Wednesday, April 25, 2007

அழகென்ற சொல்லுக்கு.......

அழகான விஷயங்கள பத்தி எழுத சொல்லி பாசமலர் tag பண்ணி ரொம்ப நாளாச்சு. அண்ணன்கிட்ட அழகு லிஸ்ட்ல என் பேரை சேக்காத்தால கோவிச்சுக்கிட்டு சண்டை போட்டு இவ்ளோ நாளா எழுதாம இருந்தேன். அதை எழுதினா எல்லாரும் உன் மேல கண்ணு வச்சிடுவாங்கடா... அதான் எழுதலை... இப்படி பல பிட்ட போட்டு அண்ணாச்சியும் என்னை சமாதானப்படுத்திட்டார். அதனால எனக்கு தோணினத எல்லாம் இங்க லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன். பொதுவா அழகுன்னாலே டக்குனு தோணறது பூக்கள், குழந்தைகள்தான். பூவும் சரி குழந்தையும் சரி எப்படி இருந்தாலுமே அது அழகோ அழகு. இது இல்லாம கடவுள், கவிதை, மழை, இயற்கை, வானவில், முயல், மான், கிளி, பூனை, அணில்னு எக்கச்சக்கமா லிஸ்ட் போட்டுட்டே போகலாம். இந்த மாதிரி பொது விஷயங்கல்ல இருந்து அப்பாற்பட்டு வேற என்ன அழகு விஷயங்கள் இருக்குனு யோசிச்சதுல எனக்கு தோணின சில அழகுகள்

1. பெண்ணின் கண்கள்:


பொதுவா கண்ணு பேசும்னு சொல்வாங்க. சின்ன வயசுல தில்லானா மோகனாம்பாள் "நலந்தானா" பாட்டு பாத்தப்போ ரொம்ப ஆச்சர்யப்பட்டிருக்கேன். பத்மினி நலந்தானானு அவங்க வாயால கேக்கறத விட அவங்க கண்கள் அவர்கிட்ட கேக்கறதுதான் ரொம்ப பவர்ஃபுலா இருக்கும். அதே நேரம் அவர் கைல இருந்து ரத்தம் வரும்போது அவங்க மனசு துடிக்கறத அவங்க கண்கள்
அப்படியே சொல்லும். அப்போ இருந்தே எனக்கு ரொம்ப அழகா தோணற விஷயம்.

இப்போ ப்ரூ காபி விளம்பரத்துல லக்ஷ்மி ராய் கண்கள்லதான் ரொம்ப அழகா expression கொடுப்பாங்க. அந்த சின்ன காபி கப்ப நீட்டினதும் அவர் அப்படியான்ற மாதிரி கேப்பார். அப்போ அவங்க கண்ணு அப்படியே வெக்கப்படும் பாருங்க. சான்ஸே இல்ல.......

2. காதல் நிறைவேறும் தருணம்:



இந்த மாதிரி ஒரு அழகான தருணம் எல்லாருக்கும் கிடைக்காது. நான் 11, 12வதும் ஹாஸ்டல்ல இருந்துதான் படிச்சேன். அப்போ எங்களோட இருந்த ஒரு பொண்ணுக்கு சின்ன வயசுலயே அவங்க அத்தை பையனுக்குதான்னு முடிவு பண்ணியிருந்தாங்க. அவங்களை அவ உருகி உருகி காதலிச்சா. நாங்க முடிச்சு போற டைம்ல அவங்க ரெண்டு பேர் வீட்லயும் எதோ பிரச்சினை. கல்யாணம் நடக்குமா நடக்காதான்ற கேள்வியோட பிரிஞ்சு போனோம். அதுக்கப்புறம் காலேஜ் 3rd year படிக்கிறப்போ அவ இன்விடேஷன் வந்தது. அதே மாமாவையே கட்டிக்க போறானு தெரிஞ்சதும் எனக்கே அவ்ளோ சந்தோஷமா இருந்தது. அவளுக்கு தாலி கட்டும்போது பூத்து பூத்துனு அழ ஆரம்பிச்சுட்டா. அவ வாய் சிரிக்குது. கண்ணுல இருந்து கண்ணீர் வழிஞ்சுட்டே இருக்கு. அப்புறமா அவள திட்டினேன். "ஏண்டி லூஸு அழுத? எல்லாரும் என்ன நினைப்பாங்க? பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்ல போலனு நினைக்க மாட்டாங்களா??? அதும் இல்லாம வீடியோல பாரு அழுது வடிஞ்சுட்டு இருப்ப" அப்படின்னு அவ்ளோ அக்கறையா திட்டறேன். போடி அதெல்லாம் உனக்கு புரியாதுனு பொசுக்குனு சொல்லிட்டு போயிட்டா. அவளுக்கு மட்டும் இல்ல. காதலிக்கிற எல்லாருக்குமே அவங்க வாழ்க்கைல ரொம்ப அழகான தருணம்னா அது அவங்க காதலை கைப்பிடிக்கிற நாளாதான் இருக்கும்.

