கோல்டன் ஃபேஷியல் பண்ணிக்கிறயா? அப்போதான் முகத்துல ஒரு glow வரும். நல்லா இருக்கும்னு சொன்னாங்க. சரி கல்யாணத்தப்போ நம்மள சுத்தி ஒரு ஒளிவட்டம் தெரியும். தக தக-னு மின்னுவோம் போலனு நினைச்சுட்டு சரி-னு சொன்னேன். அதுக்கு தண்டமா ஒரு ஆயிரம் ரூபாய அழுது வச்சிட்டு வந்தேன். பண்ணிட்டு வந்ததுக்கப்புறம் கண்ணாடி முன்னாடி நின்னு நின்னு பாத்தேன். ஒரு glow-யும் காணோம்.

கல்யாணத்தப்போ எல்லாரும் அழகா இருக்க அழகா இருக்க-னு சொன்னப்போ அப்படியே சந்தோஷம் பொங்குச்சு. நாம பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போகலை போலனு சந்தோஷப்பட்டுக்கிட்டேன். அப்புறம்தான் தோணுச்சு. அட! எத்தன கல்யாணத்துல சுமாரா இருந்தவங்களையெல்லாம் நாமளே ரொம்ப அழகா இருக்கீங்கனு சொல்லிட்டு வந்தோம்னு ஞாபகம் வந்து ஒரே சோகம் சோகமா போயிடுச்சு. இருந்தாலும் எல்லாரும் சொல்லும்போது சந்தோஷமாதான் வந்துச்சு. கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் சொன்ன விஷயம் என்னனா உனக்கு மேக்-அப் ரொம்ப நல்லா பண்ணி விட்டிருந்தாங்க. நீயும் ரொம்ப அழகா இருந்த. ஆனா எந்த மேக்-அப்ம் இல்லாம எப்பவும் ஸ்மைலோட இருந்த உன் வீட்டுக்காரர் உன்னை விட அழகா இருந்தார்னு சொன்னாங்க. ஃபோட்டோஸ் வந்ததும் எங்க வீட்டுலயும் இதே கமெண்ட்தான் குடுத்தாங்க.

இப்போதாங்க நல்லா புரியுது. தலைல இருந்த கால் வரைக்கும் ரொம்ப நல்லா பண்ணின மேக்-அப் தர அழகைவிட முகத்துக்கு ஒரு சின்ன ஸ்மைல் தர அழகு இருக்கே. அதை எந்த மேக்-அப்பாலயும் தர முடியாது. என்ன சொல்றீங்க?

Monday, February 18, 2008

கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்)

என் தமிழ் ஆசிரியர் நீங்க நல்ல கதைகள் எழுதணும். அதிலும் சமுதாயத்துல பலப் பிரச்சினைகள் இருக்கு. அதைப் பத்தியெல்லாம் எழுதணும்னு எனக்கு நிறைய அறிவுரை சொன்னார். நான் எழுதறது வச்சுப் பலப் பிரச்சினைகள் வராம இருந்தா சரினு உள்ளுக்குள்ள நினைச்சுட்டே சிரிச்சு வச்சேன். அப்போதான் அவர் சொன்னார். கல்யாணமாகி ஒரு நாலைஞ்சு வர்ஷம் ஆகி இருக்கறப் பொண்ணுங்கள்ட்ட கேட்டா நிறையப் பிரச்சினைகள் சொல்வாங்கனு சொன்னார். அது என்னங்க சார் நாலைஞ்சு வருஷக் கணக்குனு நான் புரியாமக் கேட்டேன். அதாவது கல்யாணமாகி ரெண்டு மூணு வருஷம் வரைக்கும் அவங்க ரொம்ப அன்னியோன்யமா இருக்கறதால அவ்வளவா பிரச்சினை வராது. வந்தாலும் ரொம்ப பெருசா தெரியாது. ஒரு ஆறேழு வருஷம் ஆனவங்களுக்கு பிரச்சினைகள் பழகிப் போயிடும். அதனால பெருசா எடுத்துக்க மாட்டாங்க. ஆனா இந்த இடைப்பட்டக் காலத்துல இருக்கறவங்களுக்கு தான் நிறையப் பிரச்சினை இருக்கும். அதுக்காக ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருப்பாங்கன்னு அவர் சொன்னார். ஆஹா! இப்படியெல்லாம் மேட்டர் இருக்கா-னு அப்போ இருந்து இந்த ஆரய்ச்சிய ஆரம்பிச்சேன். பல கதைகள்ல படிச்சது, எனக்கு பலர் சொன்ன அறிவுரைகள், நானா ஆராய்ந்து அறிந்தது, என் ஃப்ரெண்ட்ஸ் வச்சு நானா ஒரு முடிவுக்கு வந்தது இப்படி பல விஷயங்கள வச்சு இந்த ஆராய்ச்சிக் கட்டுரைய ரெடிப் பண்ணியிருக்கேன். படிச்சிட்டு எனக்கு முனைவர் பட்டம் கிடைக்குமானு சொல்லிட்டுப் போங்க ;)))

