Wednesday, May 23, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 5

ஞாபகம் 1
ஞாபகம் 2
ஞாபகம் 3
ஞாபகம் 4

==================-oOo-==================

கல்லூரி லேபிலிருந்து வெளியே வந்த காவேரி எதையோ தீவிரமாக சிந்தித்தபடி படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று யாரோ எதிரில் நிற்பது கண்டு திடுக்கிட்டு நின்றாள். அவள் திரு திருவென விழிப்பதைக் கண்டதும் எதிரில் நின்றிருந்த வசந்த் அவளைப்
பார்த்து புன்னகைத்தபடி

"ஹாய்! நான் வசந்த்... காலேஜ் மேகசின்ல வந்திருந்த உங்க கவிதை ரொம்ப நல்லா இருந்தது. அதை சொல்லதான் வந்தேன்" என்றான்.

அவள் புரியாது விழிக்க

"என் நட்பேன்ற தலைப்புல எழுதியிருந்தீங்க இல்ல. அதை சொன்னேன்" என்று அவளுக்கு நினைவூட்டினான். அவள் எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வர புன்னகைத்தவள்

"ரொம்ப தேங்ஸ் வசந்த்" என்றாள். அவன் எதுவும் சொல்லாமலே நிற்கவும் என்ன செய்வதென்று தெரியாமல்

"எந்த க்ளாஸ் நீங்க?" என்று கேட்டாள்.

"அய்யோ நானும் ஃபர்ஸ்ட் இயர். அதும் உங்க க்ளாஸ்தாங்க. ஆனா EC டிபார்ட்மென்ட்"

"ஓ! சாரி... எனக்கு க்ளாஸ்ல CS ஸ்டூடண்ட்ஸே அவ்வளவா யாரையும் தெரியாது" என்று புன்னகைத்தாள்.

"நோ ப்ராப்ஸ்... சரி ஒரு பர்சனல் கொஸ்டின் கேக்கலாமா?" என்று அவன் கேட்கவும் கேள்வியாய் புருவம் சுருக்கி அவனை ஒரு நொடி பார்த்தவள் சரியென்பது போல மேலும் கீழுமாய் தலையாட்டினாள்.

"நீங்க இவ்ளோ ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்களே.... அந்த லக்கி ஃப்ரெண்ட் யாருனு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்று அவன் கேட்டதும் டக்கென்று அவள் மனம் 'வினோத்' என்று கூச்சலிட்டது. ஆனால் உதடுகள் அன்னிச்சையாய்

"அப்படி யாரும் இல்ல... சும்மா கற்பனைதான்" என்று சொன்னது.

"சரிங்க. நிறைய எழுதுங்க. ஓகே தென் பை" என்று சிரித்தபடி அவன் வழிவிட

"பை" என்றபடி படிகளில் இறங்கினாள்.

---------------------------------------------------------------------------------

'எப்படியோ நல்ல மார்க் எடுத்து நல்ல காலேஜ்ல சீட் கிடைச்சதால அப்பாவை சமாதானப்படுத்தி காலேஜ்ல சேர்ந்தாச்சு. சேர்ந்து ஒரு வருஷம் ஆச்சு. ஃபர்ஸ்ட் செம்ல காலேஜ் ஃபர்ஸ்ட் வாங்கின மாதிரி எல்லா செம்லயும் வாங்கிடணும். எல்லாக் கஷ்டத்தையும் தாங்கிட்டு நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கற அப்பா பெருமைபடற மாதிரி நான்
பேரெடுக்கணும்' இப்படி பலவாறாக நினைத்துக் கொண்டு ஹாஸ்டல் அறையில் தலை வாரிக் கொண்டிருந்த காவேரியிடம் ஓடி வந்தாள் உமா.

"ஹே காவேரி! நம்ம சூப்பர் சீனியர் அனு அக்கா கல்யாணத்துக்கு எல்லாரும் போற மாதிரி ப்ளான் பண்ணிட்டாங்க. வர சனிக்கிழமை காலைலயே கிளம்பி போறோம். ஞாயித்துக் கிழமை கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பி வரோம்" என்று மூச்சிரைத்தபடி சந்தோஷமாய் அவள் சொல்லவும்

'அனு அக்கா கல்யாணத்துக்கா??? என்கிட்ட ரொம்ப க்ளோஸா பழகினவங்க. பத்திரிக்கை குடுக்கும்போதே கண்டிப்பா வரணும்னு எத்தனை தடவை திருப்பி திருப்பி சொன்னாங்க. போலாமா வேண்டாமா?' என்று அவள் மனம் பட்டிமன்றம் நடத்தியது.