3. தாய்மை:



ஒரு பொண்ணு எப்போ ரொம்ப அழகா இருப்பா? கண்டிப்பா அது அவ கர்ப்பமா இருக்கறப்பதான். அதை எத்தனையோ புத்தகத்துல, கதைகள்ல, கவிதைகள்ல படிச்சிருக்கேன். அப்போல்லாம் எனக்கு ரொம்ப பெருசா தெரியலை. எனக்குள்ள இருக்கற என் உயிர் சங்கீதா. அவ வளைகாப்புதான் நான் முதல் முதலா அட்டெண்ட் பண்ணின வளைகாப்பு. காலைல வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் சிரிச்சுட்டே மெதுவா நடந்து வந்தா. தலைல கட்டின துண்டும், நெத்தி வகிட்டுல குங்குமமும், மஞ்ச கயிறும், கால்ல மெட்டியுமா இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை பாத்திருக்கேன். ஆனா அது கூட உப்பிய வயிறுமா... அவ்ளோ அழகா என் சங்கி-ய அதுக்கு முன்னாடியும் பாத்ததில்ல. அதுக்கு அப்புறமும் பாத்ததில்ல. அதுக்கப்புறம் குழந்தை பிறந்ததுக்கப்புறம்தான் பாத்தேன். அப்போ அந்த பிஞ்சு கையையும் காலையும் தொட்டு தொட்டு கொஞ்சும்போது அவ முகத்துல தெரிஞ்ச பூரிப்பு..... அழகோ அழகு.....

4. எழுத்தாளராய் அங்கீகரிக்கப்பட்ட நாள்:



நான் ஒரு நாவல் எழுதி கண்மணிக்கு அனுப்பி 2 வருஷமாச்சு. வரவே இல்லை. எங்க தமிழ் சார் இதுக்கெல்லாம் சோர்ந்து போயிடக் கூடாது. இன்னும் எழுதி அனுப்பிட்டே இரு. ஒரு நாள் கண்டிப்பா வரும்னு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டே இருந்தார். இருந்தாலும் அந்த ஏமாற்றத்த தாங்கிக்க முடியாம அனுப்பாமலே இருந்தேன். ஒரு நாள் ஃபோன் வந்தது. உங்க கதை எங்களுக்கு பிடிச்சிருக்கு. வர 15th இதழ்ல போட போறோம். உங்களை பத்தி கொஞ்சம் எழுதி கொடுத்து உங்க போட்டோவும் அனுப்புங்கனு சொன்ன அன்னைக்கு இருந்த சந்தோஷம்.... என் வாழ்க்கைல முதல் அழகான தருணம்..... புத்தகம் வந்த அன்னைக்கு கைக்கு கிடைக்கறதுக்குள்ள இருந்த டென்ஷன்........ அதை வாங்கி என் போட்டோவையும் என்னோட எழுத்துக்கள் ஒண்ணொன்னையும் அச்சில பாத்த தருணம்.... ஒரே கண்ணீரா வருது. உலகத்தோட மொத்த சந்தோஷத்தையும் அள்ளியெடுத்து எனக்குள்ள புதைச்சு வச்ச மாதிரி அவ்ளோ சந்தோஷம். அன்னைக்கு என் டைரில எழுதி வச்சது "முதல் பிரசவம்... மனதளவில் உணர்ந்தேன் பிரசவ வலியை..."