இந்த கட்டுரை முழுக்க முழுக்க திருமணமாகி ஓராண்டுக்குள் இருப்பவர்களுக்காகவும், இனித் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறவர்களுக்காகவும் முக்கியமாய் பெண்களுக்காக மட்டும். ஏனென்றால் இந்தக் கட்டுரையின் நோக்கம் முழுக்க முழுக்க கணவரின் அன்பைப் பெறுவது எப்படி என்பது (ஆஹா! தமிழ்ல புகுந்து விளையாடறேனா ;))))

--------------------------------------ooOoo--------------------------------------

மறுத்துப் பேசாதீர்கள் - உங்க ஆத்துக்காரர் எதாவது இப்படி பண்ணலாம்னு சொல்லும்போது அது உங்களுக்கு வேணாம்னு தோணுச்சுனா உடனே வேணாம்னு டக்குனு சொல்லாதீங்க. ஏங்க! இதுல இப்படி பிரச்சினை இருக்கே பரவால்லயா-னு மெல்ல கேளுங்க. அட ஆமாம்னு அவர் யோசிச்சா அதுக்கு இப்படி செய்யலாமேனு அப்போ உங்க கருத்த முன் வையுங்க. ஆனா அட ஆமாம்னு அவர் யோசிக்கற அளவுக்கு ஸ்ட்ராங்கான பிரச்சினைய சிரிச்சுட்டே சாஃப்டா சொல்லுங்க. அப்புறம் போகப் போக உங்களைக் கேக்காம எதும் செய்யாத அளவுக்கு வந்துடுவாங்க.

புகுந்த வீட்டு உறவுகளை உங்களுடையதாய் பாவியுங்கள் - அவரோட உறவினரை உங்க உறவினரை எப்படி ட்ரீட் பண்றீங்களோ அதே மாதிரி ட்ரீட் பண்ணுங்க. அப்போதான் அவரும் உங்க உறவினர்கிட்ட ரொம்ப நல்லாப் பழகுவார். அதும் அவர் தங்கச்சி, அத்தைப் பொண்ணு, மாமாப் பொண்ணு இப்படி உங்களை விட சின்னப் பொண்ணுங்ககிட்ட ஈஸியா பழக ஆரம்பிக்கலாம். அவங்கள்ட்ட நீங்க க்ளோஸ்ஸா இருந்தாலே நீங்க எல்லார்ட்டயும் அப்டி இருக்கற ஒரு ஃபீல் வந்துடும்.

பிறந்த வீட்டுப் புராணம் பாடாதீர்கள் - எப்போ பார்த்தாலும் எங்க வீட்டுல அப்டி இருக்கும் இப்டி இருக்கும்னு உங்க பிறந்த வீட்டுப் புராணமே பாடாதீங்க. ஒரு வேளை நம்ம நல்லா வச்சுக்கலைனு ஃபீல் பண்றாளோனு நினைக்க ஆரம்பிச்சிடுவாங்க. இன்னும் போகப் போக அதுவே இன்னும் இவளுக்கு என்னதான் செய்யணும்னு ஒரு எரிச்சலா மாறிடும்.

பிறந்த வீட்டை எண்ணி வருந்தாதீர்கள் - சும்மா எங்கம்மா வீட்டுக்குப் போகணும்னு நச்சுப் பண்ணிட்டே இருக்காதீங்க. அவர் சந்தோஷமா இருக்கற சமயமாப் பார்த்து அப்படியே எங்கயாவது வெளிலப் போயிட்டு வரலாமேங்கன்னு ஆரம்பிச்சு ஏங்க நாளைக்கு சென்னைக்குப்(உங்க வீடு இருக்கற ஏரியாப் பேரு) போயிட்டு வரலாமானு மெல்ல பிட்டுப் போடுங்க.