"என்னடி யோசிக்கிற? இருக்கறதிலேயே உன்னைதான் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க கல்யாணத்துக்கு இவ்ளோ யோசிக்கிற?" என்று உமா ஆச்சர்யமாய் விழிகளை விரிக்கவும்

"நான் வரலைன்னு உன்கிட்ட சொன்னேனா?" என்று அவசர அவசரமாய் சமாளித்தாள்.

சனிக்கிழமை...

காலையில் அனைவரும் கிளம்பினர். பயணம் முடிந்து போய் சேர கிட்டத்தட்ட இரவு நேரம் ஆகி விட்டது. அங்கு சாப்பிட்டு முடித்ததும் முதலாண்டு மாணவ மாணவிகள், இரண்டாமாண்டு மாணவ மாணவிகள் என்று அவரவர் தனித் தனியாய் அமர்ந்து விட்டனர். அனைவரும் ஜாலியாய் அடுத்தவரை ஓட்டிக் கொண்டும் கிண்டலடித்துக் கொண்டும் இருக்க
காவேரி அமைதியாய் சிரித்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது நெருங்கிய தோழி உமாவிடம் ஒரு பையன் ஜோசியம் பார்க்கிறேன் என்று சொல்லி அவளுக்கு பிடித்தவை ஒவ்வொன்றாய் கேட்டு கேட்டு அவள் கைகளில் எழுதினான். இறுதியில் அவளுக்கு பிடித்தமான சோப் என்னவென்று கேட்டு அதை போட்டு கையில எழுதினதையெல்லாம் அழித்துக் கொள்ள சொல்லவும் அவள் கோபப்பட்டு அவனை
அடிப்பதற்கு துரத்தி கொண்டு ஓடினாள். அதைக் கண்டு காவேரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் திரும்பி வந்து அமர்ந்தபோது அவள் முகம் கோபமாகவே இருப்பதைக் கண்டதும் காவேரி சிரித்துக் கொண்டே அந்த பையனிடம்

"உனக்கு நான் உண்மையாவே ஜோசியம் பார்க்கறேன். எனக்கு நல்லா தெரியும்" என்று சொன்னாள்.

"எனக்கே அல்வாவா?" என்று அவன் மறுக்கவும்

"ஹே நிஜமா எனக்கு தெரியும். உன்னை மாதிரி நான் ஏமாத்த மாட்டேன்" என்று அவள் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொல்லவும் அவளிடம் கையை நீட்டினான்.

ஜாதகத்தில் வரைவது போல அவன் உள்ளங்கையில் கட்டங்களை வரைந்தாள். பின்

"ஜோசியம் பாக்கறதுக்கு முன்னாடி தட்சிணை வைக்கணும். இல்லாட்டி பாக்கறவங்களுக்கு பாவம் சேருமாம்" என்று அவள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்லவும் அவன் மறுக்க முடியாமல் பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்தான்.

"ஹ்ம்ம்ம்... உன் பேரு மணி... கரெக்டா?" என்று சொல்லவும் அவளை முறைத்தான்.

"வெயிட் வெயிட்..... உன் ஜாதகத்துல சுக்கிரன் உச்சத்துல இருக்கறதால நீ XXX காலேஜ்ல B.E CS படிச்சிட்டு இருப்ப.... உனக்கு ஒரு அம்மா ஒரு அப்பா.... அப்புறம்........" என்று இழுத்து விட்டு

"உனக்கு ஒரு தங்கை... அவ கூட நீ படிக்கிற காலேஜ்லயே ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா..... சரி கடந்த காலம் பத்தி சொல்லியாச்சு.... இனி வருங்காலம்.... அதுக்கு கொஞ்சம் தட்சிணை வைக்கணும்" என்றாள். அவள் சொன்னதை அதுவரை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் "ஹேய்! தட்சிணை வைடா" என்று கத்தவும் அவன் மறு பேச்சின்றி பத்து
ரூபாயை எடுத்து வைத்தான்.

"உன் ஜாதகத்துல குரு ஏழாமிடத்துல இருக்கறதால நீ படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் வேலைக்கு போயிடுவ. அதுக்கப்புறம் ஒரு நாலு வருஷம் கழிச்சு உனக்கு ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அந்த பொண்ணு பேரு........." என்று அவள் இழுத்து விட்டு அமைதியாகவும்

"பொண்ணு பேரு என்ன என்ன?"என்று அனைவரும் கோரஸாக கத்தினர்.

"பொண்ணு பேரு Mrs.மணி" என்றதும் அனைவரும் குபீரென்று சிரித்தனர். உமா விழுந்து விழுந்து சிரித்தாள்.