5. நட்பு:



எந்தவித சம்பந்தமும் இல்லாம எந்த எதிர்பார்ப்பும் இல்லாம ஒருத்தர் நம்ம மேல வைக்கற தூய்மையான அன்பு.... அதுக்கு பேர்தான் நட்பு. அந்த மாதிரி எனக்கு கிடைச்சவதான் சங்கீதா. நான் என்ன தப்பு பண்ணினாலும் ஒரு ஸ்மைல் பண்ணி என் தலைல செல்லமா ஒரு குட்டு வச்சு திருத்தறவ. அவளுக்கு மட்டுமில்லாம அவ வீட்டுக்காரருக்கும்(அவ அத்தை பையன்தான்) நான் பெஸ்ட் ஃப்ரெண்ட். அவ மாமியாரும் மாமனாரும் என்னை அவங்க பொண்ணுனு சொல்லுவாங்க. ரெண்டு பேருக்கும் நான் பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்றதால என் பர்த்டே அன்னைக்கே அவங்க கல்யாணம் வச்சாங்க. அன்னைக்கு நைட் கரெக்டா 12 மணிக்கு எல்லாரும் தூங்கிட்டாங்க. மாப்பிள்ளை சார் கேக் பாக்ஸ தூக்கிட்டு பொண்ணு ரூமுக்கு வந்தார். கேக் வெட்டி என் மேல எல்லாம் பூசி கத்தி அட்டூழியம் பண்ணிட்டிருந்தப்ப ஒரு சத்தம். மெல்ல திரும்பி பாக்கறோம். அவ மாமனார் கதவுகிட்ட முறைச்சுப் பாத்துட்டு நிக்கறார். பொண்ணு ரூமுக்கு போக கூடாதுனுசொல்லியிருக்குல்லனு அவர் சொன்னதும் கம்முனு ஓடிப் போயிட்டாங்க. ரெண்டு பேரும் எனக்கு ஒரு மொபைல் ப்ரெசெண்ட் பண்ணினாங்க. அந்த மொபைல்தான் இன்னும் வச்சிருக்கேன். அவளுக்கு ஒரு டைரி ஃபுல்லா கவிதை எழுதி கல்யாண கிஃப்டா கொடுத்தேன். அந்த கிஃப்ட வீட்டுக்கு வந்து பிரிக்கிற வரைக்கும் அவ கைலயே வச்சிருந்தா. யார்ட்டயும் குடுக்கலை. என்னை பொறுத்த வரைக்கும் எனக்குள்ள இருக்கற உயிர் சங்கீதாதான். அவளுக்கு நான் எழுதின கவிதைல ஒண்ணு

"அடுத்த பிறவியிலேனும்
ஒன்றாய் பிறக்க வேண்டும்
என்று வேண்டி
தொலைத்து விடாதே!
எனக்கு உன்னிடம்
சகோதர பாசம் வேண்டாம்
அதையும் மீறிய
இந்த நட்புதான் வேண்டும்"

6. எதையும் அழகாய் பார்க்கிற மனசு:



இந்த உலகத்துல இருக்கிற எல்லாமே அழகுதான். ஒண்ணொண்ணும் ஒவ்வொருவித அழகு. அதை பாக்கிற நம்ம மனசுலதான் எல்லாம் இருக்கு. ஒரு சாதரண விஷயத்தைக் கூட அழகுனு நினைச்சு பாத்தா அது ரொம்ப அழகா தெரியும். அழகில்லைனு நினைச்சுப் பாத்தா அழகா இருக்கறதும் ரொம்ப அசிங்கமா தெரியும். எல்லாமே நம்ம ரசனைதான்....

இப்போ என் சான்ஸ். இவங்க மூணு பேரும் அழகுப் பத்தி என்ன நினைக்கறாங்கன்னு பாப்போம். என்னை மாதிரியே லேட் பண்ணிடாதீங்க. கொஞ்சம் சீக்கிரம் போடுங்கப்பு.