மாமியாரைத் தாய் போல நினையுங்கள் - நான் பார்த்தவரைக்கும் கதைகள்லயும் சரி. படங்கள்லயும் சரி. நண்பர்கள்லயும் சரி. என் தம்பியும் சரி. உலகத்துல அவங்க நேசிக்கிற முதல் ஆள் அவங்க அம்மாவாதான் இருப்பாங்க. இதுல விதிவிலக்கு இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. அதனால அவங்களை ஐஸ் வைக்கனு மட்டும் சொல்லலை. மாமியார் உங்களோட அட்ஜஸ்ட் பண்ணிப் போகாட்டியும் நீங்க அவங்களோட அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க. உங்க அம்மா எதாவது சொன்னா அட்ஜஸ்ட் பண்ணிக்கறதில்லையா? இவங்களும் நமக்கு அம்மா மாதிரி தானனு அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க. நான் தான் அவருக்கு இதை செய்வேன் அதை செய்வேன்னு அவங்களோட மல்லுக்கு நிக்காதீங்க. அவங்க அன்பை வாங்கிட்டிங்கனா ஆட்டொமேட்டிக்கா அவங்க உங்களுக்கு எல்லாமே விட்டுக் கொடுப்பாங்க.

மாமியார் உதவியை நாடுங்கள் - கண்டிப்பா எந்த ஒரு பையனுக்கும் அவங்க அம்மா சமையல் தான் தேவாமிர்தமா இருக்கும். உங்க சமையல் சரியில்லாமப் போச்சுனா அத்தை செய்யற மாதிரியே செய்யணும்னு ட்ரை பண்ணினேன். ஆனா அவங்கள மாதிரி வரலை. அடுத்த முறை அவங்ககிட்டதான் கேட்டு செய்யணும்னு எடுத்து விடுங்க. அவருக்கு சந்தோஷத்துல நீங்க செஞ்ச சாப்பாடும் அமிர்தமா மாறிடும். எதும் சொல்லாம சாப்பிடுவார்.

விட்டுக் கொடுத்துப் போங்கள் - எதாவது நீங்க சொல்லி அவர் ஏத்துக்க மறுத்தா விட்டுக் கொடுங்க. இப்படியே ஒரு நாலு தடவை ஆச்சுனா ஆட்டொமேட்டிக்கா அஞ்சாவது தடவை அவரே விட்டுக் கொடுத்துடுவார். பிடிவாதம் பிடிக்கறதால யாருக்கு என்ன லாபம் சொல்லுங்க. நமக்குதான் டென்ஷன். சண்டை. அதனால ஒரு சின்ன விரிசல். இதெல்லாம் தேவையா? சோ சந்தோஷமா விட்டுக் கொடுங்க.

உங்களை ஃப்ரெஷ்ஷாய் வைத்துக் கொள்ளுங்கள் - எப்பவும் நீங்க ஃப்ரெஷ்ஷா எனெர்ஜிடிக்கா இருக்கற மாதிரிப் பாத்துக்கோங்க. அழுது வடிஞ்சுட்டு, தூங்கிட்டு வழிஞ்சிட்டு இருந்தா ஏற்கனவே எதாவது டென்ஷன்ல வந்திருந்தார்னா உங்களைப் பாத்தா இன்னும்தான் எரிச்சலா வரும். சோ எப்பவும் ஃப்ரிட்ஜுக்குள்ள வச்ச ஆப்பிளாட்டம்ம் ஃப்ரெஷ்ஷா இருங்க.

பிடித்ததை செய்யுங்கள் - அவருக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ், ஜுவெல்ஸ், மேக்-அப்னு பண்ணிக்கங்க. அவருக்கு லைட் கலர் பிடிக்கும்னா எனக்கு டார்க் கலர்தான் பிடிக்கும்னு மல்லுக்கு நிக்காதீங்க. அவர் சொல்ற ட்ரெஸ்ஸை செலெக்ட் பண்ணுங்க. அப்புறம் பிற்காலத்துல ஒரு மணி நேரம் என்ன ஒரு நாள் முழுசும் கூட உங்களோட துணிக்கடைல ஸ்பெண்ட் பண்ண வந்துடுவாரு.

யோசித்துப் பேசுங்கள் - மொதல்ல கொஞ்ச நாளுக்கு எதைப் பேசறதுனாலும் கொஞ்சம் இல்ல நல்லாவே யோசிச்சுப் பேசுங்க. ஏனா எதுக்கு அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார்னு உங்களுக்கு முழுசாத் தெரியாது. நாளாக நாளாக அவரோடப் பழக்க வழக்கங்கள் உங்களுக்குப் பழகிடுச்சுனா அப்புறம் எல்லாம் இயல்பாயிடும்.

புரிந்துக் கொள்ளுங்கள் - அவரோட நடவடிக்கைகள், முக பாவனைகள் வச்சு ஓரளவு புரிஞ்சுக்க முயற்சிப் பண்ணுங்க. இப்போ அவர் தலைவலியோட வீட்டுக்கு வரார்னா கேக்கறதுக்கு முன்னாடி காபிப் போட்டுக் குடுங்க. கோபமா இருக்கார்னுத் தெரிஞ்சா எதும் பேச ஆரம்பிக்காம அமைதியா இருங்க. நம்மளப் புரிஞ்சிட்டு நடந்துக்கறானு உங்க மேல பாசம் பிச்சிக்கிட்டு வரும்.