"அப்புறம் சனி நாலாமிடத்துல வந்துட்டதால உன் நாக்குல விளையாண்டு இன்னைக்கு உமாகிட்ட வாங்கி கட்டிக்கிட்ட.......... அப்புறம் என்கிட்ட இருபது ரூபா அநியாயமா ஏமாந்துட்ட" என்றதும் அனைவரும் சந்தோஷமாய் கத்தினர்.

அதன் பின் இவனுக்கு பாரு இவளுக்கு பாரு என்று சொல்ல வரிசையாய்
ஒவ்வொருவருக்காய் பார்த்தாள். அந்த வரிசையில் கடைசியாய் வந்தான் வசந்த். அவளிடம் வந்து அமர்ந்தவன்

"எனக்கு ஜோசியம் பாக்க வேணாம். எல்லாருக்கும் ஜோசியம் சொன்ன
ஜோசியக்காரம்மாவுக்கு இப்போ நான் ஜோசியம் சொல்லப் போறேன்" என்றதும் அனைவரும் "ஹூர்ர்ர்ரேரே" என்று கத்தினர்.

அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் அவனிடம் கையை நீட்டினாள். அவள் வரைந்தது போலவே அவள் கையில் கட்டங்களை வரைந்தான். பின் தீவிரமாய் கட்டங்களைப் பார்த்து ஆராய்ந்தவன்

"ஃபர்ஸ்ட் தட்சிணை வை" என்றான்.

ஆச்சர்யமாய் விழிகளை விரித்தவள் உமாவை பார்க்க அவள் ஒரு ரூபாயை எடுத்து தந்தாள். அதை அவனிடம் அவள் தரவும் கிண்டலாய் புன்னகைத்தவன் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

"உன் ஜாதகப்படி உன் பேர் காவேரி. உங்க அப்பா பேரு பொன்னுசாமி. நீ ஒரே பொண்ணு. உங்க ஊர் ------- நீ படிச்சது --------- ஸ்கூல்ல. நீ டென்த்ல ------ மார்க். 11த் 12த் கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப். ட்வெல்த்ல ---- மார்க். ஃபர்ஸ்ட் செம்ல ------- பர்சென்டேஜ்" என்று அவன் அடுக்கி கொண்டே போக ஆச்சர்யத்தில் இமைக்க மறந்து அமர்ந்திருந்தாள்.

'கவிதை பத்தி சொன்னதுக்கு அப்புறம் இதுவரைக்கும் ஒரு வார்த்தைக் கூட பேசினதில்ல. இவனுக்கு எப்படி???' என்ற சிந்தனை ஓட அமர்ந்திருந்தவளிடம்
"என்ன நான் சொன்ன ஜோசியம் கரெக்டா?" என்று அவன் வினவ உணர்வு பெற்றவளாய்

"ம்ம்ம்.... சரி" என்று திணறினாள்.

அடுத்து ஜோசியம் பார்ப்பதை வைத்து அனைவரும் விளையாட ஆரம்பிக்கவும் அவன் அவர்களோடு சேர்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

காவேரிக்கோ ஏதேதோ புரியாத உணர்வுகள் எழ ஆச்சர்யத்தில் இருந்து மீள முடியாதவளாய் குழம்பியபடி அமர்ந்திருந்தாள்.

==================-oOo-==================

நண்பர்களே! இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும். இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும். இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும். ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்த‌ அத்தியாயத்தை எழுத அன்பு தம்பி ராயல் ராமை அழைக்கிறேன்.

Wednesday, May 16, 2007

அன்புடன் போட்டிக்கு அனுப்ப இயலாத கவிதைகள்

நாலு நாளு லீவை போட்டுட்டு ஊருக்கு போயிட்டேன். திரும்பி வந்ததும் save பண்ணி வச்சிருந்த இந்த படத்த பார்த்ததும்தான் அன்புடன் கவிதை போட்டி ஞாபகம் வந்தது. வேக வேகமா ரெண்டு கவிதை எழுதி சரி இதை மொதல்ல அனுப்பிடலாம்னு பாத்தா அவங்க கொடுத்திருந்த தேதி தாண்டி போயிடுச்சு :(((( சரின்னு விடுப்பா விடுப்பா விட்டுக் குடுத்துடுவோம்னு நினைச்சுட்டே இங்க போட்டுட்டேன். இதையும் ரொம்ப நாளா போட மறந்துட்டேன். நேத்து போட்டி முடிவு மெயில பாத்ததும் தான் இதுவும் ஞாபகம் வந்தது. ஒரே மறதி கோழியாயிட்டேன் போல... ஞாபக சக்திய வளத்தறதுக்கு any idea??? சரி அதை விடுங்க... இந்த கவிதை நல்லாயிருக்கா???