1. ஜொள்ளுல பல வகை ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் பெற்ற நமது ஜொள்ளானந்தா Dr.ஜொள்ளுபாண்டி(நீங்க விடற ஜொள்ளுதான் அழகுனு சொல்லப்படாது)

2. காதல்ல வீடு கட்டி காதல சாப்பாடா சாப்பிட்டு காதலையே சுவாசிச்சு வாழ்ந்துட்டு இருக்கிற நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ(நீங்க இல்லவே இல்லைனு சொல்ற உங்க காதலிதான் அழகுனு சொல்லப்படாது)

3. இந்த உலகத்துல இருக்கிற எந்த ஒரு விஷயத்தையும் காதலாவே பாக்கிற நமது காதல் கவிஞர் நவீன் ப்ரகாஷ்(காதல்தான் அழகுனு அதையே 6 தடவை எழுதி வைக்கப்படாது)

ஓகே... ஓகே... உத்தரவு வாங்கிக்கறேனுங்க......


Monday, April 23, 2007

பாப் ஆல்பம் வெளியிட ஜி-யுடன் கூட்டு முயற்சி

நம்ம தல கோடம்பாக்கத்துல துண்டு போட முடிவு செஞ்சு பாட்டு எழுதினார். அதை மருதம் பாடி தந்த கதை உங்க எல்லாருக்கும் தெரியும். அப்புறம் அவரு இது பையன் பாடற மாதிரி இருக்கு. பொண்ணு பாடற மாதிரி நீங்க எழுதுங்களேன்னு நம்மளை ரொம்ப உசுப்பேத்தி விட்டுட்டார். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியேதான் ரணகளமாக்கிடறாங்கப்பா. இதை எழுதங்குள்ள பயங்கற ரணகளமாயிடுச்சு. படிச்சிட்டு எப்படியிருக்குனு சொல்லுங்கப்பு. உனக்கு இதெல்லாம் ரொம்ப தேவையானு நீங்க மொனகறது எனக்கு கேக்குது. இதுக்கெல்லாம் அசர ஆளா நாங்க.

----------------------------------------------------------------

எங்கே நீ சென்றாயோ
என் இதயம் திருடி சென்றாயோ
எங்கே நீ சென்றாயோ
என் உயிரை மீட்டு தருவாயோ

கனவிலெல்லாம் நினைவாய் வந்தாய்
நனவில் கூட கனவாய் வந்தாய்
உன் நினைவாய்தானே தவிக்கின்றேன்
இங்கு காதல் வலியால் துடிக்கின்றேன்

விழிகளில் உந்தன் உருவம்தான்
மூச்சினில் உந்தன் சுவாசம்தான்
ஒற்றை பார்வையில் உயிரை பறித்தாயே

தூக்கம் பறித்து சென்றவனே
என் தேடல் நீயென்பது புரியலையா
உன் மூச்சினில் நான் வாழ்கின்றேன்

எங்கே நீ சென்றாலும்
நிழலாய்தானே தொடர்வேனே
உன்னில் பாதி நானில்லையா

இறுதி வரை தொடரும் உறவன்றோ
உன்னவளாய்
வேறென்ன வேண்டும் இதை விட
பிறவிப்பயனாய்

தருவாய் அன்பே....

பனியில் இங்கு எரிகின்றேன்
நெருப்பினில் இதமாய் குளிர்கின்றேன்
என் தட்பவெப்பம் மாற்றி சென்றாயே
என் நிலவில் தீயை வைத்து சென்றாயே

தேனும் இங்கே கசக்கிறதே
என் படுக்கை முள்ளாய் மாறியதே
ஏனடா நீ என்னை சோதிக்கிறாய்

பூக்களில் வாசம் செய்பவனே
பூ ஒன்று தவிக்கிறதே
ஏனடா நீ என்னை வதைக்கிறாய்

இறுதி வரை தொடரும் உறவன்றோ
உன்னவளாய்
வேறென்ன வேண்டும் இதை விட
பிறவிப்பயனாய்

தருவாய் அன்பே....