--------------------------------------ooOoo--------------------------------------

பி.கு: இதையெல்லாம் ஒரு வருஷத்துக்குள்ள சக்சஸ்ஃபுல்லா செஞ்சு அவர் அன்பை பெற்று விட்டீர்களானால் காலத்துக்கும் நாய்க்குட்டி மாதிரி உங்களையே சுத்தி சுத்தி வருவார் ;)))


என்னங்க அதுக்குள்ள என்னை டாக்டர்.இம்சை அரசி-ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டிங்க??? ஹி... ஹி... இன்னும் நிறைய இருக்கு. அப்பப்போ ஆராய்ச்சிக் கட்டுரைய சப்மிட் பண்றேன் ;)))

Tuesday, May 15, 2007

ஆணென்றால். . .


போன வெள்ளிக்கிழமை spiderman-3 பாத்தேன். அதை பத்தி விமர்சனம் எழுத போறேனோன்னு யாரும் பயந்துக்காதீங்க. அந்த நல்ல பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது. ஏன்னா அந்த அளவுக்கு மேல் மாடில ரொம்ப ஒண்ணும் இல்ல(யாருல அது களிமண்ணான்னு கேக்கறது???).

சரிங்க நம்ம விஷயத்துக்கு வருவோம். spiderman-3 ல அப்படி என்ன இருந்தது நீ புதுசா சொல்றதுக்குனு நீங்க கேக்கறது புரியுது. பாதி படம் வர வரைக்கும் ஒரு blogger பார்வையில நான் பாக்கலை. parker-ரோட காதலி அவன்கிட்ட நான் உன்னை காதலிக்கலை... வேற ஒருத்தரை காதலிக்கறேன்... என்னை மறந்துடுனு சொன்னப்பதான் எனக்குள்ள இருந்த blogger திடுக்கிட்டு கண்ணு முழிச்சது. சரி அதுக்கு அவன் என்ன சொல்லப்போறானு பாக்கலாம்னு நினைக்கறதுக்குள்ள அவன் அழ ஆரம்பிச்சிட்டான். ப்ளீஸ் அப்படி மட்டும் சொல்லாதனு அவன் அழுதப்போதான் எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு.

எப்பேற்பட்ட ஆணா இருந்தாலும் ஒரு பொண்ணுக்காகன்னு வரும்போது கண்ணீர் வடிப்பான். அதுக்கு spiderman மட்டும் விதிவிலக்கா என்னன்னு. பா.விஜயோட "உடைந்த நிலாக்கள்" என்னோட favourite கவிதை தொகுப்பு. இதை படிச்சவங்களுக்கு நல்லா தெரியும் பெண்களால எத்தனை ராஜ்ஜியம் எழுந்திருக்கு... எத்தனை ராஜ்ஜியம் வீழ்ந்திருக்குனு... ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்.......... இப்படி நீண்டுட்டே போற லிஸ்ட்ல கடைசில நம்ம பருத்தி வீரனும். இவங்க வாழ்க்கைல நடந்த பெரும் மாற்றங்களுக்கு பின்னாடி பெண் மட்டும்தான் முக்கிய காரணம்.

"பெண் என்னும்

பிஞ்சு பிராவகமே!

கனவாக நீயிருந்தால்

கண்விழித்தா நான் இருப்பேன்?

நிலமாக நீயிருந்தால்

நடக்க மாட்டேன். தவழ்ந்திருப்பேன்

முள்ளாக நீயிருந்தால்

குத்திக் கொண்டு குதூகலிப்பேன்

தீயாக நீயிருந்தால்

தினந்தோறும் தீக்குளிப்பேன்

தூசாக நீயிருந்தால்

கண் திறந்து காத்திருப்பேன்

மழையாக நீயிருந்தால்

கரையும் வரை நனைந்து நிற்பேன்"

-- உடைந்த நிலாக்களிலிருந்து

பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. எந்த ஒரு ஆணோட வாழ்க்கையும் பெண்ணில்லாம முழுமையடையாது. எதோ ஒரு பாட்டுல வரும் "ஒரு பொண்ணு நினைச்சா இந்த வானுக்கும் பூமிக்கும் பாலத்தை கட்டி முடிப்பா"-ன்னு. இதை பலர் ஒத்துக்க மறுக்கலாம். அதுக்காக என் கொள்கைல இருந்து நான் பின் வாங்கப் போறதில்ல. ஏத்துக்கறவங்க ஏத்துக்கோங்க. திட்டறவங்க திட்டிக்கோங்க. எல்லாருக்கும் ஒரு பெரிய :-)