ஓகே......... பை பை............. டாட்டா............

Tuesday, May 15, 2007

ஆணென்றால். . .


போன வெள்ளிக்கிழமை spiderman-3 பாத்தேன். அதை பத்தி விமர்சனம் எழுத போறேனோன்னு யாரும் பயந்துக்காதீங்க. அந்த நல்ல பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது. ஏன்னா அந்த அளவுக்கு மேல் மாடில ரொம்ப ஒண்ணும் இல்ல(யாருல அது களிமண்ணான்னு கேக்கறது???).

சரிங்க நம்ம விஷயத்துக்கு வருவோம். spiderman-3 ல அப்படி என்ன இருந்தது நீ புதுசா சொல்றதுக்குனு நீங்க கேக்கறது புரியுது. பாதி படம் வர வரைக்கும் ஒரு blogger பார்வையில நான் பாக்கலை. parker-ரோட காதலி அவன்கிட்ட நான் உன்னை காதலிக்கலை... வேற ஒருத்தரை காதலிக்கறேன்... என்னை மறந்துடுனு சொன்னப்பதான் எனக்குள்ள இருந்த blogger திடுக்கிட்டு கண்ணு முழிச்சது. சரி அதுக்கு அவன் என்ன சொல்லப்போறானு பாக்கலாம்னு நினைக்கறதுக்குள்ள அவன் அழ ஆரம்பிச்சிட்டான். ப்ளீஸ் அப்படி மட்டும் சொல்லாதனு அவன் அழுதப்போதான் எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு.

எப்பேற்பட்ட ஆணா இருந்தாலும் ஒரு பொண்ணுக்காகன்னு வரும்போது கண்ணீர் வடிப்பான். அதுக்கு spiderman மட்டும் விதிவிலக்கா என்னன்னு. பா.விஜயோட "உடைந்த நிலாக்கள்" என்னோட favourite கவிதை தொகுப்பு. இதை படிச்சவங்களுக்கு நல்லா தெரியும் பெண்களால எத்தனை ராஜ்ஜியம் எழுந்திருக்கு... எத்தனை ராஜ்ஜியம் வீழ்ந்திருக்குனு... ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்.......... இப்படி நீண்டுட்டே போற லிஸ்ட்ல கடைசில நம்ம பருத்தி வீரனும். இவங்க வாழ்க்கைல நடந்த பெரும் மாற்றங்களுக்கு பின்னாடி பெண் மட்டும்தான் முக்கிய காரணம்.

"பெண் என்னும்

பிஞ்சு பிராவகமே!

கனவாக நீயிருந்தால்

கண்விழித்தா நான் இருப்பேன்?

நிலமாக நீயிருந்தால்

நடக்க மாட்டேன். தவழ்ந்திருப்பேன்

முள்ளாக நீயிருந்தால்

குத்திக் கொண்டு குதூகலிப்பேன்

தீயாக நீயிருந்தால்

தினந்தோறும் தீக்குளிப்பேன்

தூசாக நீயிருந்தால்

கண் திறந்து காத்திருப்பேன்

மழையாக நீயிருந்தால்

கரையும் வரை நனைந்து நிற்பேன்"

-- உடைந்த நிலாக்களிலிருந்து

பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. எந்த ஒரு ஆணோட வாழ்க்கையும் பெண்ணில்லாம முழுமையடையாது. எதோ ஒரு பாட்டுல வரும் "ஒரு பொண்ணு நினைச்சா இந்த வானுக்கும் பூமிக்கும் பாலத்தை கட்டி முடிப்பா"-ன்னு. இதை பலர் ஒத்துக்க மறுக்கலாம். அதுக்காக என் கொள்கைல இருந்து நான் பின் வாங்கப் போறதில்ல. ஏத்துக்கறவங்க ஏத்துக்கோங்க. திட்டறவங்க திட்டிக்கோங்க. எல்லாருக்கும் ஒரு பெரிய :-)

Thursday, May 10, 2007

நினைவில்லாமல்...!!!

நீண்ட நேரம்
நின்றிருந்தேன்
நீல ஓடையிலே.......
நிலவினை எதிர்பார்த்து!
நினைவில்லாமல்.......
அன்று அமாவாசையென!!

Tuesday, May 1, 2007

எங்கே நீ சென்றாயோ!!!