எங்கே நீ சென்றாயோ
என் இதயம் திருடி சென்றாயோ
எங்கே நீ சென்றாயோ
என் உயிரை மீட்டு தருவாயோ

----------------------------------------------------------------

இதை பாத்துட்டு நீங்க சொல்லப் போற முடிவ வச்சுதான் இனிமே பாட்டு எழுதறதா வேணாமான்னு முடிவு பண்ணனும். அதும் இல்லாம பாப் ஆல்பம் போடறதா ஜி முடிவு பண்ணியிருக்கார். இதுக்கு வர ரெஸ்பான்ஸ பாத்துட்டுதான் என்னையும் கூட்டு சேத்துப்பேனு அடம் புடிக்கறார். கொஞ்சம் எனக்காக அவர்கிட்ட ரெகமண்ட் பண்ணிட்டு போங்கப்பு. புண்ணியமா போவும்.

Saturday, April 21, 2007

அபிஅப்பா பெரியவரா இல்ல அபிபாப்பா பெரியவங்களா???

நேத்து அண்ணன்கிட்ட பேசும்போது ரொம்ப சோகமா இருந்தாரு. என்ன அண்ணா என்ன ஆச்சு? ஒரே சோகமயமா இருக்கீங்கன்னு கேட்டதும் போதும் அவரு கண்ணுல இருந்து கண்ணீரா கொட்டுது. ஆடிப் போயிட்டேன். அண்ணன் அழுதா தங்கச்சி மனசு தாங்குமா? அதனால எனக்கும் உடனே அழுகை வந்துடுச்சு. தங்கச்சி அழுதா அண்ணன் மனசு தாங்குமா? உடனே அண்ணன் கண்ண தொடச்சுக்கிட்டே இது சோகத்துல வந்த அழுகை இல்லம்மா... சந்தோஷத்துல வந்த ஆனந்த கண்ணீருன்னு சொல்லி அமைதியாயிட்டாரு. என்னடா இது?? ஊருல உள்ளவங்கள எல்லாம் நாமதான் குழப்பிட்டு திரியுவோம். கடைசில அண்ணன் நம்மளையே கொழப்பறாரேன்னு நானும் அமைதியாவே இருந்தேன். வெயிட் பண்ணிப் பாத்து நான் அமைதியாவே இருக்கவே அவரே தொடர்ந்து சொல்ல ஆரம்பிச்சார்.

அபிஅப்பா : நேத்து பாப்பா என்னை ஒரு கேள்வி கேட்டாளே.... அதுல இருந்து எனக்கு சோறு தண்ணி எறங்கல....

நான் : அப்படி என்ன கேள்வி அண்ணா கேட்டா? ஏன் அத்தை மாதிரி நீங்க இவ்ளோ அழகா அறிவா இல்லைனு கேட்டாளா?

அபிஅப்பா : அதுதான... கேப்ல கெடா வெட்டுவியே நீயி..... உனக்கு இப்படியெல்லாம் வேற மனசுல நெனப்பு இருக்கா???? :@@@@

நான் : என்ன அண்ணா சும்மா பொசுக்கு பொசுக்குனு கோவிச்சிக்கறீங்க? உண்மைய சொன்னா உங்களுக்கு பொறுக்காதே.... ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்.

அபிஅப்பா : சரி சரி... நம்ம சண்டைய அப்புறம் வச்சுக்குவோம். அவ சொன்னத கேளு

நான் : ம்ம்ம்ம்.... சொல்லுங்கோ

அபிஅப்பா : அப்பா பெரியவங்க பெரியவங்களா சின்னவங்க பெரியவங்களா? ன்னு கேட்டா. அதுக்கு நான் எனக்கு புரியல நீ என்ன கேக்குறன்னு சொன்னேன்.
(என்னைக்கு உங்களுக்கு சொன்ன உடனே எல்லாம் புரிஞ்சிருக்கு???)

நான் : ஹ்ம்ம்ம்.... அதுக்கு என்ன சொன்னா?

அபிஅப்பா : அப்பா இப்போ நீங்க பெரிய ஆளா, அதாவது அறிவு, படிப்பு பிரண்ட்ஸ் இப்படி, இல்லாட்டி நான் பெரிய ஆளா? ன்னு கேட்டா.....
(ஹி.... ஹி..... சொல்லிதான் தெரியணுமா???)

நான் : சரி. ஏன் திடீர்னு இப்படி எல்லாம் கேக்கறா??? எனக்கென்னவோ அவளுக்கு உங்களைப் பத்தி எல்லா உண்மையும் தெரிஞ்சுப் போச்சுனு நினைக்கறேன் அண்ணா... யாரோ அவகிட்ட இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டாங்க. இந்த சதிக்கு காரணமானவங்கள உடனே கண்டுபிடிச்சே ஆகணும்.......

அபிஅப்பா : சொல்றத முழுசா கேளு :@@@@@@@

நான் : சரி சரி சொல்லுங்க

அபிஅப்பா : நான் தான் பெரிய ஆள்ன்னு சொன்னேன்
(எப்படி மனசார இப்படி பொய் சொல்ல முடியுதோனு தெரியலை)

அப்படீன்னா இப்போ common-ஆ வருவோம்ன்னு சொன்னா. நானும் சரின்னு சொன்னேன். உடனே
அப்படீன்னா பேரண்ஸ் ப்ரியவங்க அவங்க குழந்தைகள் சின்ன ஆளுங்க அப்படிதானேன்னு கேட்டா. நானும் வேக வேகமா
ஆமா, ஸ்யூர்ன்னேன்.

நான் : ஹ்ம்ம்ம்ம்.....

அபிஅப்பா : காந்தி பெரிய ஆளா, அவங்க அப்பா பெரிய ஆளா?ன்னு கேட்டாளே பாக்கலாம்... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை :(

நான் : ஹி... ஹி... ஆப்போ ஆப்பு....

அபிஅப்பா : சரி அப்படியே எஸ் ஆயிடலாம்னு என்னயவே(!) மடக்கிட்டியே வெரிகுட் ஒத்துகறேன் சின்னவங்க தான் பெரிய ஆள்ன்னு வேற வழியே இல்லாம ஒத்துக்கிட்டேன்

நான் : ஆஹா! அத்தை மாதிரியே எவ்ளோ அறிவு!!! என்னை மாதிரியே வந்துடுவா.... எல்லா அறிகுறியும் இப்பவே தெரியுது.....

அபிஅப்பா : அதுதான... சந்துல சிந்து பாட ஒனக்கு சொல்லியா தரணும். :@. இன்னும் இருக்கு கேளு

நான் : ஓ!!! சொல்லுங்க சொல்லுங்க....

அபிஅப்பா : இல்லப்பா நீங்க இப்பவும் தப்புன்னு சொன்னா.
(இப்ப மட்டுமா???)
என்னடா இது நமக்கு வந்த சோதனைன்னு என்ன தப்பு காந்தி அப்பாவை விட காந்திதானே பெரிய ஆள்னு சொன்னேன். அது சரி இந்த கேள்விக்கு பதில சொல்லுங்கன்னு சொன்னா. சரி அதே காந்தியின் பையன் பெரிய ஆளா காந்தி பெரியா ஆளா?????

நான் : :-0

அபிஅப்பா : காந்திதான் பெரிய ஆள்ன்னு சொன்னேன். அப்போ பெரியவங்க தான் பெரிய ஆள் அப்படிதானேன்னு கேட்டாளே பாக்கலாம்.
(நல்லா மாட்டிகிட்டாச்சா????)
எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு. ஆனந்த கண்ணீர்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........
(இதை தவிர வேற ஒண்ணும் பண்ண முடியாது ;))

நான் : சரி இதுக்கு என்ன பதில் சொல்லி சமாளிச்சீங்க???

அபிஅப்பா : சரி போன் பில்லாகுது நாளைக்கு பேசலாம்னு சொல்லி வேகமா கட் பண்ணிட்டேன்.

நான் : எப்படியோ எஸ்ஸாயிட்டீங்க.... ஹி.... ஹி.....

அபிஅப்பா : எஸ் ஆகறத தவிர வேற வழி??? இருந்தாலும் பொண்ணு இவ்ளோ அறிவா திங் பண்றாளேனு நினைக்கும்போது ஆனந்த கண்ணீரா வருது....