மௌன வண்டுகள்

காதுகளில் எப்பொழுதும்

உன் பெயரையே ரீங்கரிக்கின்றன


தனிமை பொழுதுகள்

சிறகு விரித்து ஏனோ

உனையே சுற்றி வருகின்றன


இதய இருட்டுகளில்

ஒளிர்ந்த உன் புன்னகையை

தேடித் தவிக்கிறது மனம்


உள்ளிழுக்கும் காற்றிலாவது

உன் சுவாசம் கலந்திருக்காதாவென்ற

ஏக்கத்தில் துடிக்கிறது இதயம்


புண்பட்ட இதயத்தில்

ஆழமாய் வேல் பாய்ச்சுகிறது

உன் ஒற்றைப் பார்வை


நீயில்லாத உலகில்

பார்வையிழந்துதான் போய் விட்டன

உனை சுமந்த விழிகள்


மரணத்தின் வாயிலிலும்

புன்னகை சிந்தும் மனம் இன்று

வாழ்க்கைப் படிகளில் தள்ளாடுகிறது


கனவுகளில் கட்டிய

காதல் சாம்ராஜ்ஜியத்தை

எந்த பூகம்பம் தகர்த்தெரிந்ததோ


உயிரின் வேர் வரை

கசிந்துருகிய உன் காதலை

ஒரு நொடியும் மறவாது நெஞ்சம்

Wednesday, April 25, 2007

அழகென்ற சொல்லுக்கு.......

அழகான விஷயங்கள பத்தி எழுத சொல்லி பாசமலர் tag பண்ணி ரொம்ப நாளாச்சு. அண்ணன்கிட்ட அழகு லிஸ்ட்ல என் பேரை சேக்காத்தால கோவிச்சுக்கிட்டு சண்டை போட்டு இவ்ளோ நாளா எழுதாம இருந்தேன். அதை எழுதினா எல்லாரும் உன் மேல கண்ணு வச்சிடுவாங்கடா... அதான் எழுதலை... இப்படி பல பிட்ட போட்டு அண்ணாச்சியும் என்னை சமாதானப்படுத்திட்டார். அதனால எனக்கு தோணினத எல்லாம் இங்க லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன். பொதுவா அழகுன்னாலே டக்குனு தோணறது பூக்கள், குழந்தைகள்தான். பூவும் சரி குழந்தையும் சரி எப்படி இருந்தாலுமே அது அழகோ அழகு. இது இல்லாம கடவுள், கவிதை, மழை, இயற்கை, வானவில், முயல், மான், கிளி, பூனை, அணில்னு எக்கச்சக்கமா லிஸ்ட் போட்டுட்டே போகலாம். இந்த மாதிரி பொது விஷயங்கல்ல இருந்து அப்பாற்பட்டு வேற என்ன அழகு விஷயங்கள் இருக்குனு யோசிச்சதுல எனக்கு தோணின சில அழகுகள்

1. பெண்ணின் கண்கள்:


பொதுவா கண்ணு பேசும்னு சொல்வாங்க. சின்ன வயசுல தில்லானா மோகனாம்பாள் "நலந்தானா" பாட்டு பாத்தப்போ ரொம்ப ஆச்சர்யப்பட்டிருக்கேன். பத்மினி நலந்தானானு அவங்க வாயால கேக்கறத விட அவங்க கண்கள் அவர்கிட்ட கேக்கறதுதான் ரொம்ப பவர்ஃபுலா இருக்கும். அதே நேரம் அவர் கைல இருந்து ரத்தம் வரும்போது அவங்க மனசு துடிக்கறத அவங்க கண்கள்
அப்படியே சொல்லும். அப்போ இருந்தே எனக்கு ரொம்ப அழகா தோணற விஷயம்.

இப்போ ப்ரூ காபி விளம்பரத்துல லக்ஷ்மி ராய் கண்கள்லதான் ரொம்ப அழகா expression கொடுப்பாங்க. அந்த சின்ன காபி கப்ப நீட்டினதும் அவர் அப்படியான்ற மாதிரி கேப்பார். அப்போ அவங்க கண்ணு அப்படியே வெக்கப்படும் பாருங்க. சான்ஸே இல்ல.......

2. காதல் நிறைவேறும் தருணம்:



இந்த மாதிரி ஒரு அழகான தருணம் எல்லாருக்கும் கிடைக்காது. நான் 11, 12வதும் ஹாஸ்டல்ல இருந்துதான் படிச்சேன். அப்போ எங்களோட இருந்த ஒரு பொண்ணுக்கு சின்ன வயசுலயே அவங்க அத்தை பையனுக்குதான்னு முடிவு பண்ணியிருந்தாங்க. அவங்களை அவ உருகி உருகி காதலிச்சா. நாங்க முடிச்சு போற டைம்ல அவங்க ரெண்டு பேர் வீட்லயும் எதோ பிரச்சினை. கல்யாணம் நடக்குமா நடக்காதான்ற கேள்வியோட பிரிஞ்சு போனோம். அதுக்கப்புறம் காலேஜ் 3rd year படிக்கிறப்போ அவ இன்விடேஷன் வந்தது. அதே மாமாவையே கட்டிக்க போறானு தெரிஞ்சதும் எனக்கே அவ்ளோ சந்தோஷமா இருந்தது. அவளுக்கு தாலி கட்டும்போது பூத்து பூத்துனு அழ ஆரம்பிச்சுட்டா. அவ வாய் சிரிக்குது. கண்ணுல இருந்து கண்ணீர் வழிஞ்சுட்டே இருக்கு. அப்புறமா அவள திட்டினேன். "ஏண்டி லூஸு அழுத? எல்லாரும் என்ன நினைப்பாங்க? பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்ல போலனு நினைக்க மாட்டாங்களா??? அதும் இல்லாம வீடியோல பாரு அழுது வடிஞ்சுட்டு இருப்ப" அப்படின்னு அவ்ளோ அக்கறையா திட்டறேன். போடி அதெல்லாம் உனக்கு புரியாதுனு பொசுக்குனு சொல்லிட்டு போயிட்டா. அவளுக்கு மட்டும் இல்ல. காதலிக்கிற எல்லாருக்குமே அவங்க வாழ்க்கைல ரொம்ப அழகான தருணம்னா அது அவங்க காதலை கைப்பிடிக்கிற நாளாதான் இருக்கும்.

3. தாய்மை:



ஒரு பொண்ணு எப்போ ரொம்ப அழகா இருப்பா? கண்டிப்பா அது அவ கர்ப்பமா இருக்கறப்பதான். அதை எத்தனையோ புத்தகத்துல, கதைகள்ல, கவிதைகள்ல படிச்சிருக்கேன். அப்போல்லாம் எனக்கு ரொம்ப பெருசா தெரியலை. எனக்குள்ள இருக்கற என் உயிர் சங்கீதா. அவ வளைகாப்புதான் நான் முதல் முதலா அட்டெண்ட் பண்ணின வளைகாப்பு. காலைல வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் சிரிச்சுட்டே மெதுவா நடந்து வந்தா. தலைல கட்டின துண்டும், நெத்தி வகிட்டுல குங்குமமும், மஞ்ச கயிறும், கால்ல மெட்டியுமா இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை பாத்திருக்கேன். ஆனா அது கூட உப்பிய வயிறுமா... அவ்ளோ அழகா என் சங்கி-ய அதுக்கு முன்னாடியும் பாத்ததில்ல. அதுக்கு அப்புறமும் பாத்ததில்ல. அதுக்கப்புறம் குழந்தை பிறந்ததுக்கப்புறம்தான் பாத்தேன். அப்போ அந்த பிஞ்சு கையையும் காலையும் தொட்டு தொட்டு கொஞ்சும்போது அவ முகத்துல தெரிஞ்ச பூரிப்பு..... அழகோ அழகு.....

4. எழுத்தாளராய் அங்கீகரிக்கப்பட்ட நாள்:



நான் ஒரு நாவல் எழுதி கண்மணிக்கு அனுப்பி 2 வருஷமாச்சு. வரவே இல்லை. எங்க தமிழ் சார் இதுக்கெல்லாம் சோர்ந்து போயிடக் கூடாது. இன்னும் எழுதி அனுப்பிட்டே இரு. ஒரு நாள் கண்டிப்பா வரும்னு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டே இருந்தார். இருந்தாலும் அந்த ஏமாற்றத்த தாங்கிக்க முடியாம அனுப்பாமலே இருந்தேன். ஒரு நாள் ஃபோன் வந்தது. உங்க கதை எங்களுக்கு பிடிச்சிருக்கு. வர 15th இதழ்ல போட போறோம். உங்களை பத்தி கொஞ்சம் எழுதி கொடுத்து உங்க போட்டோவும் அனுப்புங்கனு சொன்ன அன்னைக்கு இருந்த சந்தோஷம்.... என் வாழ்க்கைல முதல் அழகான தருணம்..... புத்தகம் வந்த அன்னைக்கு கைக்கு கிடைக்கறதுக்குள்ள இருந்த டென்ஷன்........ அதை வாங்கி என் போட்டோவையும் என்னோட எழுத்துக்கள் ஒண்ணொன்னையும் அச்சில பாத்த தருணம்.... ஒரே கண்ணீரா வருது. உலகத்தோட மொத்த சந்தோஷத்தையும் அள்ளியெடுத்து எனக்குள்ள புதைச்சு வச்ச மாதிரி அவ்ளோ சந்தோஷம். அன்னைக்கு என் டைரில எழுதி வச்சது "முதல் பிரசவம்... மனதளவில் உணர்ந்தேன் பிரசவ வலியை..."