நான் : எனக்கு கூட அண்ணா..... அத்தை மாதிரியே இருக்கான்றத நினைச்சு ஒரே ஆனந்த கண்ணீரா வருது

அபிஅப்பா : :@@@@@@@@@@@@@

நான் : ஓகே அண்ணா எங்க லீட் கூப்பிடறாங்க. vl ping u later
(எஸ் ஆகறத தவிர வேற வழி??? )

நீங்களே சொல்லுங்கப்பு... அபிபாப்பா அத்தை மாதிரியே ரொம்ப அறிவுதானா???? சொன்னா இவரு நம்பவே மாட்டேன்றாரு. நீங்களாவது கொஞ்சம் எடுத்து சொல்லுங்கப்பு...

Monday, April 16, 2007

என்னுயிரே!!!

என் காதல்
மலர்ந்த நாள்...
அன்று முதல்
என் இதயம் இங்கு
கருவறையானது!
என் முதல் குழந்தை
உன்னை
சுமக்க ஆரம்பித்ததால்!!

Wednesday, April 4, 2007

டீ குடித்த செம்மல் "ஜி"

போன வாரம் புதன் கிழமை நம்ம பாடலாசிரியர் ஜிக்கு ஜி.ரா தலமைல வரவேற்பு குடுத்தோம். யார் யாரு குடுத்தீங்கன்னு கேக்கப்படாது. வேற யாரு ஜி.ராவும் நானும்தான். காலைல ஒரு பத்து மணிக்கா ஃபோன் வந்தது. யாராதுன்னு எடுத்து பேசினா அட நம்ம ஜி!!! இந்த ஃபுட் கோர்ட்டுக்கு வந்துடுங்கன்னு சொல்லி வச்சிட்டார். அடடே! நம்ம கவிஞர வரவேற்க எழுதி வச்ச பாட்டெல்லாம் எங்க வச்சேனு தெரியலை. போச்சு ஜி.ரா வேற பொறுப்பே இல்லைனு என்னை திட்டப் போறாருன்னு பயந்துட்டே ஓடினேன்.

அங்க போயி சேந்ததுக்கு அப்புறம்தான் ஞாபகம் வந்துச்சு அவரப் பாத்ததே இல்லையேனு. இந்த கூட்டத்துல எப்படி சாமி கண்டுபிடிக்கறதுன்னு ஜி.ராவ தேடினா கண்ணுக்கெட்டின தூரத்துக்கு அவர ஆளையே காணோம். பாவம் மனுஷன் சாப்பிடக் கூட நேரம் இல்லாம உழைச்சுக் கொட்டுறாரு. மெல்ல வருவாருனு ஜிக்கு ஃபோன் போட்டா கிட்ட வந்துட்டேனு சொன்னார். நான் முன்னாடியே வெயிட் பண்றேனு சொல்லிட்டு மெதுவா நடந்து போனேன். அப்ப எதுத்தாப்புல ஒருத்தர் திரு திருன்னு முழிச்சுட்டு வந்தாரு. நம்ம ஜியா இருக்குமோன்னு எனக்கு ஒரே சந்தேகம். இதென்னடா வாயிக்கு படிக்கட்டு எல்லாம் வச்சுட்டு... நம்ம ஜி இப்படியெல்லாம் ஓவரா ஸீனப் போட மாட்டருன்னு நினைச்சுக்கிட்டே அவரத் தாண்டிப் போனேன். அவரும் என்னை பாத்து முழிச்சுக்கிட்டே என்னை தாண்டிப் போனாரு. இருந்தாலும் எனக்கு ஒரே டவுட்டு. ஜிக்கு கால் பண்ணினா ஹி ஹி... என்னை தாண்டிப் போன அதே அண்ணாச்சிதான் ஃபோன எடுக்கறாரு. ஆஹா... அப்படியே கைய காட்டி வாங்க ஜி-ன்னதும் திரும்பி வந்தாரு. கூடவே ஜி.ரா...