5. நட்பு:



எந்தவித சம்பந்தமும் இல்லாம எந்த எதிர்பார்ப்பும் இல்லாம ஒருத்தர் நம்ம மேல வைக்கற தூய்மையான அன்பு.... அதுக்கு பேர்தான் நட்பு. அந்த மாதிரி எனக்கு கிடைச்சவதான் சங்கீதா. நான் என்ன தப்பு பண்ணினாலும் ஒரு ஸ்மைல் பண்ணி என் தலைல செல்லமா ஒரு குட்டு வச்சு திருத்தறவ. அவளுக்கு மட்டுமில்லாம அவ வீட்டுக்காரருக்கும்(அவ அத்தை பையன்தான்) நான் பெஸ்ட் ஃப்ரெண்ட். அவ மாமியாரும் மாமனாரும் என்னை அவங்க பொண்ணுனு சொல்லுவாங்க. ரெண்டு பேருக்கும் நான் பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்றதால என் பர்த்டே அன்னைக்கே அவங்க கல்யாணம் வச்சாங்க. அன்னைக்கு நைட் கரெக்டா 12 மணிக்கு எல்லாரும் தூங்கிட்டாங்க. மாப்பிள்ளை சார் கேக் பாக்ஸ தூக்கிட்டு பொண்ணு ரூமுக்கு வந்தார். கேக் வெட்டி என் மேல எல்லாம் பூசி கத்தி அட்டூழியம் பண்ணிட்டிருந்தப்ப ஒரு சத்தம். மெல்ல திரும்பி பாக்கறோம். அவ மாமனார் கதவுகிட்ட முறைச்சுப் பாத்துட்டு நிக்கறார். பொண்ணு ரூமுக்கு போக கூடாதுனுசொல்லியிருக்குல்லனு அவர் சொன்னதும் கம்முனு ஓடிப் போயிட்டாங்க. ரெண்டு பேரும் எனக்கு ஒரு மொபைல் ப்ரெசெண்ட் பண்ணினாங்க. அந்த மொபைல்தான் இன்னும் வச்சிருக்கேன். அவளுக்கு ஒரு டைரி ஃபுல்லா கவிதை எழுதி கல்யாண கிஃப்டா கொடுத்தேன். அந்த கிஃப்ட வீட்டுக்கு வந்து பிரிக்கிற வரைக்கும் அவ கைலயே வச்சிருந்தா. யார்ட்டயும் குடுக்கலை. என்னை பொறுத்த வரைக்கும் எனக்குள்ள இருக்கற உயிர் சங்கீதாதான். அவளுக்கு நான் எழுதின கவிதைல ஒண்ணு

"அடுத்த பிறவியிலேனும்
ஒன்றாய் பிறக்க வேண்டும்
என்று வேண்டி
தொலைத்து விடாதே!
எனக்கு உன்னிடம்
சகோதர பாசம் வேண்டாம்
அதையும் மீறிய
இந்த நட்புதான் வேண்டும்"

6. எதையும் அழகாய் பார்க்கிற மனசு:



இந்த உலகத்துல இருக்கிற எல்லாமே அழகுதான். ஒண்ணொண்ணும் ஒவ்வொருவித அழகு. அதை பாக்கிற நம்ம மனசுலதான் எல்லாம் இருக்கு. ஒரு சாதரண விஷயத்தைக் கூட அழகுனு நினைச்சு பாத்தா அது ரொம்ப அழகா தெரியும். அழகில்லைனு நினைச்சுப் பாத்தா அழகா இருக்கறதும் ரொம்ப அசிங்கமா தெரியும். எல்லாமே நம்ம ரசனைதான்....

இப்போ என் சான்ஸ். இவங்க மூணு பேரும் அழகுப் பத்தி என்ன நினைக்கறாங்கன்னு பாப்போம். என்னை மாதிரியே லேட் பண்ணிடாதீங்க. கொஞ்சம் சீக்கிரம் போடுங்கப்பு.

1. ஜொள்ளுல பல வகை ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் பெற்ற நமது ஜொள்ளானந்தா Dr.ஜொள்ளுபாண்டி(நீங்க விடற ஜொள்ளுதான் அழகுனு சொல்லப்படாது)

2. காதல்ல வீடு கட்டி காதல சாப்பாடா சாப்பிட்டு காதலையே சுவாசிச்சு வாழ்ந்துட்டு இருக்கிற நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ(நீங்க இல்லவே இல்லைனு சொல்ற உங்க காதலிதான் அழகுனு சொல்லப்படாது)

3. இந்த உலகத்துல இருக்கிற எந்த ஒரு விஷயத்தையும் காதலாவே பாக்கிற நமது காதல் கவிஞர் நவீன் ப்ரகாஷ்(காதல்தான் அழகுனு அதையே 6 தடவை எழுதி வைக்கப்படாது)

ஓகே... ஓகே... உத்தரவு வாங்கிக்கறேனுங்க......


Monday, April 23, 2007

பாப் ஆல்பம் வெளியிட ஜி-யுடன் கூட்டு முயற்சி

நம்ம தல கோடம்பாக்கத்துல துண்டு போட முடிவு செஞ்சு பாட்டு எழுதினார். அதை மருதம் பாடி தந்த கதை உங்க எல்லாருக்கும் தெரியும். அப்புறம் அவரு இது பையன் பாடற மாதிரி இருக்கு. பொண்ணு பாடற மாதிரி நீங்க எழுதுங்களேன்னு நம்மளை ரொம்ப உசுப்பேத்தி விட்டுட்டார். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியேதான் ரணகளமாக்கிடறாங்கப்பா. இதை எழுதங்குள்ள பயங்கற ரணகளமாயிடுச்சு. படிச்சிட்டு எப்படியிருக்குனு சொல்லுங்கப்பு. உனக்கு இதெல்லாம் ரொம்ப தேவையானு நீங்க மொனகறது எனக்கு கேக்குது. இதுக்கெல்லாம் அசர ஆளா நாங்க.

----------------------------------------------------------------

எங்கே நீ சென்றாயோ
என் இதயம் திருடி சென்றாயோ
எங்கே நீ சென்றாயோ
என் உயிரை மீட்டு தருவாயோ

கனவிலெல்லாம் நினைவாய் வந்தாய்
நனவில் கூட கனவாய் வந்தாய்
உன் நினைவாய்தானே தவிக்கின்றேன்
இங்கு காதல் வலியால் துடிக்கின்றேன்

விழிகளில் உந்தன் உருவம்தான்
மூச்சினில் உந்தன் சுவாசம்தான்
ஒற்றை பார்வையில் உயிரை பறித்தாயே

தூக்கம் பறித்து சென்றவனே
என் தேடல் நீயென்பது புரியலையா
உன் மூச்சினில் நான் வாழ்கின்றேன்

எங்கே நீ சென்றாலும்
நிழலாய்தானே தொடர்வேனே
உன்னில் பாதி நானில்லையா

இறுதி வரை தொடரும் உறவன்றோ
உன்னவளாய்
வேறென்ன வேண்டும் இதை விட
பிறவிப்பயனாய்

தருவாய் அன்பே....

பனியில் இங்கு எரிகின்றேன்
நெருப்பினில் இதமாய் குளிர்கின்றேன்
என் தட்பவெப்பம் மாற்றி சென்றாயே
என் நிலவில் தீயை வைத்து சென்றாயே

தேனும் இங்கே கசக்கிறதே
என் படுக்கை முள்ளாய் மாறியதே
ஏனடா நீ என்னை சோதிக்கிறாய்

பூக்களில் வாசம் செய்பவனே
பூ ஒன்று தவிக்கிறதே
ஏனடா நீ என்னை வதைக்கிறாய்

இறுதி வரை தொடரும் உறவன்றோ
உன்னவளாய்
வேறென்ன வேண்டும் இதை விட
பிறவிப்பயனாய்

தருவாய் அன்பே....

எங்கே நீ சென்றாயோ
என் இதயம் திருடி சென்றாயோ
எங்கே நீ சென்றாயோ
என் உயிரை மீட்டு தருவாயோ

----------------------------------------------------------------

இதை பாத்துட்டு நீங்க சொல்லப் போற முடிவ வச்சுதான் இனிமே பாட்டு எழுதறதா வேணாமான்னு முடிவு பண்ணனும். அதும் இல்லாம பாப் ஆல்பம் போடறதா ஜி முடிவு பண்ணியிருக்கார். இதுக்கு வர ரெஸ்பான்ஸ பாத்துட்டுதான் என்னையும் கூட்டு சேத்துப்பேனு அடம் புடிக்கறார். கொஞ்சம் எனக்காக அவர்கிட்ட ரெகமண்ட் பண்ணிட்டு போங்கப்பு. புண்ணியமா போவும்.