வந்து உக்காந்து கொஞ்ச நேரம் வந்த கதையெல்லாம் சொல்லிட்டு ரெண்டு பேரும் டீ குடிக்கலாம்னு ப்ளான் பண்ணினாங்க. எனக்கு டீ புடிக்காது. காபிதான் வெணும்னு சொல்ல வாயெடுக்கறதுகுள்ள ரெண்டு பேரும் வேகமா எழுந்து போனாங்க. அய்யய்யோ எனக்கு டீ வாங்கிட போறாங்கன்னு எழுந்து நானும் பின்னாடியே ஓடினேன். ஜி.ரா வேகமா போயி ரெண்டு டீக்கு டோக்கன் வாங்கினார். ஓ! ஜி டீ குடிக்க மாட்டர் போலன்னு நினைச்சுக்கிட்டு நானும் எதும் பேசாம பின்னாடியே போனேன். போயி டீய வாங்கி ரெண்டு பேரும் என்னை பாத்து சிரிச்சுட்டு டக்குனு குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க :(((( சரி நாம வாங்காத ஆப்பான்னு நினைச்சுக்கிட்டே இந்த நேரத்துல டீக் குடிக்கறது உடம்புக்கு நல்லதில்ல. நானெல்லாம் குடிக்கவே மாட்டேன்னு சொல்லி சமாளிச்சிட்டோமில்ல.

சரி ஜி சாக்லேட் தருவாரா மாட்டாரான்னு எனக்குள்ள ஒரு பட்டிமன்றம். குடுத்தா வள்ளல் ஜி-ன்னு போஸ்ட் போட்டுடலாம் இல்லாட்டி கஞ்சம்புடிச்ச ஜி-ன்னு போஸ்ட் போடணும்னு நினைச்சுட்டே கைல வச்சிருந்த சாக்லேட்டை பிரிச்சு வாயில போட்டேன். அதை பாத்ததும் ஜி அட இப்பதான் ஞாபகம் வருதுன்னு சொல்லிட்டே பேக்ல இருந்து ஒரு சாக்லேட் எடுத்து குடுத்தார். ஆஹா இதுலயாவது நம்மள கன்சிடர் பண்ணினாரேன்னு சந்தோஷமா ஒரு புன்னகைய சிதற விட்டேன். அதுக்குள்ள அதை ஜி.ராகிட்ட குடுத்துட்டார். ஓ நோ... ஜி அண்ட் ஜி.ரா ஒழிகன்னு நான் கோஷம் போட வாயத் திறக்கறதுக்குள்ள ஜி இன்னொரு சாக்லேட்ட எடுத்து என்கிட்ட நீட்டிட்டார். சோ ஜி அண்ட் ஜி.ரா வாழ்க...

ஜி.ரா மாதிரி ஒரு நல்ல மனிதர உலகத்துல பாக்கவே முடியாது. ஆமாம். உண்மையதான் சொல்றேன். எனக்கு ரெண்டு சாக்லேட் குடுத்துட்டு அவர் ஒண்ண மட்டும் எடுத்துக்கிட்டார்(ஜி.ரா அதுக்குனு டீ வாங்கித் தராதத மறந்துட்டேனு நினைக்காதீங்க. அது வேற கணக்கு). அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு கூட்டத்த கலைச்சிட்டோம்.

ஜி என்கிட்ட அந்த சாக்லேட் டீடெயில்ஸ் எல்லாம் போடணும்னு கெஞ்சி கதறி கேட்டுக்கிட்டார். ஆனா நான் எனக்கு குடுத்த சாக்லேட்ட சாப்பிட்டுட்டு கவர எங்க வீட்டுலயே விட்டுட்டு வந்துட்டேன்னு சொன்னேன். நான் டீடெயில்ஸ் குடுக்கறேனு சொன்னார்.

company lindtt
swiss made
costliest chocos

இதுல ஒண்ணு choc with strawberry. இன்னொண்ணு choc with milk(இது ரெண்டும் நான் சொன்னது).

அப்பாடி... ஜி... சொன்ன வாக்கை காப்பாத்திட்டேன். அடுத்த வாரம் ட்ரீட்... நீங்க குடுத்த வாக்கை காப்பாத்தோணும்... இல்ல அடுத்த பதிவு வரும்... ஜாக்கிரதை ;)